வியாழன், 19 ஜனவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

HOW MUCH YOU ACHIEVE IN LIFE IS NOT AS IMPORTANT AS HOW MUCH YOU ENJOY EACH MOMENT IN LIFE. 

 

******


 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்



லஸ்ஸி…

  

சென்ற பகுதியில் அயோத்யா ஜியின் காவல் நாயகன் ஆன ஹனுமனின் கோவில் குறித்தும் அங்கே கிடைக்கும் லட்டு பிரசாதம் குறித்தும் பார்த்தோம்.  இந்த பகுதியில் இராமபிரானின் தந்தை தசரதன் அவர்களின் மாளிகை குறித்தும் வேறு சில தகவல்கள் குறித்தும் பார்க்கலாம்.  அதற்கு முன்னர் ஒரு விஷயம் - ஹனுமன் கோவில் வாயிலில் இருந்த இனிப்புக் கடைகளில் ஒன்றில், அங்கே கிடைக்கும் கெட்டியான லஸ்ஸி சாப்பிடலாம் என உள்ளே நுழைந்து விட்டோம். அங்கே கிடைக்கும் லஸ்ஸி கொஞ்சம் ஸ்பெஷல் என்றும் சொல்லலாம் - கெட்டியான தயிரில் சர்க்கரை கலந்து, நன்கு கடைந்து அதில் கொஞ்சம் பால்கோவா/கோயா கலந்து தருவார்கள்.  அப்படி ஒரு சுவை - சாப்பிட்ட பிறகும் அதன் சுவை உங்கள் நாக்கில் இருந்து கொண்டே இருக்கும் என்பது உறுதி.  அயோத்யா ஜி நகரில் இருந்த இரண்டு நாட்களும் அங்கே லஸ்ஸி குடித்தோம் என்பதை இங்கே சொல்வதில் இருந்தே சுவை உங்களுக்கு புரியும். அயோத்யா ஜி சென்றால் நீங்களும் இப்படியான லஸ்ஸி அருந்தி மகிழலாம்! 



தஸ்ரத் மஹல் பதாகை…



தஸ்ரத் மஹல் நுழைவாயில்…



இராம காதை சொற்பொழிவு…

 

ஹனுமன் கோவிலைக் கடந்து தொடர்ந்து நடந்தால் இடப்பக்கத்தில் ஒரு பதாகை - “தஸ்ரத் மஹல்” என்று பச்சை வண்ணத்தில் அறிவிப்பு தருகிறது. சரி அதன் உள்ளே சென்று பார்த்துவிடலாம் என உள்ளே நுழைந்தால் அங்கே ஒரு சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கிறது.  வேறு யார் குறித்து சொற்பொழிவு இருக்கும்?  இராமபிரானைப்பற்றி தான்.  நாள் முழுவதும் இராமனைக் குறித்து பேசச்சொன்னாலும் பேசுவதற்கு அயோத்யா ஜியில் ஆட்கள் உண்டு.  சில நிமிடங்கள் அங்கே நின்று ஹிந்தியில் சொற்பொழிவினைக் கேட்டோம்.  இராம காதையை அப்படி ஒரு சுவாரஸ்யத்துடன், ஸ்லாகித்துச் சொல்லிக் கொண்டிருந்தார் சொற்பொழிவாளர்.  கேட்டபடியே நடந்து உள்ளே சென்றோம்.   உள்ளே இருப்பது தான் தசரதனின் மாளிகை. அங்கே வாயிலில் ஒரு பதாகை - இங்கே தான் தசரதனின் புதல்வர்களான பகவான் இராமபிரானும் அவரது சகோதரர்களும் சிறு பிராயத்தில் விளையாடி மகிழ்ந்தார்கள் என்ற அறிவிப்பு தாங்கி நிற்கிறது. 





தகவல் சொல்லும் பதாகைகள்….



 தற்போது இருக்கும் கோவில்…


மற்றொரு பதாகை இப்படி ஒரு வாசகத்துடன் இருக்கிறது - “ஹம் ராம் ஜி கே! ராம் ஜி ஹமாரே ஹே!” - அதாவது “நாம் இராமபிரானுடையவர்கள், இராமபிரான் நம்முடையவர்!” என்று அர்த்தம் கொண்ட வாசகம் தாங்கிய பதாகை.  ஒளிதரும் விளக்குகள் பொருத்திய அழகான மாளிகை.  அந்த காலத்தில் எப்படி இருந்ததோ என்பது நமக்குத் தெரியாது - ஆனால் தற்போது இருக்கும் மாளிகையில் இராமபிரானுக்கு கோவில் போல அமைந்திருக்கிறது.  வெளிப்புறத்தில் இராம காதை ஒலித்துக் கொண்டிருக்கிறது  என்றால் இங்கே பக்தர்கள் சந்தோஷமாக முழங்கும் “ஜெய் ஸ்ரீராம்!” ஒலி கேட்ட வண்ணமே இருக்கிறது.  இராமபிரானின் மீது அலாதி அன்பினை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.  அந்த சூழல் நம்மையும் அதில் ஈடுபாடு கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.  சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து நாங்களும் பக்தியில் திளைத்தோம்.  

 

பிரம்மாண்ட தேங்காய் bபர்ஃபி.... 



தேங்காய் bபர்ஃபி....
 

வட இந்தியாவில் இனிப்புகள் மீதான மோகம் அதிகம் தான். பால் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள் மட்டுமல்லாமல் தேங்காய் கொண்டும் ஒரு சில இடங்களில் இனிப்புகள் செய்கிறார்கள். நாரியல் bபர்ஃபி என்று இவர்கள் அழைக்கும் இது தில்லியில் கொஞ்சம் மிருதுவாக இருக்கும் என்பதோடு நம் ஊர் மாதிரியே துண்டுகள் போட்டு தான் விற்பனை செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் அயோத்யாஜியில் பார்த்த தேங்காய் bபர்ஃபி வித்தியாசமாக இருந்தது.

 

வட்ட வடிவில், விட்டம் இரண்டடி இருக்கும் அளவு பெரியதாக செய்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருந்தார்கள். பார்க்கவே அழகாக இருந்தது - சுவை குறித்து நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை - ஏனெனில் நான் சுவைக்கவில்லை. அதுவும் கிலோ கணக்கில் விற்கிறார்கள். திறந்த வெளியில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள் என்பதால் வாங்கி சுவைக்க மனதுக்கு ஒப்பவில்லை. பார்த்து ரசித்ததோடு, அலைபேசியில் ஒரு படம் எடுத்துக் கொண்டதோடு சரி! 

 

கூடவே பூசணிக்காயில் செய்யப்படும் pபேdடாவும் குவித்து வைத்து இருக்கிறார்கள். அயோத்யா ஜி செல்லும்போது நகர் எங்கும் இப்படியான இனிப்புகள் விற்கும் தள்ளுவண்டிகளை பார்க்க முடிந்தது. கடைகளை  நடத்தும் மனிதர்களின் உழைப்பு பாராட்டத்தக்கது தானே! எத்தனை எத்தனை மனிதர்கள், ஒவ்வொருவருக்கும் எத்தனை விதமான பிழைப்புகள்...... உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். நிச்சயம் முன்னேற முடியும்.... அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்காமல் இருக்கும் இந்த நல்ல உழைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். அயோத்யா ஜி குறித்த மேலும் பல தகவல்கள் வரும் பதிவுகளில் வரும். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

10 கருத்துகள்:

  1. ஆஹா..   எனக்கு யாரும் அந்த லஸ்ஸி பற்றி சொல்லவில்லையே...    மறுபடி எப்போது சென்று ருசிப்பது!

    தசரதன் மாளிகை பார்த்திருப்பேன்.  எட்டு வருடங்களாயின...  சரியாய் நினைவில்லை!

    பதிலளிநீக்கு
  2. அயோத்யா தகவல் அருமை. அலஹாபாத், அயோத்யா, ப்ருந்தாவனில் லஸ்ஸி ருசித்திருக்கிறேன். 40ரூ. வடநாட்டில் நன்றாக இருக்கும்.

    இராமர் விளையாடியது.....அந்த அந்த மண்ணை (அயோத்யாவை, மதுராவை, கோகுலத்தை) மிதித்தாலே போதுமானது. குறிப்பிட்ட இடம் என்பது அறுதியிடக் கடினம்

    பதிலளிநீக்கு
  3. //ஜெய் ஸ்ரீராம்!” ஒலி கேட்ட வண்ணமே இருக்கிறது. இராமபிரானின் மீது அலாதி அன்பினை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அந்த சூழல் நம்மையும் அதில் ஈடுபாடு கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து நாங்களும் பக்தியில் திளைத்தோம். //

    அருமை.
    ஜெய் ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  4. வாழ்க்கை பற்றிய வாசகத்தை டிட்டோ செய்கிறேன். அருமையான வாசகம் நான் அடிக்கடி என் மகனிடம் என் தங்கை மகளிடமும் சொல்வதும் இதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஹை நானும் இப்படியான லஸ்ஸி குடித்திருக்கிறேனே!!! ஆனால் அயோத்தியா ஜியில் இல்லை. தங்கை வீட்டுக்குப் போயிருந்தப்ப அங்கு ஒரு கடையில் லஸ்ஸி நல்லாருக்கும்னு கூட்டிச் சென்றாள் ஆனால் எனக்கு ஸ்வீட்டே!!! கொஞ்சம் சுவைத்துவிட்டு தங்கையிடம் கொடுக்க மனமில்லாமல் கொடுத்துவிட்டேன் போன இடத்துல பிரச்சனை வேண்டாமேன்னு....கால் கப் குடித்ததுக்கே கொஞ்சம் கூடுதலாக வொர்க் அவுட் செய்தேன் என்பது வேறு விஷயம்!!! ஹிஹிஹி. அப்புறம் அவள் சொன்னாள் இப்படித்தான் செய்முறைன்னு அதன் பின் இங்கு வந்தப்ப வீட்டிலும் செய்தேன். வீட்டில் ஸ்வீட் பிரியர்கள் எல்லாருக்கும் ரொம்பப் பிடித்தது.....என்றாலும் வட இந்திய தயிர் மற்றும் பால் பொருட்கள் சுவை கொஞ்சம் வித்தியாசம், மற்றும் நல்ல சுவை என்றே சொல்லலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அயோத்யா ஜி நகரில் இருந்த இரண்டு நாட்களும் அங்கே லஸ்ஸி குடித்தோம் என்பதை இங்கே சொல்வதில் இருந்தே சுவை உங்களுக்கு புரியும். அயோத்யா ஜி சென்றால் நீங்களும் இப்படியான லஸ்ஸி அருந்தி மகிழலாம்! //

    ஆமாம், புரிகிறது. குறித்துக் கொண்டுவிட்டேன்!!!! செல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகச் சுவைத்திட வேண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. லஸ்ஸி எனக்கு பிடித்தமானது
    படங்கள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  8. அந்த காலத்தில் எப்படி இருந்ததோ என்பது நமக்குத் தெரியாது - ஆனால் தற்போது இருக்கும் மாளிகையில் இராமபிரானுக்கு கோவில் போல அமைந்திருக்கிறது. //

    மஹல் படங்கள் பார்த்ததும் என் மனதில் இப்படித்தான் தோன்றியது. அந்தக்காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று மனம் கற்பனையில் விரிந்தது ராமாயணத்துடன்....

    //அந்த சூழல் நம்மையும் அதில் ஈடுபாடு கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து நாங்களும் பக்தியில் திளைத்தோம். //

    ஆமாம் அப்படியான சூழல் கண்டிப்பாக நம்மையும் ஆட்கொண்டுவிடும்...

    வட இந்தியாவில் இனிப்புகள் அதிகம் இப்போது இங்கும் வந்துவிட்டதே. எங்கு பார்க்கிலும் வட இந்தியப் பெயர்களில் இனிப்புகள் கடைகள்....இந்த ஊர்க் கடைகளும் தான் கூடவே போளி கடைகளும்.

    அயோத்தியா ஜி பார்க்கும் ஆவல் எனக்கு எப்பவுமே உண்டு. வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அயோத்தியா தசரதன்மாளிகை' கண்டோம் ''ஜெய் ஸ்ரீராம்' ஒலித்தவண்ணம் '' நாமும் வணங்குவோம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....