சனி, 29 ஏப்ரல், 2023

காஃபி வித் கிட்டு - 169 - ஆலயம் கண்டேன் - சைக்கிள் அனுபவங்கள் - பாடை கட்டி மாரியம்மன் - மனிதம் - இசை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வழியெங்கும் தேயிலைத் தோட்டம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“HAVE THE COURAGE TO FOLLOW YOUR HEART AND INTUITION. THEY SOMEHOW ALREADY KNOW WHAT YOU TRULY WANT TO BECOME. EVERYTHING ELSE IS SECONDARY.” - STEVE JOBS.

 

******

 

இந்த வாரத்தின் வலைப்பூ அறிமுகம் : ஆலயம் கண்டேன்

 

சமீபத்தில் வலையுலகில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது பார்த்த ஒரு ஆங்கில வலைப்பூ - Aalayam Kanden எனும் வலைப்பூ.  தமிழிலும் இதே பெயரில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து இருந்தாலும், ஆங்கிலத்தில் தான் அதிக பதிவுகள் இருக்கிறது. 2010-ஆம் ஆண்டிலிருந்தே எழுதி வருகிறார்.  கோவில் குறித்த தகவல்களும் கோவில்களில் எடுத்த நிழற்படங்களும் என பதிவுகளில் பல சிறப்பு விஷயங்கள் இருக்கின்றன. இதே பெயரில் ஒரு டிரஸ்ட் நடத்துவதாகவும் தெரிகிறது. அது குறித்து உங்களுக்கு மாற்றுக கருத்துக்கள் இருந்தாலும் பதிவுகளை நிச்சயம் படிக்கலாம். தற்போது வருடத்தில் ஒரு சில பதிவுகளே எழுதுகிறார் என்றாலும் பழைய பதிவுகள் நிறையவே இருக்கின்றன.  கோவில்கள் குறித்து தகவல்கள் நிறையவே இருக்கின்றது.  நிச்சயம் நீங்களும் இந்தப் பதிவுகளைத் தொடரலாம்.  பழைய பதிவுகளும் படித்துப் பார்க்கலாம்.  படித்துப் பாருங்களேன். 

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : சைக்கிள் அனுபவங்கள்

 

2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சைக்கிள் அனுபவங்கள் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

நெய்வேலியில் இப்போ  இருக்கிறவர்களில்  பெரும்பாலானவங்க  நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்காங்க.  நகரின் முக்கிய வியாபார ஸ்தலமான மெயின் பஜார் பகுதியில் வாகனங்களை நிறுத்த “பார்க்கிங்” ஏரியா கூட இப்போது  அமைத்திருக்கிறார்களாம்.  நெய்வேலி ரொம்பத் தான் முன்னேறி விட்டது போலும். 

 

நான் நெய்வேலியில் படித்துக்கொண்டிருந்தபோது எல்லா வீடுகளிலும் சைக்கிள் தான் பிரதான வாகனம்.  ஒவ்வோர் வீட்டிலும் குறைந்தது இரண்டு சைக்கிளாவது இருக்கும். என் வீட்டில் கூட மூன்று சைக்கிள் இருந்தது.  வீட்டில் இருந்த அனைவரும் உயரம் என்பதால் சைக்கிளும் 24 – 26 இன்ச் தான் வாங்கினார் அப்பா.

 

நான்காவது படிக்கும்போதே சைக்கிள் ஓட்டத் துவங்கி விட்டேன்.  யாரும் கற்றுக் கொடுக்காமல் நானாகவே கற்றுக்கொண்டேன்.  குரங்குப் பெடலெல்லாம் இல்லாமல் நேராகவே சீட்டில் உட்கார்ந்து ஓட்டி விட்டேன்.

 

வகுப்பு ஆசிரியை எஸ்தர் வீட்டிலிருந்து ஏதோ எடுத்து வரச் சொல்லி என்னை ஏவ, பூட்டப்படாமல் இருந்த ராபர்ட் என்ற சகமாணவனின் சைக்கிளின் மேலே ஏறி உட்கார்ந்து உயரமான ரோட்டிலிருந்து  இறக்கத்திலிருந்த  மைதானத்திற்கு வந்து விட்டேன்.  சிறிது தூரத்தில் இருக்கும் எஸ்தர் டீச்சர் வீட்டுக்குச் செல்வதற்குள் நான்கு முறை கீழே விழுந்து எழுந்தேன் என்பதை இதுவரைக்கும் யாருக்கும் சொல்லவில்லை.

 

ஒரு வழியாக விழுந்து எழுந்து கற்றுக்கொண்டபின், அப்பாவை அரித்துப் பிடுங்க, அவர் ஒரு புது சைக்கிள் வாங்கினார்.  அதை அவர் வைத்துக்கொண்டு எனக்கு பழைய சைக்கிளை கொடுத்தார்.  அதன் பிறகு நெய்வேலியில் இருக்கும் ஒரு தெரு விடாமல் அத்தனை தெருக்களின் நீள அகலங்களை அளந்து சுற்றியது தனிக்கதை.

 

முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!

 

******

 

இந்த நாளின் எண்ணங்கள் - பாடை கட்டி மாரியம்மன் :  

 

மார்ச் மாதக் கடைசியில் கும்பகோணம் சென்று இருந்த சமயம் வலங்கைமான் வழி பயணிக்க நேர்ந்தது.  சாலையில் மிகவும் மெதுவாக, ஊர்ந்து செல்லும் அளவுக்கு வாகனங்களும் மனிதர்களும் நிரம்பி இருந்தார்கள்.  எங்கள் ஓட்டுநர் திரு Gகாந்தி அவர்கள் எதனால் இத்தனை கூட்டம் எனச் சொல்லிக் கொண்டு வந்த விஷயம் தான் இந்த பாடை கட்டி மாரியம்மன் கோவிலும் அதில் பங்குனி மாதம் நடக்கும் பாடை கட்டி திருவிழாவும்.  இந்த மாரியம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றுவது மிகவும் வித்தியாசமாக இருந்தது. உடல் நிலை சரியில்லாதவர்கள், மாரியம்மனிடம் தங்கள் உடல்நிலை சரியானால், பாடையில் படுத்துக் கொண்டு - Literally சவம் போலவே படுத்துக்கொண்டு இறந்து போனால் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அவை அனைத்தும் நடக்க ஆற்றங்கரையிலிருந்து கோவில் வரை வந்து மூன்று சுற்று சுற்றி பிறகு தான் எழுதிருப்பார்களாம். ஆற்றில் இருந்து பாடையில் படுத்துக்கொண்டதிலிருந்து கோவிலில் மூன்று முறை வலம் வரும் வரை அவர்கள் சவம் போலவே இருப்பார்கள் என்றும் திரு Gகாந்தி அவர்கள் சொன்ன போது பிரமிப்பாகவே இருந்தது. எத்தனை எத்தனை விதமான வழிபாடுகள், எத்தனை விதமான நம்பிக்கைகள் நம் நாட்டில்! இது குறித்து உங்களில் யாரேனும் அறிந்தது உண்டா? படம் எடுத்தேன் என்றாலும் இங்கே பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை.  இணையத்தில்/YOUTUBE-இல் இந்தக் கோவில் குறித்துத் தேடிப்பார்த்தால் நிறைய காணொளிகள் கிடைக்கின்றன.  விருப்பம் இருந்தால் பார்க்கலாம்!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த குறும்படம் : மனிதம்

 

இந்த வாரத்தின் ரசித்த குறும்படமாக நாம் பார்க்க இருப்பது ஒரு Turkish குறும்படம். வசனங்கள் இல்லாமல் இசை மட்டுமே இருக்கக்கூடிய ஒரு குறும்படம்.  சொல்ல வரும் விஷயம் மிகவும் சிறப்பாக இருந்தது. நீங்களும் பார்க்கலாமே! 



 

மேலே உள்ள சுட்டி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே கொடுத்திருக்கும் YOUTUBE சுட்டி வழி நேரடியாக பார்க்கலாம்! 

 

A Turkish film of less than 2 mins & without dialogue, but with deep meaning. - YouTube

 

*****

 

இந்த வாரத்தின் ரசித்த நிலைத்தகவல் - இசை : 


 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

17 கருத்துகள்:

  1. புதிய வலைப்பூ அப்புறம் பார்க்கிறேன்.  சைக்கிள் நினைவுகள் எப்போதும் சுவாரஸ்யம்.  பாடைகட்டி அம்மன் தகவல்கள் புதிது, வியப்பு.  புன்னகைக்க வைக்கும் மனிதம்.  அந்தச் சிறுவன் கொஞ்சம் பெரியவனாகவே தெரிகிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய வலைப்பூ - முடிந்தபோது வாசித்துப் பாருங்கள் ஶ்ரீராம். பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. வலங்கைமான் பாடைகட்டி விழாவினை நேரில் பார்த்துள்ளேன். மெய் சிலிர்க்கும். நம்மவர்களின் நம்பிக்கையும், அன்னையின் ஆசியும் அங்கு வரவைக்கும். கும்பகோணம் பகுதியில் பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று. இக்கோயிலைப் பற்றி விக்கிப்பீடியாவில் ஒரு பதிவினை ஆரம்பித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விக்கிப்பீடியாவில் இக்கோவில் குறித்த பதிவு - மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகி்ர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  3. பதிவு அருமை
    சைக்கிள் அனுபவங்கள் ரசிக்க வைத்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. வலங்கைமான் மாரியம்மன் கோயில் வழியாக பலமுறை சென்றிருக்கின்றேன்..

    ஒருமுறை அம்மன் தரிசனம்..

    அம்மன் மிகுந்த வரப்ரசாதி..

    ஓம் சக்தி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  5. பாடைகட்டி அம்மன் தகவல்கள் புதிய செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி உங்களுக்கு ஒரு புதிய தகவலை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  6. காலையிலேயே மொபைலில் வாசித்துவிட்டேன்...ஜி

    சைக்கிள் அனுபவங்கள் சுவாரசியம்.

    பாடைகட்டி அம்மன் - பெயரே வித்தியாசம் வேண்டுதல் நிறைவேற்றல் ரொம்பவே ஆச்சரியமாக இருக்கு. என்னவெல்லாம் நம்பிக்கைகள்! எப்படி இவை வருகின்றன என்பதே எனக்குப் புரிவதில்லை பல சமயங்களில்.

    காணொளி செம...என்ன அழகான கருத்து! ரசித்துப் பார்த்தேன் ஜி.

    நிலைத்தகவல் படமும் அதில் உள்ள வரிகளும் ரசனையான ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. பதிவு அருமை. மனிதம் காணொளி நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
  8. கருத்து சொல்ல வந்தால் ஏன் ஒவ்வொருமுறையும் அநாமதேயர் என்று சொல்கிறது ? ஙே...... பாடைகட்டி அம்மன் தகவல்கள் புதுசு ! கடவுள் மேல் பாரத்தைப்போட்டு எல்லாம் அவர் பார்த்துக்குவார் என்ற நம்பிக்கையில்தான் எல்லா பிரார்த்தனைகளும் இல்லையோ !

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....