செவ்வாய், 18 ஜூலை, 2017

இரவு உணவு, சங்கம் சரத் திரையரங்கம், விசாகப்பட்டினம் தமிழ் பதிவர்



அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 7

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!

இந்தப் பயணத்தின் முதல் நாள், சிம்ஹாசலம், ஸ்ரீகூர்மம், ஸ்ரீமுகலிங்கம், ஸ்ரீஇராஜராஜேஸ்வரி கோவில் என பல இடங்களுக்கும் சென்று நாங்கள் விசாகப்பட்டினம் திரும்பிய போது இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. மதிய உணவினை ஸ்ரீகாகுளம் பகுதியில் சாப்பிட்டோம் என்றால் இரவு உணவு விசாகப்பட்டினம் நகரில்.  நாங்கள் தங்கியிருந்தது கோனார்க் லாட்ஜ் எனும் இடத்தில்.  இரயில் நிலையத்திற்கு சற்றே அருகில் அமைந்திருக்கும் சங்கம் சரத் திரையரங்கத்திற்கு பின் புறம் தான் இந்த கோனார்க் லாட்ஜ் இருந்தது. சுற்றிலும் நிறைய கடைகளும், பெரிய மால்களும் இருந்தன என்றாலும் உணவகம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.  சில உணவகங்களில் மக்கள் அதிக அளவில் இருக்க, ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார்கள்.


எங்களுக்கோ காத்திருக்கும் அளவுக்குப் பொறுமையில்லை. காலையில் தில்லியில் புறப்பட்டதிலிருந்தே சுற்றிக் கொண்டிருக்கிறோம்.  கொஞ்சமாக ஏதாவது சாப்பிட்டு, விரைவில் உறங்க வேண்டும். ஏனெனில் அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும் – பயணத்தின் முக்கியமான நாள் இரண்டாம் நாள் தானே! சரி என அருகே இருந்த ஒரு சிறிய உணவகத்தில் சப்பாத்தியும் கிடைத்த சப்ஜியும் வாங்கிச் சாப்பிட்டோம்.  சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தான் இருந்தது அந்த சப்பாத்தி.  ஏற்கனவே விசாகப்பட்டினத்திற்கு அலுவலக விஷயமாக வந்திருந்த நண்பர் ஏற்கனவே சாப்பிட்ட உணவகத்திற்குச் சென்றிருக்கலாம் என்று சொன்னார். இந்த அனுபவத்திற்குப் பிறகு, விசாகப்பட்டினத்தில் இருந்த நேரத்தில் அனைத்து வேளை உணவும் அந்த உணவகத்தில் தான்! அது என்ன உணவகம் என்பதை தனிப்பதிவாகவே சொல்கிறேன்!  இப்போதைக்கு சஸ்பென்ஸ்!

இரவு உணவை முடித்துக் கொண்டு தங்குமிடம் திரும்பினோம். அன்றைய நிகழ்வுகளை மனதுக்குள் மீண்டும் ஒரு முறை காட்சியாகப் பார்த்தபடியே படுத்திருந்தேன். பெரும்பாலான பயணங்களில் வெளியே சுற்றிவிட்டு வந்த பிறகு முதல் வேலையே, செல்லப்பெட்டிக்குண்டான Battery charge செய்வது தான்! இன்றைக்கும் அப்படியே.  படுத்திருந்த போது தான் நினைவுக்கு வந்தது – விசாகப்பட்டினத்தில் இருக்கும் தமிழ் பதிவருடன் பேசியதும்…. அவர் தில்லி வந்திருந்தபோது சந்தித்திருந்தாலும், அவர் ஊருக்கு நான் சென்றிருக்கும்போது சந்திக்க வேண்டுமே என்று அவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தேன்.  ஆனாலும் அவருக்கு இருந்த பணிச்சுமை, சூழலினால் அவரை சந்திக்க இயலாமலே போனது.  இரண்டு மூன்று முறை அலைபேசியில் பேசிக்கொண்டதோடு சரி!  யார் அந்த பதிவர்?  பதிவின் கடைசியில் சொல்கிறேன். 

உறக்கம் என்னை தழுவியது. ஆனாலும் மனதிற்குள் நாளைய பயணம் பற்றிய எண்ண ஓட்டங்கள் துவங்கி விட்டன. இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்ததே இந்த இரண்டாம் நாள் செல்லப்போகும் இடத்திற்காகத் தானே.  ஆமாம், இரண்டாம் நாள் நாங்கள் செல்லப்போவது, இந்தப் பயணத்தொடரின் மூலம் உங்களையும் அழைத்துச் செல்லப்போவது அரக்கு பள்ளத்தாக்குக்கு! பயணத்தொடரின் முதல் பகுதியில் சொன்னது போல, இங்கே செல்ல சாலையும் உண்டு, இரயில் பாதையும் உண்டு.  நாங்கள் தேர்ந்தெடுத்தது – இரண்டையும்! அதாவது போகும்போது இரயில் பயணம், திரும்பி வருவது சாலைப் பயணம்.  இந்த இரண்டாம் நாள் பயணம் எத்தனை இனிமையாக இருக்கப் போகிறது என்ற எண்ணங்களுடனேயே உறக்கத்தினைத் தழுவினேன்!

சங்கம் சரத் தியேட்டரில் இரவு நேரக் காட்சி முடிந்து வீடு திரும்பும் மக்கள் பெருத்த சத்தத்துடன் செல்வது கேட்டு முழிப்பு வர, அட அதற்குள் விடிந்து விட்டதா என்ற எண்ணம் வந்தது. பக்கத்தில் இருந்த அலைபேசியை உயிர்ப்பித்து நேரம் பார்த்தால் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல்! அட இன்னும் மூன்று மணி நேரமாவது தூங்கலாம் என்று மீண்டும் உறங்க முயற்சித்தேன். அதற்கு முன்னர் Charge செய்வதற்கு வைத்திருந்த batteryயைப் பார்த்து, அதற்கான இணைப்பினைத் துண்டித்தேன். நாளைய பொழுது நல்லதாகவே இருக்கட்டும்….  நீங்களும் காத்திருங்கள் – உங்களை கூ சிக் சிக் சிக் எனச் செல்லும் சிக்கு புக்கு ரயிலில் செய்யப்போகும் பயணத்திற்கு அழைத்துப் போகிறேன்.

சரி பதிவர் யார் என்பதைச் சொல்லாமல் போவது சரியல்ல! அந்த விசாகப்பட்டினம் தமிழ் பதிவர் – மன்னை மைந்தர்களில் ஒருவன் என்ற வலைப்பூவில் அவ்வப்போது எழுதும் மன்னையைச் சேர்ந்த திரு ஸ்ரீனிவாசகோபாலன் மாதவன்.    

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


12 கருத்துகள்:

  1. வெங்கட்ஜி தங்களின் அரக்கு வேலி பயணத்தைப் பற்றி அறிய ஆவலுடன் வெயிட்டிங்க்!

    கீதா: நானும் அரக்கு வேலி செல்வதைத்தான் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன் நாங்கள் சென்ற போது..உங்களது குறிப்புகளையும் அனுபவங்களையும் அறிய ஆவலுடன் வெயிட்டிங்க்...போகும் போதும் ரயில் வரும் போதும் ரயில் தான் கூட இருந்தவர்கள் பேருந்தில் பயணித்தால் வாந்தி வரும் என்று பயணம் செய்ய முடியாது என்று சொன்னதால் எங்கள் பயணத் திட்டமே ஒரே நாளில் முடிந்தது. எனக்கு அங்கு தங்கி இன்னும் ஆராம் ஸே பார்க்க ஆவல் ஆனால் முடியவில்லை...எனது குறிப்புகளையும் உங்கள் பயணக் குறிப்புகள் முடிந்த பின் எழுதுகிறேன்...கூ சிக் சிக்கிற்குக் காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதி அரக்கு நோக்கிய பயணம் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  2. அரக்கு வேலி தொடர்பான சரக்கு அருமை. அலைபேசிக்கு இன்னொரு பெயர் செல்லப்பெட்டியா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலைபேசி அல்ல.... எனது DSLR கேமரா தான் என் செல்லப்பெட்டி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

      நீக்கு
  3. காத்திருக்கிறோம் நாங்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  4. விசாகப்பட்டினம் தங்கலா. அடுத்து அரக்கு வேலி டிரிப்தான். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  6. நண்பர் சந்திப்பு பயணம். .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....