திங்கள், 22 நவம்பர், 2021

பயணம் செய்ய ஆசை - (G)கங்கோத்ரி - (G)கோமுக்(kh) - தபோவன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பயணம் இன்றி வாழ்க்கையும் இல்லை; பணம் இன்றி உறவுகளும் இல்லை.


******





படம்: இணையத்திலிருந்து...

பயணம் செய்ய ஆசை என்ற தலைப்பில் இது வரை வெளியிட்ட பதிவுகளை நீங்கள் படித்திருக்கலாம்.  இதுவரை இந்த வரிசையில் எழுதிய முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே. 


பயணம்  செய்ய ஆசை - 1 (CH) சோப்டா - உத்திராகண்ட்


பயணம் செய்ய ஆசை - 2: Umngot River - Dawki, Meghalaya

பயணம் செய்ய ஆசை - 3 - GURUDONGMAR LAKE, SIKKIM


பயணம் செய்ய ஆசை - 4 - SPITI VALLEY, HIMACHAL PRADESH


பயணம் செய்ய ஆசை - 5 - மணிகள் நகரம் ஜலாவர்


இந்த வரிசையில் இதோ இன்று மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துவிட்டேன்.  மலைப்பிரதேசங்கள் என்றைக்கும் என்னை மிகவும் கவர்ந்து இழுப்பவை. நதிகள், இயற்கை காட்சிகள், வனப் பிரதேசம் என எல்லா இடங்களும் பிடித்தவையாக இருந்தாலும், மலைப்பிரதேசங்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு சக்தி இருக்கத் தான் செய்கிறது. என்னுடைய ஹிமாச்சலப் பயணங்கள் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களாகவே இருந்திருக்கிறது.  ஹிமாசலப் பிரதேசத்திற்கு நிறைய பயணங்கள் செய்திருந்தாலும் உத்திராகண்ட் மலைப் பிரதேசங்களுக்கு செல்ல இன்னும் சரியான வாய்ப்பு அமையவில்லை.  அம்மாநிலத்தில் சில இடங்களுக்கு சென்று வந்திருந்தாலும் இன்னும் பார்க்க வேண்டிய, பார்க்க ஆசைப்படும் இடங்கள் நிறையவே உண்டு. 




வாய்ப்பு கிடைக்கும் போது உத்திராகண்ட் மாநிலத்தின் சில இடங்களுக்குச் சென்று வர வேண்டும் என அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.  சமீபத்தில் அந்த நினைவு இன்னும் அதிகமானது - காரணம் நான் படித்த ஒரு மின்னூல். கயிலைமாமணி சரவணன் என்பவர் எழுதிய கோமுக் - கங்கையின் பிறப்பிடம் என்ற மின்னூல் தான் அது. கங்கையின் பிறப்பிடமாகிய (G)கோமுக்(kh) சென்று வந்த அனுபவங்களை இந்த மின்னூல் வழி பகிர்ந்து இருக்கிறார் நூலாசிரியர் சரவணன்.  கயிலை பயணங்கள் ஏற்பாடு செய்வதும் இவரது பணி.  ஹிமாலயா மலை பிரதேசங்களுக்கு நிறைய பயணங்கள் செய்திருப்பதாக இவரது நூல் வழி அறிந்து கொள்ள முடிந்தது.  ஏற்கனவே எனக்கு இருந்த உத்திராகண்ட் பயண ஆசை இவரது நூல் படித்த பிறகு இரட்டிப்பானது.  இந்த மாதத்திலேயே தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை கிடைத்தபோது அங்கே சென்று வரலாமா என்று கூட யோசித்தேன்! :) 



படம்: இணையத்திலிருந்து...

கங்கையின் பிறப்பிடமாக பொதுவாக சொல்லப்படுவது கங்கோத்ரி என்றாலும், கங்கையின் பிறப்பிடம் (G)கோமுக்(kh) என்கிற இடம் தான். இந்த இடம் கங்கோத்ரியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் நடைப்பயணத்தில் (மலையேற்றம்!) இருக்கிறது. தில்லியிலிருந்து செல்வதாக இருந்தால் ஹரித்வார் அல்லது ரிஷிகேஷ் வரை இரயிலில் பயணித்து அங்கிருந்து பேருந்து/சாலை வழி கங்கோத்ரி வரை பயணிக்கலாம்.  விமானத்தில் பயணிப்பதென்றால் டேராடூன் நகருக்கு 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜாலி க்ராண்ட் விமான நிலையம் வரை பயணித்து அங்கேயிருந்து 250 கிலோமீட்டர் சாலை வழி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தில்லியிலிருந்து கங்கோத்ரி வரை சாலை வழி பயணம் என்றால் 500 கிலோமீட்டர் தொலைவு.  மலைப்பாதை என்பதால் சாதாரண பயணத்தினை விட அதிக நேரம் எடுக்கும் என்பதையும் மனதில் கொள்வது அவசியம்.



படம்: இணையத்திலிருந்து...

தொடர்ந்து பயணிப்பதும் அதிகம் அயற்சி கொடுக்கும் என்பதால் ஹரித்வார்/ரிஷிகேஷ் வரை பேருந்தில் பயணித்து மாலை நேரம் ஹரித்வார் அல்லது ரிஷிகேஷ்-இல் மாலை கங்கை ஆரத்தி கண்டுகளித்து அடுத்த நாள் காலையிலேயே புறப்பட்டால் கங்கோத்ரி வரை இருக்கும் தூரத்தினை சுமார் ஏழு மணி நேரத்தில் கடந்து கங்கோத்ரி சென்றடையலாம்.  கங்கோத்ரியில் தங்குமிடங்கள் இருக்கின்றன என்பதால் அங்கேயே தங்கிக் கொண்டு அங்கே இருக்கும் இடங்களை பார்த்து, ரசிக்கலாம்.  குளிர் தாங்கமுடியும் என்றால் குளிர் நாட்களில் செல்லலாம். இல்லை என்றால் ஏப்ரல் - ஜூன் மாதங்கள் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் பயணம் மேற்கொள்வது நல்லது. குளிர் நாட்களில் அதிக குளிரும், பனிப்பொழிவும் இருக்கும் என்பதால் குளிர் பழக்கம் இல்லாதவர்கள் குளிர் மாதங்களை (நவம்பர் - மார்ச்) தவிர்ப்பது நல்லது. 



படம்: இணையத்திலிருந்து...

சரி இங்கே என்ன இருக்கிறது?  கங்கையின் பிறப்பிடம் என்று சொல்லப்படும் கங்கோத்ரியில் சில கோவில்கள் உண்டு. அதைத் தவிர எங்கே சுற்றிப் பார்த்தாலும் - 360 டிகிரியிலும் இயற்கை எழில் தான். இவற்றை எல்லாம் அனுபவிக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உத்திராகண்ட் மாநிலத்தில் ஹரித்வார், ரிஷிகேஷ், நீல்கண்ட், டேராடூன், முசோரி என பல இடங்களுக்கும் பயணித்திருந்தாலும், இதுவரை எனக்கு (CH)சார் (DH)தாம் என அழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் செல்ல முடியவில்லை.  தில்லி வந்த புதிதிலும் இங்கே நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும், செல்ல முடியவில்லை. இன்று வரை அப்படி ஒரு பயணம் அமையவில்லை. ஒவ்வொரு முறை திட்டமிடும் போதும், ஏதோ தடங்கல் வந்து விடுகிறது.  பார்க்கலாம் எப்போது தான் எனக்கு இங்கே செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது என! 



படம்: இணையத்திலிருந்து...

கங்கோத்ரி வரை சென்றாலும், (G)கோமுக்(kh) வரை பயணிப்பது என்பது இன்னமும் அதிகமான சாகசப் பயணம் என்று சொல்ல வேண்டும். கங்கோத்ரியில் இருந்து கால்நடைப் பயணமாக, மலையேற்றத்துடன் கூடிய இந்தப் பயணத்திற்கு சில அரசு அலுவலகங்களில் அனுமதி வாங்க வேண்டியிருக்கும் என்பதோடு உங்களை வழி நடத்திச் செல்ல உள்ளூர் வழிகாட்டியும் கூட இருக்க வேண்டும் என்பதால் முன்னதாகவே அங்கே இருக்கும் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யும் நபர்களை/பயண முகவர்களை தொடர்பு கொண்டு ஏற்பாடுகளைச் செய்து கொள்வது நல்லது.  முதல் நாள் சுமார் பதினான்கு கிலோமீட்டர் நடைப் பயணம் என்பதால் விடிகாலையிலேயே எழுந்து புறப்பட்டு விடுவது நல்லது என்றும் தெரிகிறது.நல்லதொரு குழு அமைந்தால் நிச்சயம் இந்த இடத்திற்கும் அதற்கும் மேலே இருக்கும் தபோவன் எனும் இடத்திற்கும் சென்று வருவது நல்லது. இந்த இடங்கள் வாழ்நாளில் நிச்சயம் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள் என்பதில் சந்தேகமில்லை. 



படம்: இணையத்திலிருந்து...

பயணத்திற்கு ஆகும் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் - தங்குமிடங்கள் இல்லாத இடங்களில் கொட்டகைகள் (Camp) அமைத்தும் தங்க வேண்டியிருக்கலாம்! தில்லியிலிருந்து பேருந்தில் பயணித்தால் செலவு குறையும்.  வாகனம் ஏற்பாடு செய்து சென்றால் அதிகம் செலவாகலாம்.  பயணிக்க விரும்பினால், தகுந்த உடைகள், தேவையான மாத்திரைகள் என அனைத்தும் கூடவே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் நினைவில் நீங்கள் வைத்துக் கொள்வது நல்லது. வரும் ஏப்ரல்-மே மாதத்தில் அங்கே சென்று வரும் திட்டமிருக்கிறது!  உங்களில் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்! ஹாஹா… உங்களையும் பயணம் செய்ய அழைக்கிறேன் பாருங்கள்! பயணத்திற்கான சூழலும் இறைவனின் சித்தமும் கூடி இருந்தால் நிச்சயம் பயணிக்கலாம்! 


நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம், பயனுள்ளதாகவும் இருக்கலாம்! தகவல்கள் பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


24 கருத்துகள்:

  1. எனக்கு இங்கு செல்லணும் என்று நிறைய ஆசை... எப்போது நிறைவேறுமோ... வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஆசை தான் - ஆனால் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது - சூழல் மீண்டும் மோசமாகி வருகிறதே நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கங்கையின் பிறப்பிடம்...வாசிப்பனுபவம் அருமை. பயணத்திற்கான சூழலும் இறைவனின் சித்தமும் கூடி இருந்தால் நிச்சயம் பயணிக்கலாம்!...உங்களுக்கு இவை அமையவும் இங்கு நீங்கள் பயணிக்கவும் வாழ்த்துகள். பொதுவாக அவ்வாறான எண்ணம் வந்துவிட்டாலே வாய்ப்பு வந்துவிடும்.
    நான் போகாத ஒரு கோயிலைப் பற்றிய பதிவினைப் படிக்கும்போது சில சமயங்களில் இங்கு செல்லவேண்டுமே என நினைப்பேன். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அக்கோயிலுக்குச் சென்றுவிடுவேன். என் அனுபவத்தில் இதுபோல பல கோயில்களுக்குச் சென்றுள்ளேன். நாம் நினைப்பதை அவன் நிறைவேற்றுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் நினைப்பதை அவன் நிறைவேற்றுவான் - சில சமயங்களில் நானும் இதை உணர்ந்திருக்கிறேன் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாசகமும் தகவல்களும் அருமை சார்.
    இந்நூலையும் கயிலை மாமனி சரவனன் அவர்களின் காணொளியையும் பார்த்து மகிழ்ந்தேன்.
    விரைவில் தாங்களும் சென்றுவர வாழ்த்துக்கள்.
    மிகச்சவாலான ஒரு மலையேற்றமாக இது இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. தங்களது பயணம் வெற்றிகரமாக நிகழ்ந்து அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி. பார்க்கலாம் வாய்ப்பு கிடைக்கிறதா என.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. தடங்கல் தொடராமல் பயணம் சிறக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடங்கல் தொடராமல் - மீண்டும் தலைதூக்கி இருக்கிறது தடங்கல்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. மலைப்பிரதேசங்கள் என்றைக்கும் என்னை மிகவும் கவர்ந்து இழுப்பவை. நதிகள், இயற்கை காட்சிகள், வனப் பிரதேசம் என எல்லா இடங்களும் பிடித்தவையாக இருந்தாலும், மலைப்பிரதேசங்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு சக்தி இருக்கத் தான் செய்கிறது. //

    அதே அதே வெங்கட்ஜி ஹைஃபைவ்!! எனக்கும் மலைகள் என்றாலே சொக்கிப் போய் நின்றுவிடுவேன். இதோ இப்போதும் மலைகள் சூழ்ந்த ஊர் (இமயமலை போன்று இல்லை என்றாலும் இவையும் அழகுதான்...) தினமும் மலைகளைப் பார்த்துக் கொண்டு நடைப்பயிற்சியும்...என்ன அருகே தான் செல்ல முடியவில்லை.

    கங்கோத்ரி செல்லும் ஆசை ரொம்ப வருடங்களாகவே இருக்கிறது கங்கோத்ரி யமுனோத்ரி எல்லாம். நல்ல குழு அமைந்தால் சிறப்பாக இருக்கும் தான். உங்களின் அழைப்பைப் பார்த்ததும் ஏக்கம் கூடி விட்டது. உங்கள் பயணத்திட்டம் தடங்கல் இல்லாமல் நடந்திடட்டும் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைகள் அழகு தான். பலருக்கும் பிடித்ததும் கூட. உங்களுக்கும் பயணம் பிடிக்கும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தகவல்களுடன் பகிர்வு நன்று. விரைவில் திட்டமிட்டபடியே பயணம் இனிதாக அமைய நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திட்டமிட்டு பயணிக்க முடிந்தால் மகிழ்ச்சியே ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் , பத்ரிநாத் யாத்திரை செய்த காலத்தை மறக்க முடியாது.

    கோமுக் பயணம் தனியாக செய்ய வேண்டிய பயணம் என்றார்கள்.
    படங்களும் நீங்கள் கொடுத்த விவரங்களும் அதையே சொல்கிறது.
    மிக அருமையான இடம் இளமையில் போய் வருவது நல்லதுதான்.
    உங்களுக்கு அந்த பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பயண நினைவுகளை இப்பதிவு மீட்டெடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.

    நமக்கு இந்தபயணங்கள் கிடைக்குமா தெரியவில்லை . படங்களில் பார்த்து மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பயணிக்க வேண்டும் மாதேவி. பார்க்கலாம் எப்போது பயணிக்க முடிகிறது என.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நான் தயாராக உள்ளேன் ஒரு மாதம் முன்பு தெரிவித்தால் மிகவும் நல்லது இப்படிக்கு

    7904670895

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணிக்க முடிந்தால் நிச்சயம் உங்களையும் அழைக்கிறேன் நரசிம்மன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் போக முடியலை. பத்ரிநாத் போனோம். மானா கிராமம் சென்று அங்கே வியாசர் குகை, பீமன் பாலம், சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் ஆகியவற்றைப் பார்த்திருக்கோம். கயிலைப் பயணத்தின் போது பிரம்மபுத்ராவின் பிறப்பிடத்தைப் பார்த்தோம். அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் கங்கோத்ரி, யமுனோத்ரி இருக்குமிடம் என்றார்கள். ஆனால் பாதை வேறே! இந்திய எல்லைக்குள் வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பயண நினைவுகளை பதிவு மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நீங்க போயிட்டு வந்து தான் எழுதி இருக்கீங்கனு இவ்வளவு நாட்களாக நினைச்சுட்டு இருந்தேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.. பயணிக்க ஆசை என்று தான் எழுதி இருக்கிறேன் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....