வெள்ளி, 20 ஜனவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பதினாறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட தஸ்ரத் மஹல் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

HOW MUCH YOU ACHIEVE IN LIFE IS NOT AS IMPORTANT AS HOW MUCH YOU ENJOY EACH MOMENT OF LIFE. 

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பதினாறு



 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

பதினாறாம் விதி சொல்வது, "இல்லாமையால் உன் மதிப்பையும் மரியாதையையும் உயர்த்திக்கொள்". 

 

மூல நூலில், இதை "USE ABSENCE TO INCREASE RESPECT AND HONOR" என்கிறார் எழுத்தாளர். 

 

ஆறாம் விதியில், மக்கள் கவன ஈர்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள நம் தொடர் இருப்புணர்வை வலியுறுத்திய எழுத்தாளர், இங்கே ஏன் தலை கீழான ஆலோசனையை வழங்குகிறார் எனும் கேள்வி எழுவது மிக நியாயமானதே. 

 

மேலும், நாம் தேவைப்படும் இடத்திலோ, நேரத்திலோ, இல்லாமல் போய்விட்டால், மாற்று நபர்களால் அவ்வேலைகள் முடிக்கப்பட்டு நாம் முற்றிலுமாக மறக்கப்படுவோமே! என அஞ்சுவதும் இயல்பே. 

 

இந்நூலின் விதி ஒவ்வொன்றும், ஒவ்வொரு தனிப்பட்ட சூழலுக்குச் சிறப்பாகப் பொருந்துபவை என்பதையும், எவ்விதியை எங்கனம் எச்சூழலில் பொருத்துவது எனும் புரிதலிலேயே, வலிமைக்கான சாரம் ஒளிந்துள்ளது என்பதையும் நாம் நன்கு அறிவோம். 

 

ஒரு துறையிலோ, நிறுவனத்திலோ, தனிநபர் உறவுகளிலோ, நல்ல முறையில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர் மட்டுமே இவ்விதியை உப்யோகிப்பது மிகவும் பயன் தரும். 

 

இச்சூழலில், நம்மை மிக அரிதானவர்களாகவும், எளிதில் அணுக முடியாதவர்களாகவும் மாற்றிக்கொள்ளுதலே, நம் மதிப்பை பெருக்கவல்லது. 

 

சூரிய வெப்பம் அதிகம் விழும் இந்தியப்பகுதிகளில் பெரும்பாலும் பாமரர்களால் வெறுக்கப்படுகிறது. 

 

அதே சூரியன் அரிதாக விழும் இங்கிலாந்தில், அதன் வெப்பத்தை அனுபவிப்பதற்காகவே கிரிக்கெட் எனும் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது. 

 

தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற உலோகங்களின் உயர் மதிப்பிற்குமான காரணம், அவற்றின் அரிதாகக் கிடைக்கும் இயல்பே ஆகும். 

 

இவ்விதி, மனிதர்களால் எவ்வாறு சிறப்பாக உபயோகிக்கப்படுகிறது என்பதை சில உதாரணங்களால் புரிந்து கொள்ளலாமா?

 

அமேசான், ஃப்ளிப் கார்டு போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள், தம் தயாரிப்புகள் மீதான சலுகை விலைகளை திடிரென அறிவித்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துவர். 

 

ஒன்று, சலுகையின் கால அவகாசம் குறைவாக இருக்கும். 

 

அல்லது, பொருள் விரைவில் விற்றுத் தீரும் நிலையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளப்படும்.  

இது வாடிக்கையாளர் மனதில் உடனே வாங்கவேண்டும் எனும் அவசர உணர்வை ஏற்படுத்தும். 

 

நம் தேசப்பிதா, மஹாத்மா அவர்களின் அஹிம்சை போராட்டங்களின் பெரு வெற்றிக்கும் பின்னால் இவ்விதி செயல்பட்டிருப்பது என்னைப் பெரும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. 

 

அவர் வாழ்வைப் படிக்கையில், அவர் சூழலுக்கேற்ப அவ்வப்போது ஒரு சிறந்த போராட்ட முறையை அறிவித்திருந்ததைக் காணலாம். 

 

அது மெள்ளமெள்ள வீரியமடைந்து வன்முறையாக பரிணாமிக்கத் தொடங்கினால், உடனே ஒத்துழையாமை இயக்கத்தில் செய்தது போல் போராட்டத்தை நிறுத்திவிடுவார். 

 

அதனால், வன்முறையைத் தொடங்கியவர்கள் மிகவும் குற்ற உணர்வை அடைந்து, இனி அவர் சொல்வதை தெளிவாகப் பின்பற்றுவதாக உறுதி கொள்வர். 

 

அடுத்த சில மாதங்களோ, ஆண்டுகளோ உருவாகும் இவ்விதிப்படியான இடைவெளி, மக்களின் எதிர்பார்ப்பையும் அவர் மீதான ஏக்கத்தையும் பன்மடங்கு பெருக்கும். 

 

பின் அவர் அறிவிக்கும் போராட்டத்திற்கு, முன்பை விட பெரும் வெகுஜன ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். 

 

இப்படித்தான், தொடர் உரையாடல்களாலும், சிறு சிறு இடைவெளிகளாலுமே, நம் விடுதலைப் போராட்டத்தை, உலகம் வியக்கும் வண்ணம் மஹாத்மா அவர்கள் நிகழ்த்திக் காட்டினார். 

 

இதுபோல, நம் நேரத்தின் அருமையை, நம்மைப் போல் பிறரும் உணரச் செய்யவேண்டிய சில கால கட்டங்களில், இவ்விதி சிறப்பாகப் பயன்படும் என்பதை புரிந்துகொள்ளலாம். 

 

எங்கும், ஆரம்பகட்டத்தில் இருப்பவர், இவ்விதியை உபயோகித்தால் அவர் மறக்கப்பட்டு பெரும் பின்னடைவைச் சந்திப்பார் என்பதை மனதில் கொள்வோம். 

 

மேலும்,  பிரம்மாஸ்திரம் போல மிக அரிதாகவே இவ்விதி உபயோகிக்கப்பட வேண்டும் என்பதையும் மனதில் பதியவைத்துக்கொள்வோம். 

 

எந்த அளவு இதை உபயோகித்து, எங்கே நம் இருப்புணர்வால் பிறர் கவன ஈர்ப்பை  மீண்டும் இழுக்கவேண்டும் எனும் தெளிவான புரிதல், பெரும் ஆளுமைகளின் செயல்களை உட்கிரகிப்பதின் மூலமே நமக்குக் கிடைக்கும். 

 

இத்தகையோர், தாம் இல்லாத இடங்களிலும், தம்மைக் குறித்தே அனைவரையும் சிந்திக்குமாறு செய்யக் கையாளும் மிக சுவாரசியமான உத்தி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

12 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது போல ஒவ்வொரு விதியும் ஒவ்வொரு தனிச் சூழலுக்குப் பொருந்தக்கூடியவை,  சில விதிகள் பின்பற்றுவது கடினம், அல்லது நம் இருப்பில், நம் பார்வையில் சரிவராது போன்றவை.  நீங்கள் ஒவ்வொரு விதியையும் ஆராய்ந்து அதற்கேற்ற உதாரணங்களைத் நேரம் செலவு செய்து, சிந்தித்து தேடிப்பிடிப்பது சிறப்பு.  இன்றைய மகாத்மா உதாரணம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. கிரிக்கெட் கண்டுபிடித்ததின் காரணம் அறிந்து கொண்டேன்.

    அதன் பின்னால் நாமும் அடிமையானது காலக்கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சார்.
      நம் பாரம்பரிய விளையாட்டுகள் மறக்கப்பட்டுவிட்டன, கணினி சார் விளையாட்டுகளும் சூதாட்டமுமே பெருகியிருப்பது வேதனையானது.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஆம் சர். அவரவர் மனமே அவரை சிறப்பாக வழிநடத்த முடியும்.
      ததங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  4. இந்த விதியை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்க சொல்லியிருப்பது போல் மிகக் கவனமாகக் கையாள வேண்டும். ஒரே அடியா நம் இருப்பைக் காட்டிக்கலைனாலும் நம்மை மறந்தே போய்டுவாங்க...இல்லைனா நாம அந்த அளவுக்கு நம் முக்கியத்துவத்தை நிலைநாட்டியிருக்க வேண்டும்!!!!

    உறவில் கூட ஒரு விசேஷம் வருதுன்னு வைங்க, "அவங்க வருவாங்களா?" ன்னு யாரேனும் கேட்டா, அதுக்கு விசேஷம் நடத்துறவங்க சொல்வதை நீங்களும் கேட்டிருப்பீங்க....அவங்க இல்லாமலா? அப்படின்னு....அதே நபர் வரமுடியாம வரலைனா, "அவங்க வந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் இடமே கல கலன்னு இருந்த்ருக்கும் ஒவ்வொண்ணையும் அவ்வளவு பாந்தமா, ஆர்கனைஸ்டா செஞ்சிருப்பாங்க அட்வைஸ் கொடுத்திருப்பாங்க....ரொம்ப கஷ்டமா போச்சுன்னு....ரொம்ப மிஸ் பண்ணறோம்ன்னு" இப்படியானவை அந்த நபரின் முக்கியத்துவத்தை உரைப்பது. எங்க வீட்டுல அப்படி முக்கியத்துவம் பெற்றவங்க எல்லாம் இப்ப இருப்பைக் காட்ட முடியாத இடத்துல இருக்காங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம். தங்கள் வாழ்வோடு பொருந்திய அணுபவங்களைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  5. திண்டுக்கல்லாலை வழிமொழிகின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐய்யா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....