புதன், 24 நவம்பர், 2021

தமிழகப் பயணம் - திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகரிலிருந்து பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


TIME DECIDES WHO YOU MEET IN LIFE, YOUR HEART DECIDES WHO YOU WANT IN YOUR LIFE; AND YOUR BEHAVIOR DECIDES WHO STAYS IN YOUR LIFE.


******


செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 


ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ


Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி


சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில்


மீன் செத்தா கருவாடு


பொண்ணு மாப்பிள்ளை லேட் எண்ட்ரி


தரங்கம்பாடி எனும் Tranquebar




தரங்கம்பாடி கடற்கரையிலிருந்து புறப்பட்டு தங்குமிடம் நோக்கி வந்த போது, நேரடியாக கோவில் வாயிலுக்குச் சென்று மீண்டும் விசாரித்தோம்.  அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டுமல்லாது தீநுண்மி காரணமாக வெள்ளி முதல் ஞாயிறு வரை வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்ய அரசு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நேரம்.  ஆனாலும், பெரும்பாலான வழிபாட்டுத் தலங்களில் கதவுகளை சற்றே திறந்து வைத்து அங்கே வந்து சேர்ந்த பக்தர்களை அனுமதித்துக் கொண்டிருந்தார்கள்.  சீக்கிரம் சென்று தரிசனம் பெற்று திரும்ப வேண்டும் என்று சொல்லி உள்ளே அனுப்ப, நானும் நண்பர் குடும்பமும் உள்ளே சென்று விட்டோம்.  எங்கேயும் நில்லாமல், நின்று நிதானித்து கோவில் சிற்பங்களைப் பார்க்காமல், நேரடியாக ஸ்வாமி சன்னதியை அடைந்தோம்.  மொத்தமாகவே பத்து இருபது பேர் தான் இருந்தார்கள் - அதுவும் அதிக நேரம் நிற்காமல் தரிசனம் செய்து கொண்டு புறப்படுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்ததால் தரிசனம் செய்து மக்களும் நகர்ந்த வண்ணம் இருந்தனர்.  


நாங்களும் நின்று நிதானித்து அமிர்தகடேஸ்வரரை தரிசித்து எல்லோரும் நல்லபடியாக இருக்க வேண்டிக்கொண்டு அங்கிருந்து அபிராமி அம்பாள் சன்னதியை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்று சேர்ந்தோம்.  அங்கேயும் திருப்தியான தரிசனம் கிடைத்தது. அம்பாளின் தரிசனம் கிடைத்தபிறகு அங்கேயே சில விவரங்களையும் சேகரித்துக் கொண்டோம். நண்பர் வீட்டிலிருந்தே ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் வஸ்திரங்கள் வாங்கிக் கொண்டு வந்திருந்ததால் அதனை கோவிலில் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, காலையில் அலுவலகம் திறக்கும், அப்போது அங்கே உரிய கட்டணம் (100 ரூபாய்) கட்டி, ரசீது பெற்றுக் கொண்டு வந்தால், அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் வஸ்திரங்களை கட்டிவிடலாம் என்று சொல்ல விவரங்கள் கிடைத்த மகிழ்ச்சியுடன் அம்பாளை இன்னும் நின்று நிதானித்து தரிசித்துக் கொண்டு அங்கே இருந்து தங்குமிடம் நோக்கி நகர்ந்தோம்.  தங்குமிடமும் கோவிலிலிருந்து சில அடிகள் தூரம் தான்.  வாகனம் கோவில் வாசலிலேயே இருந்ததால் வாகனத்தில் ஏறிக் கொண்டு உடனேயே இறங்கிக் கொண்டோம். 


கோவில் வரலாறு குறித்து நான் இங்கே எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், சின்னச் சின்ன குறிப்புகளை இங்கே தர நினைக்கிறேன். 


  • எமபயம் நீக்கும் தலங்களில் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.

  • பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட, அவர் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவித்தாராம். திருக்கடவூரில் அந்த விதை முளை இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது. 

  • பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில் (கடம்) எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைக்க, நீராடி வந்தபோது குடத்தை எடுக்க முடியவில்லை என்றும் குடம் பூமியில் வேர் ஊன்றி விட்டதாகவும், அதனால் இந்த இடம் திருக்கடவூர் என்று பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள். அந்தக் குடமே லிங்க வடிவில் நிலைத்து நிற்க, ஸ்வாமி இங்கே அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

  • கோவ்லில்கிழக்கு நோக்கி குடிகொண்டிருக்கும் அன்னை அபிராமி சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் அருள் புரிந்தவள். அபிராமி பட்டருக்கு அருள் புரிந்த அன்னை அபிராமியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர் என்று சொல்வதுண்டு.


திருக்கடையூர் கோவில் அருகிலேயே அனந்தமங்கலம், தில்லையாடி, திருவிடைக்கழி, தேவானூர் போன்ற தலங்கள் இருந்தாலும், எங்களால் இந்தக் கோவில்கள் எதற்கும் சென்று வர முடியவில்லை.  


தங்குமிடம் திரும்பியதும், சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு இரவு உணவு தங்குமிடத்திலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள்.  தங்குமிடத்தில் ஒரே நேரத்தில் பல கல்யாண கோஷ்டிகள் தங்கி இருக்க, ஒவ்வொருக்கும் உணவுக்கான பெரிய பெரிய கூடங்களில் வலப்புறம், இடப்புறம் என ஒதுக்கி, வெளியிலேயே கல்யாண கோஷ்டியின் முன்பதிவு செய்தவரின் பெயரையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.  கேட்டுக் கேட்டு அவரவர் குழுவினருக்கான பக்கம் அனுப்பி, கேட்டுக் கேட்டு உணவை கொடுத்தார்கள்.  நல்ல ஏற்பாடுகளை செய்து விடுகிறார்கள் என்பதால் விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு எந்த வித தொல்லையும் இல்லை.  எல்லாம் சரியாக நடந்து விடுகிறது. கவலையில்லாமல் அவர்களும் உணவு உண்டு, வெகு நாட்களுக்குப் பிறகு பார்த்த உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு அளவளாவ முடிகிறது என்பது நல்ல விஷயம். தில்லியிலிருந்து வந்திருந்த நண்பர்கள் குழுவும் எந்தக் கவலையுமின்றி உணவு உண்டபடியே அரட்டைக் கச்சேரியும், கிண்டல்களுமாக இருந்தார்கள்.  


நேரம் கடந்து கொண்டே இருக்க, அரட்டைக் கச்சேரி முடிந்தபாடில்லை.  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு ஏற்பாடு செய்திருந்த தங்குமறை (இரண்டாம் மாடியில்!) சென்று சேர, வேறு ஒரு தில்லி நண்பரும் என்னுடன் சேர்ந்து கொண்டார். புதிய இடம் என்பதால் தூக்கம் வரவில்லை.  நண்பரும் நானும் நீண்ட நேரம் தில்லி வந்தது, இங்கே கிடைத்த அனுபவங்கள் என பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்.  நண்பர் எனக்கும் முன்னதாகவே தில்லி வந்தவர் என்பதால் அவருடைய பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.  இரவு வெகு நேரம் வரை எங்களுடைய உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.  நேரம் பார்த்தல் ஒன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது.  காலை சீக்கிரமே (ஆறு மணிக்கே முகூர்த்தம்!) என்பதால் ஐந்து மணிக்கு முன்னராவது எழுந்திருக்க வேண்டும் என்பது நினைவுக்கு வர, பேச்சை முடித்துக் கொண்டு தூக்கம் வரவில்லை என்றாலும் கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்தோம்.  ஒன்றிரண்டு மணி நேரம் தூங்கி இருப்பேன். அதிகாலை நான்கு மணிக்கே விழிப்பு வந்துவிட வேலைகளை முடித்துக் கொண்டு தயாராகி விட்டேன். 


அடுத்த நாள் நிகழ்வுகள் என்ன, எங்கே சென்றோம், என்ன அனுபவங்கள் கிடைத்தது என்பது குறித்து அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.  


******


நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம், பயனுள்ளதாகவும் இருக்கலாம்! பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…



18 கருத்துகள்:

  1. பயணக்குறிப்புகள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் குறிப்புகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. பயணக்குறிப்புகள் நன்று... ஆனால் பெரிய இடைவெளி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் குறிப்புகள் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே நெல்லைத் தமிழன்.

      பெரிய இடைவெளி - ஆமாம். தவிர்க்க இயலவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. தேவார மூவரால் பாடப்பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் என்று பெயர் பெற்ற இக்கோயில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள கோயில்களில் ஒன்றாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று என்ற சிறப்பினையும் உடையது. இப்பகுதியில் பார்க்கவேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. கோயில் உலாவின்போது பல முறை இங்கு சென்றுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலமுறை சென்று தரிசித்த கோவில் - மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. அட்டவீரட்டத் தலங்களுக்குச் செல்ல ஆசை உண்டு. பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்கிறது என!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. இன்றைய வாசகம் மிகவும் அருமை! திருக்கடையூர் அனுபவங்கள் படிக்க மிகுந்தசுவாரஸ்யமாக இருந்தன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. திருக்கடையூர் அறிந்து கொண்டோம் சிறப்பான தலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் பலனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. தரங்கம்பாடிப் பதிவு படிச்சுச் சில மாதங்கள் ஆகின்றனவோ? அதுக்குப் பின்னர் தொடர்ச்சி இப்போத் தானா? திருக்கடையூரில் தான் எங்கள் (மாமாவுக்கு)சஷ்டி அப்தபூர்த்தியும் நடந்தது. என் தம்பியும் சில ஆண்டுகள் முன்னர் இங்கே தான் செய்து கொண்டார். ஆனால் சாப்பாடு திராபை. எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தவர் கோயிலிலேயே குருக்களாக (தலைமை) இருந்ததால் எல்லாம் நன்றாக நடந்தன. இன்னும் சிலருக்கும் இவர்களின் விலாசம் கொடுத்துப் பண்ணிக் கொண்டார்கள். தங்குமிடங்கள் இப்போவெல்லாம் மிகவும் நன்றாகவே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவுகளில்/தொடரில் நீண்ட இடைவெளி வந்து விட்டது! இன்னமும் பாதியிலேயே நிற்கிறது கீதாம்மா. விரைவில் எழுத/எழுதி முடிக்க வேண்டும். பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....