வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

பதிவுலகம் - நேற்றைய சந்திப்பு!



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தொடரும் எண்ணமும் எழுத்தும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும். அது  போல, நட்பு இருந்தால் தான் வாழ்க்கைஇனிக்கும். 


கடந்த கால நட்புகள் சிலரை இழந்திருந்தாலும், இன்றும் தொடரும் சில நட்புகள் மகிழ்ச்சியைத்  தருபவை தான். 


******




சமீபத்தில் முகநூலில் உலவிக் கொண்டிருந்தபோது பதிவர் திரு ரமணி அவர்கள் தில்லி வந்திருப்பது தெரிந்தது.  எங்கே இருக்கிறார், எத்தனை நாட்கள் இருப்பார் என்பதைக் கேட்டுக் கொண்டு முடிந்தால் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தேன்.  அவர் தில்லிக்கு ஒரு உறவினர் இல்ல விழா ஒன்றிற்கு வந்திருப்பதாகச் சொன்னதால் விழா முடிந்த பிறகு, முடிந்தால் சந்திப்போம் என்று சொல்லி இருந்தேன்.  





நேற்று அலுவலகத்தில் இருந்த போது, அவரிடமிருந்து அழைப்பு  - உங்கள்  அலுவலகத்தின் அருகே தான் இருக்கிறேன் என்ற தகவலுடன்.  தீநுண்மி காரணமாக சுற்றுலா தலங்கள் பலவும் மூடப்  பட்டிருக்கின்றன.  திறந்திருக்கும் சில இடங்களிலும் நிறைய கட்டுப்பாடுகள் என்பதால் அவரால் நினைத்த இடங்களுக்குச் செல்ல  முடியவில்லை.  பாராளுமன்றக் கூட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகம். எங்கள் அலுவலகப்  பக்கம் இருக்கும் ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட் பகுதிகள் அனைத்தும்  மூடப்பட்டிருக்கின்றன.  கூடவே சில கட்டமைப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்தியா கேட் பகுதியில் கூட மக்களை அனுமதிப்பதில்லை.  





இங்கே பார்க்க வேறென்ன இருக்கிறது என்று கேட்டபோது, பக்கத்தில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம் பற்றிச் சொல்லி, எனது அலுவலகம் தாண்டி தான் செல்ல வேண்டும் - அதனால் உங்களை நானும் சந்தித்து விடுகிறேன் என்று சொல்லி, வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு சில நிமிடங்கள் அவரைச் சந்தித்து வந்தேன்.  1 செப்டம்பர் 2013 அன்று நடந்த சென்னை பதிவர் சந்திப்பின் போது அவரைச் சந்தித்தது - அதன் பிறகு இப்போது - நேற்று - 11 ஃபிப்ரவரி 2021 சந்தித்தேன்!  பதிவுலகம், பதிவர்கள், முகநூல்/ட்விட்டர் பக்கம் சென்றுவிட்ட பதிவர்கள்  என கிடைத்த  நேரத்தில் கொஞ்சம் பேசியபடியே நடந்தோம்.  அவரையும் அவர்  குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.  சென்ற முறை என்னையும் திரு ரமணி ஜியையும் எனது மகள் படம் எடுத்தார் என்றால் இந்த முறை படம் எடுத்தது திருமதி  ரமணி ஜி. அவருக்கு எனது மனம் நிறைந்த  நன்றி.  


அலுவலக  நேரம் என்பதால் அவருடன் இணைந்து அருங்காட்சியகத்திற்குச் செல்ல முடியாத சூழல்.  அவரது தில்லி பயணத்தில் அவரைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.  பெரும்பாலும் பதிவுலக நண்பர்கள் யார் தில்லி  வந்தாலும், எனக்குத் தெரிந்தால் நிச்சயம் சந்திக்க முயற்சிப்பேன். இந்த முறை ரமணி ஜி! அடுத்த சந்திப்பு யாருடனோ?  பார்க்கலாம்! 


இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி  சொல்லுங்களேன்! நாளை வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


20 கருத்துகள்:

  1. தலைநகர் வந்த தகவல் தெரிந்தும் தொடர்பு கொண்டதும்/தம் அலுவலகப் பகுதிக்கு வந்த தகவல் தெரிந்ததும் பல்வேறு அவசரப் பணி இருக்கிற சூழலிலும் உடன் எதிர் வந்து பேசியும் குளிர்பானம் வழங்கி குளிர்வித்ததும் பார்க்க முடியக் கூடிய இடங்கள் குறித்து தெளிவான வழிகாட்டிய தலைநகரப் பதிவருக்கு...தலையாயப் பதிவருக்கு மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்..(ஊர் திரும்பியதும் விரிவான பதிவெழுதும் எண்ணமிருக்கிறது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகரில் உங்களைச் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி ரமணி ஜி. உங்கள் பக்கத்தில் விரிவான பதிவினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதிவர் சந்திப்பு நிகழ்வுகள் மனதுக்கு மகிழ்ச்சியை தரும் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர் சந்திப்பு நிகழ்வுகள் மனதுக்கு மகிழ்ச்சியை தருபவை - உண்மை தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதிவுலகம் பழைய காலம் போல இனியும் தொடருமா என்ற ஏக்க நிலை உருவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட நம்முடன் அளவளாவிக்கொண்டு இருந்த அனைவருமே இப்போது முகநூல் சார்ந்து இருக்கிறார்கள்.
    நீங்கள் சென்னைக்கு வரும்போது சந்திக்க விரும்பிகிறேன் .  மூப்பு காரணமாக வும் இந்த கிருமி காரணமாகவும், அதிகம் வெளியில் செல்லமுடியவில்லை. 
    உங்கள் தொடர் பதிவுகள் இப்போது தான் கவனித்தேன். 
    வாழ்த்துக்கள்.
    சுப்பு தாத்தா. வளசரவாக்கம்.சென்னை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வருகிற மாதம் சென்னை வருகையில் உங்களை சந்திக்க எண்ணியுள்ளேன்.சென்னை சந்திப்பின் போது உங்களுடன் தேநீர் அருந்தியபடி கலந்துரையாடியது இன்னும் நினைவில் பசுமையாய்...

      நீக்கு
    2. உண்மை தான் சுப்பு தாத்தா - முகநூல் சார்ந்து விட்டவர்கள் தான் அதிகம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி. சென்னை வரும்போது தகவல் சொல்கிறேன் - சந்திப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. சென்னையில் சுப்பு தாத்தாவுடன் சந்திப்பு - வாழ்த்துகள். சந்தித்த பின் உங்கள் பக்கத்திலும் எழுதுங்கள் ரமணி ஜி.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நல்லதொரு வாசகம் அருமை.
    பதிவர் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

    டெல்லியில் முன்பு குடும்பத்துடன் சந்திப்பு நடத்தியது நினைவுகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. சந்திப்புகள் மகிழ்ச்சியை தர வல்லவையே.

      தில்லியில் நாம் சந்தித்தது இன்னமும் நினைவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. வாசகம் அருமை.  ரமணி சாருடனான சந்திப்பு மகிழ்ச்சி.   விரைவில் டெல்லியில் உங்களை இன்னொரு பிரபல பதிவர் சந்திக்க இருக்கிறார்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. //விரைவில் டெல்லியில் உங்களை இன்னொரு பிரபல பதிவர் சந்திக்க இருக்கிறார்// - ஆவலுடன் காத்திருக்கிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. உங்களுக்கும் பதில் தெரிந்து விட்டதே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. பொதுவாகப் பதிவர்களை நான் தேடிப் போய் சந்திப்பது/சந்தித்தது குறைவு. ரேவதியை அவங்க வீட்டில் பார்த்திருக்கேன். அதே போல் ஶ்ரீராம்.கேஜிஎஸ், கேஜிஜி மூவரும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. உங்களை உங்க வீட்டில் சந்தித்தேன். அதன் பிறகு பல சந்திப்புகள்! மற்றப் பல பதிவர்கள் எங்க வீட்டுக்கு வந்திருக்காங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வரும் பதிவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். தில்லி வரும் தகவல் தெரிந்தால் முடிந்த வரை சந்தித்து விடுகிறேன் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதிவர்களை சந்திப்பது போல மகிழ்ச்சி தரும் விஷயம் ஒன்றும் இல்லை.
    தில்லிக்கு வரும் மற்றொரு பதிவர் மிகப் பிரபலம்.
    அந்த சந்திப்பும் சீக்கிரம் நடக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லிக்கு வரும் பிரபல பதிவரை சந்திக்க நானும் காத்திருக்கிறேன் வல்லிம்மா. உங்கள் இல்லத்திற்கு வந்து சந்தித்தது இன்னமும் நினைவில்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....