சனி, 5 அக்டோபர், 2024

பன்முகத்தன்மையின் பிறந்த நாள் - சோ ராமஸ்வாமி - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி ஆறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


1934-ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஐந்தாம் நாள் பிறந்த திரு சோ ராமஸ்வாமி - துக்ளக் பத்திரிகை ஆசிரியர், நடிகர், இயக்குனர், அரசியல் விமர்சகர், நாடகங்கள் எழுதுபவர், எழுத்தாளர் என பல திறமைகளை தன்னுள்ளே கொண்டவர்.  அவரது அரசியல் நையாண்டிகள் ஸ்வாரஸ்யமானவை.  ஒரு காலத்தில் நானும் தொடர்ந்து துக்ளக் வாசித்துக் கொண்டிருந்தேன். துக்ளக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வரும் துணுக்குக்காகவே அதை வாங்கியதுண்டு.  அவரது நேர்காணல்கள், பேட்டிகள் என ஒவ்வொன்றும் ஸ்வாரஸ்யமானவை.  அவரது பிறந்த நாளான இன்று சோ ராமஸ்வாமி குறித்த ஒரு பதிவினை திருமதி விஜி வெங்கடேஷ் வெளியிடுகிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


சோ! (திரு.சோ.ராமஸ்வாமி)


இன்று


பன்முகத் திறமையின் பிறந்தநாள்;

நையாண்டி பேச்சின் பிறந்தநாள்;

அளப்பறியா ஆற்றலின் பிறந்தநாள்;

அஞ்சா நெஞ்சின் பிறந்தநாள்!


திரை, நாடகம், பத்திரிக்கை, அரசியல், ஆன்மீகம், எழுத்து, வேலை................

வெற்றி கொள்ள நீ வைத்தது தான் உனக்கு இலக்கு;

எடுத்துச் சொல்ல போதவில்லை எமக்குக் கணக்கு!


துக்ளக் ஆண்டு விழா ஒரு தேர்த் திருவிழா!

அதற்குக் கட்டணம் வசூலித்தால் நீ வசூலில் மன்னன்! 

இதிலும் நீ முடிசூடா மன்னன்!

கூட்டம் இலவசமாய் உன் பேச்சை ரசிக்கும்;

சொக்கிப்போய் அதை இரையாய்ப் புசிக்கும்!

வலியே தெரியாமல் குட்டுவாய்!

எதிரியும் சிரித்துவிட்டுத்தான் திட்டுவான்!


அரசியல் ஆழ்கடலினுள் மோதி எனும் அரிய மோத்தியின் (முத்து) மதிப்பைத் துல்லியமாய் அறிந்து கொண்டாய்;

வல்லரசு இந்தியாவின் முதன்மைச் சிற்பியென அதிரடியாய் அறிமுகமும் செய்து வைத்தாய்!


நீ முன்பே கணித்தது எல்லாமே நடக்கிறது!

புரிந்து தேறாத ஜனம் கிடந்து தவிக்கிறது!


எவருக்கும் நீ அஞ்சியதில்லை;

எவரிடமும் எதற்கும் கெஞ்சியதில்லை!

புத்திகூர்மையில் எவரும் உனை மிஞ்சியதில்லை!

தன்னலம் அதில் கிஞ்சித்தும் இருந்ததில்லை.


தொட்டதெல்லாம் துலங்கியும் உன் தலை மேல் கனம் ஏறியதில்லை, 

அதைப் பற்றி நினைக்க நேரம்  போதியதில்லை!


இந்து மகா சமுத்திரம் தந்த நீ,

கலை மகா சமுத்திரம்;

அறிவு மகா சமுத்திரம்;

ஆற்றல் மகா சமுத்திரம்; சிகரமாய், அடக்க மகா சமுத்திரம்!


நீ இப்போதிருந்தால் சிலருக்கு ஆயிரம் யானை பலம்! நாட்டிற்கு பல்லாயிரம் விதங்களில் பலன்!


பலரையும் மிதிக்கும் சில தலைமையும் உன் பேச்சை மட்டும் மதிக்கும்!

தன்னலம் கலக்கா போதனை,அது உனக்கே கைவந்த சாதனை!


உனை எவரும் மறக்கவும் மாட்டார்;

உனைப்போல் ஒருவர் பிறக்கவும் மாட்டார்!


உன் பிரிவு தாளவில்லை;

பெருமூச்சு விட்டு மாளவில்லை!


மீண்டும் நீயே பிறந்து வா; எமை

மகிழ்விக்க வா;

பலரை ஊக்குவிக்க வா;

நாட்டை வாழ்விக்க வா;

இதுதான் அனைவரின் அவா!

இறையிடம் வரம் கேட்கவா?

அருளி விட்டார்,

உடனே இறங்கி வா;


🙏🏻🙏🏻🙏🏻


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

5 அக்டோபர் 2024


1 கருத்து:

  1. சமீபத்தில் மிஸ்டர் பீன் பற்றி செய்திக்குறிப்பு ஒன்று படித்தேன்.  அவ்வளவு நகைச்சுவையாக அவர் நடித்தாலும் அவர் IQ அளவு ஐன்ஸ்ட்டினை விட அதிகமாம்.   அதுபோல சோ நகைச்சுவை நடிகர் என்று பெயர் வாங்கி இருந்தாலும் அவரும் IQ அதிகம் உள்ளவர்தான்.  எனக்கும் வரைப் பிடிக்கும் என்றாலும் அவர் பிறந்த நாளை எல்லாம் நினைவில் கொண்டதில்லை.  இன்றுதான் அவர் பிறந்த நாள் என்பதை இன்றே அறிகிறேன்.  திருமதி விவெ யின் வரிகள் நன்று.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....