வெள்ளி, 30 அக்டோபர், 2015

ஃப்ரூட் சாலட் – 150 – சிக்கல் – ஒரு வானவில் போலே - அப்பா


இந்த வார செய்தி:



எனது வலைப்பூவில் ஃப்ரூட் சாலட் பகுதி எழுத ஆரம்பித்தபோது இருந்த வரவேற்பு 150-வது பகுதியை எழுதும் இந்த வேளையிலும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நான் படித்த, பார்த்த, ரசித்த சில விஷயங்களை ஒரு தொகுப்பாக ஃப்ரூட் சாலட் தலைப்பில் வெளியிட்டு வந்திருக்கிறேன்.  அப்படி வெளியிட்ட பகுதிகள் அனைத்துமே பலரால் படிக்கப்பட்டு, கருத்துரைகளும் வந்திருக்கின்றன.

என்றாலும், இப்பகுதியை தொடர்ந்து எழுதுவதா வேண்டாமா என்ற எண்ணம் அவ்வப்போது வந்தபடியே இருக்கிறது. இந்த 150-வது ஃப்ரூட் சாலட் பகுதியோடு முடித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.  என்ன தான் இப்படி பகிர்ந்து கொள்வது பிடித்திருந்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரி செய்து கொண்டிருப்பது போல ஒரு எண்ணம்.  அதனால் சற்றே இடைவெளி விட்டு எழுதலாமா அல்லது ஒரேயடியாய் ஃப்ரூட் சாலட் பகிர்வதை நிறுத்தி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்களேன்! 

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஹெட்ஃபோன் வயர் சிக்கலை எடுக்கற அளவுக்கு பொறுமை இருந்தாலே போதும் வாழ்க்கை சிக்கலை எளிதாக வென்றுவிடலாம்....

இந்த வார குறுஞ்செய்தி:

Take good care of your “REPUTATION”.  It’s going to live longer than “YOU!”


இந்த வார புகைப்படம்:



இந்த Uncle நம்மள ஃபோட்டோ எடுக்கறாரே..... நேரே பார்க்கலாமா வேண்டாமா? சிரிக்கலாமா வேண்டாமா?

இந்த வார ரசித்த பாடல்:

பி. ஜெயச்சந்திரன் எஸ் ஜானகி ஆகியோரின் குரலில் இளையராஜாவின் இசையில் ஒரு அருமையான பாடல் – “ஒரு வானவில் போலேஇந்த வாரத்தின் ரசித்த பாடலாக......




இந்த வார விளம்பரம்:

கிசான் விளம்பரம் நேற்று பார்த்தேன் – அடுக்கு மாடி குடியிருப்புகளில் தொலைந்து விட்ட பந்தங்களை, ஒருவருக்கொருவர் தெரியாது இருப்பதை மாற்றுவது போல ஒரு விளம்பரம்.  மூன்று நிமிடங்களுக்கு சற்றே அதிகமாக இருந்தாலும், மிக அழகாய் ஒரு குறும்படம் போல எடுத்திருக்கிறார்கள். பாருங்களேன்!



படித்ததில் பிடித்தது:



சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

26 கருத்துகள்:

  1. #மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..#
    நீங்களே சொல்லிட்டீங்க ,தொடரும் என்று !அதுவே நல்லது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.ஹா... சென்ற பதிவில் எழுதி இருந்தது அப்படியே இருந்திருக்கிறது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  2. படித்ததில் பிடித்தது அருமையோ அருமை....

    ஃப்ரூட் சாலட் தொடர்ந்து இனிக்கட்டும் என்பது என் வேண்டுகோள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில மாறுதல்களோடு தொடரலாம் என எண்ணமிருக்கிறது பார்க்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. முதலில் 150 க்கு எமது வாழ்த்துகளி ஜி
    தொடர்ந்து எழுதுங்கள் ஜி வழக்கம் போலவே.... நன்று
    விளம்பரபடம் ரசித்தேன்
    கதை நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிசான் கெட்சப் வாங்குவேனோ இல்லையோ, ஆனாலும், அந்த விளம்பரம் பிடித்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. ஏன் இந்த திடிர் முடிவு நிச்சயம் இது நல்லதொரு பகிர்வே தொடருங்கள். தேடித்தேடி படித்து எங்களுக்கு பதிவு செய்வதை வேண்டாம் என்போமா?
    நேரமின்மை காரணம் அல்லது கவனக்குறைவு இதனால் வருகை தர இயலாமல் போகலாம் ஆனாலும் ப்ருட் சாலட் சாப்பிட நினைத்தால் இங்கு வந்து தேடி எடுத்த படிக்க உதவுமே. ஆதலால் தொடருங்கள்.

    இன்றைய காணொளி உட்பட தந்தையின் செயலும் என ஒவ்வொன்றும் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ சில நாட்களாகவே இப்படி ஒரு எண்ணம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  5. அப்பா கதை அருமை அண்ணா! முகநூல் பதிவு உண்மையை சொன்னது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  6. >>> நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’!.. <<<

    ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாச சுப்ரமணியன் நாராயணன்.

      இது உங்கள் முதல் கருத்துரையோ....?

      நீக்கு
  8. தொடருங்கள். நீங்கள் ரசித்த பலவற்றையும் நாங்களும் ரசிக்க முடிகிறது.
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  9. உங்கள் பதிவுகள் என்றும் இனிமையானவை!
    அதிலும் கதம்பமாய் வெள்ளிக்கிழமைப் பதிவாகும்
    ஃப்ரூட் சலாட் தரும் சுவையே தனி! ஏன் நிறுத்த வேண்டும்?..
    தொடருங்கள் சகோ!

    இன்றைய பதிவிலும் அத்தனையும் மணக்க இனிக்கத்தரும் சுவையே!
    படித்ததில் பிடித்தது என்மனத்திலும் பிடித்தது!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. விளம்பரம் அருமை.. நல்ல ரசனைக் காரர் நீங்கள். ஒவொன்றையும் ரசித்து எழுதுகிறீர்கள் குட்டிக்கதை சூப்பர்.
    தொடர்ந்து எழுதுங்கள்
    வேண்டுமானால் வேறு பெயரில் சில மாற்றங்களுடன் எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.....

      நீக்கு
  12. குட்டிக்கதை சிறப்பு! வழக்கம் போல சிறப்பான தொகுப்பு! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  13. இந்த வார பழக்கலவையில் அந்த கிசான் குறும்படத்தையும் அந்த கதையையும் இரசித்தேன். மிக அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி! பழக்கலவையை நிறுத்தாதீர்கள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....