வியாழன், 25 பிப்ரவரி, 2021

தில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழகிய பூங்கா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


Good relationships, compassion and peace of mind are much more important than achievements, awards, degrees or money - Sudha Murty.


******





அடர்த்தியான மரங்களும், நீர்நிலையும்...


மரங்களும், பூங்காவின் ஒரு பகுதியும்...

தலைநகர் தில்லியில் பார்க்க வேண்டிய இடங்கள் எனக் கேட்டால் பலரும் சொல்லும் இடங்கள் - செங்கோட்டை, இந்தியா கேட், குதுப்மினார், பாராளுமன்றக் கட்டிடம், ஜனாதிபதி மாளிகை, பிர்லா மந்திர் எனப்படும் லக்ஷ்மி நாராயண் மந்திர், லோட்டஸ் டெம்பிள் மற்றும் காந்தி, இந்திரா காந்தி சமாதிகள் என்று தான் வரிசையாகச் சொல்வார்கள்.  ஆனால் தலைநகரில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு. நிறைய பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்றவை இங்கே உண்டு - ஆனாலும் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வருபவர்கள் மேற்கண்ட இடங்களைப் பார்த்து திரும்பி விடுவது தான் வழக்கம். முடிந்தால் தலைநகர் உலாவாக சில சிறப்பான இடங்களை உங்களுக்கு, இந்தப் பக்கத்தின் வழி ஒரு உலா அழைத்துச் செல்லும் ஆசை உண்டு.  வாரத்திற்கு ஒன்றோ, அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ தலைநகர் உலா அழைத்துச் செல்லலாம் என்று நினைத்திருக்கிறேன்.  



இந்தப் பூக்களை Dragon Flowers என்று அழைக்கிறார்கள்.


இந்தப் பூக்களை Sweet Sultan என்று அழைக்கிறார்கள்.


இந்த தலைநகர் உலாவில் உங்களை முதல் முதலாக அழைத்துச் செல்லப் போகும் இடம் என்ன தெரியுமா?  முகலாயர்கள் காலத்தில் (B)பாக்-ஏ-அசீம் என்றும், பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து சுந்தர் நர்சரி என்றும் அழைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான பூங்காவிற்கு தான்.  சற்றேறக்குறைய 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவில் நீர் நிலைகள், மரங்கள், பூச்செடிகள், பூச்செடிகளையும் மரங்களையும் தேடி வரும் பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள்,  பாரம்பரியக் கட்டிடங்கள், சில சமாதிகள் என, பலப் பல விஷயங்களை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும் இடம்.  இந்தப் பூங்கா அங்கே அமைந்திருக்கிறது?  இங்கே செல்ல என்ன வசதிகள் உண்டு? கட்டணம் என்ன போன்ற விவரங்களை இந்தப் பதிவின் வழி உங்களுக்குச் சொல்கிறேன்.  


எங்கே இருக்கிறது? 


டேலியா பூக்களில் ஒன்று...


மொட்டு ஒன்று  மலரத் துடிக்கின்றது...



தலைநகர் தில்லியின் நிஜாமுத்தீன் பகுதியில், ஹுமாயூன் கல்லறை, ஹஸ்ரத் நிஜாமுத்தீன் (dh)தர்(g)கா, புராணா கிலா, DPS என அழைக்கப்படும் பள்ளி போன்ற இடங்களுக்கு அருகில் இருக்கிறது.  தலைநகர் தில்லி பேருந்துகள் பலவும் இந்த வழித் தடத்தில் இயங்குகின்றன.  தில்லி மெட்ரோவிலும் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் நிலையத்தில் இறங்கி ஆட்டோக்கள் மூலம் இங்கே பயணிக்கலாம்.  இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது ஓலா, ஊபர் வாகனங்கள்.  


நுழைவுக் கட்டணம் எவ்வளவு?



பாப்பி பூக்களும் அதன் மொட்டுகளும்



Sweet William பூக்களின்  தேன் சுவையாக இருக்கிறதா என  சோதனை செய்கிறதோ இந்த வண்ணத்துப்பூச்சி?


பெரியவர்களுக்கு ரூபாய் 40/- சிறுவர்களாக/அறுபது (60) வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் கட்டணம் 20/- மட்டுமே!  கேமராவிற்கு கட்டணம் ஏதுமில்லை என்பது சிறப்புச் செய்தி! வழக்கம் போல வெளிநாட்டவர்களுக்கு டிக்கட் விலை அதிகம் - 200/- ரூபாய்!  


இயற்கையை ரசிக்க வரும் மக்கள்:



பூக்களை விட இந்த செடி அழகோ?



சின்னச்  சின்ன பூக்களாக இருந்தாலும் ஒரு அழகு தான்...

மரங்கள், பறவைகள், நர்சரி, பூக்கள், நீர்நிலைகள் என அனைத்தும் இங்கே உண்டு.  கூடவே ஒரு உணவகமும் இருக்கிறது.  சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அதிகமாகவே வருகிறது.  பலரும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இங்கே வந்து விடுகிறார்கள்.  குறிப்பாக குளிர் நாட்களில் - இங்கே வந்து அமர்ந்து கொண்டு உணவு உண்பது, தம்போலா போன்ற விளையாட்டுகள் விளையாடுவது என குதூகலமாக, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  அமைதியை வேண்டுபவர்கள் ஆங்காங்கே இருக்கும் இருக்கைகளில் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம், இயற்கையை ரசிக்கலாம்!  


மரம், செடி வகைகள்:



பூவில் வண்டு மோதும்.....



நீர்நிலையும் சுந்தர் (B)புர்ஜ்-உம்...


4500 மரங்கள், 54 வகை பூக்கள், 80 வகை பறவைகள், 40 வகை வண்ணத்துப் பூச்சிகள் என பலவும் இங்கே இருப்பதால் இயற்கையை ரசிப்பவர்களுக்கு இந்த இடம் ஒரு வரப் பிரசாதம்.  காலையில் 11 மணி முதல் மாலை ஆறு மணி வரை திறந்திருக்கும் இந்தப் பூங்காவிற்கு குளிர் முடியும் தருணமான ஃபிப்ரவரி-மார்ச் மாதங்களில் செல்வது சிறப்பு - ஏனெனில் இந்தச் சமயத்தில் தான் நிறைய பூக்கள் பார்க்க முடியும் - கூடவே சூழலும் சுகமானதாக இருக்கும் என்பதால் பூங்காவிற்குச் சென்று ரசிக்க முடியும்.  சமீபத்தில் ஒரு நாள் சென்றிருந்த போது பார்த்த காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்வேன்.  


பாரம்பரிய கட்டிடங்கள்:



சுந்தர் (B)புர்ஜ் - கிட்டப் பார்வையில்...



லக்கட்(ர்)வாலா (B)புர்ஜ்


சுந்தர் Bபுர்ஜ், சுந்தர்வாலா மஹல், லக்கட்(ர்)வாலா Bபுர்ஜ் போன்ற முகலாயர்கள் கால கட்டிடங்கள் அங்கே இருக்கின்றன.  பாழடைந்து இருந்த இந்தக் கட்டிடங்களை சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அரசாங்கமும் Aga Khan Trust-உம் சேர்ந்து புனரமைப்புப் பணிகளைச் செய்திருக்கிறார்கள்.  இன்னும் சில கட்டிடங்களில் புனரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  



இந்தச் சிலைப் பெண் என்ன  சொல்ல வருகிறாளோ?



பூக்களின்  தொகுப்பு...



தில்லி வரும் வாய்ப்பிருந்தால், இந்தப் பூங்காவிற்கு ஒரு முறை சென்று இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும், பூக்களையும், மரங்களையும், பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம்.  தில்லி உலா என்ற தலைப்பில் எழுதி இருக்கும் இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? தில்லி உலாவை தொடரலாமா என்பதையும் சொல்லுங்களேன்.  உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


20 கருத்துகள்:

  1. அறியாத புதிய இடங்களை அறிமுகம் செய்வது நல்ல பணி.  நன்றி.  எவ்வளவு அழகிய இடம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...    இயற்கை விளையாடுகிறது.  கொஞ்சுகிறது.    பாப்பி என்றால் கஞ்சாவின் வகை இல்லையோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறியாத புதிய இடங்கள் - முயற்சி செய்ய வேண்டும். முடிந்த வரை தகவல்கள் பகிர்ந்து கொள்வது தொடரும் ஸ்ரீராம்.

      பாப்பி - கஞ்சா வகை தான். ஆனால் இந்தப் பூ அந்தப் பூ அல்ல! பெயர் மட்டுமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மிகவும் அருமையான படங்கள். சுந்தர் நர்சரி அழகாக இருக்கின்றது. உங்கள் பதிவும் படங்களும் சுந்தர் நர்சரியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. முடிந்த போது நீங்களும் சென்று பார்த்து வாருங்கள் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. உள்ளம் கொள்ளை போகுதே - நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான, மரங்கள், மலர்கள் என இயற்கை எழில் கொஞ்சம், இடம் இந்த சுந்தர் நர்சரி. (சுந்தரமான பெயரே அழகு மயந்தானே...!) பூங்காவின் வண்ணமயமான பூக்கள் மனதை கொள்ளையடிக்கின்றன. அதுவும் தாங்கள் புகைப்படங்களை எடுத்த விதமும், அதற்குரிய வர்ணனைகளும் கண்,மற்றும் மனம் கொள்ள காட்சிகள்... அருமையாக பூங்காவை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து இந்தப் பதிவுகளை வழங்குங்கள். கண்டிப்பாக பார்த்து ரசிக்கிறோம்.

    பாரம்பரியமான கட்டிடங்கள் நன்றாக உள்ளது. அந்த வீரமான அழகு மங்கை படம் நன்றாக உள்ளது. அவளைச் சுற்றி மர வேர்களே அவள் போரிடும் வில்லாயுதமாக மாறியுள்ளதோ ? அத்தனைப் படங்களும், விபரங்களும் துல்லியமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      வேர்களே வில்லாக - சற்றே கூர்ந்து கவனியுங்கள் - அது ஒரு பாம்பு - அதனை தலைக்கு மேலே பிடித்திருக்கிறார் அந்தப் பெண்மணி. உலகமே அவள் காலடியில் இருப்பதைக் குறிக்க பூமிப்பந்து!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. தெரியாத இடங்கள். படங்கள் சிறப்பு. முகலாயர் காலக் கட்டிடங்கள் சமாதிகளாக இருக்கலாமோ?

    மரத்தின் முன் இருக்கும் பெண் மிக அழகு. நல்ல கலைரசனையோட செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் சிறப்பு. முகலாயர் காலக் கட்டிடங்கள் - சமாதிகளும் உண்டு நெல்லைத் தமிழன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. உலாவை தொடருங்கள் சார்.
    20 வருடங்கள் முன் மே மாதம் டில்லி வந்து வெய்யிலில் வெறுத்துவிட்டேன்.
    இவ்வளவு இயற்கை எழில் இடங்கள் இருப்பது இப்போதுதான் தெரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வருவதற்கு மே மாதம் உகந்ததல்ல அரவிந்த். கடும் வெயில் இருக்கும். உகந்த மாதங்கள் நவம்பர்-டிசம்பர் 15 வரை. பிறகு ஃபிப்ரவரி முதல் மார்ச் 10-15 தேதி வரை மட்டுமே! மற்ற சமயங்களில் அதிக வெய்யில் அல்லது அதிக குளிர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மிக நல்ல சுற்றுலா.தொடருங்கள் வெங்கட். மிக அழகான நீர் நிலைகளும்
    பூக்களும்.
    மனதுக்கு ரம்மியமான சூழ்னிலை.
    அந்தப் பெண் ஆடம் அண்ட் ஈவ் அண்ட் the serpent in the garden
    ஆக இருக்கலாம்.உலகத்தையே வென்று விட்டாளோ?

    மிக நல்ல விவரங்கள்.நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. தஞ்சையில் இருந்தபடியே நானும் ஒரு உலா வந்தேன்
    தங்களால்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையில் இருந்தபடியே ஒரு உலா! மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இந்த இடங்களில் எடுத்த படங்கள் ஆல்பத்தில் இருக்கின்றன.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. பூக்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நல்ல பகிர்வு நண்பரே . நீண்ட நாட்கள் கழித்து
    உங்கள் வலை தளத்தை பார்த்து மகிழ்ந்தேன். இவ்வளவு ஆண்டுகளாக டெல்லியில் இருந்தும் இந்த
    இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை காண வாய்ப்புக்கிடைக்கவில்லை. Soon I will. Wish you all the best for your future blogs.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடைவெளிக்குப் பிறகு இந்தப் பக்கம் தங்கள் வருகை. மகிழ்ச்சி விஜயராகவன் ஜி.

      முடிந்த போது சென்று பார்த்து வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....