செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கல்லூரி நாட்கள் பகுதி பதினொன்று - சினிமா - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


தன்னிடம் இல்லாத ஒன்றில் தான், தனக்கு நிம்மதி இருப்பதாக நம்புகிறான் மனிதன்.


******



கல்லூரி நாட்கள் என்ற தலைப்பில் இது வரை பத்து பதிவுகள் எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பகுதிகளுக்கான சுட்டி கீழே!


கல்லூரி நாட்கள் - முதல் பகுதி 


கல்லூரி நாட்கள் - இரண்டாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - மூன்றாம் பகுதி  


கல்லூரி நாட்கள் - நான்காம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஐந்தாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஆறாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஏழாம் பகுதி


கல்லூரி நாட்கள் - எட்டாம் பகுதி


கல்லூரி நாட்கள் - ஒன்பதாம் பகுதி


கல்லூரி நாட்கள் - பத்தாம் பகுதி


சென்ற பகுதியில் இருபது வருடங்களுக்கு முன் இருந்த அப்போதைய சூழலில் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணுக்கான தேவைகளும், செலவுகளும், சேமிப்பும் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த விஷயத்தில் இப்போதும் என்னிடம் பெரிதாக மாற்றமில்லை என்று தான் சொல்ல வேண்டும்...:)


கல்லூரி நாட்களில் காலேஜை கட்டடித்து விட்டு சினிமாவுக்கு செல்லாதோரும் இருப்பார்களா என்ன! நண்பர்களுடன் அரட்டையடித்து, கலாட்டாவுடன் பாப்கார்னை ருசிக்கும் கும்பலை தான் பார்த்திருப்போம்.  எங்கள் மூவருக்கும் காலேஜை கட்டடித்து விட்டு சினிமாவுக்குச் செல்லுமளவு தைரியம் எல்லாம் இல்லை என்று முந்தைய பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். அப்படியும் தைரியம் வந்து ஒருநாள் வெளியே சென்ற போது மாட்டிக் கொண்டதை பற்றியும் தான் சொன்னேனே..:) ஆனால்! எங்கள் கல்லூரிப் பருவத்தில் ஒருநாள் சினிமாவுக்கு சென்றோம்!!! எப்படி??


அதற்கு முன் எங்கள் வீட்டில் சினிமாவுக்கு செல்லும் கதையைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்!!


அப்பாவுக்கு சினிமாக்கள்  பார்ப்பதில் பெரிதாக ஆர்வமிருக்காது என்பதால் என்னுடைய சிறுவயது விடுமுறை நாட்களில் எப்போதாவது 'குடும்பத்துடன் பார்க்கலாம்' என்று நினைக்கிற சினிமாக்களுக்கு அம்மா தான் எதிர்வீட்டில் வசித்த மல்லிகாம்மாவுடன் எங்களை அழைத்துச் செல்வார். சிறிய வயர்க்கூடையில் தின்பண்டங்கள், தண்ணீர் சகிதம் நானும், தம்பியும் அம்மாவுடன் கிளம்பிப் போவோம்.  என்றாவது ஒருநாள் நொறுக்குத் தீனியை தியேட்டரிலும் வாங்கித் தருவார்கள். அப்படி நான் ருசித்த ஒரு தின்பண்டம் தான் Donut..:) அப்போது தெரியவில்லை...:) மெதுவடை போன்ற வடிவமும், சாப்பிட்ட  பதமும், ருசியும் நினைவில் இருக்கவே மகளிடம் ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன். அது என்னவென்று இணையத்தில் தேடினால் வெளிநாட்டு தின்பண்டம்..:) நினைத்துப் பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது...:)


அம்மாவுடன் சினிமாவுக்குச் சென்ற போது ஒருநாள் தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருந்தோம். கவுண்ட்டர் திறந்ததும் டிக்கெட் வாங்கப் போகும் வெறியில் கும்பலில் என்னைக் கீழே தள்ளி விட்டு என் மீதே ஏறியே ஒரு பெண்மணி சென்றார்..:) வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நான் பெரிதாக அழுதுகொண்டே அந்த விஷயத்தைச் சொல்ல அம்மாவுக்கு அப்பாவிடமிருந்து சகட்டுமேனிக்கு அர்ச்சனை கிடைத்தது..:) அதன்பிறகு தியேட்டருக்குச் சென்று சினிமா பார்ப்பதும் குறைந்து போயிற்று..:) 


எங்கள் கல்லூரிப் பருவத்தில் அதாவது 1997 முதல் 2000 க்குள்  'தல' அஜித்தின் முகவரி, அமர்க்களம், குணால் நடித்த காதலர் தினம், 'தளபதி' விஜய்யின் குஷி, துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, பிரியமானவளே, (இந்த நான்கு திரைப்படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக அப்போது ஒரு விழா கூட நடந்தது) நாகார்ஜுனாவின் ரட்சகன் என்று சூப்பர் டூப்பர் திரைப்படங்கள் வெளியாகின. திரைக்கதையும், பாடல்களும் எங்கள் வகுப்புகளிலும், பெண்கள் அறையிலும் எல்லோராலும் பேசப்பட்டன. அந்தக் கதைகளையெல்லாம் கேட்டு வலம் வந்து கொண்டிருந்தோம்.


1999ல் தளபதி விஜய் திருமணம் செய்து கொண்ட போது எங்கள் கல்லூரியில் இருந்த தளபதியின் ரசிகைகள் பலரும்  வருத்தப்பட்டதையும் பார்த்திருக்கிறேன். 2000ல் தல அஜித் ஷாலினியைத் திருமணம் செய்து கொண்டதும் புலம்பித் தவித்தவர்களையும் பார்த்திருக்கிறேன். அப்போது எங்கும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்கள் இவை தான் என்று சொல்லலாம்..:)


எங்கள் ஏரியாவின் அருகில் ரேஸ்கோர்ஸ் வாக்கிங் ரோடு என்பது ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட வட்டவடிவப் பாதையாகும். காலையும், மாலையும் அங்கே வாக்கிங், ஜாகிங் செய்வோர் ஏராளம். பள்ளி மற்றும் கல்லூரிக்கு ரேஸ்கோர்ஸில் இருந்து அவினாசி சாலைக்கு நடந்தே செல்வது போல் கே.ஜி தியேட்டருக்கும் நடந்தே சென்று விடுவோம். கே.ஜி தியேட்டரில்  ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி என நான்கு திரையரங்குகள் இருந்தன. இதுபோல் கோவையில் அப்போது கங்கா, யமுனா, காவேரி! சாந்தி! அர்ச்சனா, தர்ச்சனா! கவிதாலயா!  கர்னாடிக்! அப்ஸரா! என்று ஏகப்பட்ட திரையரங்குகள் இருந்தன.


ஒருவழியாக 2000 ஆம் ஆண்டு எங்கள்  கல்லூரிப் படிப்பும் நிறைவடைந்தது.  அந்த வருடத்தின் தமிழ் வருடப்பிறப்புக்கு மாதவனும், ஷாலினியும் நடித்த 'அலைபாயுதே' திரைப்படம் வெளியானது. மாதவனின் புன்னகைக்கு அப்போது பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. நாங்கள் எல்லோரும் அந்தத் திரைப்படத்துக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம். வகுப்புத் தோழர்களில் ஏழு பேரும் நாங்கள் மூவரும் சேர்ந்து கோவையின் பிரபலமான கே.ஜி தியேட்டரில் அலைபாயுதே படத்தை ஒரு வரிசை முழுவதும் அமர்ந்து பார்த்தோம். அப்பாடா! ஒருவழியாக எங்கள் சினிமாக் கனவும் நிறைவேறியது. 


இப்படியாக எங்களுடைய சினிமாக் கனவு நிறைவேறிய விதத்தைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன்.. வேறு சில விஷயங்கள் அடுத்த பகுதியில்..


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான அனுபவங்கள்.  நான் பள்ளிக் காலத்திலேயே இரண்டு படங்கள் கட்...  வேண்டாம்.  அந்த விவரம் வேண்டாம்.  உங்கள் சுவையான அனுபவங்களை படிக்க தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிக் காலத்திலேயே!!!

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. கல்லூரி நாட்களில் காலேஜை கட்டடித்து விட்டு சினிமாவுக்கு செல்லாதோரும் இருப்பார்களா என்ன! //

    ஹிஹிஹி நானு!!

    அட அப்போவே நம்மூர்ல கடையில், அதுவும் கோயம்புத்தூர்ல டொனட் கிடைத்ததா?!!

    நான் முதன் முதலில் டொனட் வீட்டில் செய்தது வெளிநாட்டு உறவினர் மூலம் தெரிந்து கொண்டு செய்தது அப்போதான்..கோயம்புத்தூரில் இருந்த பொழுதுதான்..ஆனால் கடையில் கிடைத்தது என்று அப்பொது தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோனெட் எனக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது...:)ஆங்கிலேயர்கள் குதிரை ரேஸ் செய்த இடமாச்சே! அவர்களிடமிருந்து வந்திருக்கலாம். ரேஸ்கோர்ஸ் பகுதியில் ப்ளூபெர்ரி கூட சாப்பிட்டிருக்கிறேன்..அதைப் பற்றி ஏதாவது ஒரு பகுதியில் எழுத முயற்சிக்கிறேன்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. ஓ ரேஸ்கோர்ஸ் பக்கம் தான் நீங்கள் இருந்தீர்களா! அட! 1999 வரை கோயம்புத்தூர் தான் நான் இருந்தது. அப்போது மகனை கராத்தே பயிற்சிக்கு ரேஸ்கோர்ஸ் க்ரவுண்டுக்குத்தான் அழைத்து வருவேன். அவனை அங்கு விட்டுவிட்டு நான் ரேஸ் கோர்ஸ் ரோடு சுற்றி நடைப்பயிற்சி செய்வேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..82 முதல் 2002 கோவைவாசியாக தான் இருந்தேன்..:) உங்களை எங்கேயாவது பார்த்திருக்கலாம்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  4. சுவாரசியம் தான், ஆதி உங்கள் கல்லூரி, சினிமா அனுபவங்கள்!
    நீங்கள் சொல்லியிருக்கும் இடங்கள் எல்லாம் எனக்கும் கோயம்புத்தூர் நினைவுகளை எழுப்பியது.

    இப்போது அவினாசி சாலையில் நிறைய மாற்றங்கள். கோயம்புத்தூரே நிறைய மாறியிருக்கிறது. மேம்பாலம் என்றெல்லாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..நிறைய மாற்றங்கள் வந்துவிட்டதாகத் தான் சொல்கிறார்கள்.

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. சுவாரசியமான அணுபவங்கள்.
    காத்திருந்து சினிமா பார்த்திருந்தாலும், பெண்கள் ரசித்த அலைப் பாயுதே பார்த்திருக்கிறீர்கள், அது முழு திருப்தியை அழித்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  9. படங்களை வைத்து வருடங்களை நினைவுகூர்ந்திருக்கிறீர்கள்.

    கல்லூரிக் காலங்கள் நினைவுக்கு வந்தன. ஹாஸ்டலில் இருந்து 6:30 மணி ஷோ நெல்லை ஜங்ஷனில் பார்த்துவிட்டு பிறகு 9 மணிக்கு பன்னீர் புஷ்பங்கள் படம் பார்த்துவிட்டு ஹாஸ்டல் கேட்டில் ஏறிக் குதித்து ஹாஸ்டலுக்குள் சென்றது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அனுபவமும் அருமை..

      தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  10. கல்லூரிக் கால நினைவுகள் அருமை.
    கனவு நிறைவேறி விட்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. மறக்க இயலாத இனிமையான காலங்கள்..

    நானும் தொடர்கின்றேன்...

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.

      நீக்கு
  12. அருமையான பொன்மொழி, அண்ணா.

    ஆதி, உங்கள் நினைவலைகள் செம! கல்லூரி காலத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்களைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க தேன்மதுரத்தமிழ் கிரேஸ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....