புதன், 19 ஏப்ரல், 2023

பயணம் நல்லது - ஆதலால் பயணம் செய்வோம் - வர இருக்கும் பயணம் குறித்த பதிவுகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாரணாசியில் ஸ்ரீராம நவமி - பயணத்தின் முடிவு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“The traveller was active; he went strenuously in search of people, of adventure, of experience. The tourist is passive; he expects interesting things to happen to him. He goes ‘sight-seeing’.” - Daniel J. Boorstin.

 

******


 

பயணங்கள் நல்லது. வலையுலகில் பயணம் குறித்து எழுதும் சில ஜாம்பவான்கள் உண்டு - உதாரணம் துளசி கோபால் அவர்கள்.  இது போன்ற பெரிய பிதாமகர்கள் இருக்கும் இடத்தில் இந்தச் சிறியோனும் பயணம் குறித்து எழுதி வருகிறேன் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது.  எத்தனையோ பயணத் தொடர்களை இங்கே எழுதி இருந்தாலும், இன்னமும் பயணங்கள் செல்வதும், அது குறித்த தகவல்களை தொடராக எழுதுவதையும் இன்னமும் மிகவும் ரசித்தே செய்கிறேன். நடுநடுவே சில தடங்கல்கள் வந்திருந்தாலும், குறிப்பாக சென்ற பயணத் தொடரான நதிக்கரை நகரங்கள் தொடரில் சில தடங்கல்கள் இருந்தாலும், தொடர்ந்து எழுதவே நினைக்கிறேன். நதிக்கரை நகரங்கள் பயணம் முடித்து சில மாதங்கள் தில்லிக்கும் தமிழகத்திற்கும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தேன்.  நவம்பர் (2022) மாதம் சென்று வந்த ஒரு பயணம் குறித்த தகவல்களை ஒரு தொடராக அடுத்ததாக எழுத இருக்கிறேன். இந்திரனின் தோட்டம் என்ற பெயரில் நாளை முதல் இந்தப் பயணத் தொடர் ஆரம்பிக்கும்! இந்தப் பயணத் தொடரில் வர போகும் விஷயங்களுக்கு ஒரு Trailer போல சில பத்திகள் இங்கே!




 

“ஓட்டுனரிடம் பேசிக்கொண்டு வந்ததில் இங்கே கிடைக்கும் தேயிலை அனைத்தும் Thadai (தடாய்) மற்றும் Dhanedhar (dhதானே(dh)தார் வகையைச் சேர்ந்தவை என்றும் சொல்லிக் கொண்டு வந்தார். இங்கே இருக்கும் தேயிலை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டு வந்தார்.  வழியில் சில தேயிலைத் தோட்டங்களிலேயே தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் இருந்தன.”  

 

“அடர்த்தியான காட்டுப்பகுதி என்பதால் யானைகள் நடமாட்டம் இருக்கும் என வழியில் பதாகைகள் இருந்தன. இலைகள் காய்ந்த பிறகு யானைகள் நடமாட்டம் இருக்கும் என்று ஓட்டுநர் சொல்லிக்கொண்டு வந்தார். மலைப்பாதையில் பயணம் செய்வது மிகவும் இரசனையானது. சற்றே குளிரான காற்று. கூடவே சுளீரென அடிக்கும்  வெயிலும்….. வழியெங்கிலும் தேனீர் தோட்டங்கள் பார்க்கப் பார்க்க, பரவசம்.”

 

“எங்கள் வாகனத்தின் ஓட்டுநராக வந்தது திரு விஜய் (dh)தீனாநாத் (ch)சவுஹான் என்பவர் - அவரது அப்பா அமிதாப் Bபச்சன் விசிறி என்பதால் மகனுக்கு அவர் நடித்த ஒரு படத்தில் இருந்த Character பெயரையே தன மகனுக்குச் சூட்டி இருக்கிறார்.  வடக்கிலும் சில சினிமா வெறியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இந்த விஷயம் எனக்கு உணர்த்தியது!”

 

என்ன நண்பர்களே, இந்த மூன்று பத்திகள் உங்களுக்கு பயணம் எங்கே என்பது குறித்து ஏதேனும் குறிப்புகள் தந்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். 


 

இந்தப் பயணம் முடிந்த பிறகு பெரிய பயணங்கள் எதுவும் செய்ய முடியவில்லை. வாய்ப்பு அமைந்தாலும் செல்லவில்லை.  மீண்டும் தமிழகத்திற்கு வந்து நீண்ட நாட்கள் - அதாவது மூன்று மாதங்களுக்கு மேலாக இருந்த போது சின்னச் சின்னதாக செய்த பயணங்கள் குறித்தும் எழுத வேண்டும் - தொடராக இல்லை என்றாலும், தனிப்பதிவுகளாக அந்த அனுபவங்கள் அவ்வப்போது வெளி வரும். திருச்சி மற்றும் தமிழத்தின் சில ஊர்களுக்கு சென்று வந்திருக்கிறேன்.  பெரும்பாலும் கோவில்கள் தான். பாடல் பெற்ற ஸ்தலங்கள், வைப்பு ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள் என பல கோவில்களுக்குச் சென்று வந்திருக்கிறேன்.  அந்த கோவில்கள் குறித்த பதிவுகளும் அவ்வப்போது வெளி வரும் என்பதை இங்கே சொல்லவே இந்தப் பதிவு. எந்தெந்த கோவில்கள் என்பதை இங்கே பட்டியலிட ஆசை தான் என்றாலும் அப்படிச் செய்யப் போவதில்லை. எந்த இடங்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்களேன்.  விரைவில் அந்தப் பதிவுகளும் வரத்தானே போகிறது!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

8 கருத்துகள்:

  1. விஜய் தீனாநாத் சவுஹான்...   படம் அக்னீபத் என்று நினைக்கிறேன்.  நானும் அமிதாப் விசிறிதான்.  இந்தப் படத்தில் அமிதாப் ஒரு வித்தியாசமான ஆக்ஸெண்ட்டில் பேசுவார்.  வார்த்தைக்கு வார்த்தை முடித்ததும் 'அய்ங்' என்பார்..நிறைய படங்களில் அமிதாப் பெயர் விஜய்.  நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.  எனக்குத் தெரிந்த ஒருவர் பெயர் எம் கே தியாகராஜ பாகவதர்.  அவர் அப்பாவுக்கும், அவர் ஊருக்கும் எம் என்கிற எழுத்துக்கும் கே என்கிற எழுத்துக்கும் சம்பந்தமே கிடையாது!

    பதிலளிநீக்கு
  2. சீக்கிரம் ஒரு வடநாட்டு பயணக்கட்டுரை.. காத்திருக்கிறேன். டார்ஜிலிங்?

    பதிலளிநீக்கு
  3. பயணங்கள் தொடரட்டும்..

    நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் நான் நினைத்துப் பார்க்காத இடங்களுக்குக்கூடச் சென்று வருகிறீர்கள். உங்கள் பதிவினூடாகவே நானும் பல இடங்களைப்பற்றித் தெரிந்துகொள்கின்றேன் ! தொடந்து எழுதுங்கள் !

    பதிலளிநீக்கு
  5. ஆஹா வெங்கட்ஜி!! சிக்கிம்! சரியா? அந்த

    அந்த மலையும் ஏரியும் படம் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. அதுவும் டார்ஜீலிங்க் இரண்டாவது படம் என்று தோன்றுகிறது. அங்கிருந்து காங்க்டாக் ..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. தேயிலை தோட்டம் எனும் போது டார்ஜீலிங்க்...ஸோ அது வழி பயணம்..

    ஆதலால் பயணம் செய்வீர் - ஆமாம் எனக்குப் பிடித்த விஷயம். என்னால் முடியவில்லை என்றாலும் நீங்கள் துளசிக்கா, அனு இன்னும் சில தளங்களில் வாசித்துவிடுவதுண்டு.

    ஆவலுடன்....பதிவை எதிர்நோக்கி

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இந்திரனின் தோட்டம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பார்க்க தொடர்கிறேன்.
    பயணம் இனிது .

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....