சனி, 9 மே, 2020

காஃபி வித் கிட்டு – புத்தர் – இப்படியும் ஒருவர் – விளம்பரம் – மின்னூல் - காதலென்பது


காஃபி வித் கிட்டு – பகுதி 66


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

எதையும், ஆழமாக நேசிக்காதே - துன்பப்படுவாய்! எதையும், ஆழமாக யோசிக்காதே - குழம்பி விடுவாய்! எதையும், எங்கும் யாசிக்காதே -  அவமானப்படுவாய் – புத்தர்.

மனிதர்கள் பலவிதம் – பெண் அதிகாரி:

எனக்குத் தெரிந்த ஒரு அலுவலகத்தில் ஒரு பெண்மணி உயர் அதிகாரியாக இருக்கிறார்.  அலுவலகத்திற்கு வந்தே ஆக வேண்டும் என தனக்குக் கீழ் பணிபுரியும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் – வேலை இருக்கிறதோ இல்லையோ, ஊரடங்கு இருந்தாலும் அலுவலகத்திற்கு வந்தே ஆக வேண்டும்.  அவரிடம் பணிபுரியும் ஒரு நபர் ஊரடங்கு இருக்கிறது, நோய் தொற்று அதிகம் இருக்கிறது, வேலைகளை வீட்டிலிருந்தே செய்ய நான் தயாராக இருக்கிறேன் – பிறகு எதற்கு அலுவலகம் வர வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க, வருவதற்கு எதற்கு தயக்கம் என மீண்டும் கேட்டாராம்.  பயமா இருக்கே – வேலை தான் முக்கியம் என்பது சரி தான் – அதை வீட்டிலிருந்தே நான் செய்யத் தயாராக இருக்கிறேன் – அலுவலகத்திற்கு வந்து தான் செய்ய வேண்டும் என்பதில்லையே – அலுவலகத்திற்கு வந்து தொற்று வந்துவிட்டால் கஷ்டம் தானே என்று கேட்க, அந்த பெண் உயர் அதிகாரி சொன்ன பதில் –

“எதுக்கு பயப்படணும், செத்துடுவோம்னு பயமா? செத்தா செத்துட்டு போறோம் – அதுவும் இன்னும் கல்யாணம் கூட ஆகலையே? உன்னை நம்பி யார் இருக்கா? யாரும் இல்லை. அதனால் பயப்படாம அலுவலகம் வா! செத்தா போயிட்டே இருக்கலாம்! யாரும் உன்னை நினைத்து அழப் போவதில்லை!” என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறாராம்! என்னே ஒரு நல்ல எண்ணம்.  இப்படியும் ஒரு பெண்மணி!  

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:

தாய்லாந்து நாட்டின் ஒரு இன்ஸூரன்ஸ் விளம்பரம்.  அல்சைமர் நோய் தாக்கிய ஒரு பெண்மணி எப்போதும் தன் கணவரைப் பார்த்துக் கேட்கும் கேள்வி – நீ யார்?  ஆனாலும் எந்தவித கோபமும் இல்லாமல் தொடர்ந்து தனது மனைவியை கவனித்துக் கொள்ளும் அந்த கணவர்.  மனதை தொட்ட ஒரு விளம்பரம் – பாருங்களேன்.



அடுத்த மின்னூல் – பீஹார் டைரி

பீஹார் டைரிஎன்ற என்னுடைய பதினான்காவது மின்னூல் இப்போது அமேசான் தளத்தில்.... பீஹார் டைரி மின்னூல் வழி நான் உங்களை அழைத்துச் செல்லப் போவது பீஹார் மாநிலத்திற்கு! அட பீஹார் மாநிலத்திற்கா? அங்கே சுற்றுலா செல்பவர்கள் கூட உண்டா என உங்களில் சிலர் நினைக்கலாம்! பீஹார் என்றால் பெரும்பாலும் நினைவுக்கு வருவது புத்தகயா (Bபோத் Gகயா) மற்றும் நாளந்தா. பௌத்த சமயத்தினைச் சேர்ந்தவர்கள், இந்துக்கள் என இரு சமயத்தவர்களும் சென்று வரும் இடம் இந்த புத்தகயா. அதைத் தவிர பீஹாரில் பார்க்க ஒன்றுமே இல்லை என சிலர் நினைக்கலாம். பீஹாரிலும் சில இடங்கள் உண்டுகுறிப்பாகச் சொல்வதானால் ராஜ்கீர், பட்னா சாஹேப், பாவாபுரி (அபாபுரி) போன்ற இடங்கள் உண்டு. கூடவே பீஹாரிலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சில அழகான இடங்கள் பார்க்க உண்டு.

ஒரு நவம்பர் மாதத்தில் நானும் கேரளத்திலிருக்கும் நண்பர் ஒருவருமாக இந்த பீஹார்ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு ஐந்து நாள் பயணமாக திட்டமிட்டு சென்று வந்தபோது கிடைத்த அனுபவங்கள் ஏராளம். வாருங்கள் பீஹார் மாநிலத்தில் ஒரு உலா வரலாம் இந்த பீஹார் டைரி மின்னூல் வழி. இந்த மின்னூல் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கலாம்! புத்தகத்தினை தரவிறக்கம் செய்யப்போகும்/செய்து கொண்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. வலைப்பூவில் எழுதிய போது கருத்துகளைப் பகிர்ந்து என்னை ஊக்கப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் புத்தகத்தில் பீஹார் மாநில அனுபவங்கள் மட்டும்! ஜார்க்கண்ட் அனுபவங்கள் தனி மின்னூலாக தொடர்ந்து வெளிவரும் என்ற தகவலையும் சொல்லி விடுகிறேன். தொடர்ந்து மின்னூல்களை தரவிறக்கம் செய்து வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

தரவிறக்கம் செய்ய சுட்டி -


கூடவே இன்னும் ஒரு தகவலும்:  கடைசி கிராமம் மின்னூல் வரும் திங்கள் கிழமை மதியம் வரை அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!

படித்ததில் பிடித்தது:

எப்போதோ எங்கோ ஒரு புத்தகத்தில் படித்தது. கிருபானந்த வாரியார் பற்றி. வாரியார் அவர்கள் கதா காலட்சேபம் என்று மிகவும் பிரபலமாகவும் இருந்த நேரம் அது. காரில் ஏறி ஊர் ஊரக கோவில்களுக்கு சென்று ஆன்மீக கதைகளை கூறிக்கொண்டு இருந்தார். அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பி வழியும். அவர் சிலேடை பேச்சுக்கும் பேர்போனவர்.

அப்படி ஒருமுறை அவர் பிரசித்தி பெற்ற ஊரை நோக்கி செல்ல எண்ணி வாகனத்தில் ஏறிவிட்டார். உடன் மூவரும் உண்டு. அந்த நேரம் பார்த்து வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. ட்ரைவர், கார் பேட்டரி இறங்கி விட்டது, தள்ளிவிட்டால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்றார். உடனே மீதமிருந்த மூவரும் இறங்கி தள்ள ஆரமித்தனர். அதைப்பார்த்த வாரியார் அவர்களும் தானும் இறங்கி காரை தள்ள எத்தனித்தார். 'ஸ்வாமி.. நீங்கள் அமருங்கள்... நாங்கள் இருக்க நீங்கள் தள்ளுவதா? ' என்று வேண்டினர்.

அதற்கு வாரியார் அவர்கள், தன்னுடைய நகைச்சுவை பேச்சால், "நானும் தள்ளுகிறேன்... எந்நாளும் இயலும்... இல்லாவிட்டால் நீங்கள் வேறெங்காவது, நான் 'தள்ளாதவன்' என்று கூறிவிடுவார்கள்" என்று கூறிவிட்டு சிரித்தார். உடன் இருந்தோரும் சிரித்தனர்.

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2011-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவிலிருந்து…

அந்தப் பெண் தனது சகோதரர்களிடம் விஷயத்தைக் கூற அவர்களும் இவரை எச்சரித்திருக்கிறார்கள். சிறிது நாட்கள் சும்மா இருந்த ரமேஷ் சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவில் அந்தப் பெண் வீட்டிற்குச் செல்லும்போது அவரை பின் தொடரவும் பெண்ணின் சகோதரர்கள் இவரைத் தாக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

கை, கால்களில் அடித்தது மட்டுமில்லாமல் ஒரு கத்தியை எடுத்து வயிறு, மார்பு, இடுப்பு, முகம், தலை என்று ஐந்து இடங்களில் சரமாரியாகக் குத்தி இருக்கின்றனர். உடல் எங்கும் ரத்தம் அருவியாய்க் கொட்ட, இவர் தடுமாறியபடி விழவும், தாக்கியவர்கள் ஓடி விட்டார்களாம். சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த யாரோ காவல்துறைக்குச் தகவல் அனுப்பவே இவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

இத்தனை நடந்தும், அவரின் அம்மா, மற்றும் நண்பர்கள்அந்தப் பெண் யாருன்னு சொல்லு , பதிலுக்கு நாங்களும் ஏதாவது செய்கிறோம்! " என்று கேட்டதற்கு சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாயிருக்கிறாராம். முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

44 கருத்துகள்:

  1. நானாக இருந்தால் அந்த அதிகாரியை ஏதாவது கொரோனா நோயாளியை கட்டிப்புடி பார்க்கலாம் என்று கேட்டு இருப்பேன். அவளுக்கு வாழ்க்கையில் விரக்தியாக இருக்கலாம் என்பதற்காக எல்லோரையும் இப்படி நினைக்கலாமா ?

    காதலென்பது படித்தேன் அடப்பாவி இப்பொழுது அவன் உயிரோடு இருப்பானா ?

    மின்நூல்கள் தொடர வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானாக இருந்தால் அந்த அதிகாரியை கொரோனா நோயாளியை கட்டிப்பிடிக்கச் சொல்லி இருப்பேன் - ஹாஹா.. இது நல்ல யுக்தியாக இருக்கிறது கில்லர்ஜி. அந்த அதிகாரிக்கும் திருமணம் நடந்து குழந்தைகளும் உண்டு கில்லர்ஜி.

      அடப்பாவி - அவன் இப்போழுது உயிரோடு இருப்பானோ? தெரியவில்லையே!

      மின் நூல்கள் - வாழ்த்துகளுக்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. அரசாங்கமே அந்தப் பெண்மணி போல சொல்லலாம்...!

    வாரியார் நகைச்சுவை உட்பட மற்றவைகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரியார் நகைச்சுவையும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. உண்மையும் கூட. ஆழமாக நேசித்தால் பெரும்பாலும் துன்பங்கள்தான். சில இடங்களில் அது சிறப்பாக போற்றப்படுகிறது. ஆனால் அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே..!

    பெண் உயரதிகாரியும் தன் கீழ் வேலை பார்ப்பவரிடம் அவர் மனம் நோகுமே என எண்ணாது கொஞ்சம் ஆழமாகத்தான் பேசியிருக்கிறார். ஹா. ஹா.ஹா. என்ன செய்வது..இப்படியும் சிலர்.

    தாய்லாந்து விளம்பரம் நன்றாக உள்ளது. மனைவி கணவரின் சேவைகளுக்கு ஒத்துழைத்தாலும், நடுநடுவில் கேள்விகள். இவரும் விடாமல் மனைவியை ஆழமாகத்தான் நேசிக்கிறார்.

    தங்களின் அடுத்த மின்னூலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் பயண கட்டுரைகள் ஒவ்வொன்றாக மின்னூலாக வெளிவருவது மகிழ்ச்சியே.. பாராட்டுக்கள்.

    படித்ததில் பிடித்தது... திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சிலேடைப் பேச்சு எனக்கும் பிடித்தது.

    பின்னோக்கிப் பார்த்தேன். இதைதான் காதலுக்கு கண்ணில்லை என்பார்களோ? அவர் திருந்தியிருப்பரா இல்லை, இன்னும் அதே ஆழத்துடன் தன் முயற்சியில் வெற்றி அடைந்திருப்பாரா? தெரியவில்லை. ஆனாலும் அவருக்கு நலம் விளைகவென அவரை வாழ்த்துவோம்.

    இன்றைய தினம் முதலில் தந்த வாசகத்திற்கு ஏற்றாற்போல் ஆழமான பொருளுடைய பகுதிகளாக சுவாரஷ்யமளித்தன. இன்றைய காஃபி வித் கிட்டு சுவையான பதத்துடன் அருமையாக இருக்கிறது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. (அடாடா நான் இன்னமும் காஃபி தயாரித்து குடிக்கவே இல்லையே என்பது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அந்தளவிற்கு தங்கள் காஃபி பதிவு என்னை அமர வைத்து விட்டது. ஹா.ஹா.ஹா. )

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பலர் தாங்கள் பேசுவது மற்றவரை காயப்படுத்தும் என உணர்வதே இல்லை.

      விளம்பரம் - மனைவியை நேசிக்கும் கணவர் - உண்மை தான். எத்தனை பொறுமை அவருக்கு.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்தமாதிரி அமைந்ததில் மகிழ்ச்சி.

      அடடா காஃபி அருந்தாமல் இங்கே காஃபியை ரசித்துக் கொண்டு இருந்தீர்களா? ஹாஹா...

      நீக்கு
  4. புத்தரின் வார்த்தைகள் எளிமை, உண்மை.

    அந்த அதிகாரி போல அல்லாமல் வேறு சில காரணங்களால், அதே சமயம் மோசமான வார்த்தைகள் எல்லாம் சொல்லாமல் இதே நடவடிக்கை எங்கள் அலுவலகத்தில்.

    விளம்பரம் அருமை.

    மின்நூல் வரிசைகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    வாரியார் - எப்பவுமே சூப்பர். அவர் எங்கள் இல்லத்துக்கு ஒருமுறை வந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தரின் வார்த்தைகள் - எளிமை/உண்மை - ஆமாம் ஸ்ரீராம்.

      அந்த அதிகாரிகள் போல பலரும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை தான்.

      விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - வாழ்த்திய உங்களுக்கு நன்றி.

      ஆஹா உங்கள் இல்லத்திற்கு வாரியார் வந்திருக்கிறாரா? நல்ல விஷயம் தான்.

      நீக்கு
  5. அருமையான வாசகம். மனைவிக்கும் உள் மனதில் இது தன் கணவன் தான் என்பது நினைவில் இருக்குமோ? ஆனாலும் இது ஒரு கொடுமைதான். அந்த உயர் அதிகாரி போலப் பலர் எல்லா ஊர்களிலும் ஓரிருவராவது இருப்பார்கள். அவருக்குத் தனிப்பட்ட வாழ்க்கையோ, குடும்பமோ இல்லையோ? அதனால் கூடக் குடும்பத்தின் அருமை தெரியாமல் போயிருக்கலாம். அவருக்கு இல்லை என்பதால் மற்றவர் அனுபவங்களைப் பொறுக்க முடியாமல் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா..

      விளம்பரம் - அனைத்தும் மறந்து போவது கொடுமை தான்.

      அந்த அதிகாரிக்கு குடும்பம் குழந்தைகள் உண்டு கீதாம்மா...

      நீக்கு
  6. மின் நூல்கள் பற்றிய தகவல்களை முகநூலிலும் படித்தேன். காதல் என்பதற்கு வரையறை இல்லை என்பதும் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்பதையும் இந்த ரமேஷ் மூலமாகத் தெரிந்து கொண்டேன். ஆனாலும் வீணாக அவர்களைப் பழிக்குப் பழி எனத் தாக்கி அவர்கள் அளவுக்கு நாமும் கீழே இறங்க வேண்டாம் என்னும் நல்ல எண்ணமாகவும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலென்பது - நாமும் கீழே இறங்க வேண்டாம் என்ற நல்லெண்ணமாகவும் இருக்கலாம் - லாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. வாரியாரின் இந்த நகைச்சுவை பற்றிப் படித்திருக்கேன். மின்னூல்கள் வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரியாரின் நகைச்சுவை -முன்னரே படித்திருக்க வாய்ப்பு இருந்தாலும் மீண்டும் படித்து ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. மிக அருமையான விளம்பரம்! மனதை நெகிழ்த்தி விட்டது. அந்த கணவரின் முகத்தில் எத்தனை உணர்வுகள்!
    மின்னூல்கள் மென்மேலும் தொடர இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை நெகிழ்த்திய விளம்பரம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா...

      மின்னூல்கள் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  9. இப்படி மனிதாபமானமற்ற ஒரு பெண்மணியா? மனதை தொட்ட ஒரு விளம்பரம். கிருபானந்த வாரியரின் நகைசுவை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையும் இப்படி அடுத்தவர் மனம் புண்படும்படிச் சொல்வது சிலருக்கு வழக்கமாக இருக்கிறது.

      விளம்பரம்/நகைச்சுவை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  10. காபியின் கருத்தும் புத்தரின் வாக்கும் அருமை.

    முதலில் அந்த பெண்மணிக்கு கொரோனா வர வேண்டும்.

    விளம்பரம் அருமை. ஒரு குறும்படத்தின் கருத்தை அப்படியே தன்னுள் உள்ளடக்கியிருக்கிறது. இந்த மாதிரி காதலெல்லாம் நமக்கு வாய்ப்பதில்லையே?

    மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

    காதலென்பது என்னவென தெரியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபியின் கருத்தும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.

      அவர்களுக்கு கொரோனா வர வேண்டும் - எதற்கு? எவருக்கும் வரவேண்டாம் சிகரம் பாரதி. நல்லதையே நினைப்போம்.

      விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் வெளியீடு - வாழ்த்தியமைக்கு நன்றி.

      காதலென்பது என்னவென தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் - :)

      நீக்கு
  11. இந்த வார ‘காஃபி வித் கிட்டு’ வில் வழக்கம் போல் அனைத்தும் அருமை’ புத்தரின் அறிவுரைகளை நானும் இரசித்தேன். தன்னுடன் பணியாற்றுவோரின் நலம் பற்றி கவலைப்படாத அந்த பெண் அலுவலர் பிறரின் துன்பத்தில் இன்பம் காணுபவர் போலும்.காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரம் மனதை தொட்டது. தங்களது கடைசி கிராமம் மின் நூலை பதிவிறக்கம் செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

      பெண் அலுவலர் - :( என்ன சொல்ல. இப்படியும் சிலர்.

      விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      கடைசி கிராமம் - மின்னூல் தரவிறக்கம் கொண்டதற்கு நன்றி. படித்து விட்டு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.

      நீக்கு
  12. மின்னூல் வெளியீடுக்குப் பாராட்டுகள்.

    அந்தப் பெண்ணுக்கு வீட்டில் என்ன பிரச்சனையோ. ஹா ஹா... அல்லது அந்த அலுவலகத்தில் அந்த்ப் பெண்மணி கீழ் பணிபுரிபவர்கள் எல்லோருக்கும் அஷ்டமத்தில் சனியோ என்னவோ.

    வாரியார்.... கடைசியாக லண்டன் டிரிப் செல்ல விமானநிலையத்துக்கு வந்தபோது, அதற்கு முந்தைய நாள் வரை பாக்கி இருந்த பணத்தை சேரிட்டிகளுக்கு ஒதுக்கு, இத்துடன் கணக்கை நேர் செய்துவிட்டேன் என்று சொல்லிக்கோடே விமானம் ஏறினாராம்.

    'காதல்' என்பதையே 'பைத்தியம்' என்றுதான் சொல்வார்கள் (அவர் ஒரு காதல் பைத்தியம் என்பது போல). அதுனால லாஜிக் எல்லாம் பார்க்க முடியாது. அது நல்ல மனதா இல்லை உடல் தேறியபிறகு மீண்டும் கஜினி படையெடுப்பா என்பதெல்லாம் தெரியாமல் என்ன கருத்து சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் வெளியீடு - பாராட்டியதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      அவரிடம் பணிபுரிபவர்களுக்கு அஷ்டமத்தில் சனி - ஹாஹா. இருக்கலாம்!

      வாரியார் - கணக்கை நேர் செய்த தகவல் நன்று.

      காதல் என்பதையே பைத்தியம் என்ரு தான் சொல்வார்கள் - ஹாஹா... லாஜிக் எல்லாமல் பார்க்க முடியாது தான்.

      நீக்கு
  13. வாசகம் அருமை.காணொளி நெகிழ்வு.
    அதிகாரி இப்படியும் இருக்கிறார்களா ஈவு இரக்கம் இல்லாமல் பெண்கள் என்று எண்ண வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம்/காணொளி பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      இப்படியும் சில பெண்கள் - உண்மை தான். மனிதர்கள் பல விதம் - வேறென்ன சொல்ல.

      நீக்கு
  14. காதல் ஒரு தலை காதலாக இருந்தாலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தும் நல்ல உள்ளம் வாழ்க!
    மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் ஒரு தலை காதலாக இருந்தாலும் வாழ்த்திய ந்ல்லுள்ளம் வாழ்க - அதே தான்.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  15. வாரியார் நகைச்சுவை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரியார் நகைச்சுவை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  16. வாரியார் குழந்தைகளிட ம் கேள்வி கேபார் அவர்கள்சரியாக் பத்ல்சொன்னால் ஏதாவது நூலைதுக்கிபோடுவார் போடும்போதுஒருகண் புகைப்படக்காரரிடமிருகும் போட்டா(டோ) புடிச்சுக்கோ என்று கூறு வார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. அந்த உயர் அதிகாரிக்கு மனதளவில் ஏதோ பாதிப்பு இருக்கலாம்.
    அல்சைமர் நோயாளர்கள் பார்ப்பதற்கு மிகுந்த வருத்தமாக இருக்கும். சென்னை வெள்ளத்தை வைத்து படம் ஒன்றும் வந்ததே.
    மின் நூல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காப்பியுடன் வாசகங்கள்,
      புத்தரின் பொன்மொழி இவை மிகச் சிறப்பு.

      அந்தப் பெண் அதிகாரியின் ஈரமற்ற இதயம் வருத்தம் தருகிறது.

      மாறுவார் என்று நம்புவோம்.

      அல்சைமர் விளம்பரம், கணவரின் கரிசனம் ,பொறுமை நம்மை
      நெகிழ வைக்கிறது.

      காதலென்பது மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
      மின்னூல்களுக்கு வாழ்த்துகள் வெங்கட்,.

      நீக்கு
    2. உயர் அதிகாரிக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை - இப்படியும் சிலர் மாதேவி.

      அல்சைமர் - கொடுமை தான். பாதித்தவர்களை நானும் சந்தித்து இருக்கிறேன்.

      சென்னை வெள்ளத்தினை வைத்து வந்த படம் - எனக்கு பார்த்த நினைவில்லை.

      மின் நூல் - வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    3. காஃபி வாசகம்/பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      பெண் அதிகாரி - மாறினால் நல்லதே.

      விளம்பரம் - நெகிழ வைத்தது தான் இந்த விளம்பரம்.

      காதலென்பது - முடிந்த போது படித்துப் பாருங்கள்.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  18. புத்தரின் வாசகம் அற்புதம். 14வது மின்னூலுக்கு வாழ்த்துகள். காயப்பட்டாலும் காதலியை காட்டிக் கொடுக்காத அவரை நல்ல பண்பாளர் என்பதா? உண்மையான காதலர் என்பதா? மிகவும் நெகிழ்ச்சியான விளம்பரம். அந்த கணவரின் புன்னகையில்  எவ்வளவு ஆதூரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தரின் வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா..

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி.

      காதலியை காட்டிக்கொடுக்காத காதலர் பண்பாளராகவே இருக்க வேண்டும்.

      விளம்பரம் - கணவரின் புன்னகையில் எவ்வளவு ஆதூரம் - உண்மை தான். சிறப்பாக நடித்திருக்கிறார்கள் இருவருமே. நல்ல குறும்படம்.

      நீக்கு
  19. உங்க புக் நிறைய பெண்டிங் படிக்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படியுங்கள் எல்.கே. படித்து உங்களு கருத்துகளையும் சொல்லுங்கள். நன்றி.

      நீக்கு
  20. //எதையும், ஆழமாக நேசிக்காதே - துன்பப்படுவாய்! எதையும், ஆழமாக யோசிக்காதே - குழம்பி விடுவாய்! எதையும், எங்கும் யாசிக்காதே -  அவமானப்படுவாய் – புத்தர்.//ஐயா இது யாரோ புத்தர் சொன்னது என்று இடை செருகல் செய்தது என்று நினைக்கிறேன். (ஒரு வேளை எங்கள் பிளாக் கவுதமன் ஆக இருக்குமோ? ) 

    புத்தர் ஆழ்ந்து யோசித்தபின் தான் ஞானம் பெற்றார். தன்னுடைய உணவை அவர் யாசித்தே பெற்றார். இம்முறை தற்போதும் துறவிகளால் பின்பற்றப்படுகிறது.
     முதல் வாக்கியம் சரி என்று தோன்றுகிறது. நேசிப்பே துன்பங்களின் முதற்காரணம். அதை விட்டால் தான் துறவியாக  முடியும் என்றுமனைவியையும் மகனையும் நள்ளிரவில் பிரிந்து சென்றவர் கௌதம புத்தர். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  21. வெங்கட்... நீங்க இந்த காஃபி வித் கிட்டு - இதனை ஒரு மின்னூலாக ஆக்க முயலுங்கள். சிலவற்றை எடிட் செய்து நீக்கிவிட்டால் மிக அருமையான கலவையாக அந்தப் புத்தகம் மிளிரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு - மின்னூலாக! பார்க்கலாம் - முதலில் பயணக் கட்டுரைகளை மின்னூலாக்கும் முயற்சியில் இருக்கிறேன். அதை முடித்த பிறகு இதையும் செய்யலாம் நெல்லைத் தமிழன். கதை மாந்தர்களையும் மின்னூலாக்கும் எண்ணம் உண்டு.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....