வெள்ளி, 3 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

SOMETIMES IT’S VERY HARD TO MOVE ON, BUT ONCE YOU MOVE ON, YOU’LL REALISE IT WAS THE BEST DECISION YOU’VE EVER MADE. 

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி மூன்று 



 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

முப்பத்தி மூன்றாம்  விதி சொல்வது, "ஒவ்வொருவரின் பலவீனப் புள்ளியைக் கண்டுபிடி".

 

மூல நூலில், இதை "DISCOVER EACH MAN'S THUMBSCREW" என்கிறார் எழுத்தாளர்.

 

நாம் எவ்வளவுதான் நல்ல விஷயங்களைக் கூறினாலும், மக்கள் கேட்பதே இல்லை என பலர் புலம்புவது உண்டு.

 

அதற்கான முக்கிய காரணம், மக்களின் உண்மையான தேவைகளுக்கேற்ப நம் கருத்துக்களை வடிவமைப்பதில்லை என்பதே.

 

ஐந்து விரல்களில், மிகச்சிறியதான கட்டைவிரலே மிக முக்கியமானது என்பதை உணர்ந்தவரான குரு துரோணர் அவர்கள், ஏகலைவனை பலமிழக்கச் செய்ய அவனுடைய கட்டைவிரலைக் கோரியதாக மஹாபாரதம் கூறுகிறது.

 

மக்களின் உண்மையான தேவைகளும், அவர்களின் மிகச் சிறிய பலவீனங்களிலேயே ஒளிந்திருப்பதையும், அதை அடையாளம் காணும் சுவாரசியமான உத்திகளையுமே இவ்விதி சுவைபட விளக்குகிறது.

 

நேரடியாக எவருமே சொல்ல விரும்பாததும், மிக இன்றியமையாததுமான இத்தகைய இருண்ட இரகசியங்களை வெளிக்கொணரும் நுட்பங்களை அறிந்துகொள்ளலாமா?

 

1. பிறர் துயரங்களை காது கொடுத்துக் கேள்;

 

நம் துன்பங்களுக்குத் தீர்வு கொடுப்பதைக் காட்டிலும், அத்துயரங்களைப் பொறுமையுடனும், பரிவுடனும் காது கொடுத்துக் கேட்பவர்களை எதிர்ப்பார்ப்போர் பலர் உள்ளனர்.

 

அவ்வெதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்வோரால், பிறர் தேவைகளையும், அவர்களது பலவீனங்களையும் எளிதில் அடையாளம் கண்டு, அவர்களின் நன்மதிப்பைப் பெறும் வண்ணம் நடந்துகொள்ள இயலும்.

 

குறிப்பாக, இல்லத்தரசிகள் முதல், பெரும் பதவியில் உள்ள மகளிரின் ஆதரவைச் சம்பாரிக்க இவ்வுத்தி பயன்படுவதுண்டு.

 

2. மனிதருள் உள்ள ஆதரவற்ற குழந்தையைக் கண்டுபிடி;

 

மானுடரின் பெருவாரியான பலவீனங்கள், அவர்களின் தொட்டில் காலம் முதல் தொடங்கி இறுதிக் காலம் வரை நிலைப்பவை.

 

எனவே, மனிதர்களின் பசுமையான இளமைக் கால அனுபவங்களைப் பேசி அசை போட ஊக்குவிப்பதின் மூலமும், அவ்வப்போதைய பாசமான தொடுதல்களின் மூலமும், அவர்களின் ஆழ்மன விருப்பங்களை எளிதில் கிரகித்துவிடலாம்.

 

இன்று பெரியதாக வளர்ந்திருக்கும் டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனம், 1980 களில், தம் போட்டியாளரான எச். எம். டி கடிகாரத்தின் விற்பனையோடு போட்டி போட இவ்விதி மிகவும் பயன்பட்டது.

 

விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாக அளிக்கும் செல்வந்தர்களின் குழந்தை கால ஆசையை கையில் எடுத்த இந்நிறுவனம், தம் புது ரக கடிகாரங்களை, அற்புதமான அன்பளிப்புக்குத் தகுதியானதாக விளம்பரம் செய்து மக்களைக் கவர்ந்தது.

 

இதுபோல், டைட்டன் நிறுவனத்தின் வளர்ச்சியில் நடந்த சுவாரசியமான அனுபவங்களை இச்சுட்டி மூலம் சுருக்கமாக அறிந்துகொள்ளுங்கள்.

 

டைட்டனின் வரலாறு!!!

 

3. எதிர்பார்ப்பிற்கு மாறான நடத்தையை அடையாளம் காணவும்;

 

எதன் மீது அச்சப்படுகிறார்களோ, அதை வெளிப்படையான சினத்தால் மறைக்கும் குணம், பலரிடம் உண்டு.

 

அத்தகையோரின் சினத்தைக் கண்டு ஒதுங்காதவராலேயே, அதன் பின்னால் ஒளிந்துள்ள அம்மனிதரின் தாழ்வு மனப்பான்மையையோ, கோழைத்தனத்தையோ அடையாளம் காண இயலும்.

 

1971-இல், வங்கதேச விடுதலைக்காக நடந்த இந்திய-பாக் போர் குறித்து 31-ஆம் விதியில் சற்று விவாதித்திருந்தோம்.

 

அப்போரில், பாகிஸ்தான் மலைபோல் நம்பிய சீனா ஏன் உதவிக்கு வரவில்லை என பலருக்கு விளங்கவில்லை.

 

சீனாவிற்குப் பாதகமான டிசம்பர் கடுங்குளிர்காலத்தை, போருக்கான சமயமாக இந்திய உளவியல் அமைப்பான ‘ரா’ திட்டமிட்டதே இதற்கான முக்கிய காரணமானது.

 

தம் அச்சத்தை மறைக்க, வங்கதேசத்தின் முஜிபூர் ரஹ்மான் அவர்களைக் கைது செய்த பாக்கின் மிரட்டலும், இந்தியாவின் இத்தகைய திட்டமிட்ட நடவடிக்கையால் செயலிழந்து போனது.

 

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் தேதி, அருனாச்சல பிரதேசத்தில் எல்லைப் பிரச்சனையைக் கிளப்பியது சீனா.

 

அதற்குப் பின்னாலும், தம் உள்நாட்டுக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாத கோழைத்தனத்தை மறைக்கும் சீனாவின் திசைதிருப்பும் உத்தியே இருப்பதாக உலக அரசியல் அறிந்தோரால் ஊகிக்கப்படுகிறது.

 

4. வெற்றிடத்தை நிரப்பு;

 

வாழ்வின் சில எதிர்பாராத துயரச் சம்பவங்களால், சிலருக்கு ஏற்படும் விரக்தியையோ, பாதுகாப்பற்ற உணர்வையோதான் ஒரு வெற்றிடமாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்தகைய வெற்றிடத்தை நிரப்பும் சரியான வழிமுறையை உபயோகிப்பவர், மிகப்பெரும் வாழ்நாள் விசுவாசியைச் சம்பாரிப்பவராக பெரும் பலம் பெறுகிறார்.

 

துருக்கி நாட்டில் நடந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை விவகாரத்தாலும், கச்சா எண்ணெய் விலைக் குறைப்பு விவகாரத்தாலும், 2022 அக்டோபர் மாதம் முதல், அமெரிக்கா-சவுதி அரேபிய உறவுகளில் விரிசல் உருவாகியது.

 

அவ்வெற்றிடத்தைச் சரியாகப் பயன்படுத்திய சீன அதிபர் திரு ஜி ஜின்பிங் அவர்கள், டிசம்பர் ஏழு 2022 அன்று, தடபுடலாக சவுதியில் இறங்கி, சீன அரேபிய மாநாட்டில் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை உருவாக்கி அரபுலகின் மிகப்பெரும் கூட்டாளியாக உருவெடுத்ததே இவ்வுத்தியின் நடைமுறை உதாரணமாகும்.

 

மேற்சொன்ன உத்திகளைத் தவறான நோக்கங்களுடன் உபயோகித்து ஏமாற்றுபவர், மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் உருவாகும் உணர்ச்சிகரமான எதிர் நடவடிக்கைகளை ஒருபொழுதும் தாங்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என நூல் தீவிரமாக எச்சரிக்கிறது.

 

எனவே, “இரண்டு முறை அளவெடுங்கள், ஒரு முறை வெட்டுங்கள்” என்னும் தச்சர்களின் கொள்கைவிதிப்படி, அனைவரின் நலன் கருதி சரியாகத் திட்டமிட்டே இவ்விதி காட்டும் உத்திகளைப் பயன்படுத்தவும்.

 

பிறர் உணர்வுகளை மதிக்கும் நுட்பமான திட்டமிடுதலைக் கோரும் இவ்விதிக்கான நம் மனநிலையை கட்டமைக்கும் தலைசிறந்த உபாயம் ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

11 கருத்துகள்:

  1. இப்பகுதியில் எடுத்துக்காட்டான அரசியல் பிரச்சனைகள் மிகச்சரி.

    பதிலளிநீக்கு
  2. இந்த முறை இன்னும் சிறப்பாக விளக்கி இருக்கிறீர்கள் அரவிந்த்.  சுருக்கமாக இல்லாமல் நிறுத்தி விளக்கமாக ஒவ்வொன்றாகச் சொல்லி இருப்பது சிறப்பு.  மேலோட்டமாக விதியைப் படித்தால் அடுத்தவர் பலவீனத்தை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லதா என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா. நூலின் பல விதிகள், மேலோட்டமாக படிக்கையில் எனக்கும் முதலில் வெறுப்பே ஏர்ப்பட்டது.
      பின்னர்தான் படிப்படியாக பலருடன் விவாதித்ததால், இவற்றின் நடைமுறைப் பயன்கள் புரிய வந்து, இதை தெளிவாக தமிழில் படைக்க முடிவு செய்தேன்.
      தங்கள் பொருமையான வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  3. மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்கவும், அவர்களுடைய பலவீனங்களை காணவும் சொல்கிறது இவ் விதி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவே சரியான புரிதலாக நானும் கருதுகிறேன் மேடம்.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு
  4. இந்த விதியை வாசித்தவுடன் நம் மனதில் டக்கென்று தோன்றுவது எதிர்மறையாக இருக்கோ இந்த விதி என்று. ஆனால் அதையும் நேர்மறையாகப் பயன்படுத்தலாம் என்பது உங்கள் விளக்கங்கள் சிறந்த உதாரணங்கள். முதல் உதாரணத்தைத் தவிர. என்னால் ஏற்க முடியாத ஒன்று. ஆனால் அதை

    //உத்திகளைத் தவறான நோக்கங்களுடன் உபயோகித்து ஏமாற்றுபவர், மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் உருவாகும் உணர்ச்சிகரமான எதிர் நடவடிக்கைகளை ஒருபொழுதும் தாங்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என நூல் தீவிரமாக எச்சரிக்கிறது.//

    இது சொல்லிவிடுகிறது!!!

    நிஜமாக நிறைய யோசித்து, தேடித் தேடி உதாரணங்களை - எழுதியவர் மேலைநாட்டவர். ஸோ நாம் அந்த விதிகளைப் புரிந்து கொள்ளும் விதத்திற்கான உதாரணங்களை - அகழ்ந்தெடுத்துப் பொருத்தமாகப் பயன்படுத்தி விளக்கறீங்க. நிறைய உழைப்பு. பாராட்டுகள் அரவிந்த்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இன்றைய பொன்மொழி அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.
      வரும் விதிகள் இன்னும் சுவாரசியமாக நம்மை ஆழ்ந்து சிந்திக்கச் செய்யும் என நம்பலாம்.

      நீக்கு
  6. தன் பலவீனத்தை அறிந்தவருக்கு பலமும் தெரியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரி சார்.
      அடுத்த விதியும் இது குறித்தே சற்று மறைமுகமாக பேசவிருக்கிறது.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....