வியாழன், 5 ஜனவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

A MAN WHO IS MASTER OF PATIENCE IS A MASTER OF EVERYTHING.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு.

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்



சரயு நதிக்கரை….

 

நீம்சர் எனும் நைமிசாரண்யத்திலிருந்து சாதாரண பேருந்தில் புறப்பட்டு லக்னோ வந்து சேர்ந்து, இறங்கிய உடன் எங்களுக்கு அடுத்த நதிக்கரை நோக்கிச் செல்ல தேவையான பேருந்து கிடைத்தது.  Gகோரக்பூர் வரை செல்லும் வோல்வோ பேருந்தில் ஏறி அடுத்த நதிக்கரை நகரம் - அதாவது சரயு நதிக்கரையில் அமைந்திருக்கும், அயோத்யாஜி என மரியாதையாக அழைக்கப்படும் அயோத்யா நகர் நோக்கிய பயணத்தினை தொடங்கினோம்.  லக்னோவிலிருந்து அயோத்யாஜி வரை சுமார் 135 கிலோமீட்டர் தொலைவு.  வோல்வோ பேருந்தில் ஒருவருக்கு 280 ரூபாய் கட்டணம். மூன்று பேருக்குமான கட்டணத்தினைக் கொடுத்து பயணச் சீட்டுகளை வாங்கிக் கொண்டு இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.  லக்னோவிலிருந்து புறப்பட்ட பிறகு வழியில் பேருந்து எங்கேயும் நிற்கவில்லை.  அயோத்யாஜி வந்தவுடன் அடுத்த பேருந்து தயாராக இருந்தது என்பதால் அதிகம் தொல்லையில்லை. 

 

பேருந்து புறப்பட்டுவிடுவதற்குள் இயற்கை அழைப்பை கவனித்துவிடலாம் என்று செல்ல, எல்லா ஊர்களைப் போல லக்னோ நகரிலும் மஹா மோசமான கழிவறை! மூக்கை மூடிக்கொண்டு அவசர கதியில் வேலையை முடித்து விட்டு ஓடி வர, பேருந்து நடத்துனர் என்னை அவசரப் படுத்தினார் - சீக்கிரம் வாய்யா! உனக்காக வண்டி நிறுத்தி வைக்கணுமா என்ன?”  பேருந்தின் பின் பகுதியில் தான் எங்களுக்கு இருக்கைகள் கிடைத்தன என்றாலும் குளிரூட்டப்பட்ட வோல்வோ பேருந்து என்பதால் வசதியாகவே இருந்தது.  கடைசி சில இருக்கைகள் காலியாகவும் இருந்தன.  வழியில் சில இடங்களில் பேருந்தினை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொள்வதும் இறக்கிவிடுவதுமாக பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.  எந்த வித ஸ்வாரஸ்ய தகவல்களும் இல்லாத பயணம் - ஒரே ஒரு விஷயம் தவிர! பேருந்தின் முன்புறம் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் பேருந்தின் கடைசி சீட்டிற்கு வந்து அமர்ந்தார் - என்னடா காரணம் என்று பார்த்தபோது, குளிரூட்டப்பட்ட அந்த பேருந்தில் சிகரெட் பிடிப்பதற்காக வந்தாராம்! கொஞ்சம் கோபத்துடன் அவரை மிரட்டி சிகரெட் பிடிக்கக் கூடாது என அவருடைய இருக்கைக்கு அனுப்பி வைத்தேன்! 

 

ஒரு வழியாக ஃபைசாபாத் கடந்து அயோத்யாஜி நகருக்கு வெளியே இருக்கும் சாலையில் இறங்கிக் கொண்டும்.  பேருந்து Gகோரக்பூர் வரை செல்வதால் அயோத்யாஜி நகரின் உள்ளே இருக்கும் பேருந்து நிலையம் வரை செல்லவில்லை. ஊருக்கு வெளியே என்பதால் அங்கிருந்து ஏதாவது ஒரு வாகனத்தினை அமர்த்திக் கொண்டு ஊருக்குள் செல்ல வேண்டும். ஒன்றிரண்டு ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டபோது ஊருக்குள் செல்ல அவர்கள் தயாராக இல்லை.  சில நிமிடங்களுக்குப் பிறகு ஒருவர் கிடைத்தார்.  ஊருக்குள் செல்வதற்கான கட்டணத்தினை பேசிக் கொண்ட பிறகு அவரது ஷேர் ஆட்டோவில் அமர்ந்து கொண்டோம்.  நகரமெங்கும் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.  பல இடங்களில் குழி தோண்டி வைத்திருக்கிறார்கள்.  அதனால் பல இடங்களில் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டியிருந்தது.  எங்களுக்கு அமைந்த ஓட்டுனர் நிறைய பேசுபவராக இருந்தார் - அதுவும் தேவையில்லாமல் பேசிக் கொண்டே வந்தார். 



நாங்கள் தங்கிய இடம்....

 

நாங்கள் பயணம் செய்ய திட்டமிட்டபோது அயோத்யாஜி நகரில் தங்குவதற்கான முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளவில்லை. அங்கே சென்ற பிறகு தங்குமிடம் போன்றவற்றை முடிவு செய்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம்.  அது ஒரு விதத்தில் எங்களுக்கு கடினமான அனுபவத்தினைக் கொடுத்தது.  ஷேர் ஆட்டோ ஓட்டுனர் அழைத்துச் சென்ற எந்த தங்குமிடமும் எங்களுக்குப் பிடிக்கவில்லை.  நேரம் கடந்து கொண்டே இருக்க, காலையிலிருந்து உணவு உண்ணாமல் இருந்ததும் எங்களுக்கு பசியை உண்டாக்கியது.  கடைசியில் கிடைத்த ஒரு தங்குமிடத்தில் இரண்டு அறைகளை எடுத்துக் கொண்டோம். Hotel ORS Residency என்று ஒரு தங்குமிடம் அது. அறை வாடகை ஆயிரத்திற்குள் தான்.  வசூல் ராஜா MBBS படத்தில் சொல்வது போல உள்ளே நுழைந்தவுடன் முடிந்து விட்டது போல இருந்தது அந்த தங்குமறை. அயோத்யாஜி நகரிலும் நாங்கள் இருக்கப் போவது ஒரு இரவு மட்டுமே என்பதால் அதிகம் யோசிக்காமல் அங்கே தங்குவது என முடிவு செய்தோம்.

 

வசதியான தங்குமிடம் என்று சொல்ல முடியாது. அதுவும் நாங்கள் சென்ற சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆரம்பித்திருப்பார்கள் என்று தோன்றியது.  நிறைய இடங்களில் கட்டுமானப்பணிகள் நடப்பதற்கான அறிகுறிகள் இருந்தது.  குறிப்பாக மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் பக்கவாட்டில் பிடிகள் இல்லை! சற்றே தடுமாறினாலும் கீழே விழும் ஆபத்து இருந்தது! எனினும் மேலும் அலைந்து தேடும் நிலையில் நாங்கள் இல்லை. அதனால் அங்கே இரண்டு அறைகள் எடுத்து எங்கள் உடைமைகளை வைத்து விட்டு மதிய உணவு சாப்பிட வெளியே சென்றோம்.  வெளியே சென்று என்ன சாப்பிட்டோம், வேறு எங்கே சென்றோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

18 கருத்துகள்:

  1. அயோத்யாவில் எங்களுக்கு ஜெயலட்சுமி ட்ராவல்ஸ் காரர்கள் ஏற்பாடு செய்திருந்த இடம் வசதியான இடமாகவே இருந்தது.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ட்ராவல்ஸ் நபர் ஏற்பாடு செய்த இடம் எது என்றும் சொல்லி இருக்கலாம் - யாருக்கேனும் பயன்படலாம் ஸ்ரீராம். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  2. பயணவிவரங்கள் அருமை. தங்குமிடம் பார்க்க நன்றாக இருக்கிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதி அம்மா.

      நீக்கு
  3. நானும் தொடர்ந்து பயணிக்கிறேன் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  4. இது போன்ற வித்யாசமான மனிதர்களும் அசவுகரியங்களும் நிறைந்ததுதான் பயணம் எனவும் புரிய வைத்துள்ளீர்கள்.
    குளிர்சாதனப் பேருந்தில் சிகிரெட் பிடித்தால் மிகவும் கஶ்டமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  5. அயோத்தியாவைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருப்பதற்கு நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருப்பதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. வாசகம் மிக அருமை. ஆனால் அந்தப் பொறுமைதான் சில சமயங்களில் ஒளிந்து கொண்டுவிடுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  8. பயண விவரங்கள் அருமை. அட! வெங்கட்ஜி கூட கோபத்தில் மிரட்டியிருக்காரே!!!

    எனக்கும் கோபம் வந்துவிடும் அருகில் வந்து பிடித்தால் சொல்லிவிடுவதுண்டு. பொது இடமாக இருந்தாலும் கூட!

    ஆமாம்!! ஓர் இரவுதானே என்று நாங்களும் சில சமயம் ரொம்ப ஆலோசிப்பதில்லை. கிடைத்த இடத்தில் தங்கிவிடுவதுண்டு.

    நாம் இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும் போது இப்படி அவசரப்படுத்தும் நிகழ்வும் உண்டு பேருந்து போய்விடக் கூடாதே என்று டக்டக்கென்று போய் வருவது ரொம்ப கஷ்டம்...

    பயண விவரங்கள் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் விரிவான கருத்துரைக்கு நன்றி கீதா ஜி. சில சமயங்களில் கடுமையாகவும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

      நீக்கு
  9. இனிய பயணத்தில் பல சிரமங்களும் கூட வந்து விடுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரமங்களும் இல்லாமல் எந்த பயணமும் இல்லை…. தங்கள் கருத்திற்கு நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....