புதன், 17 மார்ச், 2021

தில்லி உலா - தில்லியில் லடாக் - Enchanting Ladakh



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DO EVERYTHING WITH A GOOD HEART AND EXPECT NOTHING IN RETURN, AND YOU WILL NEVER BE DISAPPOINTED.


******




லடாக் பாரம்பரிய நடனம் - குழுவாக...


லடாக் பாரம்பரிய நடனம் - குழுவில் ஒரு ஜோடி...

இந்த மாதத்தின் துவக்கத்தில் ஒரு நாள் நண்பர் மணி அவர்கள் வாட்ஸ் அப் வழி செய்தித்தாளிலிருந்து ஒரு செய்தியை நிழற்படம் எடுத்து அனுப்பி இருந்தார்கள்.  மாநிலமாக இருந்து யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட, முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பகுதியான லடாக் குறித்த ஒரு நிகழ்ச்சி - கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் தலைநகர் தில்லியில், நடக்கப் போவது குறித்த செய்தி தான்.  பதினைந்து நாட்களுக்கு (1 - 15 மார்ச் 2021) தலைநகரின் INA பகுதியில் இருக்கும் Dilli Haat வளாகத்தில் “Enchanting Ladakh” என்ற பெயரில், லடாக் பகுதியைப் பற்றி கண்காட்சி - கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட லடாக் பகுதி விற்பனையாளர்கள் தங்களது பகுதியின் சிறப்பான பொருட்களைக் காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருwதார்கள்.  கூடவே ஒவ்வொரு நாள் மாலையும், லடாக் பகுதிக்கே உரித்தான கலைநிகழ்ச்சிகளும் உண்டு!  



உல்லன் நூல் கொண்டு செய்யப்பட்ட பொம்மைகள்


சாவிக் கொத்துகள் - இதுவும் உல்லன் நூலில்...



பாடகி அணிந்திருக்கும் நெற்றிச்சூட்டி, மற்றும் கழுத்தணிகள் - ஒரு கிட்டப் பார்வை...

தலைநகர் தில்லியிலிருந்தே லடாக் பற்றிய புரிதலும், லடாக் பயணிக்க ஆசையிருக்கும் என் போன்ற ஒருவருக்குத் தகவல்களும் கிடைக்கும் என்பதால் கண்காட்சிக்குச் சென்று வர வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனாலும் பணிச்சுமை காரணமாகச் சென்று வர இயலவில்லை.  சென்ற சனிக்கிழமை அன்று மாலையில் கண்காட்சி குறித்த நினைவு வர, மாலையில் நண்பர் பத்மநாபனுடன் கண்காட்சிக்கு ஒரு விசிட் சென்று வந்தாயிற்று! நண்பர் அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு வர, நான் வீட்டிலிருந்து புறப்பட்டுப் பாதி வழியில் அவரை அழைத்துக் கொண்டு INA மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருக்கும் தில்லி ஹாட் சென்று சேர்ந்தேன்.  நுழைவுக் கட்டணமான முப்பது ரூபாய் (ஒருவருக்கு) செலுத்தி உள்ளே சென்றோம்.  



இது என்னவென்று தெரிகிறதா?


இந்தப் படம் பார்த்தால் புரிந்திருக்கலாம்...
கீழே இருப்பது நம் ஊர் குமுட்டி அடுப்பு போல... 
மேலே தேநீர் சூடாக வைக்க ஒரு கூஜா போன்ற ஒரு அமைப்பு


வில் அம்பு கொண்டு நடனமாடும் கலைஞர்கள்...

தில்லி ஹாட் (தில்லியில் இப்படி இரண்டு இடங்களில் தில்லி ஹாட் இருக்கிறது - INA மற்றும் ஜனக்புரி) ஒரு நிரந்தர கண்காட்சி/விற்பனை நிலையம்.  அங்கே அவ்வப்போது இப்படி கண்காட்சிகளை ஏற்பாடு செய்து கொண்டே இருப்பார்கள்.  புதிய கண்காட்சி பற்றிய தகவல் தெரிந்தால் சென்று வரலாம்!  புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள, புதிய பொருட்களைப் பார்க்க/வாங்க, புதிய கலைநிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்க இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு வசதி.  லடாக் பற்றிய கண்காட்சிக்குச் சென்ற போது நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது - குறிப்பாக அவர்களது சில கலைப்பொருட்கள் பற்றிய தகவல்கள், Pottery தகவல்கள், கலை என அங்கே ரசித்த சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.



லிக்கிர் Pபாட்டரி...


LIKIR POTTERY: லடாக் பகுதியில் இருக்கும் ஒரு கிராமம் - லிக்கிர்.  அங்கே செய்யப்படும் பானைகள் மிகவும் பிரபலமானது. இந்தப் பகுதிகளில் கிடைக்கும் களிமண், தண்ணீர் மற்றும் வெந்நீர் ஊற்றுப் பகுதியில் இருக்கும் மண் போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் பானைகள் மற்றும் பொருட்களின் மீது அந்தப் பகுதியில் இருக்கும் மலைகளிலிருந்து சல்ஃபர் கரைசல் பூசப்பட்டு, காய வைக்கப்பட்டு, தயாரிக்கப்படும் பானைகள் மிகவும் பழமையானவை.  திபெத் பகுதியிலிருந்து இங்கே இந்த கலை வந்திருக்கலாம் என்று சொல்வதுண்டு.  கொஞ்சம் கொஞ்சமாக இந்த லிக்கிர் பானைகள் செய்வது குறைந்து கொண்டே வருகிறது - அழியும் கலையாக இருக்கிறது - தற்போது இந்தக் கலையை அழியாமல் பாதுகாக்க சில ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகிறது.  பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது இந்த வகை பானை/பாத்திரங்கள்.  பெரும்பாலும் வாசனைப் பொருட்களை இதில் போட்டு புகைய விடுகிறார்கள் - வீட்டில்/கோவிலில் நறுமணம் கமழ இந்தப் பாத்திரங்கள் பயன்படுகின்றன.  



காகிதக் கூழ் யானை - வேலைப்பாடுகளுடன்... 
விலை ரூபாய் 2500/-


காகிதக் கூழ் பூஜாடி - வேலைப்பாடுகளுடன்... 
விலை ரூபாய் 8500/-


காகிதக் கூழ் கொண்டு செய்யும் பொருட்கள்:  பொதுவாக காகிதக் கூழ் கொண்டு செய்யும் பொருட்களை பல இடங்களில் கவனித்து இருக்கிறேன். காகிதக் கூழ் கொண்டு சிலைகள், பொருட்கள் போன்றவற்றைச் செய்வதுண்டு.  லடாக் பகுதியில் காகிதக் கூழ் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் கலைநயம் கண்களைக் கவரும் விதமாக இருக்கிறது.  காகிதக் கூழால் தயரிக்கப்படும் பொருட்கள் மீது வண்ணக்கலவைகள் சேர்த்து ஓவியங்கள் வரைந்து - அதிலும் நுணுக்கமான ஓவியங்கள் வரைந்து இருக்கிறார்கள் - End Product பார்க்கும்போது மனதை அப்படியே மயக்கி விடுகிறது - எடை குறைவான இந்தப் பொருட்களை கைகளில் எடுத்துப் பார்த்ததோடு, அவற்றை சில படங்களும் எடுத்துக் கொண்டேன்.  கலைஞர்களிடம் பேசியபோது அவர்கள் சொன்னது - இதில் இருக்கும் நுணுக்கமான வேலைப்பாடு பொறுத்தே இந்தப் பொருட்களின் விலை என்று சொன்னார்கள் - உண்மை தான்.  பகிர்ந்த படங்களின் கீழே அதன் விலையும் குறிப்பிட்டு இருக்கிறேன். 



பார்க்க, தொப்பி போல இருக்கிறதா?
தொப்பி இல்லை.... இவை காலணிகள்...


பூஜைப் பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டி...
கட்டில் மேலே அமர்ந்து கொண்டு லேப்டாப் மேஜையாகவும் பயன்படுத்தலாமாம்!


உல்லன் நூல் கொண்டு செய்யப்படும் கலைப் பொருட்களும், அந்தப் பகுதியின் சீதோஷ்ணத்திற்கு ஏற்ற காலணிகளும், மலைப்பகுதிகளில் விளையும் பொருட்களும் என பல விஷயங்களை இந்தக் கண்காட்சியில் கண்டதோடு, அவர்களது கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்க முடிந்தது.  அவர்களது நடனம், பாடல்கள் என சிலவற்றை பார்த்து ரசித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு அருகே இருக்கும் நண்பர் ஒருவரது வீட்டிற்குச் சென்று அங்கேயே இரவு உணவையும் முடித்துக் கொண்ட பிறகு வீடு திரும்பினேன்!  ஒரு சனிக்கிழமை மாலை பயனுள்ளதாக இருந்தது - எனக்கு!  அதன் மூலம் உங்களுக்கும் ஒரு பயன் - சில தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.  



இசைக் கலைஞர்கள் - ஒரு குழு...


இசைக் கலைஞர்கள் - மற்றொரு குழு...


நடனக் கலைஞர் ஒருவர் - கிட்டப் பார்வையில்...


நண்பர்களே, இந்தப் பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்




வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


22 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்களும், அழகிய படங்களும்.  நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நீங்கள் சென்று வந்த லடாக் கண்காட்சி மூலமாக நானும் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். உல்லனில் செய்த பொம்மைகளும், மற்றும் கலைப்பொருட்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. காகித கூழைக்கொண்டு வேலைப்பாடுடன் செய்த யானை, பூஜாடி பிரமிக்க வைக்கின்றன. (விலையிலுந்தான்) லடாக நடனமாடும் பெண்களின் ஆபரணங்கள் நன்றாக உள்ளது. மற்றும் அத்தனை படங்களும் கண்களுக்கு விருந்தாக இருந்தன. பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு இந்த பயனுள்ள கட்டுரையை தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. படங்கள் அழகு தகவல்கள் அருமை ஜி.

    தொப்பிபோல் உள்ளதை செருப்பாக நம்ப முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. கலைநயம் மிக்க பொருட்கள் மிகவும் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைநயம் மிக்க பொருட்கள் - ஆமாம் தனபாலன். சில பொருட்களின் அழகு கண்ணை விட்டு அகலவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அழகான படங்களோடும், விளக்கங்களோடும் நல்ல பதிவு. யானையும், பூச்சாடியும் காகிதக்கூழில் செய்யப்பட்டவையா? நம்பவே முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      காகிதக் கூழில் செய்யப்பட்டவை தான் - நம்ப முடியாத அளவுக்கு வேலைப்பாடு இருக்கிறது - எடையும் குறைவே! நுணுக்கமான வேலைப்பாடு என்பதால் விலையும் அதற்குத் தகுந்த மாதிரி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கைவினைப் பொருட்கள் மிக அழகு.

    நானும் லிக்கிர் பாட்டரியை, சாராயம் வைப்பதற்கான பாத்திரம் என்றுதான் முதலில் புரிந்துகொண்டேன். ஹாஹா

    வேலைப்பாடுகள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிக்கிர் - லிக்கர் - ஹாஹா... அப்படித்தான் படிக்கத் தோன்றும்! :)

      கைவினைப் பொருட்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அருமையான படங்கள் லடாகிற்கு சென்று பார்த்த மாதிரி இருந்தது . காகிதகூழ் யானை சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காகிதகூழ் யானை - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வெங்கட், கண்காட்சி கண்கொள்ளா காட்சி.. கலை பொருட்களும் கலைஞர்களும் பார்க்க ரம்யம்.
    நேரில் சென்று பார்த்த பரவசம் உங்கள் எழுத்தில் புலப்படுகின்றது. பகிர்ந்தமை நன்று, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோயில்பிள்ளை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பு வெங்கட், நீங்கள் கண்காட்சிகளுக்குச் செல்லுவதால் எங்களுக்குக்
    காணக்கிடைக்கும் அரிய காட்சிகளை
    அதிசயத்துடன் பார்க்கிறேன்.
    லடாக் மக்கள் எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில்
    இத்தனை நயத்துடன் வாழ்கிறார்கள் என்று
    பெருமைப் படுகிறோம்.
    கடும் உழைப்பும் கலை ஆர்வமும்
    ஒன்றாக மிளிர்கின்றன.
    அவர்கள் இசையும் மனதை வசீகரிக்கும் என்றே நம்புகிறேன்.
    ஏதோ ஒரு களங்கமில்லாத அழகு கண்ணைப் பறிக்கிறது.

    அதுவும் அந்த அடுப்பும் தேனீர் கூஜாவும்
    மிக அழகு.
    அருமையான பேப்பியர் மாஷ் பொருட்கள்.
    உடைகள், ஆபரணங்கள் எல்லாமே பொக்கிஷம்.
    மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  10. கண்காட்சியில் எடுத்த படங்கள் எல்லாம் மிக அருமை.
    கைவினைப் பொருட்கள் எல்லாம் மிக அருமை.

    காகிதகூழில் செய்த யானையின் பள பளப்பு அது பீங்கான் போன்று தோற்றம் கொடுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பளபளப்பு பீங்கான் போன்ற தோற்றம் தருவது உண்மை தான் மா... நேரில் பார்த்தபோது பிரமிப்பு அகலவில்லை. கைகளில் எடுத்துப் பார்த்த போது எடையே இல்லாமல் இருந்தது. கலைநயம் நேர்த்தி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பிரமிக்க வைக்கும் கலை நயம் கொண்ட பொருட்கள். காகிதக் கூழில் செய்தவை என்று சொன்னால் தான் தெரியும். பிரமிப்பாக இருக்கிறது. எல்லாம் மிக அருமை. லடாக்கின் தின்பண்டங்கள் ஏதும் இல்லையா? நமக்கெல்லாம் தீனி தானே முக்கியம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காகிதக் கூழில் செய்யப்பட்ட பொருட்கள் மிக அழகு தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....