திங்கள், 25 ஏப்ரல், 2022

வாசிப்பனுபவம் - உணர்வுகளோடு சில உரசல்கள் - சேதுபதி விசுவநாதன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஏதாவது வரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம் கடவுளிடம் வாழ்வென்பதே வரம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம். 

 

******


 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூலை மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் சேதுபதி விசுவநாதன் அவர்கள் எழுதிய உணர்வுகளோடு சில உரசல்கள்எனும் சிறுகதைத் தொகுப்பு. அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 199

விலை: ரூபாய் 250/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

உணர்வுகளோடு சில உரசல்கள்: (சிறுகதை தொகுப்பு) (Tamil Edition) eBook : விசுவநாதன், சேதுபதி: Amazon.in: Kindle Store

 

******* 

 

சஹானா இணைய இதழ் நடத்திய ஜூலை மாத வாசிப்புப் போட்டியில் இருந்த பதினான்கு நூல்களில் சேதுபதி விசுவநாதன் அவர்கள் எழுதிய உணர்வுகளோடு சில உரசல்கள் எனும் நூல் குறித்த வாசிப்பனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. அவரது சில சிறுகதைகளைத் தொகுத்து மின்னூலாக வெளியிட்டு இருக்கிறார்.  

 

முதல் கதையிலேயே கொஞ்சம் உணர்வுகளைத் தூண்டும் விதமாக எழுதி இருக்கிறார்.  திருநங்கைகள் குறித்த பொது பார்வையும், அவர்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும் சொல்லும் விதமாக அமைந்த கதை. சிறப்பாக இருக்கிறது.  இரண்டாவது கதை, ஒரு பெண் கற்பழிக்கப்படுவது குறித்த கதை. அதுவும் மனத்தைத் தொடும் விதமாக இருக்கிறது. பெரும்பாலான கதைகள் சாமானியர்கள் படும் அவதிகள் குறித்துச் சொல்வதாக இருப்பதால், ஒரு வித சோகம் படிப்பவர்களின் மனதிலும் இழையோடும்படி அமைந்திருக்கிறது.  

 

ஒரு கதையில் கஷ்டப்பட்டு தன மகளை ஓட்டப் பந்தய வீராங்கனையாக உருவாக்கிய பெற்றோர் பற்றிச் சொல்கிறார் என்றால், மற்றோர் கதை வழி, மகன் ஆசையாகக் கேட்ட பிரியாணியை அவன் கேட்ட அன்றே வாங்கித் தர முடியாத தந்தையின் உணர்வுகளை சொல்கிறார்.  பெற்ற மகனை விபத்தில் பறிகொடுத்த ஒரு தந்தை மூன்று குழந்தை பெற்ற ஒருவரிடம் ஒரு குழந்தையைத் தத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்கலாம் எனச் சென்று கேட்காமல் திரும்பி வந்ததைச் சொல்கிறது மற்றுமோர் கதை! அதற்காக அவர் சொல்லி இருக்கும் காரணமும் சிறப்பு. இப்படி ஒவ்வொரு கதை வழியேவும் சிறப்பான செய்திகளை நமக்குச் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர்.  எல்லா கதைகளுமே சிறப்பாக இருக்கின்றன.  

 

இராணுவத்தில் பணி புரியச் சென்ற மகனை அவன் ஊரில் சுற்றிக் கொண்டிருந்தபோது பழித்தவர்கள் எல்லாம், அவன் பணியில் வீர மரணம் அடைந்து சடலமாகத் திரும்பிய சமயம் கண்ணீர் விட்டு அழுத கதை நம் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சோகம் சொல்கிறது. அரசு மருத்துவமனைகளில் இருக்கும் லஞ்ச லாவண்யங்களை சொல்கிறது மற்றுமோர் கதை. இப்படி ஒவ்வொரு கதையும் சொல்லும் விஷயங்கள் நன்றாக இருக்கிறது. 

 

சரி குறைகளே இல்லையா என்று கேட்டால், சில குறைகளைச் சொல்லலாம்.  சிறுகதைக்கான இலக்கணம் என்றெல்லாம் நான் ஜல்லியடிக்கப் போவதில்லை.  அதெல்லாம் என் வழியல்ல! சின்னச் சின்னதாய் சில விஷயங்கள்.  ஒரே கதை இரண்டு முறை வந்திருக்கிறது.  ஒரு கதைக்கும் அடுத்த கதைக்கும் இடையில் சரியான விதத்தில் குறியீடுகள் தரலாம்.  கதைக்கான தலைப்புகளை தடிமனான எழுத்தில் கொடுத்திருக்கலாம். மின்னூலின் தொடக்கத்தில் இருக்கும் கதைகளுக்கான பட்டியல் தந்திருக்கலாம்.  இப்படி சில லாம்களை சொல்லாத தோன்றியது. அடுத்தடுத்த மின்னூல்களில் இந்த விஷயங்களை நூலாசிரியர் கவனிப்பார் என்று நம்புகிறேன்.  தொடர்ந்து  எழுதவும், மின்னூல்கள் வெளியிடவும் அவருக்கு  வாழ்த்துக்கள்.  வாசிக்கப்போகும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

22 கருத்துகள்:

  1. வாழ்வென்பதே வரம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்?  அதானே?  தெரிந்த விஷயத்தையே மறுபடி வலியுறுத்திச் சொன்னால்தான் புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. உணர்வுகளால் நெய்யப்பட்ட சிறுகதைகள் என்று தெரிகிறது. புத்தகம் மேம்பட நீங்கள் சொல்லி இருக்கும் ஆலோசனைகளை நானும் கவனித்துக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

      நீக்கு
  4. வாசகமும் விமர்சனமும் அருமை சார்.
    விரைவில் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நீக்கு
  5. இன்றைய வாசகம் மிகவும் அருமை ஜி
    விமர்சனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. வாழ்வென்பதே ஒரு வரம். வாழ்க்கையில் எப்போதாவது கிடைக்கும் சில வரங்களையும் இப்படித்தான் தவற விடுகிறோமோ எனத் தோன்றுகிறது.

    சிறுகதைகள் பற்றிய நூலின் விமர்சனம் அருமையாக உள்ளது. குறிப்பாக சில கதைகளின் கருக்கள் மனதை தொடுகிறது. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  8. நல்லதொரு நூலை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி சார்.... நிறைகளோடு குறைகளையும் சுட்டிகாட்டி மின்னூலை நன்நூலாக்க உதவியதற்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நாஞ்சில் சிவா.

      நீக்கு
  9. விமர்சனம் நன்று. நிறைகளின் கூடவே உங்களது ஆலோசனைகளைச் சொன்னதும் மிக நன்று வெங்கட்ஜி! அதையும் குறித்துக் கொண்டோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  10. வாசகம் - அதானே! வாழ்வே வரம். அதைப் புரிந்து கொண்டால் புலம்பல்கள் இருக்காதுதான்! ஆனால் மனித மனமாச்சே! வாசகம் சொல்லும் கருத்தை நான் ஒரு கதையில் சொல்லியிருக்கிறேன்.

    கதை - புத்தகம் அறிமுகமும் அதைப் பற்றிய உங்கள் வரிகளும் நல்ல சிறுகதைத் தொகுப்பு என்று தோன்றுகிறது. நீங்கள் சொல்வதை எல்லாம் குறித்துக் கொண்டே வருகிறேன். பார்ப்போம் என்று எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று.

    கூடவே புத்தகத்தில் உள்ள குறைகளை ஆக்கப்பூர்வமாகச் சொல்லிய விதம் எல்லோருக்கும் உதவும். குறிப்பாக அமேசானில் வெளியிடுவோருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் நூல் அறிமுகமும் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. வாழ்வென்பதே வரம் //

    அருமையான வாசகம்.
    விமர்சனம் அருமை.உங்கள் யோசனைகள் அவர்களுக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....