சனி, 27 மார்ச், 2021

காஃபி வித் கிட்டு-104 - உத்திரம் - Que Sera Sera - ஹப்ஷி ஹல்வா - வறட்டு கௌரவம் - பட்டப்பெயர் - தடுப்பூசி - உணவகம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஆயிரம் உறவுகள் துணை இருந்தாலும்…. வாழ்வை தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும்… அவரவர் பாதை; அவரவர் மனம்; அவரவர் வாழ்க்கை….


******



இந்த வாரத்தின் உணவு - HABSHI HALWA:





பாகிஸ்தானிலிருந்து வந்த இனிப்பு என்று சொல்லப்பட்டாலும் தலைநகர் தில்லியில், குறிப்பாக பழைய தில்லி பகுதிகளில் இந்த ஹப்ஷி ஹல்வாவுக்காகவே சில கடைகள் பிரபலம் - 65 வருடங்களுக்கு மேலாக இந்த ஹப்ஷி ஹல்வா மட்டுமே செய்து விற்பனை செய்யும் கடை கூட உண்டு.  ஒன்றிரண்டு முறை இதனைச் சுவைத்திருக்கிறேன்.  பால், சர்க்கரை, முளைவிட்ட கோதுமை, நெய், வாசனை மசாலாக்கள், உலர் பழங்கள் எனக் கலந்து செய்யப்படும் இந்த ஹப்ஷி ஹல்வா உங்களுக்கும் பிடிக்கலாம்.  வீட்டிலே செய்து பார்க்க நினைத்தால் அதற்கான செய்முறைகள் இணையத்தில் உண்டு. 


*****


இந்த வாரத்தின் விளம்பரம் - Que Sera Sera!


Que Sera Sera பாடலை வல்லிம்மா ஒரு முறை பகிர்ந்து இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  தமிழிலும்/ஹிந்தியிலும் இதே மெட்டில் பாடல்கள் வந்தன என்பதையும் சொல்லி இருந்ததாக நினைவு.  இந்த வாரத்தின் விளம்பரமாக அதே பாடலை “தாய் இன்சூரன்ஸ்” விளம்பரமாக பயன்படுத்தி இருக்கிறது. விளம்பரத்தில் பாடலை பாடி இருப்பவர்கள் மாற்றுத் திறனாளிகளான குழந்தைகள்.  பாடலைப் பாடும் அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போதே மனதில் ஒரு வித சோகத்துடன் கூடிய மகிழ்ச்சி.  பாருங்களேன்!

*****


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - பங்குனி உத்திரம்


இதே நாளில் 2013-ஆம் வருடம் எழுதிய பதிவு பங்குனி உத்திரம் கொண்டாட்டம்.  நெய்வேலி நகரின் பங்குனி உத்திரக் கொண்டாட்டம் பற்றி மனச்சுரங்கத்திலிருந்து பதிவாக எழுதிய பதிவிலிருந்து சில வரிகள் இங்கே…


எட்டுரோடு பகுதிக்கு வந்து பல காவடிகள் பார்த்த பிறகு, அங்கிருந்து காவடிகள் கூடவே நடந்து செல்வோம்.  நடந்த களைப்பினைப் போக்க, ஆங்காங்கே பக்தர்கள் குழாம், நிறுவனங்கள், என்.எல்.சி. நிறுவன ஊழியர்கள் எனப் பலர் தண்ணீர் பந்தல்கள் அமைத்து விறுவிறுப்பாக நீர்மோர், பானகம் வினியோகம் செய்து கொண்டு இருப்பார்கள்.  ஒரு இடம் விடாமல் அனைத்திலும் இவற்றை அருந்துவதில் எனக்கும் சகோதரிகளுக்கும் போட்டி!  கோவிலுக்குச் சென்று மனதார முருகனைத் தரிசித்து திரும்புவோம்.


திரும்பி வரும் வழியில் அதற்குள் புளியோதரை, தயிர்சாதம் என அன்னதானம் தொடங்கியிருக்கும்.  அவற்றினையும் ஒரு கை பார்த்து விட்டு மதியத்திற்கு மேல் வீடு திரும்புவோம்.  பத்து நாட்களிலும் மாலை நேரத்தில் திருவிழா பார்ப்பதற்கு வேலுடையான்பட்டு கோவில் சென்று விடுவோம்.  திருவிழா என்பதால் நிறைய கடைகள் போடுவார்கள்.  அது மட்டுமில்லாது, ரங்கராட்டினங்கள் போன்ற விளையாட்டுகளும், மேஜிக் ஷோ, ”உலக அதிசயம் – இருதலைப் பாம்பு, மனிதத் தலை-பாம்பு உடல்”, மரணக் கிணற்றில் பைக் ஓட்டும் பெண்” என்றெல்லாம் மனிதர்களைக் கவர்ந்து இழுக்கும் கடைகள் என்று நிறைய இருக்கும். 


இவை மட்டுமல்லாது பொம்மைக் கடைகள், தின்பண்டங்கள் விற்கும் கடைகள் என திருவிழா அமர்க்களமாக நடக்கும்.  மாலை நான்கு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், வீடு திரும்ப எப்படியும் 10 மணிக்கு மேல் ஆகி விடும்.  விலைவாசியும் அப்போதெல்லாம் அதிகமில்லை என்பதால் திருவிழா சென்று திரும்பியதில் அவ்வளவாக செலவும் ஆகியிருக்காது!


முழுப்பதிவையும் படிக்க சுட்டி கீழே!


பங்குனி உத்திரம் – கொண்டாட்டம்!


*****


இந்த வாரத்தின் WhatsApp Status - வறட்டு கௌரவம்:



*****


இந்த வாரத்தின் எண்ணங்கள் - பட்டப் பெயர்கள்:


கிராமப் புறங்களில் ஊரில் உள்ள அனைவருக்குமே பெற்றோர்கள் வைத்த பெயர் ஒன்றாக இருந்தாலும், நண்பர்களும், ஊராரும் வைத்த பட்டப்பெயர் நிச்சயமாக வேறொன்று அல்லது சில பெயர்கள் இருக்கவே செய்யும்.  அப்படி வைக்கப்படும் பெயர்கள் மிகவும் ஸ்வாரஸ்யமானவை.  சிலரை பட்டப்பெயராலேயே அழைத்து அழைத்து அவர்களுடைய சொந்தப் பெயரே மறந்து விடுவதுண்டு.  சமீபத்தில் பார்த்த நண்பர் ஒருவர் - “தடியங்கா”வை ஒரு கல்யாணத்துல பார்த்தேண்டா என்று சொல்ல, யாருக்கு இந்தப் பெயர் என்று அவர் மகள் கேட்க, அங்கே எழுந்தது சிரிப்பலை! சமீபத்தில் இப்படிக் கேட்ட இன்னுமொரு பட்டப் பெயர் - “நெஞ்சுக்கட்டி ஐயாப்பிள்ளை!”.  ஏன் இந்தப் பெயர்?  சட்டை போடாமல், எப்போதும் வேட்டியை நெஞ்சு வரை ஏற்றிக் கட்டியிருப்பாராம் அந்த மனிதர் - அதனால் இப்படி ஒரு பெயர் - நெஞ்சுக்கட்டி ஐயாப்பிள்ளை!


*****


சந்தையில் புதிய அறிமுகமாம் - தடுப்பூசி ஜாக்கெட்:





தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக இப்படியொரு டிசைனில் ஜாக்கெட் வந்திருக்காம் - இணையத்தில் பார்த்தேன்!  எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பு! 


*****


இந்த வாரத்தின் செய்தி - உணவகம்:


இணையத்தில் படித்த செய்தி ஒன்று உங்களுக்காக! நிலா அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!



மதுரையில் முதன் முறையாக... கேவலமாக பார்த்தவர்கள் வியக்க...! குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்யும் திருநங்கை நிலா நடத்தும் மோஹின் உணவகம்.

சுவையான உணவு வகைகளை தரமாக தருகிறார்..!ஆனையூர் பஸ் நிலையம் அருகில் இந்த உணவகம் அமைந்துள்ளது..! மதுரையில் இருந்தால் இங்கு ஒரு வேளை உணவு உண்ணுங்கள்… இல்லையேல் மனமிருந்தால் நண்பர்களை சென்று சாப்பிட்டு ஆதரவளிக்க சொல்லுங்கள்..! தன்மானமாக வாழ நினைத்த இந்தச் சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்...!

*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


30 கருத்துகள்:

  1. கொரோனாவின் வறட்டு கௌரவம் ஹா.. ஹா..

    கொரோனா ஜாக்கெட் எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்கே...

    ஹல்வா படமே ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பாகிஸ்தான் இனிப்பு (!) தேங்காய் பர்பியும் திரட்டுப்பாலும் கலந்த கலவை போல இருக்கிறது - பார்க்க!

    கொரோனா ஸ்டேட்டஸ் ரசிக்க வைத்தது.

    தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக...   ஹா..   ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேங்காய் பர்ஃபியும் திரட்டுப்பாலும் கலந்த கலவை// ஹாஹா...

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. //வீட்டிலே செய்து பார்க்க நினைத்தால் // - அப்படி முடியாதவர்கள், தில்லியிலிருந்து வெங்கட் வரும் சமயமாகப் பார்த்து வேண்டிக்கேட்டுக்கொண்டால், கிடைக்கும் (கிடைக்குமா?) இனிப்பு அழகாக இருக்கிறது. A2B ல கிடைக்கும் டோடா பர்பி மாதிரி (ஆனால் நிறம் இதில் சிவப்பு அதிகமாக இருக்கு)

    மற்ற பகுதிகளையும் ரசித்தேன். ஜாக்கெட் பதிவு பழசு. நிலா அவர்களின் முயற்சியை வரவேற்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியிலிருந்து வெங்கட் வரும்போது கேட்டுக் கொண்டால் கிடைக்கும்! வாங்கிக் கொடுத்தால் போகிறது! இதில் என்ன கஷ்டம்? டோடா பர்ஃபி வேறு. நம் ஊரில் கிடைக்கும் டோடா பர்ஃபி சுவை எனக்குப் பிடிக்கவில்லை. இங்கே குருகிராம் மற்றும் ஜனக்புரி பகுதியில் ஓம் ஸ்வீட்ஸ் என்ற கடை உண்டு - அது டோடா பர்ஃபிக்கு பெயர் போனது நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமையான செய்திகள்!
    முதல் வாசகம் சற்று கனமானது என்றாலும் நிதர்சனமான உண்மையும் அது தானே?
    திருநங்கை நிலா நடத்தும் உணவகத்துக்கு போய் பார்க்க வேண்டும். வாய்ப்பும் இருக்கிறது.
    கொரோனா பிளவுஸ் உண்மையிலேயே பெண்களுக்கு மிகவும் வசதியானது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      உணவகம் - சென்று பார்த்து விட்டு நீங்களும் உங்கள் அனுபவத்தினை எழுதுங்கள் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. காணொளி பாடல், மோஹின் உணவகம் உட்பட அனைத்தும் அருமை... சந்தையில் புதிய அறிமுகமும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    வாசகம் உண்மை. பதிவு அருமை. இனிப்பு பார்ப்பதற்கே நன்றாக உள்ளது.இன்னும் சுவைத்தால் அமிர்தமாகத்தான் இருக்கும். பங்குனி உத்திர நினைவுகளை நன்றாக சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்.

    கொரோனாவின் வறட்டு கெளரவ வாசகம் சிரிப்பை வரவழைக்கிறது. கொரோனா ஊசிக்கு வசதியாக தைத்திருக்கும் பிளவுஸும் நன்றாக உள்ளது.கோடைக்கும் நல்லது.

    மதுரையில் உணவகம் நடத்தும் நிலா அவர்களுக்கு வாழ்த்துகள். இன்றைய காஃபி வித் கிட்டு பகுதிகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம், பதிவின் பகுதிகள் ஆகியவை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பங்குனி உத்திர உலா அருமை. அல்வா ஒரு தரம் பண்ணிப் பார்க்க ஆசைதான். யாரானும் வந்தால் பண்ணிச் சாப்பிடணும். வாசகம் அருமை. கொரொனாவின் வறட்டு கௌரவம் இது வரைக்கும் பல சுற்றுகள் சுற்றிவிட்டது. ஆனாலும் இன்னமும் போகாமல் பெருகிக் கொண்டே போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரானும் வந்தால் பண்ணிச் சாப்பிடணுமா இல்லை பண்ணிக் கொடுக்கணுமா?

      நீக்கு
    2. பங்குனி உத்திர உலா - இந்த வருடமும் நெய்வேலியில் விழாக் கொண்டாட்டங்கள் இல்லை. இரண்டு வருடமாக தடை - தீநுண்மி காரணமாக. விரைவில் நடக்க வடிவேலன் தான் அருள் புரிய வேண்டும்.

      //பண்ணிச் சாப்பிடணும்// - நான் கேட்க நினைத்ததை நெல்லைத் தமிழனும் கேட்டிருக்கிறார் கீதாம்மா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. வந்தவர்களுக்கும் கொடுத்துவிட்டு அவர்களும் சாப்பிடுவார்களாக இருக்கும் நெல்லைத் தமிழன்! ஹாஹா... எல்லாமே அவர்கள் இரண்டு பேருமே சாப்பிட முடியாதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. கொரோனா ப்ளவுஸ் அருமை. போன வருஷமெல்லாம் மாஸ்க் முதலிடத்தைப் பெற்றிருந்தது. இந்த வருஷம் இதுவா? மதுரையில் உணவகம் நடத்தும் திருநங்கை நிலாவுக்கு வாழ்த்துகள். கிட்டத்தட்ட இங்கேயும் ஒரு பாசிடிவ்/தன்னம்பிக்கைச் செய்திகளைக் கொண்ட பதிவு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அனைத்து செய்திகளும் மிக அருமை.
    கே செரா செரா. 1950களில் வந்த பாடல்.
    அம்மாவின் அறிவுரை. இந்தக் குறும்படம் பார்த்த போது
    மனம் கலங்கி விட்டது. எத்தனை நம்பிக்கை
    அந்தக் குழந்தைகளின் கண்களில் .
    மிக நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மதுரை நிலா நங்கைக்கு வாழ்த்துகள் வளம் பெறட்டும்.

    உங்கள் நெய்வேலி அனுபவங்களும்
    அருமை. தடித்தாண்டவரயா கேள்விப் பட்டிருக்கிறேன்.
    இந்தப் பெயர்கள் புதிது:)

    பங்குனி உத்திரப் பதிவும் மிக மிக அருமை.

    வாக்ஸின் ஜாக்கெட் சூப்பர் ஐடியா. நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடித்தாண்டவரயா - என்னை அம்மா சில சமயங்களில் இப்படிக் கூப்பிடுவதுண்டு வல்லிம்மா. ஹாஹா...

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. ஹப்ஜி அல்வா, எனக்கான பங்கை நீங்களே சாப்பிடுங்கள்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பங்கையும் நானே சாப்பிட வேண்டும்! - ஆஹா மகிழ்ச்சி வல்லிம்மா. இன்னுமொரு முறை சாப்பிடும்போது நினைவில் வைத்துக் கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நல்ல பகிர்வு வெங்கட். வாழ்த்துக்கள் மிகப்பல. பங்குனி உத்திரம் காவடி வர்ணனை சூப்பர். கிட்டத்தட்ட 40/45 வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச்சென்றது.மலரும் நினைவுகள். ......Keep going. All the best
    Delhi Vijay

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட 40/45 வருடங்களுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றது - ஆஹா... மகிழ்ச்சி விஜயராகவன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் சார்.
    வாசகம் நிதர்சனமானது.
    பங்கூனி உத்திர நினைவுகள் எனக்கு என் ஊர் சிவகாசி இளவயது நினைவுகளைக் கொண்டு வந்தது.
    இன்று காலை தான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.
    டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் லாக்டவுன் இனி தீர்வு அல்ல, கொரானாவுடன் வாழப் பழகிக்கொள்ள சொன்னதாக கேள்விப்பட்டேன்.
    அப்படியே பழகுவோம் பாதுகாப்பு நடைமுறைகளுடன்.
    மதுரை திருநங்கைக்கு வாழ்த்துக்கள், என் நன்பனை அங்கு செல்ல பறிந்துறை செய்கிறேன்.
    நல்ல காஃபி கதம்பம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த். பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      வாழப் பழகிக் கொள்ள வேண்டும் - உண்மை தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. பதிவின் பகுதி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....