செவ்வாய், 4 ஏப்ரல், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி நாற்பத்தி மூன்று - ப்ரயாக்ராஜ் - Bப(d)டே ஹனுமான்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“NOT IN DOING WHAT YOU LIKE, BUT IN LIKING WHAT YOU DO IS THE SECRET OF HAPPINESS.” - J.M. BARRIE.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்

 

பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்

 

பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி

 

பகுதி முப்பத்தி எட்டு - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்

 

பகுதி முப்பத்தி ஒன்பது - விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க

 

பகுதி நாற்பது - நான்காம் நதிக்கரை நகரம் - ப்ரயாக்ராஜ்

 

பகுதி நாற்பத்தி ஒன்று - ப்ரயாக்ராஜ் - திரிவேணி சங்கமம்

 

பகுதி நாற்பத்தி இரண்டு - அக்ஷய் வட் மற்றும் பாதாள் புரி மந்திர்



படம் இணையத்திலிருந்து…

 

சென்ற பகுதியில் அக்ஷய் வட் மற்றும் பாதாள் புரி கோவில் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டேன். இதைப் பகுதியில் திரிவேணி சங்கமத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் பிரசித்தி பெற்ற ஹனுமான் கோவில் பற்றி பார்க்கலாம். இந்தக் கோவிலில் அஞ்சனி மைந்தர்நின்ற கோலத்தில் இல்லாது வித்தியாசமாக படுத்த நிலையில் இருக்கிறார். சங்கமத்திற்கு வரும் அனைத்து மக்களும் இக்கோவிலுக்கும் வந்து செல்வதால் எந்நேரத்திலும் கூட்டம் இருக்கிறது. இக்கோவில் பற்றிய கதையை அங்கேயிருக்கும் பிரசாதக் கடைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.  பிரசாதம் என்றால் ஏதோ நம் ஊர் எள்ளு சாதம் என நினைக்க வேண்டாம்!  வடக்கில் ஹனுமனுக்கு படைப்பது – பூந்தி அல்லது மோதிசூர் லட்டு மட்டுமே. சரி கதையைப் பார்ப்போமா?

 

உத்திரப் பிரதேசத்தின் கன்னோஜ் நகரத்தினைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு அளவில்லாத சொத்து.  ஆனால் அவருக்குப் பின் அவற்றை கட்டிக்காக்க, அனுபவிக்க ஒரு மகவு இல்லாதது அவருக்குப் பெரும் குறை.  சங்கடங்களை தீர்க்க வல்ல ஹனுமனுக்கு ஒரு கோவில் எழுப்பினாலாவது தனக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விந்தியாசல மலையில் ஒரு கோவில் எழுப்ப முடிவு செய்தார் கன்னோஜ் வியாபாரி. 

 

மலையிலிருந்து பெரிய கல்லாகத் தேர்வு செய்து பெரிய ஹனுமான் விக்ரஹமும் தயார் ஆனது.  [B]ப(d)டே ஹனுமான் விக்ரஹத்தினை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு முன் புண்ணிய நதிகளில் நீராட்ட முடிவு செய்தார் வியாபாரி.  ஒவ்வொரு நதியாகச் சென்று நீராட்டிய பிறகு அவர் கடைசியில் வந்தது அலஹாபாத்தின் சங்கமத்திற்கு – மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாயிற்றே. அங்கே நீராட்டினால் சிறப்பன்றோ.

 

கங்கைக் கரையில் விக்ரஹம் படுத்த நிலையில் இருக்க, மாலை நேரம் ஆகிவிட்டபடியால், அன்று சங்கமக் கரையிலேயே உறங்கி அடுத்த நாள் பயணத்தினை தொடர முடிவானது.  அடுத்தது விந்தியாசல மலையில் விக்ரஹத்தினை கொண்டு சேர்த்து கோவிலை எழுப்ப வேண்டியது தான் பாக்கி.  தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள்.  அதுதான் இங்கேயும் நடந்தது.



படம் இணையத்திலிருந்து…
 

அன்று உறக்கத்தில் கன்னோஜ் வியாபாரியின் கனவில் ஹனுமான் எழுந்தருளி தான் கங்கைக் கரையிலேயே கோவில் கொள்ள விரும்புவதாகச் சொல்ல, வியாபாரியும் அப்படியே செய்ய முடிவு செய்தாராம்.  அங்கே கோவில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்காக கன்னோஜ் திரும்புகிறார்.  அங்கே கங்கைக் கரையில் படுத்த நிலையில் ஹனுமார் காத்திருக்கிறார்.

 

நெடு நாட்கள் பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பிய அந்த வியாபாரி தனது சொந்த வேலைகளில் ஆழ்ந்து விட, சில மாதங்களில் வியாபாரியின் மனைவி அழகான ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். கோவில் கட்ட நினைத்த வியாபாரியும் தனது கோரிக்கை நிறைவேறிய காரணத்தினாலோ என்னமோ, கோவில் கட்டுவதை அடியோடு மறந்து விட்டார் போலும்!  கங்கைக் கரையில் படுத்த நிலையில் இருந்த ஹனுமன் கால ஓட்டத்தில் மண்ணுக்குள் மண்ணாய்!

 

சில காலத்திற்குப் பிறகு கங்கையில் புனித நீராட வந்த ஒரு சாமியார் குளிப்பதற்கு கங்கையில் இறங்குமுன் தன்னுடைய திரிசூலத்தினை பூமியில் ஊன்ற ஏதோ கல்லில் மோதும் சத்தம் வர, அந்த இடத்தினைத் தோண்டினால் அங்கே ‘[B]ப(d)டே ஹனுமான்’ அவரை நோக்கி மந்தஹாச புன்னகை வீச, அவருக்கு அங்கேயே கோவில் எழுப்ப முடிவு செய்தார்கள்.

 

படுத்த நிலையில் இருக்கும் ஹனுமான் சிலையை நேராக நிற்க வைத்து கோவில் எழுப்ப எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லையாம்.  அதனால் அதே நிலையில் பூமிக்குள் ஒரு தொட்டி போல கட்டி அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்களாம்.  தற்போது கோவில் சுற்றி பல கட்டுமான பணிகள் செய்யப்பட்டு விட்ட்து.  பக்தர்களும் சங்கமத்தில் நீராடி இங்கே ஹனுமனின் தரிசனம் கண்டு செல்கிறார்கள்.

 

ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும்போது ஹனுமனின் கால் வரை தண்ணீர் வந்து செல்லுமாம்.  ஹனுமனின் பாத கமலத்தினை கங்கையே பூஜித்துச் செல்கிறாளோ! 

 

செவ்வாய்க் கிழமைகளில் வெளியூர் பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்களும் வந்து வழிபாடு செய்கிறார்கள். ப்ரயாக்ராஜ் நகரின் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் பக்தர்கள் Bபdடே ஹனுமானின் தீவிர பக்தர்கள். தாங்கள் செய்யும் எல்லா விஷயங்களுக்கும் முன்னதாக ஹனுமனின் ஆசியை நாடுபவர்கள். அவர்கள் செய்ய நினைத்த விஷயம் நடந்து முடிந்தால் ப்ரயாக்ராஜ் நகருக்கு வந்து அங்கே சயன கோலத்தில் இருக்கும் Bபdடே ஹனுமானை தரிசித்து, தாங்கள் நினைத்த காரியத்தினை நடத்திக் கொடுத்த ஹனுமனுக்கு நன்றி சொல்லும் விதமாய் செய்யும் ஒரு விஷயம் நிஷான்/நிஷானா என்பது! நன்றி சொல்லும் ஒரு குறியீடாகச் செய்யும் ஒரு விஷயத்தினை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.


 

தாங்கள் நினைத்த காரியம் கைகூடிய பிறகு, கிராமத்திலிருந்து ஒரு நீண்ட மூங்கிலை, சிவப்புத் துணியால் சுற்றி, அதன் மேல் முனையில் ஒரு முக்கோண சிவப்பு துணியாலான கொடியைக் [நடுவே ஸ்வஸ்திக் வரையப்பட்ட] கட்டி, அதனை அவர்கள் ஊரிலிருந்து சுமந்து வருவார்கள். அந்தக் கொடி மண்ணில் படாமல் சுமந்து கொண்டு வந்து நேரே கங்கைக் கரையில் குளித்து அந்தச் சிவப்பு முக்கோணக் கொடியை தண்ணீரில் நனைத்து, பிறகு கங்கைக் கரையில் மூங்கில் கழியை நிற்க வைத்து “ஜெய் ஹனுமான்” கோஷங்கள் எழுப்பி, Bபdடே ஹனுமானுக்கு நன்றி சொல்லி, அங்கிருந்து மூங்கிலை மீண்டும் தோளில் சுமந்து வந்து Bபdடே ஹனுமானின் கோவில் வாசலில் கொடியை மட்டும் உள்ளே காண்பித்து தோள்களில் சாற்றி வைத்து ஜெய கோஷங்கள் எழுப்புவார்கள். பிறகு கோவிலின் எதிரே இருக்கும் ஒரு பகுதியில் அந்த மூங்கில் கழியை நிறுத்துவார்கள்.

 

வாரத்தின் ஒவ்வொரு திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இப்படி நிஷானா எனும் வழக்கத்தினை நூற்றுக் கணக்கான கிராமத்து பக்தர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். மூங்கிலைச் சுமந்துவரும் பக்தர்களுக்கு முன்னர் அவர்களது வீட்டினர், கிராமத்தினர் நடனம் ஆடியபடியும் பாடல்களை பாடியபடியும் வருகிறார்கள். ஒரு சிலர் இப்படி நடந்து வரும்போது அவர்களுக்கு முன்னால் ஒரு சைக்கிளில் ஆம்ப்ளிஃபையர் வைத்து பக்தி பாடல்களை ஒளிபரப்ப, பின்னால் வருபவர்கள் கூடவே ஆடிக்கொண்டு வருகிறார்கள். எங்களது இந்தப் பயணத்திலும் இப்படியான பக்தர்கள் நிஷானா எடுத்து வருவதை பார்க்க முடிந்தது. அதிலும் கோவிலில் இருக்கும் அதிகமான பக்தர்கள் கூட்டத்திலும் கைகளில் பெரிய பெரிய கழிகளோடு - இல்லை இல்லை மரக்கிளைகளோடு பக்தர்கள் வந்த வண்ணமே இருந்தார்கள்.  அதிலும் ஒரு பக்தர் அந்த கழியை விதம் விதமாக பிடித்துக் கொண்டு, கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்வதோடு பல வித வித்தைகள் காட்டியபடியே நடனமாடியது பிரமிக்க வைத்தது. விதம் விதமான நம்பிக்கைகள் ஒவ்வொரு பகுதியிலும். நம்பிக்கை தானே வாழ்க்கை! 

 

தொடர்ந்து பயணத்தில் இணைத்திருங்கள் நண்பர்களே! 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

13 கருத்துகள்:

  1. இந்தக் கோவில் தரிசனம் எங்களுக்கு கிட்டியது.

    பதிலளிநீக்கு
  2. படே ஹனுமானைச் சிலமுறை தரிசித்தது நினைவுக்கு வருகிறது. எப்போதும் புகைப்படங்கள் எடுப்பது வழக்கம் என்பதால், அந்த வருடத்துச் சேமிப்பில் படங்கள் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. Bபdடே ஹனுமானின் கோவில் பற்றிய விவரம் அறிந்தேன்.
    ஹனுமன் கோவில் பார்த்தது இல்லை.
    இன்று தரிசனம் செய்து கொண்டேன்.
    நம்பிக்கை தான் வாழ்க்கை என்பது உண்மை.
    நம்பிக்கைதான் வாழ வைத்து கொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ஹனுமான் வரலாறு சொன்ன விதம் அருமையாக உள்ளது ஜி

    பதிலளிநீக்கு
  5. ஹனுமான் கோயில் குறித்த விவரங்கள் அறுமை சார்.
    மன்னில் வைத்தபின் தூக்க இயலாத கடவுள் சிலைக்கதையை திருவரங்க வரலாற்றிலும் கேட்டதுபோல் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த் அப்படியானவை இன்னும் சில உண்டு. சிவன் கதையிலும் கூட வரும். வாலீஸ்வரர் கோயில்னு சென்னை ஆந்திரா எல்லையில் ஆந்திரா பகுதியில் இருக்கும் கோயிலும் ஹனுமான், சிவன் சம்பந்தப்பட்ட கதை உடைய கோயில்.

      கீதா

      நீக்கு
    2. ஓ மிக்க நன்றி மேடம்.
      அவை குறித்த கதைகளையும் தேடி வாசிக்கிறேன்.

      நீக்கு
  6. ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும்போது ஹனுமனின் கால் வரை தண்ணீர் வந்து செல்லுமாம். ஹனுமனின் பாத கமலத்தினை கங்கையே பூஜித்துச் செல்கிறாளோ! //

    ஆஹா! இதைப் பார்க்க வேண்டுமே. பெரிய ஆஞ்சு கோயிலைப் பார்க்க வேண்டுமே...சுவாரசியமான கதை மற்றும் தகவல்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நம்பிக்கை. நிஷானா - இந்த நம்பிக்கை குறித்த தகவலும் சுவாரசியம். ரசித்து வாசித்தேன், ஜி! ஆஞ்சு என்றாலே மனம் மகிழ்ச்சியடையும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வாசகம் செம. இதற்கு முந்தைய பதிவு ஒன்றில் ஒரு வாசகம் அருமையான வாசகம் எண்ணங்கள், செயல்களாய், செயல்கள் பழக்கமாவது பழக்கமே குணாதிசயமாவது என்று வரும் வாசகம் அங்கு சொன்னேனா தெரியவில்லை....அருமையான வாசகம் அது...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. Bப(d)டே ஹனுமான் கோவில் சென்றோம் ஆனால் அந்நேரம் சந்திர கிரகணம் என்று கோவில் நடை சாற்றிவிட்டார்கள்.


    ஆனாலும் மக்கள் எந்த கவலையும் இன்றி வெளியில் தங்களது பூஜையில் மூழ்கிவிட்டார்கள்.


    நிஷானா..நல்ல தகவல் சார் ...
    நாங்களும் பல மக்கள் இந்த பூஜை செய்வதை பார்த்த்தோம்.எங்களுக்கு விவரம் ஏதும் தெரியவில்லைசரி ஏதோ பூஜை என எண்ணி வேடிக்கை பார்த்த்தோம் அதுவும் அவர்கள் லயிப்புடன் ஆடுவது மிக அழகு ...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....