வெள்ளி, 1 மே, 2020

அந்தமானின் அழகு – லக்ஷ்மண்பூர் கடற்கரை - சூர்யாஸ்தமனம்…



சூரியாஸ்தமனம் சமயத்தில்...


வீழ்ந்து கிடக்கும் ஒரு மரத்தின் பகுதிகள்...

அந்தமானின் அழகு – பகுதி 26



அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம்.

கடற்கரையில் ஒரு கோடை மாலை

சூரியனே...!
நீ ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும்போது
நீலக்கடல் பெண்ணுக்கு நீ தரும் முத்தம்...
நித்தம் நித்தம் தொடர்கிறது.
உன் இதழ் தந்த முத்தத்தால் தான்...
இழக்கிறாளோ? நீலக்கடல் பெண்...
தன் நிறத்தைக் கூட...! ”

. மோகன்
 

இது என்ன பூவோ?...


உன்னோடு நான் சேரவா எனக் கேட்கிறதோ மேகக் கூட்டம்?


லக்ஷ்மண்பூர் கடற்கரை எண் இரண்டில் அமைந்திருக்கும் இயற்கை வடித்த பாலம் பார்த்த பிறகு எங்கள் குழுவினர் அனைவருமே எங்கள் தங்குமிடம் நோக்கித் திரும்பினோம்.  அந்தமான் தீவுகளில் காலை சீக்கிரமாகவே சூரியன் வந்து விடும். அதைப் போலவே மறைவதும் சீக்கிரமே என்பதால் மாலை சூரியன் அஸ்தமிக்கும் காட்சியைக் காண நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட் பின்புறம் இருக்கும் கடற்கரையான லக்ஷ்மண்பூர் கடற்கரை எண் ஒன்றில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சிகளைப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.  வண்டி எதுவும் அவசியம் இல்லை.  தங்குமிடத்தின் பின்புறம் சென்று கடற்கரை ஓரமாகவே நடந்தால் சூரியன் அஸ்தமிக்கும் காட்சிகளையும், கடற்கரையின் அழகையும் ரசிக்க முடியும்.  அன்றைய தினத்தின் கடைசி நிகழ்வு இது தான் என்பதால் பொறுமையாக கடற்கரையில் இருந்து காட்சிகளைக் கண்டு தங்குமிடம் திரும்பலாம்.  நாங்களும் தங்குமிடம் திரும்பி கொஞ்சம் ஃப்ரெஷ் ஆனபிறகு தங்குமிடத்தின் பின்னே இருக்கும் வழி வழியே கடற்கரையை அடைந்தோம். 


மேகக் கூட்டம்...


இந்த டிசைன் உங்களால் போட முடியுமா? இயற்கை வடித்த ஓவியம்...


இயற்கை வடித்த ஓவியம் - இன்னுமொரு காட்சி...


எங்கள் தங்குமிடத்தின் பின்னர் ரிசார்ட் உரிமையாளர்கள் நிறைய மர பெஞ்சுகளைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.  அந்த பெஞ்சில் படுத்துக் கொண்டு, ஓயாது உழைக்கும் கடலைப் பார்க்கப் பார்க்க ஆனந்தம்.  கடல் அன்னைக்கு ஓய்வே கிடையாது. தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறாள் கடல் அன்னை! காலை நேரத்தில் நாங்கள் அங்கே சென்ற போது உள்வாங்கியிருந்த கடல் கரை தொடும் அளவிற்குத் தண்ணீருடனும் அலையுடனும் காட்சி அளித்தது.  நாங்கள் எவ்வளவு தூரம் நடந்து உள்ளே சென்றிருக்கிறோம் எனப் பார்த்தபோது பிரமிப்பாகவும், கொஞ்சம் பயமாகவும் இருந்தது.  கடற்கரையில் நிறையவே தாழம்பூ செடிகள் மண்டிக் கிடந்தன.  தாழம்பூ இருந்தால் சுப்புக்குட்டிகள் (பாம்புகள்) இருக்கும் எனப் பேசிக் கொண்டே நடந்தோம்.  ஆங்காங்கே பெரிய மரங்களின் அடிப்பாகம் கடற்கரையில் இருப்பதைப் பார்க்கும்போது மனதுக்குள் ஒரு சோகம் – எத்தனை வருடங்கள் கரையில் அம்மரம் கோலோச்சி நின்றிருக்கும்.  ஏதோ ஒரு நாள் கீழே வீழ்ந்து போன மரம், நிலையாமையைச் சொல்வது போல ஒரு உணர்வு.  மரங்களைப் போலதானே மனிதனின் வாழ்வும் – என்றைக்கு வீழ்ந்து போகும் இந்த உடல் என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை அல்லவா.


கடற்கரையில்...









அப்படியே இருந்து விடலாம் எனத் தோன்றிய சமயத்தில்...

அப்படி இருந்த மரங்களின் அடிபாகங்களில் குழுவினர் பலரும் அமர்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். நானும் அந்த மரத்தின் அடிபாகத்தில் அமர்ந்தும் படுத்தும் இருந்த போது நண்பரின் மகள் சில படங்கள் எடுத்தார்! அவற்றில் சில இந்தப் பகுதியில் இணைத்திருக்கிறேன்.  எந்த வித கவலைகளும் இன்றி கடற்கரையில் அந்த மாலை நேரத்தில் நடந்து கொண்டிருந்தோம்.  எங்கள் தங்குமிடம் இருந்த இடத்திலிருந்து சற்று தூரம் வரை கடற்கரை ஓரமாகவே நடந்து கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் கடைகள் இருக்க அங்கேயே அமர்ந்து கொண்டு கடல் மணலில் சிலர் வீடு கட்ட, சிலர் கடைகளை நோட்டம் விட, பொழுது போய்க் கொண்டிருந்தது.  கடற்கரையில் சிலர் பஜ்ஜி, பக்கோடா வகைகளை விற்றுக் கொண்டிருந்தார்கள்.  ஒரு முதிய பெண்மணியிடம் பக்கோடா வாங்கினோம் – ஒரு ப்ளேட் 50 ரூபாய் – நிறையவே இருந்தது பக்கோடா.  குழுவினரில் சிலர் மட்டும் சுவைத்தார்கள் – சுவைத்துக் கொண்டே இயற்கையையும் ரசித்துக் கொண்டிருந்தோம்.  குழந்தைகள் கடற்கரை மணலில் வீடு கட்டினார்கள் என்றால் பெரியவர்களும் வீடு கட்டினார்கள்.  இந்த மாதிரி எல்லாம் கவலைகளை மறந்து இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விட்டு விடக் கூடாது – முடிந்த வரை அனுபவித்து விட வேண்டும். 


மணல் வீடு கட்டலாம் வாங்க...



கடற்கரையில் ஓய்வெடுக்கும் செல்லங்கள்...


 கடற்கரையில் மாலை வேளையில்...

நாங்கள் இருந்த இடத்திலும் சூரியாஸ்தமனத்தினை ஓரளவு பார்க்க முடிந்தது என்றாலும், குழுவினரில் சிலர் மட்டும் இன்னும் கடற்கரை ஓரமாகவே நடந்து சூரிய அஸ்தமனத்தினை முழுதாகப் பார்க்க முடிந்த இடத்திற்குச் சென்று சேர்ந்து ஒரு நீண்ட காணொளியையும் எடுத்து வந்தார்கள்.  நீண்ட காணொளி – சுமார் 12 நிமிடங்கள் வருகிற காணொளி என்பதால்  இங்கே பகிர்ந்து கொள்ளவில்லை. முடிந்தால் அடுத்த பகுதியில் சுருக்கித் தருகிறேன்.  நிறைய நேரம் கடற்கரையில் இருந்து இயற்கை அன்னையின் கொடையினை ரசித்தோம்.  எத்தனை நேரம் அங்கே இருந்திருப்போம் எனத் தெரியாது. நேரம் போவதே தெரியவில்லை.  இருட்டிய பிறகு கடற்கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப, நாங்களும் திரும்ப வேண்டும் என்ற நினைவு வந்தது.  கடற்கரை ஓரமாகவே நடந்து திரும்பலாம் என்றால் கும்மிருட்டு அங்கே – கரையோரம் மண்டிகிடக்கும் தாழம்பூ செடி/மரங்களிலிருந்து அரவம் வந்து விடலாம் அல்லது கடல் வாழ் உயிரினங்கள் ஏதேனும் கரையில் உலாவ அதன் மீது நடந்து அவற்றை அழித்து விடலாம் – அவையும் நமக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்பதால் சாலை வழியே வரலாம் என முடிவு செய்தோம்.


இரண்டில் ஒன்று பெரியவர்கள் கட்டியது.... அது எது?

கடற்கரை அருகே இருந்த கடைகளைக் கூட மூட ஆரம்பித்து விட்டார்கள்.  அந்தக் கடைகளிலும் குழுவினர் சிலர் எதையோ பார்த்து, வாங்கிக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் எல்லோருடைய வேலைகளும்/பராக்கு பார்ப்பதும் முடிந்த பிறகு மண் சாலை வழி வெளியே வந்து நடக்க ஆரம்பித்தோம். சிறிய தீவு தான் என்றாலும் எங்கள் தங்குமிடம் வந்து சேர வழி ஒன்றும் புலப்படவில்லை. சுற்றிலும் மரங்கள், இயற்கை எழில், கூடவே கும்மிருட்டு.  ஆங்காங்கே இருக்கும் தங்குமிடங்களிலிருந்து வரும் மிதமான ஒளி தவிர வேறு வெளிச்சமில்லை.  விதம் விதமான பூச்சிகளின் ரீங்காரமும், ஓசைகளும் ஒரு அமானுஷ்ய உணர்வைத் தந்தது.  ஒரே ஒரு சாலை என்றாலும் கொஞ்சம் குழப்பம் – சரியான பாதையில் தான் செல்கிறோமா என குழப்பத்துடன் தான் நடந்தோம். சரியான திசையில் தான் செல்கிறோம் என மனம் சொன்னாலும் யாரிடமாவது கேட்கலாம் என்றால் யாருமே இல்லை.  தப்பித்தவறி ஒரு தங்குமிடம் வாயிலில் ஒரு காவலாளி நிற்க அவரிடம் கேட்க, நாங்கள் செல்வது சரியான பாதை தான் என்பதை அவர் மூலம் கேட்ட பிறகு தான் நிம்மதி.


தங்குமிடத்தின் நுழைவாயில் பகுதி...

பெரும்பாலும் அந்தமானின் தீவுகள் பாதுகாப்பானவை தான்.  பயம் தேவையில்லை.  ஆனால் ஊரே மாலை நேரத்தில் வெகு சீக்கிரம்  உறங்கி விடுகிறது! அதனால் பெரும்பாலான சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மாலை நேரம் கடற்கரையில் சூரிய அஸ்தமனம் பார்க்க அழைத்துச் சென்ற பிறகு வேறு எங்கும் அழைத்துச் செல்வதில்லை.  தங்குமிடத்தில் ஓய்வெடுக்கவோ, அல்லது சுற்றுலாப் பயணிகளின் இஷ்டப்படி இருக்கவோ விட்டு விடுகிறார்கள்.  நாங்களும் அந்த இருட்டுப் பாதையில் நடந்து எங்கள் தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.   இரவு உணவுக்கான ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பதை தங்குமிடத்தில் விசாரித்துக் கொண்டு வேறு ஒரு விஷயமும் விசாரித்தோம் – அது காலையில் சூரிய உதயம் பார்க்க எந்த கடற்கரை சிறந்தது என்பது தான்.  எங்களுடைய சுற்றுலா ஏற்பாட்டில் சூரிய உதயம் பார்க்கும் விஷயம் இல்லை.  ஏனெனில் அதிகாலை நான்கரை மணிக்கே சில சமயம் சூரியோதயம் இருக்கலாம் என்பதால் குழுவினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு செல்வது கடினம்.  அதனால் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் செல்லலாம் என நினைத்து தங்குமிடத்தில் விசாரித்தோம்.


தங்குமிடத்தின் பின்னே - பலகைகளில் அமர்ந்து கடலை ரசிக்க ஏதுவாய்...

தங்குமிடத்தில் இருக்கும் நிர்வாகி, வாகனம் ஓட்டுபவர்களிடம் விசாரித்து நாங்கள் இரவு உணவு சாப்பிட வரும்போது சொல்கிறேன் என்று சொல்லி எங்களை அனுப்பினார்.  அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்து பிறகு இரவு உணவுக்காக உணவு உண்ணும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  இரவு உணவு – சப்பாத்தி, சாதம், தால், ஏதோ ஒரு சப்ஜி, இனிப்பு என சிம்பிளாகவே இருந்தது.  உணவு முடித்துக் கொண்டு சில நிமிடங்கள் தங்குமிடத்தின் பின்னே கடற்கரையில் அமர்ந்திருந்த பிறகு அறைக்குத் திரும்பினோம்.  காலை மூன்றரை மணிக்குள் வாகனம் வந்து விடும் என்ற தகவலைத் தெரிந்து கொண்ட பிறகு தான்!  அடுத்த நாள் காலை சூரிய உதயம் பார்க்கச் சென்ற போது கிடைத்த அனுபவங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்களை ரசிக்கலாம்/நினைவு கூரலாம்! நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

36 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாமே ஸூப்பர் ஜி கடற்கரை காட்சிகள் சலிக்காது...

    பொருத்தமான கவிதையும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள்/கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

    முதல் படம் மிகவும் கவர்கிறது. சூர்யாஸ்தமனம் எவ்வளவு ஜொலிப்பு. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல உள்ளது.

    மேகக்கூட்டம் படங்களும் அருமை. பதிவை விரிவாக படித்து விட்டு பின்னர் மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. விரிவாக படித்த பின்னர் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

      நன்றி.

      நீக்கு
  3. அழகான படங்கள் ஜி... மணல் கோலங்களும் அருமை...

    பாறையில் படுத்துக் கொண்டு, கடல் காற்றை அனுபவித்து கொண்டு, தொப்பியால் முகத்தை மறைத்து... மனதில் வந்த கனவை சொல்லவில்லை ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      மனதில் வந்த கனவை சொல்லவில்லை - ஹாஹா... தூங்கினால் தானே கனவு வர! ஹாஹா...

      நீக்கு
  4. எல்லோருக்கும் கிடைக்காத அனுபவங்கள். மிகவும் சுவாரஸ்யமாகப் போயிருக்கும் அந்தப் பொழுதுகள். அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். ரொம்பவே இன்மையான பொழுதுகள் அவை.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அந்த இரண்டாவது ஸிம்பிள் வீடுதான் பெரியவர்கள் கட்டிய மணல்வீடு என்பது என் அனுமானம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... வேறு யாரும் சொல்கிறார்களா என பார்த்து விட்டு இதற்கான பதிலைச் சொல்கிறேன் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      மணல் வீடுகள் இரண்டுமே நன்றாக உள்ளது. இதில் பெரியவர்கள் கட்டியதை ஸ்ரீ ராம் சகோதரர் அனுமானித்திருப்பது சரியாகத்தான் இருக்கும்.? ஆமாம்..! எந்த இரண்டாவது வீடு.? அந்தப் பக்கமிருந்தா.. இந்தப் பக்கத்திலிருந்தா..? ஹா. ஹா. ஆனால் ஒரு வீட்டில் பெரியவர் கை தெரிந்தது. அதை வைத்துப் பார்த்தால். அந்தப்பக்கம் இரண்டாவது வீடுதான் என நானும் நினைக்கிறேன். அது ஸிம்பிளாக இல்லையே..மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறதே...!ஆனால் இரண்டிலுமே பெரியவர்களின் ரசனைகள் அங்கு துணை புரிந்திருக்கும். இல்லையா?

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      மேலே உள்ள வீடு தான் பெரியவர்கள் கட்டியது. கீழே உள்ளது சிறுமிகள் கட்டியது.

      ஸ்ரீராம் சார் எந்த இரண்டாவது சொல்லி இருப்பார் ? :) கீழேயிருந்து மேலாகவா இல்லை மேலிருந்து கீழேயா? அவரே வந்து பதில் சொன்னால் தான் உண்டு.

      நீக்கு
    4. மேலிருந்து கீழேதான்! ஸிம்பிள் வீடு என்று வேறு சொல்லி இருக்கேனே....!

      நீக்கு
    5. ஹாஹா... நானும் அதையே தான் நினைத்தேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ஓய்வு பெற்றபிறகு கொஞ்சம் பணத்துடன் தனியாக இது மாதிரி இடங்களில் போய் கொஞ்ச கொஞ்ச மாதங்கள் தங்கிவிட வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய விருப்பங்கள் நிறைவேற எனது வாழ்த்துகள் ஸ்ரீராம்.

      நீக்கு
  7. கலக்கல் படங்கள். போஸ்டர்/வால்பேப்பர்  படங்கள். அதிலும் முதல் இரண்டு படங்கள் அருமை. சாய மனமின்றி சூரியன், பசுமையும் பட்டுபோனதும் என்று மரங்கள், சரியான முறையில் பிடிக்கப்பட்டுள்ளன. உங்களுடைய குறும்பு சிரிப்பும் நன்றாக உள்ளது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்பு சிரிப்பு - :)

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  8. முதல்படம் மொபைல் போனில் எடுத்ததா. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மொபைலில் எடுத்த படம் தான் அது.

      நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  9. ஆற்றில் மணல் வீடு கட்டிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன...

    மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களுடன் இனிய பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆற்றில் மணல் வீடு கட்டிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன - காவிரி ஆற்றின் கரையில் நாங்களும் இப்படிச் செய்திருக்கிறோம் துரை செல்வராஜூ ஜி. இனிமையான நினைவுகள்.

      படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  10. கடற்கரையில் ஒரு கோடை மாலை கவிதை மிக அருமை.

    இயற்கை வடித்த ஓவியம் மிக அழகு.
    உங்கள் படங்களும் நன்றாக இருக்கிறது.
    கடற்கரையும் கடற்கரையில் எடுத்த படங்களும் அழகு.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை, படங்கள் என பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது. படிக்கும் போதே காட்சிகள் தத்ரூபமாக மனதில் ஓடும்படி அருமையாக எழுதியுள்ளீர்கள். கடலின் அழகு மனதை கவர்கிறது. நிம்மதியாக அமர்ந்து ரசிக்கும்படியாக இடங்களை அமைத்திருப்பது பார்க்கவே மனதுக்கு ரம்யமாக உள்ளது.

    நீங்கள் இருந்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. இயற்கை வடித்த ஒவியம் அற்புதம். அந்த இழைக் கோலங்கள் போட்டதும் கடல் வாழ் உயிரினமோ? செல்லங்கள் மணலில் படுத்து ஓய்வெடுத்தபடி கடலை ரசிக்கும் படம் நன்றாக உள்ளது.

    அடுத்து சூரியஉதயத்தை காண நாங்களும் உங்களுடன் தயாராக இருக்கிறோம். இன்றைய பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      இயற்கை வடித்த ஓவியம் - ஆமாம் கடல் வாழ் உயிரினம் ஏதோ ஒன்று போட்ட கோலம் தான்.

      இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. தாழம்பூவைத் தேடினேன் வெங்கட். யாரும் அதைப் படம் எடுக்கவில்லையா.
    வேறெந்தப் பயணத்தையும் விட நீங்கள் இந்தப் பயணத்தை ரசித்திருக்கிறீர்கள். உங்கள் மன
    நிம்மதியைப் படங்கள் காட்டுகின்றன.
    அத்தனை படங்களும் இயற்கையின் அழகை
    இயற்கையாகவே எடுத்திருக்கின்றன.
    ஆண்டவனுக்கும் உங்களுக்கும் நன்றி.

    பெரிய வீடு பெரியவர்களால் கட்டப் பட்டது. சிறிய வீடு சிறியவர்களால்
    கட்டப்பட்டது. சரியா;00)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாழம்பூ நாங்கள் சென்ற சமயத்தில் பூக்கவில்லை வல்லிம்மா...

      இந்தப் பயணம் ரொம்பவே ரசித்த பயணம் தான் வல்லிம்மா...

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பெரிய வீடு பெயர்களால் கட்டப்பட்டது - சிறிய வீடு சிறியவர்களால் ! சரி தான் மா...

      நீக்கு
  14. அந்தமான் புகைப்படங்கள் அழகு. விவரிக்கும் பாங்கு சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முரளிதரன்.

      நீக்கு
  15. கவிதை படங்கள் என அழகான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படமும் பதிவும் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  16. இயற்கை வரைந்த ஓவியமும் செயற்"கை" வடித்த சிற்பமும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் இரண்டுமே மனதை கொள்ளைகொள்கின்றன. !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் ப்டங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....