வியாழன், 17 அக்டோபர், 2024

கதம்பம் - சுந்தர பாண்டியபுரம் - கருப்பு கவுனி அரிசி கஞ்சி - அரவிந்த்சாமி எனும் நான்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா மந்திர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


சுந்தர பாண்டியபுரம் - 20 செப்டம்பர் 2024:


சிறுவயதில் மனதில் சட்டென்று பதிந்த போன விஷயங்களைப் போல் இப்போது எந்த ஒரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் சவாலாக தான் உள்ளது! தற்சமயம் நான் கற்று வரும் வகுப்புகளுக்கு கூட மிகவும் சிரமப்பட்டு தான் மண்டையில் ஏற்றிக் கொள்கிறேன்! இதெல்லாம் கூட 40+ அலப்பறைகளில் ஒன்றாக தான் நினைக்கிறேன்…:) எல்லாவற்றையும் அதன் மீது பழியை போட்டுவிடலாம்…:) 


அதெல்லாம் சரி! எதற்கு இந்த வரலாறு??


என்னவர் ஒரு காணொளியை என்னிடம் காண்பித்து இதுல பாரேன்! எவ்வளவு சூரியகாந்தி பூ இருக்கில்ல! நேர்ல அவ்வளவு அழகா இருக்குமாம்! இது தென்காசி பக்கத்துல சுந்தரபாண்டிய புரம்னு சொல்லி ஒரு இடம்! இப்போ சீசனாம்!


உடனே சூரியகாந்தி பூவை விட்டுவிட்டேன்…:) சுந்தரபாண்டியபுரமா!!!?? மனம் ஒரு நொடியில் பறந்து ‘ரோஜா’ பட சீனுக்குச் சென்றுவிட்டது…:) உங்களுக்கு ஞாபகம் இருக்கா! ரோஜா படத்துல மதுபாலா தன்னுடைய ஊராக இந்த சுந்தரபாண்டியபுரத்தை தான் சொல்லுவாங்க!


அரவிந்த்சாமி தன்னுடைய முதலாளியை பார்க்க மதுபாலாவ அழைத்து போகும்போது அவர் கூட  சுந்தரபாண்டிய புரமா! எங்க  ஊர் பொண்ணுப்பா! முகத்திலேயே களை தெரியுதேன்னு சொல்வாரே!


“வெள்ளை வெளேர்னு பால் பணியாரம் இருக்குமே! ஒருநாள் எனக்கு பண்ணித் தரயான்னு கேட்பாரேன்னு வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தேன்…:)


சமீபத்தில் கூட Meeshoவில் ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தோம். சில நாட்களுக்குப் பிறகு அந்த பார்சல் கிடைக்கப் பெற்றதும் அதை பிரித்து பார்த்த போது எங்கிருந்து வருகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ‘நெய்க்காரப்பட்டி’ என்று குறிப்பிட்டிருந்தது!


நெய்க்காரப்பட்டி!!??


உடனே நினைவுக்கு வந்துவிட்டது..🙂 ஆட்டோகிராப் படத்துல சேரன் தன்னுடைய ஊரை நெய்க்காரப்பட்டி என்று தான் சொல்லுவார்! அவரின் பள்ளிப்பருவ நினைவுகள் முழுவதும் அந்த ஊரில் தான்! 


ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! பொக்கிஷமாக நெஞ்சுக்குள் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே! உண்மை தானே! கற்பூரம் போன்று கப்பென்று பிடித்துக் கொண்ட பசுமையான விஷயங்களை அவ்வளவு எளிதில் தான் மறந்துவிட முடியுமா?? 


******


கருப்பு கவுனி அரிசி கஞ்சி - அவரும் நானும் - 23 செப்டம்பர் 2024:


நேத்து நானும் ரோஷியும் பார்த்த தெனாலிராமன் சீரிஸில் தெனாலிராமனுக்கு வந்த ஜலதோஷமும் தும்மலும் எல்லாருக்கும் பரவி  அரண்மனைக்கு வந்த விருந்தினர் உள்பட வந்திடும்.

 

ராஜா கிருஷ்ண தேவராயரோட அரண்மனையில் இருக்கிற விலைமதிப்பில்லாத சந்திரமணி வைரத்தை இந்த ஜலதோஷத்தையும், தும்மலும் பயன்படுத்தி அங்க வந்திருக்கிற யாரோ ஒருத்தர் திருடப் பார்க்கறாங்க! எதுக்கு இத உங்ககிட்ட சொல்றேன்னா…?


தெரியுது! ஊரிலிருந்து வந்ததும் வராததுமா எனக்கு வந்த ஜலதோஷத்தை உங்க ரெண்டு பேருக்கும் நான் கிஃப்ட்டா குடுத்திட்டேன்னு சொல்லி காட்டற! அதானே!!


ஹா..ஹா..ஹா.! அதே தான்! எது வந்தாலும் சமாளிச்சிடலாம் போலிருக்கு! இந்த ஜலதோஷமும், உடம்பு வலியும், இருமலும் வந்தா..!!


சரி! சரி! இன்னிக்கு வழக்கத்துக்கு மாறா நாம ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவோமா??


முதல்ல என்ன பண்ணப் போறன்னு சொல்லிட்டு பண்ணு! எதையாவது குடுத்து இது என்னன்னு என்னை கண்டுபிடிக்கச் சொல்லாத…:)


இந்த பாரம்பரிய அரிசில்லாம் இப்ப நிறைய சொல்றாங்க இல்லையா! அதில கருப்பு கவுனி அரிசி கொஞ்சமா வாங்கியிருக்கேன். கொஞ்சம் காஸ்ட்லி தான்! அரைக்கிலோ 60ரூன்னு வாங்கினேன்!


அதுல கொஞ்சம் போல எடுத்து நேத்து ராத்திரியே தண்ணில நனைச்சு வெச்சிட்டேன். அதை மிக்சில போட்டு ஒண்ணும் பாதியுமா உடைச்சு கஞ்சியா போட்டு குடிக்கலாம்னு நினைக்கிறேன்! சரியா! அதோட சர்க்கரைவள்ளி கிழங்கும் வேகவெச்சு வெச்சிருக்கேன். 


என்ன சத்தத்தையே காணும்! கஞ்சி எப்படியிருக்கு??


ம்ம்ம்! நல்லாருக்கே! கஞ்சில தேங்காய் அரைச்சு விட்டுருக்கயோ?


ஆமா! ஆமா! உப்பு, மிளகுசீரகப்பொடி, பெருங்காயம், நாலு பல்லு பூண்டு, கறிவேப்பிலை எல்லாம் போட்டு தான் குக்கர்ல வெச்சேன்! குக்கர்ல இருந்து எடுத்ததும் தேங்காய அரைச்சும் போட்டுக்கலாம்! தேங்காய்ப்பாலாகவும் விட்டுக்கலாம்! நான் அரைச்சு அப்படியே சேர்த்திட்டேன்!


ஓ! இட்லி, தோசை, சப்பாத்திக்கு பதிலா இந்தமாதிரி அப்பப்போ லைட்டா கஞ்சி மாதிரி போட்டு குடிச்சுக்கலாம் இல்ல!


ஆமா! நான் வாரத்துல ரெண்டு மூணு நாள் இப்படித்தான் பதினோரு மணி போல கொள்ளு கஞ்சி போட்டுப்பேன்! நாளைக்கு உங்களுக்கும் போட்டுத் தரேன் என்ன! இனிமே நாம இப்படித்தான் அளவா, லைட்டா எடுத்துக்கணும்! வயித்துக்கும் கெடுதல் இல்ல! ஈசியா ஜீரணமும் ஆயிடும்!


சரி! பேசினதுல நேரம் போனதே தெரியல! நான் அடுத்த வேலைய பார்க்கிறேன்!


******


அரவிந்த்சாமி எனும் நான் - 25 செப்டம்பர் 2024:



யூட்டியூபில் சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு காணொளி மீண்டும் மீண்டும் என் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது. ஒரு மணிநேரத்திற்கு மேலான காணொளி அது! இப்போதெல்லாம் பெரிய காணொளிகளை பார்ப்பதற்கான பொறுமை என்னிடம் இருப்பதில்லை..🙂 


சரி! ஒருநாள் நிதானமாகத் தான் பார்ப்போமே என்று watch laterல் போட்டு வைத்திருந்தேன்! சென்ற பதிவில் ரோஜா படத்தைப் பற்றி நான் எழுதியிருந்ததை வைத்து கருத்துக்களிலும் சிலர் இந்த காணொளியைப் பற்றிக் குறிப்பிட்டு சொல்லவும், பார்த்து விடலாம் என்று முடிவெடுத்தேன்! அந்தக் காணொளி தான் இந்தப் பதிவை என்னை எழுதவும் வைத்தது! பலவற்றை யோசிக்கவும் வைத்தது எனலாம்!


அரவிந்த்சாமி!


பொதுவாக நடிகர் நடிகையரின் நேர் காணல்களையோ, பட புரோமோஷன்களையோ நான் பார்ப்பதில்லை! ஆனால் இந்த வித்தியாசமான மனிதரின் நடிப்பை விட அவரின் பக்குவம் தான் என்னை பெரிதும் சிந்திக்க வைத்தது! வாழ்வில் பெரும் உயரத்தை தொட்டாலும் அந்த பகட்டு ஏதும் இல்லாத மனிதராக இவரை பார்த்து வியந்தேன்!


ஒருமணிநேர காணொளியை  முழுவதையும் சிறிதும் சலிப்பில்லாமல் பொறுமையாக ரசித்து பார்த்தேன். காணொளி முழுவதுமே நேர்மறை சிந்தனைகளும் வாழ்க்கைக்கான பாடங்களும் என தன் அழகான பேச்சின் மூலம் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்! 


பேரண்டத்தின் சிறு புள்ளி தான் பூமியே! அப்படியான பூமியில் நாம் என்பது யார்? எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்? பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடுவதை விட எதிர்கொண்டால் என்ன? நம்மிடம் உள்ள தவறுகளை சரிசெய்து கொண்டால் என்ன? நம்மை பொறுத்தவரை நமக்கான சுதந்திரம் என்பது என்ன? பணம் சம்பாதிப்பது மட்டும் தான் வாழ்க்கையா? 


இப்படி அந்த காணொளி முழுவதுமே இன்றைய இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டுதலாகவும், அறிவுரையாகவும் அமைந்திருந்தது! இவர் வாசித்த புத்தகங்கள் சிலவற்றை நமக்கும் பரிந்துரை செய்கிறார்! 


நாம் அன்றாடம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை சிலவற்றை கற்றுக் கொண்டு வருகிறோம் என்றால் இந்த மனிதரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளம் என்பது புலனானது! இதுவரை அந்தக் காணொளியை நீங்கள் பார்க்கவில்லை என்றால் அவசியம் பாருங்கள்.


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

17 அக்டோபர் 2024


11 கருத்துகள்:

  1. சுந்தரபாண்டியபுரம் - பெயரிலேயே சுந்தரம் இருக்கிறது.  இதேபோல எனக்கும் நேற்றொரு அனுபவம்..  BIGSHOT எனும் தளத்தில் தஞ்சை பழைய ஹவுஸிங் யூனிட் பற்றிய காணொளி போட்டு என்னை நெகிழ வைத்தார்கள்.  அங்கு ஓரிரு பழைய நண்பர்களையும் பிடித்தேன்.  

    பதிலளிநீக்கு
  2. கருப்பு கவுனி அரிசி கஞ்சியா...   இவ்வளவு ஆரோக்யமாக எல்லாம் நான் சாப்பிடுவதில்லை.  அதிகபட்சம் கோதுமை ரவா கஞ்சி அல்லது ரவா கஞ்சி!

    //முதல்ல என்ன பண்ணப் போறன்னு சொல்லிட்டு பண்ணு! எதையாவது குடுத்து இது என்னன்னு என்னை கண்டுபிடிக்கச் சொல்லாத…:)//

    ஹா..  ஹா..  ஹா...

    பதிலளிநீக்கு
  3. அரவிந்தசாமி பேட்டித் துளிகள் ஆங்காங்கே பார்த்தேன் நானும்.  முழு பேட்டி பார்க்கும் பொறுமை எனக்கும் இல்லை.  இப்போதும் பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை!!!

    பதிலளிநீக்கு
  4. பதிவுகள் அருமை
    விஜி

    பதிலளிநீக்கு
  5. வாசகம் அருமை.கதம்பம் மிக நன்றாக இருக்கிறது.
    கருப்பு கவினி அரிசி நானும் குடிப்பேன். உடல்வலிக்கு நல்லது.
    அரவிந்த்சாமி பேட்டி படித்தேன் நானும் தினம் கொஞ்சமாக பார்த்து முடித்தேன். நன்றாக பேசினார்.
    பாடங்களை நன்றாக படித்து சிறந்த மதிப்பெண்கள் எடுப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. உடனே சூரியகாந்தி பூவை விட்டுவிட்டேன்…:) சுந்தரபாண்டியபுரமா!!!?? மனம் ஒரு நொடியில் பறந்து ‘ரோஜா’ பட சீனுக்குச் சென்றுவிட்டது…:) உங்களுக்கு ஞாபகம் இருக்கா! ரோஜா படத்துல மதுபாலா தன்னுடைய ஊராக இந்த சுந்தரபாண்டியபுரத்தை தான் சொல்லுவாங்க!//

    ஹை ஆதி ஹைஃபைவ்! நானும் இதேதான் அன்று வெங்கட்ஜி பதிவில் சொல்லியிருந்தேன் ஆனா விளக்கமாக இல்லை ரோஜாவில் வரும்னு. அழகான ஊர். இப்ப மீ ண்டும் அங்க போகணும்னு தோன்றத் தொடங்கிவிட்டட்கஹு. சூரியகாந்தி பூ செமையா இருக்கும். இங்கு சில வீடுகளில் வளர்க்கறாங்க நிறைய பூக்கும் போது அத்தனை அழகா இருக்கும்

    கீதா





    பதிலளிநீக்கு
  7. Meesho//

    உத்தரவாதமா ஆதி!? சிலர் எதிர்மறையா சொன்னதால் கேட்கிறேன்.

    ஆதி, கறுப்பு கவுனி அரிசி கஞ்சி சூப்பர். நம்ம வீட்டிலும் உண்டு. மூங்கில் அரிசின்னு ஒன்னு கிடைக்கும் பாருங்க. அதை லைட்டா வறுத்துட்டு இதே போல ஊற வைச்சு உடைச்சு கஞ்சி போட்டுப் பாருங்க செம டேஸ்டா இருக்கும்...மூங்கில் அரிசியும் விலை கூடுதல்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அரவிந்த்சாமி வீடியோ நானும் பார்த்தேன் நிறைய நல்ல விஷ்யங்கள் அழகாகப் பேசுகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ரசித்தேன்.கதம்பம் நன்றாக உள்ளது.

    எனக்கும் சுந்தரபாண்டியபுரம் என்றால் ரோஜா படத்தின் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். என் நாத்தனார் பெண் கொஞ்சமாக காலம் அங்கிருந்தார். (அவர் கணவருக்கு அங்கு வேலை மாற்றல் காரணமாக.) ரோஜா படப்பிடிப்பை கூட அவர்கள் வீட்டின் அருகிலேயே எடுத்தார்கள் என்றும் சொன்னார். நானும் ஒரு சமயம் அவர்களை (நாத்தனார் மகள் மருமகன்) காண விடுமுறையில் தி. லி செல்லும் போது அந்த ஊருக்கு சென்றுள்ளேன். உங்கள் கணவரின் பதிவிலும் இந்த ஊரின் பெயரைப் பார்த்ததும் நான் இதை குறிப்பிட்டேன் என நினைக்கறேன்.

    தங்கள் இருவரின் உரையாடல்கள் நன்றாக உள்ளது. என் மகனும் தெனாலிராமன் சீரியல் விடாமல் தினமும் பார்க்கிறார். கவுனி கஞ்சி முறை சிறப்பாக உள்ளது. உடல் நலத்திற்கு ஒத்து வந்தால் அருந்தலாம்.

    நடிகர் அரவிந்தசாமி பேட்டி காணொளி படிக்கிறேன். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....