புதன், 15 பிப்ரவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறைபதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

NO ONE GETS A SUDDEN RISE; NOT EVEN THE SUN; IT TAKES TIME TO RISE TO THE PEAK. JUST KEEP YOUR EFFORTS GOING AND BE POSITIVE.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி ஏழு


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

இருபத்தி  ஏழாம் விதி சொல்வது, "சமூகத்தின் தேவைக்கேற்ப, ஒரு வழிபடப்படுபவனாக ஒளிர்விடு".

 

மூல நூலில், இதை "PLAY ON PEOPLE'S NEED TO BELIEVE TO CREATE A CULT LIKE FOLLOWING" என்கிறார் எழுத்தாளர்.

 

இவ்வுலகில் நாம் ஏன் பிறந்தோம்? எங்கிருந்து வந்தோம்? இறப்பிற்குப் பின் எங்கே போவோம்? போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில் எங்கும் இல்லை.

 

இக்கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்தல் அசாத்தியம் என்றபோதிலும், நம் வாழ்விற்கான ஒரு பொருளை, ஒரு கொள்கை வடிவில் அளிப்பவரை முழுவதுமாக நம்பி பின்தொடர ஒரு பெரும் மக்கள் திறளே காத்திருக்கிறது.

 

இதைத் தெளிவாகப் புரிந்து, மக்களைத் தவறான திசையில் வழிநடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

 

அவர்களுள், நேர்மையான எண்ணத்துடன், மக்கள் பின்தொடரக்கூடிய ஒரு நம்பிக்கையான கொள்கையை உருவாக்கிவிட்டோம் என்றால், நமக்கான ரசிகர் கூட்டம் பெருகுவதோடு, நம் வலிமையும் பன்மடங்கு பெருகுவது உறுதி.

 

இங்கனம், ஒரு வழிபாட்டிற்குரியவனாக நம்மை மாற்றுவதற்காக நூல் கூறும் ஐந்து படிநிலைகளை அறிந்துகொள்ளலாமா?

 

1. பேச்சை எளிமையாகவும், மக்களின் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடும்  வண்ணமும் அமைத்துக்கொள்:

 

பேச்சில் உள்ள எளிமையும் உத்வேகமும், நம்மை ஒரு நெருங்கிய நண்பனாகக் கருத இடம் கொடுக்கும்.

 

அதே நேரத்தில், உபயோகிக்கும் சொற்களில் மேலும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்திருக்குமோ என்னும் ஐயத்தை உருவாக்கும் அம்சங்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

 

இது குறித்து நான்காம் விதி குறித்த விவாதத்திலேயே விரிவாக உதாரணங்களுடன் பார்த்திருக்கிறோம்.

 

2. உரையாடல்களை காட்சிப்பூர்வமாகவும், பகுத்தறிவிற்குப் புறம்பான எளிய உணர்ச்சிகளைத் தூண்டும் வண்ணமும் அமைத்துக்கொள்:

 

டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய திரு எலான் மஸ்க் அவர்கள், மக்கள் ஆதரவைத் திரட்ட, அனைவருக்குமான கட்டற்ற பேச்சுரிமையை வழங்குவதாக வாக்களித்தார்.

 

கட்டுப்பாடற்ற பேச்சுரிமையை, பெரிய ஆளுமைகள் இருக்கும் ஒரு தளத்தில் உருவாக்குவதில் உள்ள அபாயங்கள் குறித்து எவரும் சிந்திக்க இடமே இல்லாதவாறு அவருடைய தொடர் பிரச்சாரங்கள் இருந்தன.

 

3. மத அமைப்புகளைப் போல் உன் குழுவை வடிவமைத்துக் கொள்:

 

காலம்காலமாக, கோடிக்கணக்கான மக்களை ஒருங்கிணைப்பதில், மதம் ஆற்றிய பங்கை எவராலும் மறுக்கமுடியாது.

 

மத அமைப்பில் உள்ளதைப் போல்,  சடங்குகள், கவர்ச்சிகரமான மேற்கோள்கள், அதிகாரப் படிநிலைகள் உள்ளிட்டவற்றை நம் அமைப்பிலும் உருவாக்கிவிட்டால், கேள்விக்கு அப்பாற்பட்டதாக நம் இயக்கம் மாறிவிடும்.

 

இதைத்தான், இன்றைய பல அரசியல் கட்சிகளிலும், தொழிலாளர் சங்கங்களிலும் பரவலாகக் காண்கிறோம்.

 

4. உன் வருமானத்தின் மூல ஆதாரங்களை மறைத்துக்கொள்:

 

நாம் வெளிப்படையாகப் பணத்தின் மீது ஆசையே அற்றவர்களாகவும், பணம் தானாகவே அன்பளிப்புகளாகக் குவிவது போலவும் காட்டிக்கொண்டால், நம்முடன் இணைந்திருந்தாலேயே அனைத்து நன்மைகளும் வந்து சேர்வதாக மக்கள் நம்பத் தொடங்கிவிடுவர்.

 

பிறகு, அவர்களால்தான் நமக்கு எல்லா பலன்களும் கிடைக்கிறது என்பதையே மறந்து, நமக்காகப் பணியாற்றும் அதிசயம் நிகழ்வதைக் கண்டு வியக்கலாம்.

 

5. ஒரு பொது எதிரியை உருவாக்கு:

 

பெருவாரியான மனிதர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களை உத்வேகமாகச் செயல்பட வைக்கவும், ஒரு பொது எதிரியை உருவாக்குவதையே பல ஆளுமைகள் வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.

 

ஒரு தனி நபரை எதிரியாகக் காட்டுவதை விட, ஒரு பெரும் கொள்கையையோ, அத்தகைய கொள்கையைப் பின்பற்றும் கூட்டத்தினரையோ எதிரியாகக் கட்டமைப்பவர் பெரும் வெற்றிபெறுவது உறுதி.

 

1960 களின் இறுதி முதல், தம் கட்சியை ஒருங்கிணைத்து ஆட்சியை நிலைநிறுத்த, திருமதி இந்திராகாந்தி அவர்கள், தம்மை வறுமைக்கு எதிரானவராகவும், முதலாளித்துவ சுரண்டலிலிருந்து மக்களைக் காப்பவராகவும் வடிவமைத்துக்கொண்டார்.

 

அதற்கு மாறாக, அவரைத் தனிப்பட்ட முறையில் எதிரியாக்க முனைந்த எதிர்க்கட்சிகளின் பாடு மிகவும் திண்டாட்டமாகவே இருந்தது.

 

தொழில் துறையில், ஒரு எதிரியை உருவாக்குவதற்குப் பதிலாக, ஆக்கப்பூர்வமான தினசரி வியாபார இலக்குகளை உருவாக்கி, அதை நோக்கி பணியாளர்களை உத்வேகமாகச் செலுத்துவதை இன்று காணமுடிகிறது.

 

இது ஒரு ஆக்கப்பூர்வமான நடைமுறை என்றபோதிலும், தலைமைப் பதவிகளைப் பிடிக்க, நூல் காட்டும் மேற்கூறிய அரசியல் படிநிலை வழிகளே கைகொள்ளப்படுவதைக் காணலாம்.

 

மேற்கூறப்பட்ட வழிகளைத் தீய நோக்கத்துடன் பயன்படுத்துபவர், குறுகிய காலத்தில் வெற்றி பெற்றாலும், நீண்டகால அடிப்படையில் பல எதிரிகளைச் சம்பாரித்து அழிந்ததாகவே வரலாறு மீண்டும் மீண்டும் சொல்கிறது.

 

எனவே, ஒரு உயரிய நோக்கத்துடன் இவ்வுத்திகளை உபயோகித்தலே, நீண்டகால அடிப்படையிலான வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் வழிகோலும் என்பதை மனதில் கொள்வோம்.

 

சிக்கல் மிகுந்த இவ்விதி கூறும் உத்திகளைக் கையாளும் சமயங்களில், அவ்வப்போது ஏற்படும் குழப்பங்களையும், அச்சத்தையும் வெல்வதற்கான சிறந்த வழி ஒன்றை அடுத்த விதியில் அறிந்துகொள்ளலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

12 கருத்துகள்:

  1. கிட்டத்தட்ட பிரபலங்கள் யாவரும் தங்களை அறியாமலேயே பின்பற்றும் விதி இது என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. ஒப்புரவறிதல் அனைவரும் செய்ய வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான குறட்பகுதியை மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.

      நீக்கு
  3. சிறப்பான ஆய்வு தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  4. 'நம்பிக்கையான கொள்கையை உருவாக்குதல் ' தொடர்வோம்....

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹா அரவிந்த் இந்த விதியை வாசித்ததும் அதுவும் அதற்கான சப் விதிகள் இருக்கன்றனவே 5 பாயின்ட் வாசித்ததும் நினைவுக்கு வந்தவங்க இவங்கதான்..அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களும்தான். அதுவும் 2, 4 ரொம்ப யதார்த்தம்....பொருத்தம்....பல பிரபலங்களும், கட்டிடம் கார் எல்லாம் வைத்துக் கொண்டு கூட்டம் நடத்தும் ஆன்மீகவாதிகள் உட்பட

    முதல் பாயின்டில்
    //அதே நேரத்தில், உபயோகிக்கும் சொற்களில் மேலும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்திருக்குமோ என்னும் ஐயத்தை உருவாக்கும் அம்சங்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.//

    இதுக்கு ஒரு சிறந்த உதாரண ஆள் நினைவுக்கு வருகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  6. பதிவிற்கு நன்றி. இது போன்ற விதிகளை நானும் பின்பற்ற முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர் வாசிப்பிற்கும், விதிகளின் சாரத்தை வாழ்வோடு பொருத்த முயல்வதற்கும் மிக்க நன்றி குமார் ராஜசேகர் ஐய்யா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....