வியாழன், 9 பிப்ரவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இருபத்தி ஆறு - அயோத்யா ஜி - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

GOD’S PLAN IS ALWAYS THE BEST.  SOMETIMES THE PROCESS IS PAINFUL AND HARD. BUT DON’T FORGET THAT WHEN GOD IS SILENT, HE’S DOING SOMETHING GREAT FOR YOU. 

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 



கனக் Bபவன்...



கனக் Bபவன் குறித்த தகவல் பதாகை…

 

சென்ற பகுதியில் சொன்ன ராஜ் (DH)த்வார் மந்திர் பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் கனக் Bபவன் எனும் இடம் - அதாவது தங்க மாளிகை! இராமபிரான் காலத்தில் முழுவதும் தங்கத்தால் ஆன மாளிகையாக இருந்த இடம் என்பதால் இந்தப் பெயர்.  இப்போது அந்த தங்கம் எங்கே என்கிற ஆராய்ச்சியில் இறங்காமல் அங்கே சென்றபோது எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் குறித்து பார்க்கலாம் - தங்கம் அதிகமாக இருந்தாலும் கஷ்டம் தான் - அது குறித்து ஆராய்வதும் சரியல்லவே! த்ரேதா யுகத்தில் பகவான் ஸ்ரீராமர் மற்றும் மாதா சீதா தேவி ஆகியோர் இந்த தங்க மாளிகையில் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.  வெளிப்புறம் முழுவதும் தங்கத்தகடுகள் வேயப்பட்ட மாளிகையாக இந்த கனக் Bபவன் இருந்திருக்கிறது.  அதன் பிறகு த்வாபர யுகத்தின் தொடக்கத்தில் பகவான் ஸ்ரீராமருக்கும் மாதா சீதா தேவிக்கும் ஒரு நினைவிடமாக அவரது மகன் குஷ் அவர்களால் அமைக்கப்பட்டது என்றும் இங்கே உள்ள பதாகை தெரிவிக்கிறது.  அதன் பிறகு பல முறை சீரமைக்கப்பட்டும், புனர் நிர்மாணம் செய்யப்பட்டும் வந்திருக்கிறது.  



கனக் Bபவன் - வேறு கோணத்தில்…


முன்னோர்கள் - படம் எடுக்கும்போது பார்த்த பார்வை!

 

தற்போது அமைந்திருக்கும் கனக் Bபவன் ஓர்ச்சா மஹாராணியால் 1948-ஆம் வருடம் அமைக்கப்பட்டது. (ஓர்ச்சா தற்போதைய மத்திய பிரதேசத்தில் இருக்கிறது.  இந்த ஓர்ச்சா குறித்து எனது வலைப்பூவில்  மத்தியப் பிரதேசம் அழைக்கிறது என்ற பயணத்தொடரில் எழுதி இருக்கிறேன்.  அந்தத் தொடர் மின்நூலாகவும் வெளியிட்டு இருக்கிறேன். மின்னூலை, சுட்டி வழி இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! படிக்காதவர்கள் இந்த பத்தியில் கொடுத்துள்ள சுட்டிகள் வழி படிக்கலாம்!) மிகவும் அழகான கோவில். இந்தக் கோவிலுக்குள் மூன்று இடங்களில் இராமர் மற்றும் சீதாதேவியின் சிலைகள் அமைந்திருக்கின்றன.  மூன்றும் வெவ்வேறு சமையத்தில் இங்கே நிறுவப்பட்ட சிலைகள்.  அந்த மூன்று சிலைகளில் ஒன்று - த்வாபர யுகத்தின் கடைசியில் கிருஷ்ண பகவானால் இங்கே நிறுவப்பட்ட சிலை என்றும் இங்கே உள்ள தகவல் பதாகை செய்தியை நமக்குச் சொல்கிறது.  மூன்று சிலைகளும் அழகு.  நாங்கள் சென்றபோது இந்த கோவில் வளாகத்தில் நிறைய பக்தர்கள்.  கூடவே ஹனுமனின் வழித்தோன்றல்கள் நிறையவே இருந்தார்கள்.  



பாதச்சுவடுகள்…

மிகப் பெரிய வளாகமாக அமைந்திருக்கிறது இந்த கனக் Bபவன். ஒரு பகுதியில் ஸ்ரீராமரின் பாதச்சுவடுகளும் இருக்கிறது - தற்போது மார்பிள் கற்களால் அந்த இடத்தில் ஒரு பாதச்சுவடுகள் அமைந்திருக்கிறது.  வரும் பக்தர்கள் அந்தப் பாதச்சுவடுகளையும் வணங்கி வழிபடுகிறார்கள்.  கோவில் பெரிய வளாகத்தில் அமைந்திருக்கிறது என்பதால் பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து வழிபட வசதியாக இருக்கிறது.  கோவில் வளாகத்தில் அமர்ந்து த்யானமும் செய்ய முடியும் என்பது கூடுதல் வசதி தானே.  அதுவும் தொடர்ந்து சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதால் தரையில் அமர்ந்து கொள்ளவும் முடிகிறது.  நாங்களும் அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து கொண்டிருந்தோம்.  பக்கங்களில் நிறைய பக்தர்கள் அமர்ந்து, அங்கே தொடர்ந்து ஒலிக்கும் இராம நாமத்தினை அவர்களும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.  பல ஊர்களிலிருந்தும் இங்கே வந்து ஆற அமர தங்கி, ஸ்ரீராமரின் பொற்பாதங்கள் பட்ட இடங்களில் தாங்களும் தங்கி வழிபட்டுச் செல்கிறார்கள்.  நாங்கள் சென்ற போதும் அப்படி நிறைய பக்தர்களைப் பார்க்க முடிகிறது.  



டிக்கம்கட் பெரியவர் உடன் நானும்…


மற்றொரு பெரியவர் ஆழ்ந்த சிந்தனையில்…


மற்றொரு பெரியவர் த்யானம் செய்த வண்ணம்…

 

மேலே படத்தில் உள்ள பெரியவர் மத்தியப்பிரதேசத்தின் டிக்கம்கட் (Tikamgarh) பகுதியிலிருந்து வந்திருந்தார். அவர் அருகே அமர்ந்து அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அயோத்யா ஜி வந்து  ஒரு வாரத்திற்கும் மேலே ஆகிவிட்டது என்றும், இன்னும் சில நாட்கள் தங்கி ஸ்ரீராமபிரானை வழிபட்டு வீடு திரும்புவேன் என்றும் சொல்லிக் கொண்டு இருந்தார். இந்த வயதிலும் நீண்ட தொலைவு பயணித்து, அயோத்யாஜி வந்து தங்கி ஸ்ரீராமபிரானை வணங்கும் இவர் போன்ற பெரியவர்கள் நிச்சயம் நம்மை ஆச்சர்யப்பட வைப்பவர்கள் தான்.  இவர் போன்று பல பெரியவர்களை அந்த கனக் Bபவன் வளாகத்தில் பார்க்கமுடிந்தது.  அவர்களை படமாகவும் அவர்களுக்குத் தெரியாமல் Discrete-ஆக எடுத்துக் கொண்டேன் - அவர்கள் மன்னிப்பார்களாக! முதல் படம் எடுத்தது என்னுடன் வந்தவர்! மற்ற இரண்டு படங்கள் நான் எடுத்தது. 



செருப்பில் ஆராய்ச்சி செய்த குரங்கார்…

 

அயோத்யா ஜி.... ஊரே ஹனுமனின் காவல் எல்லைக்குள் தான் என்பதாலோ என்னவோ, ஊர் எல்லைக்குள் நிறைய முன்னோர்கள் அங்கும் இங்குமாக உலவிக் கொண்டு இருக்கிறார்கள். கையில் கிடைப்பதை எடுத்துக் கொண்டு ஓடுவதும் எதிர்த்தால் தங்களது கூரிய பற்களைக் காண்பித்து மிரட்டுவதுமாக ஊர் எங்கும் இவர்களுடைய ஆட்டம் தான். குட்டியில் எல்லாமே அழகு என்று சொல்வதுண்டு! இவையும் அப்படியே… அதுவும் இவர்கள் விளையாட ஆரம்பித்து விட்டார்கள் எனில் பார்க்கும் அனைவரையும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். நாங்கள் கனக் Bபவன் சென்றபோதும் நிறைய குரங்குகளை பார்க்க முடிந்தது. ரசிக்கவும் முடிந்தது. 



ஆராய்ச்சி செய்த குரங்கார் காணொளியாக…
 

ஒரு சில குரங்குகள் ஓய்வெடுக்க, சில விளையாடிக் கொண்டிருக்க நிறைய பார்த்து ரசிக்க முடிந்தது! கொஞ்சம் பயத்துடன் அருகே சென்று படமும் காணொளியும் கூட எடுக்க முடிந்தது. ஒரு இடத்தில் ஒரு குரங்காருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, மரத்தின் கீழே விட்டுச் சென்ற ஒரு பெண்மணியின் காலணியை எடுத்துக் கொண்டு மரத்தின் மீது சென்று அமர்ந்து கொண்டு, பற்களால் பிய்த்து பார்த்துக் கொண்டிருந்தது. அடேய், செருப்புல என்னடா இருக்கும்? அத எதுக்குடா சாப்பிடற? என்று கேட்கலாம் என்றால் என் பாஷை அதற்குப் புரியாது! அதன் பாஷை எனக்குத் தெரியாது! ஹாஹா.... சில நிமிடங்கள் வரை அந்த இடத்தில் நின்று குரங்காரின் விஷமங்களை ரசித்துக் கொண்டிருந்தேன்.  அதன் பிறகு அங்கேயிருந்து வெளியே வந்து என்ன செய்தோம், எங்கே சென்றோம் போன்ற தகவல்களை வரும் பகுதியில் எழுதுகிறேன்.  அயோத்யா ஜி குறித்த மேலும் தகவல்கள் வரும் பதிவுகளில் வரும். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து… 

8 கருத்துகள்:

  1. கனக் பவன் மிக அழகாக இருக்கிறது. செயலாய் இருந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று எண்ண வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. கனக பவன் சென்றிருக்கிறேன். பலமுறை சீர் செய்யப்பட்டது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது, ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கனக் Bhபவன் மனதை ஈர்க்கிறது. ஆனால் பல முறை சீரமைச்சிருக்காங்களே அப்படினா முந்தைய காலத்தில் இப்படி மார்பிள் இருந்திருக்காது இல்லையா? அக்கால அமைப்பு கற்காளால் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதைப் பார்க்கும் ஆர்வம் ஏற்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ராமர் இருக்கும் இடத்தில்/அவர் நாமம் சொல்லும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார் என்று சொல்வதுண்டே...அப்படி நீங்க சொல்லிருப்பது போல் அவர் வழித்தோன்றல்கள் ஆக்ரமிச்சிருக்காங்க. அந்தக் குரங்காருக்கு ச்ந்தேகமோ இது ராமர் பாதமா இல்லையான்னு....அதான் அதை எடுத்து இப்படி அக்கு வேறு ஆணி வேறா பிய்க்கிறார் போல!!! குரங்கார்களின் சேட்டையே தனிதான்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கனக் பவனை நேரில் பார்த்த உணர்வு.
    அருமையான படங்கள்

    பதிலளிநீக்கு
  7. மாளிகை அழகாக உள்ளது.

    ராமர் சீதா தங்கி இருந்த இடம் கோவிலாக, அமைதியும் சுத்தமும் மனதுக்கு இதமாக இருக்கும். தியானிப்பதற்கும் ஏற்ற இடம்.

    பலரும் தியானத்தில் இருக்கும் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....