அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி ஆறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
உலக புகையிலை ஒழிப்பு தினம்! - 31 மே 2025:
அப்பாவை நினைத்துக் கொண்டு தான் ஒவ்வொரு முறையும் எழுதுகிறேன். ஒழுக்கத்திலும், சுத்தத்திலும், நேர்மையான குணத்தாலும், உதவும் மனப்பான்மையாலும் சிறந்த மனிதரை புகைப்பழக்கத்தால் தான் இழந்தேன்.
என்னமோ! அந்த நேரத்தில் இன்பமாக இருப்பதாகவும், தன் வலியை மறப்பதற்கும், அசதியை போக்குவதாகவும் நினைத்துக் கொண்டு இந்த பழக்கத்தை தொடர்கிறார்கள். ஆனால்! கொஞ்சம் கொஞ்சமாக அது உயிரைக் கொல்லும் என்று மெல்ல மெல்லத் தான் புரிகிறது...🙁
ஆனால் புகைப்பிடிக்கும் ஒவ்வொருவரின் மனக்கட்டுப்பாடு மட்டுமே அவர்களின் டென்ஷனையும், கவலையையும் எதிர்த்து நிற்கக்கூடிய வலிமையைத் தரும் என்பது மட்டும் தான் உண்மை!
இன்றே உங்கள் பழக்கத்திலிருந்து மீண்டு வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்… உங்களுக்காக அழகான குடும்பமும், இந்த பூமியும் இருக்கிறது என உணருங்கள்!
******
திருச்சி ஜங்ஷன் - 1 ஜூன் 2025:
மக்களின் பயன்பாட்டுக்காக எவ்வளவோ வசதிகள் செய்தும் அதை குறை சொல்வதும் அசுத்தப்படுத்துவதும் மட்டுமே மக்களாகிய நம் கடமை என்று நினைக்கிறேன்! இப்போது பார்த்தால் புதிதாய் இருக்கும் இந்த வசதிகள் இன்னும் கொஞ்ச நாளில் எப்படியிருக்குமோ??
படித்தால் பட்டினி போகும்!
குடித்தால் கிட்னி போகும்!
ஜங்ஷனுக்கு வரும் வழியில் ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்த வாசகம் இது! சொல்ல வரும் கருத்து உண்மை தானே!
நான் உன்ன அடிக்கத் தாண்டா போறேன்! சொல்றதையே கேட்க மாட்டேங்கிற!
ஒரு சின்னஞ்சிறு பாலகனிடம் அவன் தந்தை சொல்லிக் கொண்டிருந்தார்..🙂 நாமும் இப்படித்தான் இருந்திருப்போம்...🙂
மீண்டும் எங்கள் ஊராம் கோவை நோக்கி ஒரு பயணம்! இம்முறை மூவரும் சேர்ந்து செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது! நாளை அங்கிருந்து ஒரு பயணம்! பயணம் குறித்த தொடர் விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். காத்திருங்கள்!
******
சந்தர்ப்பங்கள் - 6 ஜூன் 2025:
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வதும் பொய்யல்ல!
மனதில் இருக்கும் பாரத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் மனது லேசாக மாறும் என்று சொல்வதும் பொய்யல்ல!
சிறு சிறு விஷயங்களிலும் வாழ்வுக்கான பொருள் பொதிந்துள்ளது! நாம் தான் அதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
காலையில் குளித்து விட்டு துடைத்துக் கொண்ட ஈரத்துண்டை ரயில் ஜன்னலில் காயவைத்த போது உணர்ந்த இன்றைய பாடம்!
நல்லதே நடக்கும்! நேர்மறையாக சிந்திப்போம்!
******
சமஸ்க்ருதம் தேர்வு - 25 ஜூன் 2025:
இன்று அதிகாலையில் வந்த செய்தியால் மனம் குளிர்ந்தது! என்னைப் பொறுத்தவரை இது இமாலய சாதனை தான் என்பேன்! பத்து நாட்களுக்கு முன் சமஸ்கிருத தேர்வு நடைபெற்றது. இன்று அதன் முடிவுகள் வந்தன.
பள்ளி கல்லூரியில் படித்த போது இருந்த வீட்டுச்சூழலும் அப்போதைய மனநிலையும் வேறு! தற்சமயம் இருக்கும் நெருக்கடியான வீட்டுச்சூழலில் வீட்டு வேலைகள் ஒருபுறம் என்றால் வீட்டுப் பெரியவர்களின் பராமரிப்பு அதுவும் அவர்களின் Hallucinationsக்கு மத்தியில் படிப்பது என்பது மிக மிக சவாலான விஷயம்! இத்தனையும் தாண்டி படித்ததை மண்டைக்குள் ஏற்ற மிகவும் சிரமப்பட்டேன்!
ஊருக்கு வேறு சென்று வந்தோம் இல்லையா! அதனைத் தொடர்ந்து அதைப் பற்றிய தொடரும் தினந்தோறும் எழுதிக் கொண்டிருக்கிறேன்! இப்படியிருக்க தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு தான் படிக்கவே துவங்கினேன்...🙂 ஆனால் தேர்வை முடித்த போது நன்றாக எழுதியிருப்பதாகத் தோன்றியது!
இன்று காலையில் வந்த தேர்வு முடிவுகளில் நான் 94% மதிப்பெண்கள் பெற்று Distinctionல் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் நட்புகளான உங்கள் எல்லோரிடமும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வழிநடத்திய இறைவனுக்கு நன்றி.🙏
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
16 ஜூலை 2025
முதலில் மனமார்ந்த வாழ்த்துகள் ஆதி! நல்ல மதிப்பெண்கள்!
பதிலளிநீக்குகீதா
வாசகம் மிகவும் உண்மை.
பதிலளிநீக்குபுகைப்பிடிப்பவர்களுக்கு உடல்நலம் கேடாகும் என்பது ஒருபுறம் அதை சுவாசிக்கும் நமக்கு இன்னும் கெடுதல். இங்கே சின்ன சின்ன - முன்பு பெட்டிக்கடைகள் என்று சொல்லப்பட்டவை இப்ப கொஞ்சம் விஸ்தாரமாக....யுவ யுவதிகள் கூடும் இடமாக, இருவருமே ஸ்டைலாக ஒரு கையில் பாலில்லா தேநீரும், மறு கையில் சிகரெட்டுமாக இழுத்துப் புகை விடுவதைப் பார்க்கலாம். தினமுமே எல்லா நேரமுமே. நமக்கு அக்கடையில் எதுவும் வாங்க முடியாது.
என்னவோ உச்ச நீதி மன்றம் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சட்டம் கொண்டு வந்தது பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என்று ஆனால் எல்லாரும் சர்வ சாதாரணமாகப் பிடிக்கிறார்கள். அரசு என்னவெல்லாமோ சட்ட திட்டங்கள் புதிய திட்டங்கள்னு கொண்டு வரவங்க இந்தப் பொதுநலத்துக்கும் சட்டம் வலுவாகக் கொண்டுவந்தால் நல்லது.
கீதா
தொடர் பற்றிய ஊகம் இருந்தாலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஎன்ன வாசகம் எழுதி வைத்தாலும் தானாகத் திருந்தினால்தான் உண்டு.
நான் நெடுந்தூரப் பயணத்தில் முன்பு செய்ததுண்டு இப்படி துண்டைக் காயப் போட்டது ஹேங்கர் அலல்து க்ளிப் வைத்துக் கொண்டு ஜன்னல் காட்சிகள் மறைக்காமல் இருக்க....என்று. இப்போது அப்பழக்கம் மாறிவிட்டது.
கீதா