செவ்வாய், 13 ஏப்ரல், 2021

கதம்பம் - மண் பாத்திரம் - உலக சுகாதார தினம் - இப்படியும் சிலர் - வியாபாரம் - வீடு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


RICHNESS IS NOT EARNING MORE, SPENDING MORE OR SAVING MORE. RICHNESS IS WHEN YOU NEED "NO MORE".


******




மண்பாத்திர கலெக்‌ஷன்ஸ் - 7 ஏப்ரல் 2021:




நம்ம வீட்டில் பல வருடங்களாகவே மண்பாத்திர சமையல் தான் என்று  நட்புகளான உங்களுக்கு தெரிந்திருக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் அதில் தான் செய்து பரிமாறுவேன். இப்படியே பழகி விட்டதால் இதற்கு முன்பு இதைத் தவிர்த்து குழம்பெல்லாம் எதில் செய்திருப்பேன் என்று யோசித்து பார்க்கிறேன்..:)) 


புது வரவாக சிலவற்றை வாங்கியிருக்கிறேன்..குல்ஃபி செய்யலாம் என்ற எண்ணத்தில் குட்டியாக இரண்டு கப்புகளும், சேனலில் displayக்கு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் பெரிய கிண்ணம் ஒன்றும், ஈயச்சொம்பில் ரசம் வைப்பார்களே! அது போல் ஒன்றும் கிடைத்தது. இரண்டு நாட்களாக தண்ணீரில் போட்டு வைத்து எடுத்திருக்கிறேன். அழகாக உள்ளதா என்று சொல்லுங்கள்.


******


உலக சுகாதார தினம் - 7 ஏப்ரல் 2021:


சுத்தமும், சுகாதாரமும் நம் இரண்டு கண்களைப் போன்றது. இரண்டுமே இப்போதைய சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றது! கொரோனா என்னும் அரக்கனை உலகத்தை விட்டு விரட்ட முகக்கவசம் என்னும் உயிர்க்கவசமும், சமூக விலகலும், முடிந்தவரை வீட்டிலேயே இருத்தலும் தான் நம்மை பாதுகாக்கும் அரண்களாக இருக்கும்.


******


இவர்களுக்கு என்ன தான் வேண்டும் - 8 ஏப்ரல் 2021:


சிலர் நாம் எது செய்தாலும் அதில் குறை காண்பது, குதர்க்கமாக பேசுவது, நக்கல் அடிப்பது என்று திடீரென்று முளைத்து தொல்லை கொடுக்க ஆரம்பிப்பார்கள்! 


பல வருடங்களாக நட்புவட்டத்தில் இருந்தாலும் தொடர்ந்து நான் எழுதுவதை வாசிப்பார்களா என்று தெரியலை. ஆனால் திடீரென்று ஒருநாள்  அசரீரி போல் வந்து குதர்க்கமாக கேள்வி கேட்பது, அதற்கு நான் பதில் எழுதினாலும் அதிலிருந்து  மீண்டும் ஒரு குதர்க்கமான கேள்வி🙂 என்று தொடர்ந்து கொண்டே இருந்தது 🙂


அவரிடம் தனிப்பட்ட முறையில் எந்தவொரு பகையும் இல்லை. நட்பை முறித்துக் கொள்ளவும் முடியலை🙂 நான் எழுதுவது தான் அவர்களுக்கு  பிரச்சனை போல 🙂 எனக்கு கிடைக்கும் அனுபவங்கள், நான் சந்திக்கும் மனிதர்கள், சமையல் அனுபவங்கள் என்று ஏதோ ஒன்றை வைத்து தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்!!  இதுவரை யார் மனதும் புண்படுமாறு நான் எழுதியதில்லை! அரசியலும் பேசியதில்லை!


இப்படியிருக்க எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு என்பார்களே! இதை என்னவரிடம் பகிர்ந்து கொண்ட போது "Block her! You can do it!" என்று சொல்லும் போது தான், ஆம்! பிரச்சினைக்கான தீர்வு என் கையில் தான் இருக்கிறது! என்று உணர்ந்தேன். ப்ளாக் செய்து நட்பை முறித்துக் கொண்டும் விட்டேன்! 


நிச்சயமாக பயப்படவும் இல்லை! தொல்லையிலிருந்து தப்பிக்க ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை! அது ஏதோ ஒருவிதத்தில் மனதுக்குள் உழன்று கொண்டிருக்காமல் கடந்து வர இந்த விலகல் நிச்சயம் தேவை என்று உணர்ந்து கொண்டேன்.


இதை எதற்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் உங்களுக்கும் இப்படிப்பட்ட மனிதர்களால் தொல்லைகள் இருந்திருக்கலாம்! அதை எப்படி எதிர்கொள்வீர்கள் என்று இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன்.


******


வியாபார நுணுக்கம் - 9 ஏப்ரல் 2021:





கோவில் அருகில் நான்கு தெரு சந்திக்கும் இடத்தில் சாலையோரக் காய்கறி வியாபாரம். சிறிய கடை தான். அந்த வழியாக போகும் போது ஒருநாள் கைவசம் எப்போதும் வைத்திருக்கும் சிறிய துணிப்பையில் வாங்கிக் கொண்டேன். காய்கறிகள் ஃப்ரெஷ்ஷாகவும், விலையும் மலிவாக இருந்தது.


கடை வைத்திருந்த நடுத்தர வயது பெண்மணியின் சிரித்த முகமும், சரளமான பேச்சும் என்னைக் கவர்ந்தது..அவர்களின் விசிட்டிங் கார்டை கொடுத்து ஃபோன் பண்ணினா வீட்டுக்கே வந்து தருவதாகவும் சொன்னார்.


மறுமுறை சென்ற போது காய்கறி வாங்கிக் கொண்டே அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ஃபோன் பண்ணி விலையெல்லாம் கேட்டு ஆர்டர் எடுக்குமளவு உங்களுக்கு நேரம் இருக்குமா?? என்றேன். ஏனென்றால் அங்கேயே வந்து வாங்குவோரும் கணிசமாக இருக்கின்றனர். அது போக கோவிலுக்கு வந்து போகும் மக்களும், வாகனங்களும் வேறு இருக்கின்றதே!


எங்களுக்கு ஆன்லைன்ல ஆர்டர் குடுங்க மேடம் என்று சொல்லி தன் கணவனுக்கு ஃபோன் செய்தார். 'மாமா! இங்க கஸ்டமர் வந்திருக்காங்க! அவங்களுக்கு ஃபோன் வழியா நம்ம கடைக்கு ஆர்டர் போடறது எப்படின்னு கேட்கிறாங்க! கொஞ்சம் சொல்லுங்க!' என்று சொல்லி என்னிடம் ஃபோனைத் தந்து 'எங்க மாமா தான் பேசறாங்க மேடம்! பேசுங்க!' என்றார் 🙂


அந்த மாமா!! ஸாரி 🙂 அந்த நபர் 🙂 உங்க ஃபோன் நம்பரை அங்க குடுத்துட்டு போங்க மேடம்! நான் உங்களுக்கு லிங்க் அனுப்பறேன். அது வழியா போய் நீங்க எப்ப வேணும்னாலும் ஆர்டர் குடுக்கலாம். ராத்திரி குடுத்திட்டீங்கன்னா காலையில் டோர் டெலிவரி செய்துடுவோம். 100 ரூக்கு குறையாம வாங்கணும் அவ்வளவு தான் என்றார்.


அதன் பிறகு லிங்க்கை அனுப்பினார். அதில் போய் இந்த முறை ஆர்டரும் செய்தோம். மறுநாள் வரவில்லை! கால் செய்த போது அந்தப் பெண்மணி சாரி மேடம்! நான் பார்க்கலை. ஆர்டர் போட்டதும் எனக்கு ஒரு மிஸ்டு கால் குடுங்க போதும். நான் பார்த்துடுவேன். நாளைக் காலையில் வந்துடும்! என்றார்.


அதன்பிறகு வாட்ஸப்பிலும் 'நாளைக் காலை வந்துடும்! அடுத்த ஆர்டரிலிருந்து இப்படி நடக்காது மேடம்! மன்னிக்கவும்! என்றும் மெசேஜ் அனுப்பினார் 🙂 பரவாயில்லப்பா! என்று பதிலனுப்பினேன். இன்று காலை அந்தப் பெண்மணியின் அப்பா கொண்டு வந்து கொடுத்து விட்டார். அவருக்கு அந்தப் பெண்மணியும் கால் செய்து கேட்டுக் கொண்டார்.


சிறிதோ பெரிதோ எந்த வியாபாரமாக இருந்தாலும் அதனை விரிவுபடுத்தவும், அதிகரிக்கவும் சில நுணுக்கங்களும் யுக்திகளும் தான் தேவை. அரசாங்கத்தை குறை சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இன்றைய டிஜிட்டல் மயமான உலகிற்கு ஏற்றாற் போல் கொஞ்சம் அப்டேட் செய்து கொண்டால் நிச்சயம் வெற்றியடையலாம்.


******


வீடு மனைவி மக்கள் - 9 ஏப்ரல் 2021:





1988 ல் வெளியான விசு சாரின் திரைப்படம் இது. கே.ஆர்.விஜயா, எஸ்.வி.சேகர், சீதா, பாண்டியன், ஆனந்த்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். பிள்ளைகள் ஒவ்வொருவராக கைவிட விசுவும், கே.ஆர்.விஜயாவும் ஒரு வீட்டை கட்ட படாதபாடு படுவது தான் கதை. கண்கள் வற்றாத குளமானது தான் இன்றைக்கு திரைப்படம் பார்த்ததின் விளைவு 🙂


நிஜமாகவே ஒரு வீட்டை வாங்குவதோ, கட்டுவதோ என்பது வரம். அது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் அமைவதில்லை. குடிசை வீடோ, ஓட்டு வீடோ நமக்கே நமக்காக ஒரு இடம் என்பது பெரிய விஷயம்.


300 ரூ சம்பளத்தில் இருந்த அப்பாவுக்கு அப்போது 2000 ரூபாயில் கோவையை அடுத்த பெரிய நாயக்கன் பாளையத்தில் வீடு வாங்க முடியாமல் கனவாய்ப் போனது. அடுத்து திண்டுக்கல்லில் குலுக்கலில் அலாட் ஆன வீடு ஒன்று வக்கீல், வாய்தா என்று அலைச்சலில் கனவாய்ப் போனது.


அம்மா கடைசி வரை அரசுக் குடியிருப்பில் தான் இருந்தார். அம்மாவின் மறைவிற்குப் பிறகு அப்பா தன்னுடைய ரிட்டையர்மெண்ட் பணத்தில் திருச்சியில் வீடு ஒன்றைக் கட்டினார்..அதிலும் சில மாதங்கள் தான் அவரால் வசிக்க முடிந்தது. அதன் பிறகு நாங்களும் வைத்துக் கொள்ளவில்லை! அதன் பின்பு அந்த தெருவுக்கு செல்லும் தைரியமும் எனக்கு இப்போது வரை இல்லை. 🙁


பழைய நினைவுகளை என்றுமே மறக்க முடியாது. மறக்கவும் கூடாது என்று நினைப்பவள்.


******


நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்



ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

  1. கதம்பத்தில் உள்ளவை நடந்த நிகழ்வுகளை சிந்திக்க வைத்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. மண்பாத்திரங்கள் கண்களைக் கவர்கின்றன.

    குதர்க்கமாக பேசுபவர்களும், தனிப்பட்ட முறையில் தாக்குபவர்களும் நட்பு வட்டத்திலேயே கூட இருக்கிறார்கள்,

    இங்கு சென்னையில் சூப்பர் டெய்லி என்று ஒரு ஆப் இருக்கிறது.  காய்கறி, பால், தயிர், வெண்ணெய், பெவரேஜஸ் முதலான பொருட்களை ஆன்லைனில் முதல்நாளிரவு 11 மணிக்குள் ஆயர் செய்தால் காலை நான்கு மணிக்கு வீட்டு வாசலில் இருக்கும்.

    வீடு மனைவி மக்கள் - விசுவை மறக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கதம்பம் அருமை மேடம்.
    ஆம், நம்மை விமர்சிப்பவர்களில் வெருமனே பொறாமையால் குதர்க்கமாகவே பேசுபவர்களை தவிர்ப்பதே நலம்.
    மன் பாண்ட விர்ப்பனை இப்போது சென்னையிலும் அதிகரிப்பதாக அறிகிறோம், எங்கள் முந்தைய வங்கிக்கிளையில், அதை வாங்கி அதிலேயேதான் தன்னீர் குடித்தோம்.
    ஆண்லைன் விர்ப்பனைதான் வருங்காலம்.
    வாடிக்கையாளர்களை பிடிப்பதை விட, அவர்களுக்கு தொடர்ந்து மரியாதை அளித்து தக்கவைப்பதே தொடர்ந்து தொழிலில் நிற்க உதவும்.
    அதை அவர்கள் தொடர்ந்து மனதில் வைத்துக்கொண்டால் மிகவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நீங்கள் தொடர்ந்து பிளொகில் எழுதி முன்னணியில் இருப்பது சிலருக்கு கண்ணை குத்துவது இயல்பே அவர்களை கவனிக்காமல் விடுவதே நல்லது நீங்கள் தனியாக புளொஃ அரசியல் அல்லாது எழுதுபவர்களில் முன்னணியில் என்ன முதலாவது ஆகவே இருக்கிறீர்கள் (இதனை திண்டுக்கல் தனபாலன் தான் சரி பார்க்க வேண்டும்) தொடர்ச்சியாக எழுத வாழ்த்துக்களுடன் விக் என்கிற நித்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகள் குறித்த உங்கள் எண்ணங்கள் அறிந்து மகிழ்ச்சி விக் என்கிற நித்தி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கதம்பம் நன்று.

    போன் செய்து காய்கறிகள் ஆர்டர் செய்வது... நல்ல முறை. வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திட்டாங்கன்னா அது தொடர்ந்த பிஸினெஸுக்கு வழிவகுக்கும். சென்னைல (இங்கேயும்) தினமும் flatக்கு பூ ஒரு பாக்கெட்ல போடுவாங்க (15 ரூபாய்). இப்படி நிறைய வாடிக்கையாளர்களைப் பிடித்துவிடுவார்கள். அப்போ மாதம் நல்ல பெரிய தொகையா கிடைக்கும். பிஸினெஸுக்கு நிறைய வழிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    அன்பு ஆதி, உங்கள் பதிவுகளில் மிகவும் கவர்ந்தது
    வீட்டின் சுத்தமான சமையலறை.
    நான் அதிகம் முக நூல் பக்கம் வருவதில்லை.

    உங்களை யார் வருத்தினார்களோ தெரியவில்லை.
    அவரை நீங்கள் ப்ளாக் செய்ததும் சரியே.

    உங்கள் மூவரையும் போல நல்ல குடும்பம் பார்த்ததில்லை.

    எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும்.

    காய்கறிப் பெண்ணின் மரியாதை கவர்ந்தது.
    இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நிறையவெ
    பிரபலமாகிவிடுவார்.

    எல்ல நலங்களும் பெருக வாழ்த்துகள். பத்திரமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி வல்லிம்மா. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. விசு சாரின் எல்லாப்படங்களும் பார்த்துள்ளேன்...இது மட்டும் எப்படியோ மிஸ்ஸிங்..பார்க்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசு படம் - முடிந்த போது பாருங்கள் ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. இங்கு வந்து வெகு நாட்கள் ஆகின்றன...
    தொகுப்பு அருமை...

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பணிச்சுமைகளுக்கு இடையே இங்கேயும் வந்து கருத்துரைத்தமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கதம்பம் நன்றாக இருக்கிறது. முகநூலில் படித்தேன். இங்கும் படித்தேன்.
    போன் செய்தால் காய்கறி வீட்டுக்கு கொடுத்தார் எங்களுக்கும் ஒருவர்.
    நன்றாக கொடுத்தார். சரியான வரவேற்பு இல்லை எங்கள் வளாகத்தில் அப்புறம் அவர் வேறு வாடிக்கை தேடி கொண்டார்.

    நானும் மாயவரத்தில் வெயில் காலத்தில் குடிக்க தண்ணீர் வைப்பேன் மண் பானையில்.
    அப்புறம் தயிருக்கு, குழம்பு, காய் வைக்க என்று மண்பானைகள் வாங்கி வைத்து இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கதம்ப கருத்துக்கள் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. முகநூலிலும் படித்தேன். பலரின் விருப்பங்களை நம்மால் பூர்த்தி செய்ய முடியாது. எல்லோருக்கும் பிடித்தவர்களாகவும் இருக்க முடியாது. நாம் நாமாகவே இருப்போம். இங்கேயும் ஆரம்பத்தில் காய்கள் வீட்டுக்கு வந்தன. நாங்க வாங்கினதில்லை. நம்மவருக்குத் தோட்டத்தில் இருந்து நேரே வீட்டுக்கு வரணும் என்பார்! :))))) மண் சட்டிகள், பாத்திரங்கள் பயன்பாடுக்கு எனக்குக் கொஞ்சம் இல்லை நிறைய பயம். பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு வேளை நிவேதனத்துக்கும் பிறகு அவங்க பானை/சட்டிகளை உடைத்துப் போடுவார்கள் என்பார்கள். நம்ம வீட்டில் எனக்கு அதுவாவே உடையும். எதுக்கு வம்பு? :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....