ஞாயிறு, 3 மே, 2020

அம்மாவின் ஆசை - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா கிடைத்து விடுகிறாள். ஆனால் அம்மாக்களுக்கு தான் நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை.






இந்த ஞாயிறில் ஒரு மலேசிய குறும்படம் பற்றிய தகவலுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.  ஒவ்வொரு அம்மாவுக்கும் சில ஆசைகள் இருக்கும். பெரும்பாலானவர்கள் அந்த ஆசைகளை நிறைவேற்றுவதே இல்லை.  ஏன் அம்மாவின் ஆசை என்ன என்று கேட்பது கூட இல்லை என்பதே நிதர்சனம்.  அப்படி ஒரு அம்மா – அவர் ஒரு ஆசிரியர்.  அவர் தனது மகனிடம் தனது ஆசையாகச் சொன்னது ஒன்றே ஒன்று தான் – மகனை தனது கிராமத்திற்கு வரச் சொன்னது தான்.  அம்மா கிராமத்துப் பள்ளியில் வேலை பார்த்தவர்.  காலப் போக்கில் தனது ஊரை விட்டு, குடும்பத்தினர் நகரத்துக்குச் சென்று விட அம்மா மட்டும் சில வருடங்கள் கிராமத்திலேயே இருக்கிறார். மலைகள் சூழ்ந்த ரம்மியமான ஊர் அம்மாவின் ஊர்.  ஊரில் இருக்கும்போது பல முறை மகனை தனது ஊருக்கு அழைத்தும், மகன் ஏதோ சாக்கு-போக்கு சொல்லி வருவதே இல்லை.  அதன் பிறகு அம்மாவும் நகரத்துக்குச் சென்று விடுகிறார்.  அம்மா சொன்ன போதெல்லாம் அம்மாவின் கிராமத்துக்குச் செல்லாத மகன், ஒரு சமயம் கிராமத்திற்குச் செல்கிறான்.  அங்கே சென்ற சமயத்தில் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான்.

அந்தப் பெண் – அவனது அம்மாவிடம் பயின்ற மாணவி.  அந்தக் கிராமத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வழி கேட்க, அந்தப் பெண், டீச்சரின் மகனை அழைத்துச் செல்கிறாள்.  நேரடியாக அவ்விடத்திற்குச் செல்லாமல் வழியில் பல இடங்களைக் காண்பித்தபடியே செல்கிறாள் அப்பெண்.  நான் சுற்றிப் பார்க்க வரவில்லை என்று கடுமையாகச் சாடுகிறார் டீச்சரின் மகன்.  பிறகு கோபமுற்றதற்கு வருத்தப் படுகிறார்.  அவர் பார்க்க விரும்பிய இடத்திற்குச் சென்றாரா, அங்கே எதற்காக வந்திருக்கிறார் என்பதையெல்லாம் இங்கே சொல்லப் போவதில்லை.  ஆனால் முடிவு உங்கள் மனதை நிச்சயம் தொட்டு விடும் என்பதைச் சொல்லி விடுகிறேன்.  ரொம்பவே அழகான குறும்படம்.  மலை கிராமத்தின் அழகை ரொம்பவே சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.  பாருங்களேன்.


சுமார் 19 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படம்.  என் மனதைத் தொட்ட குறும்படம்.  உங்களுக்கும் இந்தக் குறும்படம் பிடிக்கலாம்! பார்த்து விட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.



காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


நண்பர்களே, இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? இந்தக் குறும்படம் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. குறும்படத்தின் கதை கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      குறும்படத்தின் கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  2. ஒரு பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது..

    "அன்னை நெஞ்சின் ஆசைகளை அறிந்தவரில்லை.்்்்்்்்்்்..

    அதை
    நிறைவேற்று நீயோ அந்த தாய்க்கொரு பிள்ளை"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் உங்களுக்கு நினைவூட்டிய பாடல்...

      யூவில் தேடி இப்பொழுது அந்தப் பாடலை கேட்டு ரசித்தேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வெங்கட்.
    இந்தக் குறும்படம் மனதை நெகிழ்த்திவிட்டது.
    உண்மையிலேயே மலைகள் சூழ்ந்த
    இடம் மிக அழகாக இருக்கிறது.
    அந்தப் பசுமை மனதை விட்டு நீங்க மறுக்கிறது.

    பாவம் அந்த அன்னை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா.

      குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சிம்மா...

      நீக்கு
  4. வாசகம் அருமை ஜி
    கதைச்சுறுக்கம் நன்று இதோ காண்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      குறும்படம் பார்த்து உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.

      நீக்கு
  5. முடிவில் அந்த அம்மா பேசும் இடம் மற்றும் பேசுவதும், மனதை விட்டு அகல மறுக்கிறது...

    குறும்படம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தனபாலன் - அவர்கள் பேசுவது ரொம்பவே மனதை விட்டு அகலாத காட்சி.

      படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  6. நல்ல கதையாக தோணுது. பாத்துடறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்கள் எல்.கே. எனக்கு பிடித்திருந்தது இந்த கதை. உங்களுக்கும் பிடிக்கலாம்.

      நீக்கு
    2. பாத்துட்டேன் நல்லா இருந்தது நன்றி

      நீக்கு
    3. உங்கள் பதிவும் பார்த்தேன் கார்த்திக்.

      மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. உங்களிடம் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும்... இன்றைய சூழல் இல்லாதிருப்பின், நாங்களும் சகலை குடும்பமும் இன்று காஷ்மீர் சென்று கொண்டிருப்போம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... இன்றைக்கு காஷ்மீர் சென்று கொண்டு இருக்க வேண்டியது - ம்ம்ம். சூழல் அப்படி இருக்கிறதே. நானும் சென்ற மாதத்தின் 8-ஆம் தேதி மஹாராஷ்ட்ராவில் புனே, நாஷிக், த்ரயம்பகேஷ்வர், ஷிர்டி என சென்று வந்திருக்க வேண்டியது. எல்லாம் ரத்தாகி விட்டது.

      இதுவும் நல்லதற்கே என்று எடுத்துக் கொள்வோம் தனபாலன்.

      விரைவில் சூழல் சரியாகட்டும். அதன் பிறகு ஒரு பயணம் நிச்சயம் சென்று வாருங்கள்.

      நீக்கு
  8. உங்களின் வார இறுதி பதிவுக்கு நான் பரம ரசிகன். சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார இறுதி பதிவுக்கு நான் பரம ரசிகன் - நன்றி ஜோதிஜி. தன்யனானேன்.

      அந்த குறும்படங்களை எடுத்தவர்களுக்கே எல்லா புகழும். என் வேலை தேடிப் பகிர்வது மட்டுமே!

      நீக்கு
  9. அற்புதமான காணொளி...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      நீக்கு
  10. நல்லதொரு காணொளியினை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. அம்மாக்கள் என்றாலே நல்லவர்கள் என்ற பிம்பம் ஏன்? அம்மா ஆவதால் யாரும் நல்லவராகவோ கெட்டவராகவோ ஆகப் போவதில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சிந்தனையும் சரியே.

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

      நீக்கு
  13. இந்த முறை நேரமெடுத்து குறும்படத்தை பார்த்து விட்டேன். அருமை. நாமும் போக வேண்டும் அந்த மலைக்கு....

    தங்கள் பதிவு எமது வலைத்திரட்டியில் வெளியாகி உள்ளது.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.

      வலைஒலையில் இணைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. குறும்படம் நிச்சயம் மனதைத் தொடுமெனத் தெரிகிறது காண்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல படம் - நேரம் எடுத்துப் பார்த்து விடுங்கள் - 17 நிமிடம் தான் மாதேவி.

      நீக்கு
  15. //உங்கள் மனதை நிச்சயம் தொட்டு விடும் என்பதைச் சொல்லி விடுகிறேன். ரொம்பவே அழகான குறும்படம்.//

    நீங்கள் சொன்னது உண்மை. மனதை தொட்டு விட்டது. மகன் தன் அம்மாவை நினைத்து வருத்தப்படும் போது நானும் வருந்தினேன்.

    நடித்தவர்களும் அந்த இயற்கையும் அழகும். அருமை.
    இயற்கை அன்னையும் அழகு , அன்னையின் எண்ணமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிகர்களின் நடிப்பும் இயற்கையின் அழகும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....