செவ்வாய், 3 மே, 2022

ருபின் பாஸ் - உத்திராகண்ட் - மலையேற்றம் - ப்ரேம் Bபிஷ்ட் - பகுதி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

CLIMB THE MOUNTAINS AND GET THEIR GOOD TIDINGS. NATURE’S PEACE WILL FLOW INTO YOU AS SUNSHINE FLOWS INTO TREES - JOHN MUIR

 

******

 

ருபின் பாஸ் குறித்து இது வரை சில பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி இங்கே! மூன்றாம் பகுதி இங்கே! நான்காம் பகுதி இங்கே! ஐந்தாம் பகுதி இங்கே! பயணம் குறித்தும் தொடர்ந்து நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களின் வார்த்தைகளில் படிக்கலாம் வாருங்கள் - வெங்கட் நாகராஜ். ஓவர் டு ப்ரேம்!

 

*****



பனிபடர்ந்த மலைப்பாதை....
 

எங்கள் பயணத்தின் ஆறாம் நாள் (16.06.2016) காலை, 4.45 மணி அளவில் எழுந்தபோது பார்த்த போது முதல் நாள் இரவிலிருந்தே தொடர்ந்த மழை அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தது. மழைக்கு இதமாக காலை உணவுடன் சூடான சூப் சாப்பிடலாம் எனப் பார்த்தால் மழையில் அதிக நேரம் வெளியே இருந்ததால் எங்கள் அடுப்பு செயலிழந்திருந்தது. அதனால் நேரத்தை வீணடிக்காமலும், மேலும் தாமதிக்காமலும் நாங்கள் எங்கள் கூடாரங்களை மடித்து, தாமதமின்றி முன்னேறுவது தான் புத்திசாலித்தனம் என்று முடிவெடுத்தோம். எனவே ருபின் கணவாய் வழியாக கின்னோர் மாவட்டத்தில் எங்களது அடுத்த கடினமான மலையேற்றத்திற்கு காலை 5.45 மணியளவில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இந்த இடம் செங்குத்தானதாகவும், தளர்வான கற்பாறைகளுக்கு மேல் இருந்ததாலும் ஏறுவது மிகவும் கடினமாக அமைந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏறிய பிறகு, பாதை கொஞ்சம் சமதளத்தில் இருந்தது. ஆனால் நாங்கள் அவ்வப்போது பனிபடர்ந்த பாதையில் நடக்க வேண்டியிருந்தது. பாதை செங்குத்தானதாக இல்லை, ஆனால் பாதையின் சாய்வு மற்றும் தளர்வான கற்கள் எங்கள் அனைவரையும் மிகவும் ஜாக்கிரதையுடனும் மெதுவாகவும் நடக்க வைத்தது. இந்த பாதை கடல்மட்டத்திலிருந்து சுமார் 4000 மீட்டருக்கு மேல் இருந்தது, அந்தப் பாதையில் சில மேய்ப்பர்களை அவர்களுடைய மந்தைகளுடன் பார்த்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி உண்டானது. 



கடுமையான மலைப்பாதை...
 

இறுதியாக காலை 8.45 மணியளவில், ருபின் கணவாய் வரையிலான எங்கள் இறுதிப் பயணத்திற்கான ஒரு பகுதியைச் சென்றடைந்தோம். அங்கே ஒரு செங்குத்தான நீண்ட பனிபடர்ந்த பாதையை கடந்து செல்ல வேண்டியிருந்தது,  அந்தப் பகுதியைக் கடந்த பிறகு மேலும் இடப் புறம் திரும்பி சென்ற பாதை எங்கள் மலையேற்றத்திலேயே மிகவும் கடினமான மலையேற்றமாக இருக்கப் போகிறது என்று வழிகாட்டி சொல்லிக் கொண்டிருந்தார். ஆனாலும் நாங்கள் உற்சாகமாகவே எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.  பனிபடர்ந்த பாதைகளைக் கடந்த பிறகு ஒரு குறுகிய பள்ளத்தாக்குப் பகுதியை அடைந்தோம்.  மேலும் கடந்த போது தளர்வான கற்பாறைகள் மீது தொடர்ந்து மழை பெய்த நிலையில் அந்தப் பகுதிகள் அதிகமாக வழுக்கும் நிலையில் இருக்க, மெதுவாகவும் உறுதியோடும் அந்தப் பகுதியைக் கடந்து மேல் நோக்கி முன்னேறினோம்.  ஒரு மணி நேரம் கடுமையான மலையேற்றத்திற்குப் பிறகு காலை 10.15 மணி அளவில் மலையுச்சியினை அடைந்திருந்தோம். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் எங்களால் அங்கே அதிக நிழற்படங்கள் எடுக்க முடியவில்லை என்பதும் வருத்தம் தந்தது. ஆனாலும் அந்த மழை நேரத்தில் நாங்கள் கடந்து வந்த பாதையும் அதன் அழகும் எங்கள் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.  மலைஉச்சியை அடைந்த பிறகு ருபின் கணவாய் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஒரு சில நிழற்படங்களை மட்டும் எடுத்தோம். 



பனியும் பசுமையும் கலந்து....


மலைப்பாதையில் ஒரு சிற்றோடை....
 

அங்கேயிருந்து எங்கள் மலையிறக்கத்தினைத் தொடங்க பனிப்பொழிவு பாதையில் கீழ்நோக்கி செல்ல முடிவு செய்தோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மழையும் சற்றே நின்று, மேகங்கள் வழியாக சூரியன் வெளியே எட்டிப்பார்க்கப் போராடியது. கின்னோர் மாவட்டத்தில் உள்ள மலைகளின் அழகு எங்கள் கண் முன்னே விரிவடையத் தொடங்கியது. வழியில் இந்த உயரமான புல்வெளிகளில் ஒரு சில YAK மேய்வதைக் கண்டோம். இறுதியாக, தொடர்ந்து நடந்து நாங்கள் பிற்பகல் 3.00 மணியளவில் ரோங்டி காட் என்ற பகுதியைச் சென்றடைந்தோம். அங்கேயே எங்கள் அன்றைய பயணத்தினை முடித்து அங்கே கூடாரம் அமைத்துத் தங்க முடிவு செய்தோம். சூரியன் மேகங்கள் வழியாக வெளிவர, நாங்கள் எங்கள் ஈரமான ஆடைகளையும் காலணிகளையும் உலர வைத்தோம். முகாமில் இருந்தபோது சுற்றுப்புறங்களில் இருந்த கண்கவர் காட்சிகளையும் எங்கள் நிழற்படக் கருவிகளில் படம் எடுத்துக் கொண்டோம்.  இரவு உணவு தயாரித்து அதை உண்டு பின்னர் உறங்க ஆரம்பித்தோம்.  அடுத்த நாள் பயணம் எப்படி இருந்தது என்பதை வரும் பகுதியில் (இத்தொடரின் கடைசி பகுதி!) சொல்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைந்திருங்கள்.

 

ப்ரேம் Bபிஷ்ட்

 

******

 

நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.  பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

34 கருத்துகள்:

  1. மழை காரணமாக சில புகைப்படங்கள் எடுக்க முடியாதது நஷ்டமே. கடினமான பாதைகள் எப்படி இருக்கும் என்று பார்க்கும் வாய்ப்பானது எங்களுக்கு கிடைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையேற்றத்தில் பனி, மழை போன்றவை தவிர்க்க முடியாத விஷயங்கள் ஶ்ரீராம். தேவையான rain coat எடுத்துச் செல்கிறார்கள் என்றாலும் நனைந்து விடுவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  2. கடினமான மலையேற்றம் என்று படத்தில் தெரிகிறது. மழை இல்லாமல் இருந்து இருக்கலாம், மழை நின்று சூரியன் வெளிவந்தபின் அழகான காட்சிகள் கண்முன் தோன்றியதை சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோன்ற மலையேற்றப் பயணங்களில் மழை அவ்வப்போது வருவது உண்டு கோமதிம்மா. அதற்கும் தயாராகவே பயணத்தை மேற்கொள்வார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. மழையும் பெய்ததால் சிரமப்பட்டிருப்பார்கள் என்று தெரிகிறது. அதுவும் உறுதியாக மண்ணில் பதிந்து இருக்காத கற்கள் பிரட்டி விடுமே. மழையில் நனைந்து கொண்டேதான் ஏறியிருக்கிறார்கள் என்பது ரொம்ப ஆச்சரியமான விஷயம்.

    படங்கள் பல விஷயங்களிப் பேசுகின்றன. அழகியல் அப்படியே மனதைக் கட்டிப் போடுகிறது. குறுகிய பாதை, பனிப்பாதை எல்லாமே அழகு.

    மழை இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் படங்ககள் பார்க்கக் கிடைத்திருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பகுதிகளில் மழை சமயத்தில் மலையேற்றம் செய்வது கொஞ்சம் கடினம் தான். ஆபத்துகளும் நிறைந்த பகுதி தான். ஆனாலும் மலையேற்றத்தில் கொண்ட ஈடுபாடு இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி பயணிக்க வைக்கிறது.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
    2. ஆபத்துகளும் நிறைந்த பகுதி தான். ஆனாலும் மலையேற்றத்தில் கொண்ட ஈடுபாடு இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி பயணிக்க வைக்கிறது.//

      அதே அதே!! ஆர்வம் மேலிடுகிறது மிகவும் பிடிக்கும் என்பதால். மனதில் தைரியம் உண்டு. ஆனால் வாய்ப்பு சூழல் ..நாம் நினைப்பது எல்லாம் நடப்பதில்லையே. அதனால்தான் இங்கும், யுட்யூபிலும் அவ்வப்போது பார்த்து ரசிக்கிறேன் ஜி. இந்தத் தொகுப்பையும் பார்த்துவிட்டேன் யுட்யூபில்.

      நிஜமாகவே PRECIOUS MOMENTS!

      கீதா

      நீக்கு
    3. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.... எனும் பாடல் நினைவுக்கு வருகிறது. முடிந்தபோது பயணிப்போம். முடியாத போது இணைய வழி பார்த்து ரசிப்போம் என்பதாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது கீதா ஜி. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. ரசித்து ரசித்து ஏறியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. நல்ல குழு. இப்படியான குழு அமைந்தால் உற்சாகம் தொற்றிக் கொண்டுவிடும்.

    அடுப்பு மழையில் நனைந்து செயல்படாமல் போனதால் சாப்பிடாமலேயே அவ்வளவு தூரம் ஏறியிருக்காங்களே. கையில் பிஸ்கட் போன்று ஏதாவது இருந்திருக்கும் இல்லையா...தண்ணீர் எல்லாம் ஆங்காங்கே நதிகள் ஓடைகளில் எடுத்துக் கொண்டிருப்பார்களோ...கூடாரங்களுக்குள் மழைத்தண்ணீர் அடி வழியாக எப்படியும் வந்திருக்கும் இல்லையா? எப்படிச் சமாளித்தார்கள்? ஓய்வு எடுத்தார்களோ?

    அருமையான பயணம் ஜி. ஒவ்வொரு பகுதியும் வாசிக்க வாசிக்க ஆர்வம் கூடுகின்றது. மனாலியில் ஒரு மிகச் சிறிய மலை ஏற்றமே அத்தனை சந்தோஷமாக இருந்தது.

    படங்களைப் பார்த்து முடியவில்லை. நண்பர்களுக்கு மிக்க நன்றி. பாராட்டுகளும். உங்களுக்கும்தான் ஜி! இங்கு பகிர்வதற்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகளவு பொருட்களை எடுத்துச் செல்வது சரியல்ல. முதுகில் சுமை அதிகமானால் நடப்பது கடினம். அத்தியாவசிய தேவைகள் மட்டுமே மனதில் கொள்ள வேண்டும். கூடாரம் அமைக்கும் இடம் பொதுவாக தண்ணீர் இருக்கும் இடமாகவே பார்த்துக்கொள்வார்கள்.

      பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
    2. புரிகிறது ஜி. ஆமாம் சுமை மிகவும் குறைவாக இருப்பதுதான் நலல்து. சாதாரணமாகவே ஏதேனும் ஊர் சுற்றும் போது ஒரு முதுகுப் பை மட்டுமே எடுத்துச் செல்வது வழக்கம். சாப்பாடு பற்றியும் கவலைப்படுவதில்லை. எது கிடைக்கிறதோ அதுவே. இல்லை என்றாலும் சமாளித்தல். ஏனென்றால் முக்கியம் அழகான இடங்களைப் பார்ப்பது என்பதால். அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பதும்...

      கீதா

      நீக்கு
    3. அந்தப் பகுதியில் என்ன கிடைக்கிறதோ அதை உண்பது சரியானது. சில இடங்களில் பழங்கள், பிஸ்கெட்டுகள் போன்றவை. சில இடங்களில் காற்று! :) தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. வாவ்!..அந்த கடைசி இரு படங்களிலுள்ள இயற்கை காட்சிகள் அற்புதம்.

    விரைவில்... காலமும் கனியும் என் கால்களும் அந்த பனியில் நனையும் என்னும் நம்பிக்கை துளிர்க்கிறது.

    அரிய காட்சிகளை தெரிய வைத்ததற்கு நன்றி நாகராஜ் சார்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாஞ்சில் சிவா. இப்படியான ஒரு பயணம் உங்களுக்கும் விரைவில் அமைந்திட வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  6. படங்கள் மிகவும் அருமை ஜி பயண அனுபவம் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயண அனுபவங்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்த விதமாக அமைந்திருந்தது அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  7. படங்கள் அழகு. இரண்டாவது படம் தவிர மற்றப் படங்களைப் பார்த்தால், ஏறுவது சுலபம் போல இருக்கிறது. நன்றாக விவரித்திருக்கிறார்.

    நமக்கு ஆங்காங்கே யாராவது கொதிக்கக் கொதிக்க மிளகு ரசம், சாதம், அப்பளாம் பொரித்துத் தந்தால், மலையேறி இத்தகைய இடங்களுக்குப் போவதைப் பற்றி யோசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிளகு ரசம், சாதம், அப்பளம் ...... "வாய்ப்பில்ல ராஜா" என்ற வசனம் தான் நினைவுக்கு வந்தது நெல்லைத் தமிழன்.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
    2. நெல்லை, ஹாஹாஹா இந்த மாதிரி இடங்களுக்குப் போறப்ப இதெல்லாமுமா!!!!? அதான் தினமும் வீட்டில் சாப்பிடறோமே!

      கீதா

      நீக்கு
    3. சிலருக்கு பழக்கமான உணவு இல்லாவிடில் கடினம் தான் கீதா ஜி. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளது. படங்களின் இயற்கை காட்சிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளது. யாக் என்னும் மாடுகளும் மேய்வது நன்றாக தெரிகின்றன. நல்ல உணவுகளுக்கு கூட சரியான வழியின்றி மழை, பனியில் மலை ஏறுவது எவ்வளவு கடினமென பதிவை படிக்கையில் அதன் ஒவ்வொரு வரிகளும் எடுத்துரைக்கின்றன.

    பனியில் கால் வைத்தால் சறுக்கும் அபாயம் உள்ளதென்றாலும், என்னதான் அதற்கேற்ற காலுறைகள் அணிந்துதான் ஏறியிருப்பார்கள் என்றாலும், கடினமான இந்தப் பயணத்தில் அவர்கள் உற்சாகமான மனநிலையில் ஏறியுள்ளார்கள் எனும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. மலைப் பயணத்தில் அதுவும் மிகவும் கடினமான இந்த மலையேற்றத்தில் ஏறிச் சென்று சாதனை படைத்த தங்கள் நண்பர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

      நீக்கு
  9. அந்த ஒரு படம் போதும், பயணம் எந்தளவு கடினம் என்று புரிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதைகள் சில இடங்களில் மிகவும் மோசமானதாகவே இருக்கும் தனபாலன். ஆனாலும் பயணத்தில் ஒரு வித ஆனந்தம் கிடைக்கத்தான் செய்கிறது இல்லையா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  11. பயணத்தின் கஷ்டங்களைப் படங்களே சொல்கின்றன. என்றாலும் மிக அழகான இடங்கள் மற்றும் அதை எடுத்த விதம் அருமை என்பதால் படங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  12. மழை நடுவிலும் மலை நடுவிலும் எடுத்த படங்கள் சிறப்பானவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராய செல்லப்பா ஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
    2. மலைஏற்றமும் மழையும் வழுக்கும் கல்லுகளும் பயணத்துக்கு இடைஞ்சல் குடுத்தபோதும் படங்கள் ஆகா !அழகாக வந்துள்ளன. அழகான இடங்கள் ஆபத்தை நினைத்தால் பயம் கொள்ளவைக்கிறது.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....