வியாழன், 10 ஜூலை, 2025

மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி மூன்று - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே…


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி ஒன்று


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி இரண்டு






ஒரு கட்டிடம் என்பது வெறும்  செங்கலும், சிமெண்ட்டும் மட்டுமே சேர்ந்த கலவை என்பது அல்ல! அதில் வசிக்கும், வசித்த மனிதர்களின் உணர்வுகளும் சேர்ந்த கலவை என்று தான் சொல்லணும்! இந்த விஷயம் நாம் வசிக்கும் வீட்டிற்கு மட்டுமல்ல! நாம் கற்றுத் தேர்ந்த கல்வி நிறுவனங்களுக்கும் கூட பொருந்தும்!


மகளோடு கல்லூரியை சுற்றிப் பார்க்கச் சென்ற நான் வகுப்பறைகளை கடந்து செல்லும் போது அன்றைய நாளின் நினைவுகளுக்குள் சென்று வந்தேன்! இங்க தான் கேர்ள்ஸ் எல்லாரும் மத்தியான நேரத்துல பேசிட்டு இருப்போம்! கேலியும் கிண்டலுமா செம ஜாலியா இருக்கும் தெரியுமா கண்ணா! 


இங்க தான் ஃபைனல் இயர்லாம் படிச்சோம்! வைரம் சார் இங்க தான் எங்களுக்கு Fluid mechanics எடுத்தார்! சாரோட கிளாஸ்ல எப்பவுமே Pin drop silence இருக்கும் என்றேன்! வகுப்பறை ஒன்றில் எக்ஸாம் டைம் டேபிள் எழுதப்பட்டிருந்தது! அதில் Thermal engineering என்று பார்த்தவுடன், ஆமாம்! நானும் படிச்சிருக்கேனே அந்த புத்தகத்தின் முகப்பு அட்டை கூட ஆரஞ்சு நிறத்தில் இருக்குமே என்று தோன்றியது!!


இங்க தான் எங்க HOD ரூம்! அங்க பாரு அது பிரின்சிபால் ரூம்! பக்கத்துல லைப்ரரி இருக்கு! இது தான் கெமிஸ்ட்ரி லேப்! ஃப்ரெண்ட் பாரதியை பார்த்தியே கண்ணா! அவங்க அப்பா மணி சார் தான் கெமிஸ்ட்ரி சார்! அப்புறம் இது physics lab! இது தான் machine drawing கிளாஸ்! 3 மணிநேரம் நின்னுட்டே தான் இருப்போம்! உட்காரவே கூடாதுன்னு சீனிவாசன் சார் சொல்வார்! அப்புறம் இங்க தான் ஸ்டோர்ஸ் இருக்கும்! Machine drawing போட A2 size paperலாம் கூட இங்க கிடைக்கும்! வாங்கிப்போம்!


சரி! அப்புறம் நாம Workshop பக்கமும் கொஞ்சம் போயிட்டு வந்திருவோமா! இந்த பில்டிங் தான் மெக்கானிக்கல் பில்டிங்னு அப்போ புதுசா  கட்டியிருந்தாங்க! First year நாங்க எல்லாம் இங்க தான் இருந்தோம்! Boys எல்லாம் பின்னாடி groundல கிரிக்கெட் விளையாடுவாங்க! சார் வராருன்னு பார்த்தவுடனே நாங்க சிக்னல் கொடுத்தா கிளாஸோட கடைசி டோர் வழியா bat stump ஓட உள்ளே வந்திருவாங்க…:) எவ்வளவு ஜாலியா இருந்த நாட்கள் என்று சொல்லி சிரித்துக் கொண்டேன்!


இது தான் எங்க கேண்டீன்! Lunchக்கு அப்புறம் வாரத்தில ரெண்டு நாள் மூணு மணிநேரம் எங்களுக்கு workshop இருக்கும்! Workshop முடிச்சிட்டு வெளியே வரும் போது தலைவலி இருக்கும்னு இங்க தான் நான் டீ குடிக்கவே பழகினேன்..🙂 ஒரு கப் டீ வாங்கி எல்லாரும் ஷேர் பண்ணிக் குடிச்சாலும் அவ்வளவு ஜாலியா பேசி சிரிப்போம்! 


சரி! இன்னும் பார்க்க வேண்டிய இடமும் நிறைய இருக்கு! தொடர்ந்து சொல்கிறேன்.




மிகவும் கடினமான வேலை அது! உன்னால முடியாது என்று யாரேனும் ஒருவர் நம்மிடம் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள்! ஆனால் அது இலகுவான வேலையோ, கடினமான வேலையோ அதை ஈடுபாட்டுடன் செய்யும் போது அது மிகவும் எளிமையானதாகவே தான் தோன்றும்! ஈடுபாடு எனும் சொல்லின் வலிமை அது!


நிகழ்வு துவங்குவதற்குள் கல்லூரியை சற்று சுற்றிப் பார்த்து விடலாம் என்று கிளம்பிய நாங்கள் இப்போது workshop இருக்கும் பகுதிக்கு வந்திருந்தோம்! Lathe, fitting shop, Carpentry, Black Smith, Special machines, Electrical lab, Automobile Workshop, Welding section என்று ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே அமைக்கப்பட்டிருக்கும் தனித் தனி கட்டிடங்களையும் மகளிடம் பெருமையுடன் காண்பித்தேன்!


இல்லையா பின்னே! இயந்திரவியல் துறையை தேர்ந்தெடுத்த நாங்கள் மூன்று பெண்களுமே ஏதோவொரு நிர்பந்தத்தினால் அதை எடுத்திருந்தாலும் வாரத்தில் இரண்டு நாளும் பணிமனைகளில் மிகவும் ஆர்வத்துடன் பணியாற்றுவோம்! நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம்! பெண் எனும் சக்தியின் வலிமை அது தான்! 


அன்று ஞாயிறு என்பதால் பணிமனைகள் எல்லாம்  மூடியிருந்தது! ஜன்னலின் வழியே சில lathe machines ஐ மட்டும் தான் மகளிடம் காண்பிக்க முடிந்தது! அதைப் பற்றியும் சில விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டேன்! அந்த பகுதியைக் கடந்து செல்லும் வழியில் ஒரு கட்டிடத்தை காண்பித்து ‘இங்க எங்கப்பாவோட ஆஃபிஸின்(PWD) ஒரு பிரிவு கூட அப்போ இங்க இருந்தது! என்று சொல்லிக் கொண்டிருந்தேன்!


நெடுக செல்லும் பாதையில் ஒருபுறம் மாணவர்கள் விடுதியும், அதைக் கடந்து சென்று கொண்டே இருந்தால் வழியில் பெண்கள் விடுதியும் பின்பு பேராசிரியர்களுக்கான குடியிருப்புகளும் அமையப் பெற்றிருக்கும்! அதில் கொஞ்ச தூரம் மட்டும் சென்று விட்டு நிகழ்வு ஆரம்பித்து விடப் போகிறதே! என்று நாங்கள் திரும்பி விட்டோம்!


சரி! நண்பர்கள் எல்லோரும் வந்து விடப் போகிறார்கள்! கல்லூரியைச் சுற்றிப் பார்த்த வரை பெரிதாக மாற்றங்கள் ஏதுமின்றி பசுமையான நினைவுகளைச் சுமந்து கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது! ஆனால் இத்தனை வருடங்களில் உடலிலும் மனதிலும் எத்தனையோ மாற்றங்களைக் கண்டு விட்ட எங்கள் எல்லோரின் மனநிலையும் எப்படி இருக்கப் போகிறது? ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டு கொள்வோமா??


மீதிக்கதைகளை அடுத்த பகுதியில் சொல்லட்டுமா??


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

10 ஜூலை 2025


2 கருத்துகள்:

  1. இன்றைய படச் சிந்தனை (குரலும், மௌனமும்) யோசிக்க வைத்தது.  முதலில் அமைந்திருக்கும் படங்கள் பழமையைச் சொல்கின்றன.  அங்கு சென்றதும் அலை அலையாய் எழுந்திருக்கும் பழைய நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய சிந்தனை செம . ஆமாம் மௌனம் பறி போகும் சமயங்கள் உண்டு.

    உங்கள் நினைவுகளோடு நீங்கள் சொல்லச் சொல்ல வலம் வந்தேன்

    கடினமான வேலையோ அதை ஈடுபாட்டுடன் செய்யும் போது அது மிகவும் எளிமையானதாகவே தான் தோன்றும்! ஈடுபாடு எனும் சொல்லின் வலிமை அது!//

    100%

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....