திங்கள், 3 மே, 2021

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WE NEED STRENGTH WHILE DOING THE POSSIBLE.  BUT WE NEED FAITH WHILE DOING THE IMPOSSIBLE. 


******






இந்த நாளில் நாம் பார்க்கப் போகும் மின்னூல் - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை என்ற மின்னூல்.  சஹானா கோவிந்த் என்ற பெயரில் எழுதி வரும் அப்பாவி தங்கமணி அவர்களின் நாவல் இந்த மின்னூல். நூல் குறித்த தகவல்கள் கீழே! தகவல்களுக்குப் பிறகு இந்த நூலுக்கு எனது இல்லத்தரசி எழுதிய வாசிப்பனுபவம் - அதனைத் தொடர்ந்து எனது வாசிப்பனுபவம்!  வாருங்களேன் படித்துப் பார்க்கலாம்!



நூல்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

வகை: நாவல்

ஆசிரியர்: சஹானா கோவிந்த்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 125

விலை: ரூபாய் 160/-


******


வாசிப்பனுபவம் - 1 - ஆதி வெங்கட்:


அபர்ணாவும்  கார்த்திக்கும் காதல் திருமணம் புரிந்து சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் இன்பமான வாழ்க்கைக்கு அர்த்தமாய் அர்ஜூன், கவின் என்ற இரு வாண்டுகள். 


இவர்கள் வீட்டுக்கு இன்ப அதிர்ச்சி போல அங்கே வரும் அபர்ணாவின் பாட்டி ராஜம்மாள். பல வருடங்களுக்கு பின் பாட்டியைப் பார்த்ததும் மனதில் பசுமையாக படிந்த நினைவுகளில் மூழ்கும் அபர்ணா!


அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என எல்லோருடனும் செல்லமாக வளர்ந்த அபர்ணா! ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த கார்த்திக்! இப்படி இருவேறு சூழ்நிலைகளில் வளர்ந்த இருவர்! அபர்ணாவும் கார்த்திக்கும் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதல்! வழக்கம் போல எதிர்ப்பை தெரிவித்த பெற்றோர்! என்று நினைவுகளின் வழியே கதை நகர்கிறது..


பாட்டியின் வருகையால் அபர்ணாவின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறது. இப்படி ஒரு பாட்டி கிடைக்க மாட்டார்களா என்று ஏக்கத்தை உருவாக்கியது.


கொங்குத் தமிழில் ராஜம்மா பாட்டி பேத்தியுடனும், பேத்தியின் கணவன், கொள்ளுப் பேரன்கள், அக்கம் பக்கத்து மனிதர்கள் என எல்லோருடனுடனும் அன்பாக உரையாடி பழகுகிறார்.


அன்பு, பாசம், புரிதல், காதல் என பலதரப்பட்ட உணர்வுகளை கதை முழுதும் அள்ளித் தெளித்திருக்கும் இந்த புத்தகத்தை நிச்சயம் நீங்கள் வாசித்து தெரிந்து கொள்ளுங்களேன்.


இதுபோன்று அழகான கதைகளை மேன்மேலும் தந்து நம்மை மகிழ்விக்க ஆசிரியருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!


நட்புடன்


ஆதி வெங்கட்.


*******


வாசிப்பனுபவம் - 2 - வெங்கட் நாகராஜ்:


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - நல்லதொரு தலைப்பு.  கதாநாயகி அபர்ணா மற்றும் கதாநாயகன் கார்த்திக்! கார்த்திக் - அபர்ணா மற்றும் இரு குழந்தைகள் என குதூகலமான குடும்பம்.  கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னியோன்யம், ஒருவரோடு ஒருவர் பாசத்தை பொழிந்து கொள்கிறார்கள். காலை நேரத்தில் கோவையிலிருந்து வரும் இரயிலில் ஒரு நபர் சென்னைக்கு வருகிறார் - அவரை அழைக்கச் செல்லும் அபர்ணா அப்படியே பின்னோக்கி நினைவுகளை ஓட்டுகிறார். சென்னையில் ஆரம்பிக்கும் கதை சற்றே பின்னோக்கி, கோவைக்குச் செல்கிறது - அபர்ணாவின் கல்லூரி நாட்களின் கடைசி வருடத்திற்கு!  தான் முதன் முதலாக கார்த்திக்-ஐ சந்தித்த அந்த நாளுக்கு மீண்டும் சென்று ஒரு ஃப்ளாஷ்பாக்-ஆக கதையைத் தொடர்கிறார் நூலாசிரியர்.  


தன்னைப் போலவே Campus Interview-வில் பங்குபெறப் போகும் ஒரு இளைஞன் என்று நினைத்து முதன் முதலாக கார்த்திக்கை சந்தித்த போது விளையாட்டாக நடந்து கொள்கிறாள் அபர்ணா.  பிறகு தான் தெரிகிறது தன்னை நேர்காணல் செய்யப்போகும் பிரதான நபரே கார்த்திக் தான் என்பது.  கொஞ்சம் பதட்டப்பட்டாலும் நேர்காணலில் சிறப்பாகவே பதில் சொல்ல வேலை கிடைக்கிறது.  சென்னைக்கு தனியாக அனுப்ப மனம் இல்லாத அம்மாவிடம் பேசி, அப்பா மற்றும் பாட்டியின் சம்மதம் மற்றும் ஒத்துழைப்புடன் சென்னை நோக்கிய பயணம்.  நேர்காணல் நாளிலிலிருந்தே அபர்ணாவிற்கு கார்த்திக் மீது ஒரு வித மயக்கம் - அங்கே கார்த்திக்கின் நிலையும் அதுவே!  பணியில் சேர்ந்த பிறகு தான் தெரிகிறது கார்த்திக் அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவன் என்பதும், அவனுக்கென்று யாரும் இல்லை என்பதும்.  சந்தித்த சில நாட்களிலேயே அபர்ணா சட்டென்று கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறாள்.  நிகழ்வில் இப்படி நடப்பது சாத்தியமா என்பதை காதலித்தவர்கள் சொல்லலாம்!  


காதல் என்றால் எதிர்ப்பு இல்லாமலா?  அபர்ணாவின் தந்தை, தாய் இருவருமே எதிர்க்கிறார்கள்.  ஆனால் அபர்ணா தான் எடுத்த முடிவிலிருந்து மாறவே இல்லை.  தாய் தந்தையரை விட்டு கார்த்திக் தான் இனி தன் வாழ்வின் எல்லாம் என்ற முடிவுடன் சென்னைக்கு அவனுடன் திரும்புகிறாள்.  திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பிறகும் கூட தொடர்பு கொள்ளாமலேயே இருக்கிறாள்.  நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாட்டி மட்டும் அடம்பிடித்து சென்னைக்கு வந்து அபர்ணா-கார்த்திக் மற்றும் குழந்தைகளுடன் தங்குகிறார்.  கார்த்திக் மட்டுமல்லாது, குழந்தைகள், குடியிருப்பு வாசிகள் என அனைவருடனும் கலகலப்பாக பழகுகிறார் பாட்டி.  அவர் அங்கே இருந்த நாட்களில் சென்னை பெருமழை காரணமாக பல புதிய அனுபவங்களைத் தருகிறது.  


தங்களுக்குள் மூழ்கிவிட்ட சமூகத்தினர் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது, நிலாச்சோறு உண்பது, என மறந்து போன பல விஷயங்களைச் செய்கிறார்கள்.  பாட்டி மட்டும் வந்து விட்டால் போதுமா, பிடிவாதமாக இருக்கும் அபர்ணாவையும் பேசிப் பேசி, அப்பா-அம்மாவுடனும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.  அவர்களும் பேசி விட, பாட்டி ஒரு சுபயோக சுபதினத்தில் கோவை திரும்புகிறார்.  தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த குடும்பம் மீண்டும் இணைகிறது - சுபம்! நல்லதொரு குடும்ப நாவலை எழுதி இருக்கிறார் நூலாசிரியர்.  அவரும் கோவைவாசி என்பதால், ஆங்காங்கே கோவையின் வட்டார வழக்கு எட்டிப் பார்க்கிறது.  அதுவும் ஒரு சுவை தானே! (எங்க வீட்டு அம்மணியின் ஊரும் கோவை ஆச்சே! வேற எதுவும் சொல்ல முடியாது! ஹாஹா).


சின்னச் சின்ன விஷயங்களையும் தொடர்பு படுத்தி, கதையின் போக்கிலேயே கொண்டு சென்றிருப்பது நல்ல விஷயம். பல சமயங்களில் நிறைய சம்பவங்கள் இருந்தால் கதையின் ஓட்டத்தோடு ஒட்டாமல் தனித்து நிற்பது போல ஆகிவிடும்!  கோர்வையாக எழுதி கதையின் முடிவை அதன் போக்கில் கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர் - அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.  மேலும் பல நூல்களை வெளியிட வாழ்த்துகள்


******* 


எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


எங்களது மின்னூல்கள்


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


26 கருத்துகள்:

  1. தங்களது விமர்சனம் நூலை உயர்த்தி பிடித்து இருக்கிறது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    நலமா? தொடர்ந்து நான்கைந்து நாட்களாக உங்களை வலைத்தளத்தில் எங்கும் காணவில்லையே...! அலுவலக பணிச்சுமையோ என நினைத்தேன்.

    சகோதரி சஹானா கோவிந்த் அவர்கள் எழுதியிருக்கும் கதைக்கு நீங்கள் இருவரும் தந்த விமர்சனம் சிறப்பாக இருக்கிறது. கதைச் சுருக்கமும் முழுக்கதையை படிக்கும் ஆவலை உண்டாக்குகிறது. அருமையாக கதை எழுதிய சகோதரிக்கும், அழகாக விமர்சித்த உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      சூழல் காரணமாக பதிவுலகம் பக்கம் வர இயாலாமல் இருந்தது. நேற்றிலிருந்து தான் பதிவுலகம் பக்கம் வர ஆரம்பித்து இருக்கிறேன்.

      விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இருவரும் அருமையாக விமர்சனம் செய்து விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    சஹானா கோவிந்துக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அப்பாவி தங்கமணியின் எழுத்துக்கள் அட்டகாசமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பதிவுலகில் அவரது பதிவுகள் பிரபலமாயிற்றே மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாசிக்கத் தூண்டிய இரு விமர்சனங்கள் சார்.
    விரைவில் நூலை வாசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. உங்கள் மின்னூல் குறித்த வாசிப்பனுபவத்தினை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தலைப்பு ஈர்க்கிறது! முதலில் தலைப்பு பார்த்ததும் வெங்கட்ஜி அல்லது ஆதியின் சர்ப்ரைஸ் அனுபவமோ சாதனையோ என்று தோன்ற வைத்தது!!!!!!

    அப்புறம் நம்ம சஹானா கோவிந்தின் புத்தகம் விமர்சனம் (நல்ல பாடலின் தலைப்பு!!)

    விமர்சனம் நல்லாருக்கு.

    சஹானா/புவனா கோவிந்திற்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. மிக அருமையான நூல் விமரிசனம்.
    பதிவுகளின் போதே ஈர்க்கும் வண்ணம் கதை எழுதுவார் அப்பாவி தங்கமணி. மூலாகவே வெளிவந்திருப்பது
    மிகவும். நலம். நன்றி வெங்கட், ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.. ஆமாம் ஸ்வாரஸ்யமான எழுத்துக்குச் சொந்தக்காரர் ஆயிற்றே அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நூல் மதிப்புரைகள், நூல்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டியது. சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....