செவ்வாய், 9 நவம்பர், 2021

தலைநகரிலிருந்து 09112021 - Choor Choor Naan - நோலன் (G)கூட் ரஸகுல்லா......


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மதுரைக்கு ஒரு பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உங்களுடைய வளங்களை எப்படிச் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பதையும், எந்தவொரு கணத்திலும் ஏதோ ஒரு விஷயத்தின்மீது அவற்றை எப்படி ஒருமுகப்படுத்துவது என்பதையும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ளுங்கள். உண்மையான சக்திக்கான ரகசியம் இதில்தான் அடங்கியுள்ளது.


******


Choor Choor Naan:




Choor Choor Naan.....  இந்தப் பெயரில் தலைநகர் தில்லியில் ஒரு உணவுப் பதார்த்தம் கிடைக்கும்... இப்போதெல்லாம் நமது ஊரில் கூட நான் என்பது கிடைக்கத்தான் செய்கிறது என்றாலும், வடக்கில் இருப்பது போன்ற சுவை நிச்சயம் அங்கே கிடைக்கும் நான்களில் இருக்காது.  அது என்ன சூர் சூர் நான்? 


தலைநகர் வந்த புதிதில், அவ்வப்போது அலுவலக நண்பர்களோடு, மதிய நேரத்தில் பல இடங்களுக்கும் சென்று புதிது புதிதாக உணவு வகைகளை உண்பது வழக்கம். ஒருசமயம் அப்படிச் செல்லும்போது, முதன்முறையாக இந்தப் பெயரை கேள்விப்பட்டேன். வழக்கமாக நான் என்பது கோதுமை மற்றும் மைதா கலந்த மாவில் செய்வார்கள் என்பதால் அதிகம் இதனை உண்ண முடியாது. தவிர நான் தயார் செய்யும்போது நிறைய நெய்யும் பயன்படுத்துவார்கள் என்பதால் திகட்டி விடும்.  ஒரு நான் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு வந்துவிடும்.


தலைநகரின் பாஹட் கஞ்ச் பகுதியில் இருக்கும் ஒரு சாலையோர உணவகத்திற்கு வட இந்திய நண்பர் அனில் அழைத்துச் சென்றார். முதன்முறையாக இந்த சூர் சூர் நான்-ஐ அப்போதுதான் சாப்பிட்டேன். சாதாரணமாக தந்தூர் எனப்படும் மண் அடுப்பில் நான் தயாரித்து, தாராளமாக நெய் தடவி,  அதனை இரண்டு மூன்று துண்டுகளாக்கி தேவையான தொட்டுக்கையுடன் கொடுப்பார்கள். ஆனால் இந்த சூர் சூர் நான் மட்டும் அப்படி செய்ய மாட்டார்கள். வட்ட வடிவில் நான் செய்து, தந்தூரில் சுடும்போதும் நெய் தடவி, அதிலிருந்து எடுத்த பிறகும் நெய் தடவி, அதனை நன்றாக கசக்கி ஒன்றிரண்டு துண்டுகளாக்கி தொட்டுக்கையுடன் தருவார்கள். மிகவும் சுவையாக இருந்த அந்த  சூர் சூர் நான், எனக்கு பிடித்த உணவாகிவிட்டது.  


நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்ற வாரத்தில் சனிக்கிழமையன்று ராணி Bபாக் எனும் பகுதிக்கு சென்றபோது அங்கே இருந்த ஒரு பஞ்சாபி உணவகத்தில் மதிய உணவாக சூர் சூர் நான் தாலி (Plate) 120 ரூபாய் கொடுத்து, இரண்டு நான், தொட்டுக்கொள்ள ஷாகி பன்னீர், தால் மக்கனி, ராய்தா மற்றும் வெங்காயம், சட்னி என தட்டில் வைத்து கொடுத்தார்கள். கொடுத்த காசுக்கு சுவையான, சிறப்பான உணவு கிடைத்தது. தலைநகர் தில்லியின் பாஹட் கஞ்ச்  பகுதியிலுள்ள உணவகத்திலோ, வேறு சில பஞ்சாபி உணவகங்களிலோ கிடைக்கும் இந்த உணவை நீங்களும் சுவைக்கலாம்....  


******


நோலன் (G)கூட் ரஸகுல்லா...... 




ரஸகுல்லா..... இந்த இனிப்பை அறியாதவர் எவர்? சுவைக்காதவர் எவர்? பொதுவாக பெங்காலிகள் அதிகம் உண்ணும் இனிப்பு என்றாலும், இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களும் இதனை விரும்புவது தானே வழக்கம். (G)குலாப் ஜாமூன் மற்றும் ரஸகுல்லா ஆகிய இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல..... முதலாவதை சூடாக சுவைக்க வேண்டும் என்றால் இரண்டாவதை சில்லென்று சுவைக்க வேண்டும்.


தலைநகர் தில்லியின் உணவகங்கள் மற்றும் இனிப்பகங்கள் இரண்டிலும் இந்த இரண்டு இனிப்புகளும் எப்போதும் கிடைப்பவை. பலரும் சுவைப்பவை. உணவகங்கள் பக்கமாகச் செல்லும்போது, உணவை உண்டு முடித்திருந்தாலும் இந்த இரண்டு இனிப்புகளுக்காகவேனும் உள்ளே சென்று சுவைப்பதுண்டு.  எப்போதும் சர்க்கரை பாகில் ஊறிய குலாப் ஜாமூன் அல்லது சர்க்கரை கலந்த பாலில் ஊறிய ரஸகுல்லா சுவைத்து மகிழ்வதுண்டு.  


ஒரு முறை நண்பர் மஜும்தார் கொல்கத்தாவிலிருந்து மட்கா ரஸகுல்லா (மண் பானையில் வைத்த ரஸகுல்லா) அதுவும் சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லம் சேர்த்து செய்த ரஸகுல்லா வாங்கி வந்தார். வழக்கமான சுவையை விட வித்தியாசமான சுவை... சுவை மிகவும் பிடித்ததால், மூன்று..... ஆமாம்..... மூன்று நோலன் (G)கூட் ரஸகுல்லாவை ஒரே சமயத்தில் ரசித்து ருசித்து உள்ளே தள்ளினேன்...... மறக்க முடியாத சுவை அது...


சமீபத்தில் தலைநகர் தில்லியின் கோல் மார்க்கெட் பகுதியில் புதிதாக திறந்திருக்கும் ISKCON நடத்தும் God's Own Cuisine இனிப்பகத்தில் இந்த பனைவெல்ல ரஸகுல்லா கிடைக்க வாங்கி சுவைத்தேன்... ஒன்று இருபத்தைந்து ரூபாய்... நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுவைத்ததில் ஆனந்தம், பரமானந்தம், பேரானந்தம்... 


முன்பு போல இன்னும் ஒன்றிரண்டு ரஸகுல்லாக்களை உள்ளே தள்ளலாம் என மனதும், நாக்கும் கட்டளையிட்டாலும், அந்த ஆசைக் குதிரையை கடிவாளம் கொண்டு இழுத்து நிறுத்த வேண்டியதாகிவிட்டது... தீபாவளி சமயம் வேறு.... இன்னும் வகை வகையாய் இனிப்புகள் சுவைக்க வேண்டியிருக்குமே...


இந்த வகை பனைவெல்லம் சேர்த்த அல்லது வெல்லம் சேர்த்த ரஸகுல்லா உங்கள் பகுதி இனிப்பகங்களில் கிடைத்தால் சுவைத்துப் பாருங்களேன்..... 


******


பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


18 கருத்துகள்:

  1. சூர் சூர் நான்..  பெயரே புதுமையாக இருக்கிறது!  தொட்டுகை இல்லாமல் இதெல்லாம் சாப்பிட முடியாது இல்லையா?!  ரசகுல்லா பதிவு முகநூலிலும் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொட்டுக்கை இல்லாமல் சாப்பிடுவது கடினமே ஸ்ரீராம். முகநூலிலும் எழுதி இருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. உங்க ஆனந்தம் பரமானந்தம் எங்களுக்கும் கடத்திவிட்டீர்கள்.

    எனக்கு ஏதோ மசாலா ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜி வருவதால் நார்த் இன்டியன் தொட்டுகையைச் சாப்பிட முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர்வத்தைத் தூண்டும் உணவு வகைகள்.

      நீக்கு
    2. கடத்திய பரமானந்தம் - மகிழ்ச்சி.

      அடடா வட இந்திய மசாலா ஒத்துக் கொள்ளாதா? சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. உணவு வகைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு இனிமையாக இருக்கிறது. வாசக வரிகள் அருமை. அந்த நானின் பெயர் வித்தியாசமாக உள்ளது. (டபிள் சாட் வெடி மாதிரி) இதையெல்லாம் சூடாக சாப்பிட வேண்டும்.இல்லையெனில் நான்" நாமாக" மாறி கடிக்க இயலாமல் கொஞ்சம் பற்களை பதம் பார்த்து விடுமென நினைக்கிறேன். அதற்கு தொட்டுகைகள் நன்றாக உள்ளது.

    இனிப்புகளும் அருமை. வெல்லம், பனை வெல்லம் சேர்த்த ரசகுல்லா சுவையாகத்தான் இருக்கும். நீங்கள் விவரித்து சொன்ன விதங்களே நானும் சாப்பிட்ட ஆனந்தத்தை அளித்து விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவும், வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. சூர் சூர் நான் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சூர் சூர் சூப்பர்...

    அடுத்தது வாசிக்க இனிமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிக்க மட்டும் இனிமை - சிலருக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. வெங்கட்ஜி இன்றைய பதிவு நா ஊறும் பதிவு!!!!

    தில்லியில் சூர் சூர் நான் சுவைக்கலாம்னு போயி சாப்பிட முடியாமல் போனது. அதுவும் அதில் ஸ்டஃப்ஃபிங்க் வேறு இருக்கும் என்றும் சொன்னாங்க. இப்ப நீங்க வேற ஆசைய தூண்டி விட்டுவிட்டீர்கள். இங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே வீட்டிலேயே செய்து பார்த்துவிட வேண்டியதுதான்!!!! அதற்கான தொட்டுகை கூடவே நாவில் நீர்!!!

    கூட் ரஸகுல்லா டேஸ்ட் செய்திருக்கிறேன் ரொம்பவே பிடித்துவிட்டது. இரண்டுமே வெல்லம் போட்டதும், பனைவெல்லம்/கருப்பட்டியில் செய்ததும் சுவைத்திருக்கிறேன். கல்கத்தாவிலிருந்து உறவினர் கொண்டு வந்த போது. பிடித்திருந்தாலும் அதிகம் சாப்பிட முடியாதே. அதுவே பெரிதாக இருந்ததால் கொஞ்சமே கொஞ்சம் டேஸ்ட் செய்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா ஊறும் பதிவு - உண்மை.

      சில உணவு வகைகள் எப்போதும் ரசிக்கக் கூடியவை. முடிந்த போது சுவைத்துப் பாருங்கள் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாசகம் நன்றாக இருக்கிறது.
    சூர் சூர் நான் தாலி , ரஸகுல்லா அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்கள்க்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      சூர் சூர் நான் மற்றும் ரஸகுல்லா - ரசிக்கக் கூடியவையே கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சூர் சூர் நான்.. பெயரும் செய்முறையும் புதுமை. பேரானந்தத்துடன் சுவைத்த பனைவெல்ல ரசகுல்லா கிடைத்தால் நிச்சயம் முயன்றிடுகிறோம் :).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள் ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....