செவ்வாய், 21 மார்ச், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி முப்பத்தி ஏழு - வாரணாசி - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"MANY OF LIFE’S FAILURES ARE PEOPLE WHO DID NOT REALISE HOW CLOSE THEY WERE TO SUCCESS WHEN THEY GAVE UP." – THOMAS A. EDISON.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்

 

பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்



 

காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் இன்னுமொரு கோவில் மா அன்னபூரணி கோவில்.  உலகத்திற்கே படியளக்கும் அன்னை அவள்.  காசி மாநகருக்கு வரும் பல பக்தர்கள் மட்டுமன்றி யாரும் இல்லாத பல காசி வாசிகளுக்கும் கூட தினம் தினம் உணவளிக்கும் அன்னை இந்த அன்னபூரணி.  வாரணாசி என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? காசி விஸ்வநாதர் கோவில், காசி விசாலாட்சி கோவில் மற்றும் அன்னபூரணி கோவில்! எங்களுடைய இந்தப் பயணத்தில் அன்னபூரணி கோவில் சென்றபோது, மா அன்னபூரணியின் மிக அருகில் சில நிமிடங்கள் நிற்க முடிந்தது.  பொதுவாக இந்தக் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் தான். நாங்கள் சென்றபோதும் அப்படியே! ஆனாலும் கோவில் வளாகத்தில் நின்று நிதானித்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்ய முடிந்தது. ஒவ்வொரு முறையும் அன்னபூரணி கோயில் செல்லும் போதும் அங்கே இருக்கும் பூஜாரி வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னையின் பிரசாதமாக கொஞ்சம் அரிசி தருவது வழக்கம்.  இந்த முறையும் எங்களுக்குக் கிடைத்தது.  பொதுவாக இந்த மாதிரி கிடைக்கும் அரிசி பிரசாதத்தினை ஒரு பொட்டலமாக  மடித்து, நம் வீட்டில் இருக்கும் அரிசி பானையில் (பாத்திரத்தில்) சேர்த்து விடுவது வழக்கம்.  எப்போதும் நமக்கு அன்னையின் அன்னபூரணியின் பூரண அருளால் உணவுக்குப் பஞ்சமிருக்காது என்று ஒரு நம்பிக்கை. 



 

கி.பி 1729 ஆம் ஆண்டில் மராட்டிய பேஷ்வா பாஜி ராவ் என்பவரால் தற்போது இருக்கும் கோயில் கட்டப்பட்டது. இந்து மதத்தில் அதிக மத முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயில் அன்னபூர்ணா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அன்னபூரணி தேவியை உணவு தெய்வம் அல்லது ஊட்டச்சத்தின் தெய்வம். பார்வதி தேவி சிவனுக்கு தானம் செய்ததாக நம்பப்படுகிறது, மேலும் அவள் ஒரு கையில் ஒரு கிண்ணம் மற்றும் மறு கையில் லட்டுகளுடன், சிவனுக்கு உணவு பரிமாறுவது, சிவபெருமான் கையில் பிச்சை கிண்ணத்துடன் அவள் முன் நிற்பது போன்ற காட்சிகள் கோயில் வளாகத்தில் சித்திரங்களாக உண்டு. வாரணாசியின் தேவியான மாதா அன்னபூர்ணா, காசியை எப்போதும் பாதுகாத்து தனது பக்தர்களுக்கு உணவளிக்கிறார் என்பதும் நம்பிக்கை. புராணக்கதைகளின்படி, மாதா பார்வதி சிவபெருமானின் மூன்று கண்களையும் மூடியபோது உலகம் முழுவதும் இருண்டுவிட, மாதா பார்வதி தேவியும் தனது கௌரி ரூபத்தினை இழந்து விட்டாராம்.  தனது பழைய கௌரி ரூபத்தினை அடைய சிவபெருமானின் உதவியை நாடினார். சிவபெருமானின் ஆலோசனையின் பேரில், வாரணாசியில் அன்ன தானம் செய்ய மாதா அன்னபூர்ணா தேவி வடிவில் தங்க பானை மற்றும் லட்டுடன் வந்து அனைவருக்கும் அன்னதானம் செய்து மாதா பார்வதி மீண்டும் தனது கௌரி ரூபத்தினை அடைந்தார் என்பதும் நம்பிக்கை. 



 

இன்னுமொரு கதையும் இந்தக் கோவில் குறித்து/மாதா அன்னபூரணி குறித்து உண்டு.  அந்தக் கதை - ஒரு முறை சிவபெருமான் முழு உலகமும் (உணவு உட்பட) மாயை என்று கூறியபோது, பார்வதி தேவி மிகவும் கோபமடைந்தார். சிவபெருமானுக்கு உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பூமியில் உள்ள அனைத்து உணவுகளையும் மறைத்து விட, உலகமே பசியால் அவதிப்படத் தொடங்கினார்களாம்.  இறுதியாக சிவபெருமான் பார்வதி தேவியிடம் வந்து உணவின் முக்கியத்துவத்தை தாம் உணர்ந்து விட்டதாகச் சொல்ல, பார்வதி தேவி மகிழ்ந்து தன் கைகளாலேயே சிவபெருமானுக்கு உணவளித்ததோடு, வாரணாசியில் தனது பக்தர்களுக்காக சமையலறை அமைத்து இன்று வரை வரும் பக்தர்கள் அனைவருக்கும் உணவு அளிப்பதாக ஒரு நம்பிக்கை.  

 

அன்னபூர்ணா தேவியை பவானி தேவி என்றும் சிலர் அழைக்கிறார்கள். பக்தர்கள் சைத்ர மாதத்தில் சுக்ல பட்ச அஷ்டமியில் 108 முறை பவானி தேவியை [அன்னபூர்ணா] வலம் வர வேண்டும் என்று காசி காண்டத்தில் கூறி இருப்பதாக ஒரு தகவல். இதன் மூலம் மலைகள், கடல்கள், தெய்வீக ஆசிரமங்கள், முழு உலகையும் வலம் வந்த பலனை பக்தர்கள் பெறுவார்களாம். தினமும் எட்டு முறை வலம் வந்து அன்னபூரணியை வழிபட வேண்டும், பக்தர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அன்னபூர்ணா தேவியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும், காசியின் தடைகள் விலகும், என்றெல்லாம் காசி அன்னபூரணி தேவி குறித்த நம்பிக்கைகள் நிறையவே உண்டு.  கோவில் வளாகம்  தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  விரைவில்  காசி நகரில் பல இடங்கள் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

 

காசியில் தினம் தினம் பல பக்தர்களுக்கு உணவு அளிப்பது காசி அன்னபூரணி என்று சென்ற பத்தியில் சொன்னேன் அல்லவா? இதற்காகவே காசி அன்னபூர்ணா அன்னக்ஷேத்திரா ட்ரஸ்ட் என்பதை ஏற்படுத்தி, வருடம் முழுவதும், நாள் தவறாமல் ஆயிரக் கணக்கில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார்கள். கோவில் வளாகத்தின் அருகிலேயே இருக்கும் இந்த அன்னதானக் கூடத்தில் தையல் இலையில் சாதம், ஒரு கறி, மோர்க்குழம்பு, ரசம், தயிர், ஊறுகாய் என சுவையான உணவு – வயிறு குளிரச் செய்யும் உணவு அளிக்கிறார்கள். இந்தச் சேவையை பல வருடங்களாகச் செய்து வருகிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணமே இருக்க, ஒருவர் சாப்பிட்ட உடன் இடத்தினை துடைத்து அடுத்தவர்கள் அமர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.  தொடர்ந்து மக்கள் சாப்பிட்ட வண்ணமே இருக்கிறார்கள், சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றாலும் அதிகம் சுத்தம் பார்க்க நினைத்தால் இங்கே சாப்பிட முடியாது என்பதையும் சொல்லி விடுகிறேன்.  ஆனாலும் அன்னையின் பிரசாதம் என்பதால், காசி நகரில் இருக்கும் சமயத்தில் நிச்சயம் ஒரு நாளாவது இங்கே சாப்பிடலாம். 

 

அங்கே பணி புரியும் நபர்களைப் பார்க்கும்போது, மனதுக்குள் அவர்களது அயராத உழைப்பு குறித்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் வராமல் இல்லை. அன்னதானம் தானே என்று குறைவாகவோ, வருபவர்களைக் கடிந்து கொண்டோ அன்னம் பரிமாறுவதில்லை. தேவையான அளவு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிறிய இடம் என்றாலும் தொடர்ந்து பரிமாறிக் கொண்டே இருப்பது ரொம்பவே கடுமையான வேலை. சாப்பிட்ட பின்னர் இலையை நாமே எடுத்துக் கொண்டு போய் அதற்கான கூடையில் சேர்க்க வேண்டும். அந்த பிளாஸ்டிக் கூடைகள் தொடர்ந்து நிரம்ப, நிரம்ப அப்புறப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பதால் ஒரு மணி நேரத்திலேயே சுமார் 150 பேர் சாப்பிட்டு விடலாம். நாளொன்றுக்கு இத்தனை பேர் எனக் கணக்கு இல்லை! எத்தனை பேர் வந்தாலும் சாப்பாடு உண்டு! இந்தச் சேவையை செய்யும் மனிதர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

 

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வதுண்டு.  ஒவ்வொரு நாளும் பல பக்தர்களுக்கு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து அன்னதானம் அளிக்கும் விஷயம் நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம் தானே.  அன்னதானம் செய்யும் இந்த காசி அன்னபூர்ணா அன்னக்ஷேத்திரா ட்ரஸ்ட் பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுபவர்கள் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 

 

कशी अन्नपूर्णा अन्नक्षेत्र ट्रस्ट (KASHI ANNAPURNA ANNAKSHETRA TRUST)

 

சரி இங்கே சாப்பிட வேண்டாம் என்றால் இருக்கவே இருக்கிறது எண்ணிலடங்கா உணவகங்கள்.  காசி நகரில் பல கடைகள் சிறப்பான உணவுகளை - குறிப்பாக Foodies என்று சொல்லும் நபர்களுக்கு தருவதாக பல இணையதளங்கள் மற்றும் YOUTUBE தளங்கள் சொல்கின்றன.  நாங்களும் அப்படி சில இடங்களில் உணவு/சிற்றுண்டி என முயற்சித்தோம்.  அது குறித்தெல்லாம் பின்னர் ஒரு பதிவில் சொல்கிறேன்.  அதற்கு முன்னர் எங்களுக்கு கிடைத்த வேறு ஒரு அனுபவம் குறித்து சொல்ல வேண்டும் - அது அடுத்த பகுதியில்! பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன் நண்பர்களே!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

10 கருத்துகள்:

  1. அன்னபூர்ணா கோவில் ஒரு அவசரகதியில் எங்களுக்கும் காட்டினார்கள்.  இவ்வளவு விவரம் எல்லாம் இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கோயில் பற்றிய விவரங்கள் சொல்லிய விதம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  3. உலகிற்கே உணவு அளிக்கும் அன்னபூரணியை வணங்குகிறோம்.

    அன்னபூரணா டிரஸ்ட் தொடர்ந்து பக்தர்களுக்கு உணவு அளித்து வருவது பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  4. காசிக்குச் சென்று வந்த நெருங்கிய உறவினர் என் பாட்டிக்கு அன்னபூரணி விக்ரகம் ஒன்று வலக்கையில் ஒரு சிறு துவாரம் அதற்குள் ஒரு அகப்பை செருகி இருக்கும், கூடவே ஒரு சிறிய தட்டு அதில் அரிசியை நிரப்பி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றார். பாட்டிக்கும் பிறகு அன்னபூரணி என்னோடு இருக்கிறாள்!

    அன்னபூரணி குறித்த கதைகளை இப்போதுதான் அறிகிறேன். அன்னதானம் பற்றிய விஷயம் சிறப்பு. கோயில் பற்றி நல்ல விளக்கங்கள். எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வாசகம் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அன்னபூரணா டிரஸ்ட் மற்றும் கோயில் குறித்த தகவல்கள் அருமை சார்.
    உலகே அன்னத்தால் ஆனது, அதற்குத்தான் எப்போதும் முதல் மதிப்பு உயிர்களிடையே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. அன்னபூரணி கோவில் சென்றபோது, மா அன்னபூரணியின் மிக அருகில் சில நிமிடங்கள் நிற்க முடிந்தது.... எங்களுக்கும்


    நாங்கள் கொண்டு சென்ற அரிசையை அர்ச்சகரிடம் யோசித்து யோசித்து நாங்கள் தர அவர் வாங்கி அழகாக அம்மா வின் கிண்ணத்தில் சேர்பித்து பின்னர் பிரசாதம் தந்தார் ...சிலிர்ப்பான நிமிடங்கள்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....