செவ்வாய், 12 மே, 2020

கதம்பம் – தோடு ஆர்கனைசர் – ஓவியம் – சமையல் – பேல் பூரி - ஊரடங்கு

நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

சாலைகள் எவ்வளவு அகலமானாலும், தனிமனித கட்டுப்பாடு இல்லாதவரை, விபத்துகளும், இழப்புகளும் தவிர்க்க இயலாது. இதை எப்போது உணர்ந்து கொள்ளப்போகிறோம்?

 

ஊரடங்கு-1 - 25 ஏப்ரல் 2020:

 

ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு என உத்தரவு. அடுத்து இங்கும் இருக்குமோ!! மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு இல்லை என்று தான் சொல்லணும். இன்று காலை கூட ஒரு படித்த இளைஞர்,  தற்சமயம் வீட்டிலிருந்து பணிபுரிபவர். தன் அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டு குடியிருப்பில் உள்ள பொது இடத்தில் எச்சில் துப்புகிறார். இருமும் போதும், தும்மும் போது தெறிக்கும் நீர்த்திவலைகளில் உள்ள கிருமிகள் வழியே நோய்த்தொற்று உண்டாகும் என்று டீவி, ரேடியோ என்று எல்லாவற்றிலும் சொன்னாலும் தனிமனித ஒழுக்கமும், சுகாதாரமும் எப்போது உண்டாகுமோ?

 

சரி!  எங்கள் கதைக்கு வருவோம்.

 

ரோஷ்ணி தன் காதணிகளுக்காக foam sheet-ல் ஒரு ஆர்கனைசர் செய்து அதில் காதணிகளை மாட்டி வைத்திருக்கிறாள். காலைநேரத்தில் இன்னொன்று எங்கே என்று தேடிக் கொண்டிருக்க வேண்டாமல்லவா.  அழகாக இருக்கிறதா?

 

இந்த வெயிலில் அடுக்களைக்குச் சென்று வேலை செய்யவே முடியலை. மிகுந்த புழுக்கம்! ஆனாலும் என்ன செய்வது! மகளுக்கு சட்னி, சாம்பார் இவற்றை விட இட்லி மிளகாய் பொடி தான் விருப்பம். தீர்ந்து விட்டது. நேற்று ஒருவழியாக வேலையோடு வேலையாக வறுத்து அரைத்தேன். இடைப்பட்ட நேரங்களில் தையல் வேலை. நல்ல படமாக இருந்தால் அதில் நேரத்தை கடத்துவது, என்று இப்படித்தான் எங்கள் பொழுதுகள் செல்கிறது.

 

வீட்டிலேயே இருப்போம். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். நோய்த்தொற்றை தடுப்போம்.

 

ரோஷ்ணி’ஸ் கார்னர் – மை ஃப்ரண்ட் கணேஷா - 1 மே 2020:


 

மகளின் ஓவிய முயற்சியில் இன்று!

 

கணேஷா!


ஊரடங்கு – 2:  காலை உணவில் ஒரு இனிப்பு – 27 ஏப்ரல் 2020

 

சமையலில் மட்டும் எனக்கு எப்போதுமே துணிச்சல் அதிகம்..:) புதிதாய் ஏதாவது ரெசிபி பார்க்கும் போது, என்னிடம் இருக்கும் பொருட்களாயிருந்தால் உடனே செய்து பார்த்து விடுவேன்...:)

 

சிறுவயது முதலே அம்மா வீட்டில் இல்லாத நேரங்களில் தான் இந்த மாதிரி பரிசோதனைகள் நடைபெறும்...:) அம்மாவுக்கு தெரிந்தால், "இதை வைத்து நாலு நாள் சமாளித்திருப்பேனே" என்று கடிந்து கொள்வாள்...:)

 

திருமணமாகி தில்லிக்குச் சென்றாலும் என் பரிசோதனைகள் நின்றதில்லை..:) நன்றாக வந்தால் வைத்திருந்து மாலை என்னவருக்கு கொடுப்பேன்..:)) அவரும் திட்டவும் மாட்டார்...அதேசமயம் பாராட்டவும் மாட்டார்...:) ஓகே! என்று சொன்னால் நல்லா இருக்கு! என்று அர்த்தம்...:) (18 வருட புரிதல்)..:))

 

சொதப்பலாகி விட்டால் செய்த பாவத்துக்காக கொஞ்சம் ருசித்து விட்டு, செய்த சுவடே தெரியாமல் குப்பையில் போட்டு விடுவேன்...:))

 

இட்லி அல்வா!!!

 

அப்படியொரு பரிசோதனை தான் இதுவும்..என்னவர் தான் இந்த வீடியோவை எனக்கு ஃபார்வார்டு செய்திருந்தார்.. சரி! செய்து பார்ப்போமே! என்று களத்தில் இறங்கி விட்டேன்...:)

 

நாட்டு சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.. உலர்பருப்புகளும் சேர்த்துக் கொள்ளலாம்..நான் இருக்கின்ற பொருட்களை வைத்து செய்திருக்கேன்..

 

ஊரடங்கு - 3 – 29 ஏப்ரல் 2020:

 

வாரத்தில் இரண்டு முறை வரும் தண்ணீர் கேன் சப்ளை செய்பவரிடம், "

 

சனிக்கிழமை வரலையா?? கேன் காலியாயிடுச்சு...என்றேன்.

 

நாங்க வந்தோமே! நீங்க தான் வீட்டுல இல்ல!!

 

வெளில போய் ஒன்றரை மாசம் ஆகுதுங்க! வீட்டிலயே தான இருக்கோம்! என்றேன்..:)

 

!!! பையன் உங்க வீட்டுல கேட்டிருக்க மாட்டானா இருக்கும்! என்று ஒத்துக் கொண்டார்.. இனிமே கேட்க சொல்றேன்!!

 

முன்பு இதே மாதிரி வரவில்லை என்று சொன்னால்...நீங்க வீட்டுல இருந்திருக்க மாட்டீங்க!! என்று சொல்லி சமாளித்து விடுவார்...:)

 

இந்த ஊரடங்கும், கொரோனாவும் எனக்கு எப்படி உதவியிருக்கு பாருங்க...:))

 

ஊரடங்கு – 4 : – 30 ஏப்ரல் 2020


திருவரங்கத்தில் மழை இல்லை என்றாலும் இரண்டு நாட்களாக வானம் கடுமையாக காணப்படாததால் வியர்வை மழையிலிருந்து தப்பித்து வருகிறேன்..:)

 

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருச்சி அறிவிக்கப்பட்டுள்ளது நிம்மதியைத் தருகிறது...இனி சற்றே தளர்வுகள் தந்தாலும் நாம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கணும்..

 

நம்மை அறியாமலே தொற்றிக் கொண்ட கொரோனா பீதியிலிருந்து வெளிவருவது சற்றே கடினம் தான்...ஆனால் சமூக இடைவெளியும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதும் நாம் கற்றுக் கொண்ட பாடம்..அவ்வளவு எளிதில் யாருக்கும் மறக்காது என்று நினைக்கிறேன்...எல்லாம் நன்மைக்கே!!

 

முன்பு பழங்கள் வாங்க வேண்டுமென்றால், வாரச்சந்தையிலோ அல்லது ராஜகோபுரம் அருகேயோ தான் கிடைக்கும்.. இப்போதோ வீட்டைத் தேடி ஏராளமான வியாபாரிகள் காய்கறிகளும், கீரைகளும், பழங்களும் கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர்..

 

சென்ற வாரத்தில் ஒருநாள் ஆட்டோ நிறைய வகை வகையான கீரைகள்..கட்டு 15 ரூ என்று சொன்னதில் நான் சிறுகீரை வாங்கிக் கொண்டேன்..எங்கிருந்து வருகிறார்கள் என விசாரித்ததில் குழுமணி என்ற கிராமத்திலிருந்து வருகிறார்களாம்.. இது போக அரசின் 100ரூ பண்ணைக் காய்கறிகள் வேறு வருகின்றன..நேற்றும் நான் வாங்கினேன்..தேங்காய் தனியாக 20 ரூ...ஒரு சிலர் இந்த காய்கறிகளும் நன்றாக இல்லையென சொல்கிறார்கள்.. :)

 

மாலை நேரத்து நொறுக்குத் தீனியாக அம்மாவின் செய்முறையில் 'காரப் பொரி' செய்து சுவைத்தோம்..:) இப்போதெல்லாம் அம்மா, அம்மா பற்றிய நினைவுகள் நிறையவே என்னை சுழன்றடிக்கிறது.. மகளிடம் பகிர்ந்து கொள்கிறேன்..

 

இதுவும் கடந்து போகும்!!


ஆதியின் அடுக்களையிலிருந்து… – பேல் பூரி - 1 மே 2020


மாலை நேரத்துக்கு இன்று Bபேல்பூரி!

 

நேற்றைக்கு செய்த காரப் பொரி மீதமிருந்தது..இன்று அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வட இந்திய கட்டீ மீட்டீ சட்னி (அதாங்க புளிப்பு+இனிப்பு சட்னி), பச்சை சட்னி, வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் இவற்றுடன் எலுமிச்சை சாறும் சேர்த்து கலந்துள்ளேன்..

 

சட்னிக்களை காலையிலேயே சமையல் செய்யும் போதே தயாரித்து வைத்து விட்டேன்..உருளையும் வேகவைத்து விட்டேன்...அதனால் சட்டென்று செய்ய முடிந்தது..:)

 

பொதுவாக இதில் சேவ் என்று சொல்லப்படுகிற ஓமப்பொடியும், பானி பூரியும் சேர்ப்பார்கள்..நான் என்னிடம் தற்சமயம் உள்ள பொருட்களை வைத்து செய்திருக்கிறேன்..:) இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வது!!!

 

முதன்முதலில் பேல்பூரி சுவைத்தது டெல்லியில் உள்ள பாலிகா பஜார் என்று சொல்லப்படுகிற underground marketல்...:) சென்ற ஆண்டு போன போது இந்தியா கேட்டிலும், கனாட் ப்ளேசிலும் சுவைத்தேன்...:)

 

பேல்பூரி ரெசிபி நிறைய பேர் போட்டிருந்தாலும் எனக்கு பிடித்தது hebbers kitchen...இவங்க வீடியோக்கள் எல்லாமே short & sweet..

 

பேல் பூரி

 

வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் செய்து பாருங்களேன்..


ஊரடங்கு – 5 – 4 மே 2020:


நாங்கள் இதுவரை எங்கேயும் வெளியே போகலை..காய்கறி, பழங்கள் வாசலில் வருகின்றன..நடுவில் மருந்துகள் தேவைப்பட்ட போது அருகிலுள்ள மருந்துக் கடைக்கு அலைபேசியில் சொல்லி வரவழைத்துக் கொண்டேன். அதுவும் குடியிருப்பின் கேட்டருகே சென்று வாங்கி வந்துவிடுவேன்..

 

அன்றாடம் வேலைக்குச் செல்பவர்களுக்கு வீட்டில் இருப்பது மிகுந்த சிரமம் தான்..குடும்பத் தலைவிகளுக்கோ கூடுதலான வேலைகள்..வீட்டில் இருப்பவர்கள் வேலைகளை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

 

ஒவ்வொரு நாளும் ஒருவித மனநிலை தான்..சிலநேரம் வெறுப்பாகவும், கடினமாகவும் தான் இருக்கு..ஆனால் தொற்று எண்ணிக்கை கூடாமல் இருக்க நாம் இந்த நிலையை வீட்டிலேயே இருந்து கடப்பது தான் எல்லோருக்கும் நல்லது!!

 

விளையாட்டுத்தனமாக வெளியே சென்று கண்ணுக்குத் தெரியாத வைரசிடம் வீரத்தை காட்டுவதை விட மனதால் ஒன்றுபட்டு உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்வோம்...வைரசை விரட்டுவோம்!!

 

இதுவும் கடந்து போகும்!

 

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

 

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்.

 


22 கருத்துகள்:

  1. இன்றைய வாசகத்தை மெய்ப்பிக்கும் இரண்டு விபத்முகளை இந்த ஊரடங்கு காலத்தில் நானே பார்த்தேன். அதிலொரு விபத்தை லைவாக வேறு பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகத்தினை மெய்ப்பிக்கும் இரண்டு விபத்துகள் - அடடா... அவர்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்கட்டும் ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ரோஷணியின் ஓவியத்துக்குப் பாராட்டுகள். சுவையான கதம்பம். எங்கள் ஊரில் ஒரு மீடியம் சைஸ் தேங்காய் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வரை.்்்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த ஓவியத்தினை பாராட்டிதற்கு நன்றி ஸ்ரீராம்.

      கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      இங்கே தேங்காய் 40-45 ரூபாய்க்கு விற்கிறது இப்போது.

      நீக்கு
  3. ரோஷ்னியின் ஓவியம் அருமை.
    கதம்பச் செய்திகள் வழக்கம்போல ரசனை.
    கொரோனாவிலிருந்து உலகை இறைவன் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த ஓவியத்தினை பாராட்டியதற்கு நன்றி கில்லர்ஜி.

      கதம்பச் செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      இறைவன் மட்டுமே இப்போதைய நம்பிக்கை. நலமே விளையட்டும்.

      நீக்கு
  4. காதணிகள் வரிசையாக அருமை.. மகளின் முயற்சி தொடர வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதணி வரிசை - பாராட்டுகளுக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. ஓவியம் அருமை...

    இனிப்பு, காரப் பொரி. பேல்பூரி என சுவையான கதம்பம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      சுவையான கதம்பம் - நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வாட்ஸ் அப் வழி காணொளியாக வந்திருந்தது. இங்கே இணைக்கவில்லை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  7. எப்போவும் சுட்டி கொடுப்பீங்களே..இட்லி அல்வாவுக்கு...இன்று கொடுக்கலையே..

    அதுவும் தவிர இட்லி அல்வா மனதைக் கவரவில்லை. குருமா மாதிரி தோற்றம் கொடுத்தது காரணமாக இருக்கலாம்.

    பேல் பூரி கடையில் செய்வதுபோல வீட்டில் செய்தால் வருகிறதா?

    "ஓகே' என்று சொன்னால் நல்லா இருக்குன்னு அர்த்தம்..ஹா ஹா. எங்க ஆபீஸ்லயும் என் ஸ்டாஃப் என்கிட்ட 'நீங்க பாராட்டவே மாட்டீங்க சார்' என்று சொல்வாங்க. குறை இருந்தால் சட்னு, என்ன குறை, எப்படி சரி பண்ணியிருக்கலாம் என்றெல்லாம் விலாவாரியாகச் சொல்வேன்.நல்லா பண்ணியிருந்தாங்கன்னா, 'ஓகே.. நல்லா வந்திருக்கு' என்று மட்டும் சொல்வேன். பரவாயில்லை..நம்மை மாதிரியும் ஆட்கள் இருக்கு. ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லி அல்வா - வாட்ஸ் அப் வழி காணொளி வந்தது. அதைப் பார்த்துச் செய்தது. இங்கே இணைக்கவில்லை நெல்லைத் தமிழன். அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை என்று சொன்னார் மகள்.

      வீட்டிலும் சுவையாகச் செய்யலாம் பேல் பூரி.

      நம்மை மாதிரியும் ஆட்கள் இருக்கு - ஹாஹா. ஹை ஃபைவ்! நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. அப்படி இப்படி என்று பார்ப்பதற்கும் தின்பதற்கும் அழகாக அருமையான பதிவு...

    அங்கே எங்கள் பிளாக்கில் காயத்ரி வீட்டு சிற்றுண்டியில் கேசரியைக் கண்ணில் காட்டவில்லை என்று களேபரம்....

    அது இங்கே இருக்கிறது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி.

      அங்கே கேசரி இல்லை - இங்கே வந்து விட்டது! ஹாஹா... உண்மை தான்.

      நீக்கு
  9. கதம்பம் எப்போதும் போல் மணக்கிறது.
    ரோஷ்ணியின் கை திறன்கள் அருமை.

    ஆதியின் கைவண்ணம் அருமை.

    சிலர் மசக்கை வந்த மாதிரி எப்போதும் கண்ட இடத்தில் துப்புவது மனதுக்கு வேதனையும், கோபமும் தரும் விஷயம். படித்தவர்களும் அப்படி செய்யும் போது கஷ்டமாக இருக்கிறது.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தின் மணம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      கண்ட இடத்தில் துப்பும் மனிதர்கள் - என்ன சொன்னாலும் திருந்தாதவர்கள் தான்.

      நீக்கு
  10. ஓய்வுப் பொழுதை பயனுள்ளதாக களிக்கும் உங்களுக்கும் மகளுக்கும் வாழ்த்துகள். அழகிய கை வண்ணங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  11. கதம்பதின் அழகும்,மணமும் கவர்ந்தன. ரோஷ்ணிக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். பிள்ளையாரின் கால் சற்று சூம்பினர் போல் இருக்கிறது. நான் நெல்லையருக்கு அக்கா  ஹி!ஹி! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா...

      ஓவியம் - நெல்லையருக்கு அக்கா - :) கவனத்தில் வைத்துக் கொள்ளச் சொல்கிறேன் மகளிடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....