திங்கள், 1 நவம்பர், 2021

மதுரைக்கு ஒரு பயணம் - ஆதி வெங்கட் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“கவலையுடன் போராடுவது எப்படி என்று தெரியாதவர்கள் இளமையைத் தொலைக்கிறார்கள்” - Dr. அலெக்ஸிஸ் காரல்.


******




மதுரைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று 


சென்ற பகுதியில் மதுரைக்கு ரயிலில் பயணித்த அனுபவங்களையும், நெடுநாட்களுக்குப் பின் சொந்தபந்தங்களை கண்டுகளித்து மகிழ்ந்ததையும் பகிர்ந்து கொண்டிருந்தேன். வாருங்கள்! மீதிக் கதைகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.




எங்களுக்காக தரப்பட்ட அறைக்கு வந்து உடை மாற்றி படுக்கை விரிப்புகளை போட்டு படுத்தாச்சு. மகள் உடனே தூங்கி விட, புதியதோர் இடத்தில் இருப்பதால் எனக்கு தூக்கமே வரவில்லை..:) புரண்டு கொண்டே தான் இருந்தேன்..:) எப்போதுமே எனக்கு இப்படித்தான்..:) செட்டாக இரண்டு நாட்களாகும்! அதற்குள் அந்த இடத்திலிருந்து கிளம்பி விடுவோம்..:) ஹா..ஹா..ஹா.. நீங்கள் எல்லோரும் எப்படி??


அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து அறைக்கதவை திறந்து பார்த்தேன்! வெளிச்சம் ஒன்றும் இல்லை! சரியென்று மீண்டும் படுத்துக் கொண்டேன். 5 மணிக்கெல்லாம் வெளிச்சமும், எல்லோரின் குரல்களும் வரிசையாக கேட்க, எழுந்து பிரஷ் செய்து விட்டு தண்ணீர் குடிக்க வெளியே வந்தேன். 'தூங்கினியா கண்ணு!' இல்ல மாமி! இடம் மாறி படுத்ததால தூக்கமே வரல! என்றேன். இங்க வந்திருக்கலாம்ல! 2 மணி வர எல்லாரும் பேசிண்டு தான் இருந்தோம்..:) என்றார். உறவுகள் கூடும் போது தூக்கம் தான் வருமா!!!


நேரமாகிக் கொண்டே இருந்ததால் ஒவ்வொருவராக வரிசையாக குளித்துத் தயாரானோம். மணமேடையில் ஒருபுறம் ஹோமங்கள் நடந்து கொண்டிருக்க, நாங்கள் எல்லோரும் காலை ஆகாரத்துக்காகச் சென்றோம். அசோகா அல்வாவுடன் இட்லியும், வடையும், பூரிக்கிழங்கும், ஊத்தாப்பமும் கைக்கோர்க்க வயிறு குளிர்ந்து நிரம்பியது.


சஷ்டியப்த பூர்த்திக்கான ஹோமங்கள், பூஜைகள் என நடந்து கொண்டிருக்க, வெளியே விண்ணிலிருந்து அர்ச்சனைத் துளிகளாய் மழைச்சாரல்! ஒருவருக்கொருவர் கலாட்டா செய்வதும், அரட்டையடிப்பதும், ஃபோட்டோ எடுத்துக் கொள்வதும் என இனிமையான தருணங்கள்.


முகூர்த்தத்துக்கான நேரமும் நெருங்கிக் கொண்டே வந்தது. தம்பதிகளுக்கான அபிஷேகமும் முடிந்தது. இனி மூன்று முடிச்சுகள் இடும் தருணத்துக்காக தான் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தோம். இந்த இடத்தில் உங்களிடம் ஒன்று பகிர்ந்து கொள்ள வேண்டும். 'நீ தான் வந்து முடிச்சு போடணும்!' என்று என் மாமா சொன்னதாக சொல்லியிருந்தேன் அல்லவா!


நாத்தனார் தாலி முடிச்சு போடுவது தானே குடும்ப வழக்கம். தன் தம்பி மனைவிக்கு என் அம்மா தான் தாலிமுடி போடணும்! அம்மா இப்போ இல்லாததால், என் அம்மாவுக்கு பதிலாக என் மாமிக்கு நான் தாலி முடிச்சிடும் வாய்ப்பு கிடைத்தது. நலுங்கு வைத்து மெட்டியும் போட்டு விடும் வாய்ப்பும் கிடைத்தது. திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாமா மாமியிடம் நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டோம்.


அடுத்து என்ன! மதிய உணவும், மாலை திருச்சிக்கு ரயிலேறுவதும் தான் பாக்கி என்று தான் நினைத்திருந்தேன்!! ஆனால்! எங்கள் பிளான் எல்லாம் மாறிப் போனது..:) மறுநாள் எதிர்பாராத பயணம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அதே போல் திருமணத்தன்று மாலை மதுரையை ஆட்சி செய்பவளைக் காணும் பாக்கியமும் கிடைத்தது. 


எனக்கு மொத்தம் ஆறு மாமாக்கள். இப்போது எனக்கு இருப்பது நான்கு மாமாக்கள்!! எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் எனக்கு inspiration ஆக இருந்திருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே தம் மனைவி, மக்களை கொண்டாடத் தெரிந்த ஆண் தேவதைகள் என்று சொல்வேன்.


சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்ற இந்த மாமா ஒரு கவிஞர்! பரணி சுப.சேகர் என்ற பெயரில் ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற விடியல் கவிதைகள் தொடர்ந்து எழுதி சாதனை படைத்திருக்கிறார். 


அடுத்து நாங்கள் மேற்கொள்ளப் போகும் பயணத் திட்டம் பற்றி பார்க்கலாம். சஷ்டியப்த பூர்த்தி நிகழ்வின் போதே எல்லோரும் அடுத்த நாள் மேற்கொள்ளப் போகும் பயணத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.. 'நீயும் வா புவனா! இந்த சான்ஸ் இனிமே எப்போ கிடைக்கப் போறதுன்னு சொல்லு! உன்கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு! உங்காத்துக்காரர் கிட்ட பர்மிஷன் கேட்டுக்கோ! என்றும், 'புவனாக்கா! நீங்களும் வாங்கக்கா! ஜாலியா இருக்கும்!' எனவும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தார்கள்...!


அவர் ஒண்ணும் சொல்ல மாட்டார் மாமி! இன்னும் ரெண்டு நாள் வேணா இருந்துட்டு வாயேன்னு தான் சொன்னார்! அப்புறம் என்னடி!! எனக்கு தான் ட்ராவல் ஒத்துக்காது மாமி..:) உங்கள எல்லாம் படுத்தக் கூடாதுன்னு பார்க்கறேன்..:) அதெல்லாம் ஒண்ணும் ஆகாது! நீ எங்களோட வா!!..:) இப்படித் தான் எங்கள் பயணத் திட்டம் மாறிப் போனது..:) திருச்சிக்குத் திரும்புவதற்காக புக் செய்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்யச் சொல்லி என்னவரிடம் சொல்லி விட்டேன்..:)


மதிய உணவாக வடை, பாயசம், புளியோதரை, இரண்டு வகை பச்சடியுடன் பரிமாறப்பட்டது. அதன் பின் சற்றே ஒய்வு எடுத்துக் கொண்டோம்! மாலை மீனாட்சியம்மன் கோவிலுக்கு போலாம் வரீயா என்று மாமா கேட்க உடனே கிளம்பி விட்டேன். மதுரைக்கு வந்து விட்டு கோவிலுக்கு போகா விட்டால் எப்படி! கோவிலுக்குப் போக நாங்கள் நான்கு பேர் தயாரானோம். என் இரண்டு மாமிகள், மாமா ஒருவர் மற்றும் இவர்களுடன் நான்.


மாமா பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து பத்து பேர் கூட்டாக 'டாக்டர்' படத்திற்கு போகலாம் என்று முடிவு செய்ய, மகளையும் அதில் சேர்த்துக் கொண்டார்கள். அவளும் பார்க்கணும்! பார்க்கணும்! என்று என்னை நச்சரித்துக் கொண்டிருந்த படம் தான்..:) எப்போதும் என்னுடனேயே சுற்றிக் கொண்டிருப்பவள் தான், என்னை விட்டு எங்கும் போகமாட்டாள்! ஆனால் இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததால் 'நீ கோவிலுக்கு போயிட்டு வாம்மா'! என்று என்னை அனுப்பி வைத்தாள்..:)


நாங்கள் நான்கு பேரும் காரில் கிழக்கு கோபுரமருகே சென்று இறங்கிக் கொண்டோம். முதலில் சூடாக காஃபியை குடித்து விட்டு உள்ளே போவோம் என்று நாலு காஃபிக்கு ஆர்டர் கொடுத்தார் என் மாமா. நான் தான் காஃபி குடிக்க மாட்டேனே! அதனால் எனக்கு மட்டும் டீ வாங்கிக் கொண்டேன்! 


கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் இருபுறமும் பலதரப்பட்ட கடைகளும், மக்கள் கூட்டமும் என மதுரைக்கே உண்டான களையுடன் இருந்தது. முதலில் காலணிகளை டோக்கன் போட்டு வைத்தாயிற்று. அடுத்து செல்ஃபோனுக்கு ஒரு கவுண்ட்டர். அதற்கடுத்து செக்கிங் முடித்து உள்ளே போயிடலாம் என வரிசையில் நின்றோம். ஆனால்! கையில் வைத்திருந்த Handbagஆல் சிக்கல் வந்தது!!!


அப்படி என்ன சிக்கல்! மீனாட்சியை எளிதில் பார்க்க முடிந்ததா! இல்லையா! மீதிக்கதைகளை அடுத்த பகுதியில் சொல்கிறேனே..:)



******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


28 கருத்துகள்:

  1. கூடிக் களித்திருந்த நினைவுகள்.  இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாமே எப்போது நடைபெறும் என்று ஏங்க வைக்கும் காலமும் வரும் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. பதிவும் அருமையாக உள்ளது. நல்ல தொகுப்பாக விபரமாக எழுதியுள்ளீர்கள். புது இடமென்றால் எனக்கும் உறக்கமே வராது. அதுவும் இந்த மாதிரி நீண்ட நாட்கள் கழித்து உறவுகளை சந்தித்து பேசி மகிழ்ந்து விட்டு நேரம் தாழ்த்தி படுத்தாலும் எனக்கு உறக்கம் வராது.

    நாத்தனார் இடத்திலிருந்து தாலி முடிச்சு போடும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் மாமா,மாமியின் ஆசிகள் உங்களுக்கு என்றும் நல்லதையே தரும். காலை டிபன், மதியம் சாப்பாடு அட்டவனைகள் நன்றாக உள்ளது.

    மீனாட்சி அம்மனின் தரிசனம் நன்றாக கிடைத்திருக்கும் நினைக்கிறேன். அவ்வளவு தூரம் சென்று விட்டு அம்மனை பார்க்காமல் திரும்பவும் நமக்கு மனது வருமா? எல்லாம் நல்லவிதமாக நடக்க "அவளும்" கண்டிப்பாக துணையிருந்திருப்பாள். அடுத்த பதிவுக்கும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் புது இடத்தில் உறக்கம் வராதா!!

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  3. எத்தனை அருமை!!! நாம் பிறந்தகம் செல்வதே இந்த அருமைக்காகத் தான். ஆதி உங்கள் பயணம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.
    மாமிக்குத் தாலி முடிந்தது நல் மகிழ்ச்சி.
    மீனாட்சி ஹாண்ட்பாக் சோதனை செய்யச் சொல்லிட்டாளா.
    என்ன ஆகிறது பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. பல சோதனைகளுக்கு பின் தான் மீனாட்சி எங்களை அனுமதித்தாள்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  4. மதுரை என்றதுமே தனி ஈர்ப்பு இப்பதிவின் மேல் :)
    குடும்ப உறவுகளைச் சந்திப்பதும் அவர்களோடு பயணம் செய்வதும் இனிமை தான். மகிழ்ச்சி ஆதி..அடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையின் என்றதும் ஈர்ப்பு..மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்.

      நீக்கு
  5. படிப்போருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அணுபவங்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சார்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  7. மதுரை அனுபவம் அருமை. தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி சார்.

      நீக்கு
  8. ஆதி நல்ல பயணம். உறவுகளுடன் சேர்ந்து களித்தல் எல்லாம் எப்போதும் வாய்க்காது பலருக்கும். உங்களுக்கும் பல வருடங்கள் கழித்து வாய்த்தது மகிழ்ச்சி. மதுரை என்றாலே எனக்கும் ஒரு ஈர்ப்பு வரும். அப்பா வழி உறவினர்கள் அங்கு இருந்ததால் பல முறை பயணித்து தங்கியதுண்டு.

    எனக்கும் உறவினர்களோடு களிப்பது ரொம்பப் பிடித்த விஷயம். அந்த ஏக்கம் உண்டு.

    //'நீ தான் வந்து முடிச்சு போடணும்!' என்று என் மாமா சொன்னதாக சொல்லியிருந்தேன் அல்லவா!// வாசித்து வரும் போதே இது நினைவுக்கு வந்தது சென்ற பதிவில் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அப்போதே நினைத்துக் கொண்டேன் உங்க அம்மா ஸ்தானத்தில் நீங்கள் என்பது.

    பொக்கிஷமான நினைவுகள் அதை இங்கு பதிந்ததும் நல்ல விஷயம். அடுத்து எங்கு சென்றீர்கள் அறிய ஆவலுடன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவுகளிடம் களிப்பது மகிழ்வையும், புத்துணர்வையும் தரும். உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  9. இனிய நினைவுகள். மதுரை என்றாலே எனக்கும் பல நினைவுகள் வந்துவிடும். அங்குதான் பி ஏ படித்தேன் என்பதால். அவ்வப்போது பல நினைவுகள் வரும். இப்போது உங்கள் பதிவு மதுரைக்கு என்னை ஈர்த்தது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு படித்தீர்கள் என்பது தெரிந்து மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  10. உங்கள் பயணத் தொடர் மிக அருமை.உறவுகளை சந்திக்கும் பொழுது அதுவும் அன்பான உறவுகளை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியை தரும். புத்துணர்ச்சி கொடுக்கும் சந்திப்பு.
    அம்மாவிற்கு பதிலாக நீங்கள் மாமிக்கு முடி போட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. அன்பான உறவுகளை பார்த்து வந்ததில் மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. //எல்லோருமே தம் மனைவி, மக்களை கொண்டாடத் தெரிந்த ஆண் தேவதைகள் என்று சொல்வேன்.//

    அருமை.
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

  12. பேஸ்புக்கில் இந்த தொடரை படித்தேன்... எழுதி சென்ற விதம் மிக அருமை.. எழுத்துக்கள் உங்கள் வசமாகிவிட்டன, தெள்ள தெளிவாக இருக்கிறது பாராட்டுக்கள்.... நான் 5 வயது முதல் கல்லூரி வரை படித்த ஊர் மதுரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வாசித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி சகோ. கல்லூரி வரை மதுரை தான் என்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மதுரைத் தமிழன் சகோ.

      நீக்கு
  13. அபூர்வமாக வரும் இத் தருணங்கள் நெஞ்சில் நிலைத்து நின்றுவிடும்.

    மீனாட்சி தரிசனம் கிடைக்கப் போவது மகிழ்ச்சி. மகளுக்கு அடுத்த பயணத்தின்போது இந்த வாய்ப்பு கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். அபூர்வமாக வாய்த்ததால் மறக்க இயலா பயணம் தான்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  14. இனிய தருணங்கள்.

    மீனாட்சி தரிசனம் என்றால் சும்மாவா? விளையாட்டுக்காட்டி அருள் தந்திருப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அவள் அருள் இல்லாமல் தரிசிக்க முடியாது.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....