வியாழன், 25 நவம்பர், 2021

கதம்பம் - சீரியல் - கனவு - முதியோர் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட திருக்கடையூர் அபிராமி  பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


செயலால் கொன்றுவிட்டு பின் மன்னிப்பு கேட்டு என்ன பயன்? வலிகள் குறையாது… செய்த செயல் மனதை விட்டு அழியப் போவதும் கிடையாது. அதனால் சிந்தித்து செலாற்றுவதே சிறப்பு.


******


சீரியல்களும் பெரியம்மாவும்




அந்தக் கண்ணம்மா குழந்தைகளோட சேர்ந்துட்டாளா?


பாக்கியலட்சுமி என்னாச்சு??


இன்னிக்கு வயதானவர்கள் மூவருக்கும் சமைச்சு எடுத்துட்டு போயிருந்தேன். சாதம் மட்டும் அங்கேயே குழைவாக வைத்து விட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பதற்குள் பெரியம்மா கேட்ட கேள்விகள் தான் மேலே இருப்பவை..:)


அங்கிருந்து மகளின் பள்ளிக்குச் சென்று Term 2 புத்தகங்களை வாங்கிக் கொண்டு பேருந்தில் வீட்டிற்கு வந்தேன். பேருந்து முழுவதும் கும்பல். என்னைத் தவிர யாரும் முகக்கவசம் அணியவில்லை..:)


வீட்டிற்கு வந்து மீதியுள்ள வேலைகளை முடித்து உதிராக சாதத்தை இங்கே வைத்து இப்போ தான் சாப்பிட்டோம்.


இரண்டு நாட்களாக மின்நூலுக்கான எடிட்டிங் வேலையும், கொஞ்சம் தையல் வேலையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 


வாங்கி வைத்த மிளகாயும், மல்லியும் வேறு அப்படியே இருக்கு! வெயிலில் காயவைத்து சாம்பார் பொடிக்கு அரைப்பது எப்போதென்று தெரியலை..:)


******


அதிகாலை கனவு




சின்னஞ்சிறு பாலகன். ஐந்து வயதிருக்கலாம். சட்டையேதும் அணியாமல் இடையில் ஒரு வேஷ்டி மட்டும் முக்கால் காலுக்கு கட்டியிருந்தான். முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்! 


திடீரென எங்கள் வீட்டுக்கு வந்தான். பசிக்கிறது  என்றான். வயிறார சாப்பாடு போட்டதும் முகம் மலர  என்னருகில் வந்தான்.


வாஞ்சையுடன் தலைமுடியை கோதி விட்டதும், எனக்கு ரொம்ப குளிர்றது! போர்வை எதாவது தர முடியுமா! என்றான்.


அப்போது தான் எனக்கு உறைத்தது! சாப்பாடு மட்டும் போட்டா போறுமா! இந்தக் குளிருக்கு என்ன பண்ணுவான் குழந்தை! என்று நினைத்தவாறே..


வீட்டில் உள்ள போர்வைகளில் எதாவது ஒன்றை அவனுக்கு குடுக்கணும் என்று தேடிக் கொண்டிருந்தேன்....


அதோடு முழிப்பும் வந்துவிட்டது...


எதை உணர்த்த இந்த அதிகாலை கனவு!!!


******


முதியோரும் மூப்பும் 




வயது முதிர்வு என்பது  எல்லோருக்கும் ஒன்று போல இருப்பதில்லை! தளர்ச்சி, வலிகள், கவலைகள், சிந்தனைகள், செயல்கள் என்று எல்லாமே வேறுபடுகின்றன.


எங்கள் வீட்டு பெரியவர்கள் மூவருக்குமே இப்போது யாராவது உடனிருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை. மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, இங்கே வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அங்கு சென்று விடுகிறேன். மாலை வரை உடனிருந்து வேண்டிய உதவிகளை செய்து விட்டு வீடு திரும்புகிறேன். தற்சமயம் இதுவே என் அன்றாடம். 


அருகில் என் நாத்தனார் இருப்பதால்  சில நேரம் என் சமையலும், சில நேரம் அவருடைய சமையலும், அதே போல்  இரவு நேரத்தில் எமர்ஜென்சி என்றால் அவர் பார்த்துக் கொள்வார் என்றும் இப்போதைக்கு திட்டமிட்டுள்ளோம்.


நல்லதே நடக்கட்டும்! எல்லாம் நன்மைக்கே!


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


24 கருத்துகள்:

  1. நம்மை வளர்த்து ஆளாக்கிய பெரியவர்கள் குழந்தைகளாகும்போது அவர்களை கவனித்துக் கொள்வது நம் கடமை.  நீங்கள் அதைச் சிறப்பாகச் செய்கிறீர்கள்.  மற்ற இரண்டும் பேஸ்புக்கிலும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயது முதிர்ந்த குழந்தைகள் - இன்றைக்கு ரமணி ஜி எழுதிய ஒரு பதிவும் இதைக் குறித்து தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மூன்று பெரியவர்களை நாத்தனார் மற்றும் தாங்களும் கவனித்துக் கொள்வது என்பது மிகப் பெரிய விஷயம், வெங்கட்டும் இதிபற்றி சொல்லியுள்ளார். பெரியவர்களை கவனித்துக் கொள்வது கடமையே ஆனாலும், புண்ணியமும்கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. வீட்டின் பெரியவர்களை அதுவும் வயதானவர்களை தினமும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் உங்களது நல்ல செயலுக்கு மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

    சீரியல்கள் பார்ப்பதும், அவர்களது மன உற்சாகத்திற்காகத்தானே..! ஒரு மாறுபாடான எண்ண ஓட்டங்கள் அனைவருக்கும், அதுவும் வயதானவர்களுக்கு நல்லதுதான் என நினைக்கிறேன்.

    கனவுகள் நம் மனதில் ஏற்கனவே வந்த நினைவுகளின் பிரதிபலிப்புதான். அன்றைய தினம் அப்படிபட்ட பாலகனை எப்போதாவது எங்காவது பார்த்திருப்பீர்கள். இன்றைய செய்திகளின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவில் சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகம் அருமை.
    புது மின் நூலுக்கு வாழ்த்துக்கள் மேடம்.
    பெரியோரை கவனித்துக்கொள்ளுதல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. பெரியோர்கள் பற்றி இரண்டு அதிகாரம் உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியோர்கள் பற்றி இரண்டு அதிகாரம் - மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வயதானவர்களைப் பார்ப்பது சிறப்பான சேவை.
    மின்னூல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதானவர்களை பார்த்துக் கொள்வது - சிரமமும் கூட மாதேவி.

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. இன்றைய விஷயங்கள் நன்று. பெரியவர்களைப் பார்த்துக்கொள்வது (அதிலும் படிக்கும் குழந்தை இருக்கும்போது) மிகச் சிரமமானது. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வாசகம் அருமை.


    //வயது முதிர்வு என்பது எல்லோருக்கும் ஒன்று போல இருப்பதில்லை! தளர்ச்சி, வலிகள், கவலைகள், சிந்தனைகள், செயல்கள் என்று எல்லாமே வேறுபடுகின்றன.//

    ஆமாம், அவர்கள் மனபோக்கு அறிந்து செயல்படுவது நல்லதுதான்.
    நேற்று முழுவதும் என் மனம் மிகவும் சோர்ந்து போய் இருந்தது, மகன், மகள், பேரன் என் மனதை சரி செய்ய உரையாடி கொண்டே இருந்தார்கள். உறவுகள் என் சோகத்தில் பங்கு கொண்டு ஆறுதல் சொன்னார்கள்.

    வயதானவர்களை பார்ப்பது சிறப்பான சேவை அவர்களின் ஆசிகள் கிடைக்கும். முடிந்த உதவிகளை செய்து வருவதற்கு வாழ்த்துக்கள் இறைவன் துணை இருப்பார்.

    மழை பாதிப்பால் கனவு வந்து இருக்கும். எத்தனை குழந்தைகள் ஆடையின்றி தவிக்கிறதோ!




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்த வகையில் அமைந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      பதிவு குறித்த தங்களது கருத்துரை - நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. சீரியல்கள் பார்ப்பதில்லை. முதியோர்..புகைப்படம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீரியல்கள் - நானும் பார்ப்பதில்லை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      புகைப்படம் - பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வயதில் பெரியவர்களை நீங்களும் உங்கள் நாத்தனாரும் சேர்ந்து கவனித்துக் கொள்வது மிகவும்சிறப்பு.
    உங்கள் கனவில் வந்தது பாலா முருகனாக இருந்தால் அவனிடமே கேளுங்கள் வழிகாட்டச்சொல்லி.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகன் - அவனிடமே வழிகாட்டச் சொல்லி கேட்கலாம் - நன்றி பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. சீரியல்கள் பார்ப்பது அநேகமாக முதியவர்களும் பெரும்பாலும் ஆண்களும் தான்! :) எங்க மாமியாரும் விடாமல் சீரியல் பார்த்ததோடு அதன் பாத்திரங்களைத் தம் சொந்தம் போல் பாவிப்பார். நீங்கள் பெரியவர்களைப் பார்த்துக் கொள்வது மிகவும் சிறப்பானது. வயதாக ஆக அவங்களும் குழந்தை தானே! இதை மாதிரித் தான் நான் சென்னை/அம்பத்தூரில் இருந்தப்போ சில மாதங்கள் என் அப்பா/என் மாமியார்/மாமியாரின் ஓர்ப்படி/நாத்தனார் என நான்கு வயதானவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதோடு அப்போ ஒரு செல்லம் வேறே கூடவே வளர்ந்து கொண்டிருந்தது. பின்னர் எனக்கு உடம்பு நலமில்லாமல் போக மாமியார் மைத்துனரிடமும் பெரியம்மா பெண்ணிடமும், அத்தையும் தன் ஒரு பெண்ணிடமும் போனார்கள். யாருக்குமே மனசே இல்லை. நான் படுத்துக் கொண்டு விட்டதால் கிளம்பும்படி ஆகிவிட்டது. :( அப்பாவை அண்ணா வந்து அழைத்துச் சென்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீரியல்கள் பார்ப்பது பெரும்பாலும் ஆண்களும் - ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....