வியாழன், 28 ஏப்ரல், 2022

ருபின் பாஸ் - உத்திராகண்ட் - மலையேற்றம் - ப்ரேம் Bபிஷ்ட் - பகுதி ஐந்து

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நீ எப்படி நடக்கிறாய் என்பது முக்கியம் இல்லை; மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி ஆனால் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்!

 

******

 

ருபின் பாஸ் குறித்து இது வரை சில பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி இங்கே! மூன்றாம் பகுதி இங்கே! நான்காம் பகுதி இங்கே! பயணம் குறித்தும் தொடர்ந்து நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களின் வார்த்தைகளில் படிக்கலாம் வாருங்கள் - வெங்கட் நாகராஜ். ஓவர் டு ப்ரேம்!

 

*****



மலையேற்றத்தின் நடுவே ஓய்வெடுத்த போது...
 

எங்கள் பயணத்தின் ஐந்தாம் நாள் (15.06.2016) அன்று எங்கள் மலையேற்றத்திற்காக திட்டமிட்டது வெறும் 3.5 கிலோமீட்டர் மட்டுமே. ஆனால் அந்தப் பாதையில் கீழ் அருவியிலிருந்து மேல் அருவி வரை கடக்க வேண்டியிருந்தது.  அதுவும் செங்குத்தாப்ன பாதையாக இருந்ததால் மிகவும் கடினமான பாதையாக இருக்கப் போகிறது என்பதை அறிந்திருந்தோம் என்பதால் இந்தப் பகுதியை கடக்க நாங்கள் அன்று காலை 7.30 மணியளவிலேயே எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.



ஆபத்தான பனிப்பாறைகளைக் கடந்த போது...
 

இந்த மலையேற்றத்தின் இந்த குறிப்பிட்ட பாதையானது ஆண்டின் பல மாதங்கள் பெரும்பாலும் பனியால் சூழப்பட்டே இருக்கும்.  ஆனால் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பனிப் பொழிவு குறைவு என்பதால் பனிபடர்வு மிகவும் குறைவாகவே இருந்தது. இருப்பினும், இந்தப் பாதையில் இருக்கும் ஆபத்தான பனிப்பாறையை கடப்பது மிகவும் ஆபத்தானது மட்டுமல்லாது பயணிக்கும் சிலரை காவு வாங்கவும் கூடும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம். இந்த பனிப்பாறையை கடந்தபோது ஏற்கனவே சிலர் மரணத்தை எதிர்கொண்டார்கள் என்பதையும் நாங்கள் அறிந்தோம். எங்கள் போர்ட்டர் அந்தப் பகுதியை ஆய்வு செய்ததோடு, பனிப்பாறையைக் கடக்க, தன்னிடம் இருந்த பிரத்யேக கோடரி கொண்டு ஒரு பாதையை அமைத்து நல்லதொரு பணியைச்  செய்தார்.



மலையுச்சியில் சில மலையேற்றம் செய்யும் நபர்கள்...


அழகிய காட்சி ஒன்று...
 

செங்குத்தான பாறைப் பாதையில் நாங்கள் மேல்நோக்கிச் சென்றோம்.  அந்த மலையேற்றம் எங்களது திறனையும் எங்கள் சகிப்புத் தன்மையையும் சோதித்தது.  அதனால் நாங்கள் அவ்வப்போது ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. கண்கவர் அருவிகளின் படங்களும் நிறைய எடுத்தோம். இறுதியாக, 11.00 மணியளவில் நாங்கள் எங்கள் இலக்கைச் சென்றடைந்தோம்.  ஏற்கனவே மழை பெய்து கொண்டிருக்க, நேரத்தை வீணடிக்காமல் கூடாரங்களை விரித்ததோடு மதிய உணவையும் தயாரிக்கத் தொடங்கினோம்.



ஆக்ரோஷமாக வெளியேறும் தண்ணீர்...
 

பின்னர், ருபின் நதி குறுகலான ஒரு பாதை வழி வெளிவந்து பள்ளத்தாக்கு நோக்கிப் பாய்ந்து, தொடர் அருவிகளை (படிப்படியாக மூன்று அருவிகள்) வழங்குவதற்காக மூர்க்கமாக கீழ்நோக்கி உருளும். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். அந்த இடத்திலிருந்து நாங்கள் பார்த்த ருபின் பள்ளத்தாக்கு காட்சி கண்களைக் கவரும் விதமாக இருந்தது. 



அழகிய பூக்கள்...
 

பின்னர், நாங்கள் எங்கள் மதிய உணவை சாப்பிட்டோம்.  மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. நாங்கள் அமைத்த கூடாரத்திற்குள் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தோம்.  மாலையில் சூப் சாப்பிட்டுவிட்டு உறங்கினோம்.  அடுத்த நாள் மலையேற்றம்/பயணம் குறித்த எண்ணங்களோடு நாங்கள் இருக்க, நீங்களும் காத்திருங்கள். அடுத்த நாள் பயணம் குறித்து அடுத்த பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைந்திருங்கள்.

 

ப்ரேம் Bபிஷ்ட்

 

******

 

நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.  பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

26 கருத்துகள்:

  1. ஆபத்தான பயணம் என்று தெரிகிறது. அது தெரிந்தும் பயணம் செய்திருக்கும் நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான ஆபத்து - சில சமயங்களில்! பயணம் பிடித்தவர்கள் என்பதால் இது போன்ற பயணங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மூன்றாவது, மற்றும் ஐந்தாவது  படங்கள் பார்த்ததும் முதுகுத்தண்டில் சிலீரென்றது!  அங்கு நாம் அமைத்துக் கொள்ளும் கூடாரத்தின் தரைப் பகுதி ஈரமாக இருக்காதா?  மழைத்தண்ணீர் ஓடி வராதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடாரத்தின் தரைப் பகுதிக்கும் விரிப்பு இருக்கும். தவிர கீழே படுத்துக் கொள்ள ஒரு தடிமனான, சுருட்டிக்கொள்ளும் வசதியுள்ள Mat, Sleeping Bag எடுத்துச் செல்வார்கள். அது தவிர மழைத்தண்ணீர் உள்ளே வராதபடி ஏற்பாடுகள் உண்டு. அதிக மழை என்றால் தவிர்க்க முடியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. நினைத்தாலே பயம் - சில அனுபவங்கள் இப்படித்தான் தனபாலன். ஆனாலும் பயணிக்க பிடித்து தான் இருக்கிறது.

      நீக்கு
  4. ஆபத்தான பயணமாக இருக்கிறது படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பயணங்கள் ஆபத்தானவை என்றாலும் அனுபவித்து செல்ல வேண்டிய பயணங்கள் கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. அருவியாக பல கிளைகளுடன் ஓடி வந்து, ஆக்ரோஷமாக பாயும் தண்ணீர் படம் அழகாக இருப்பதோடு, பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதன் உச்சியில் அமர்ந்திருப்பவர் நல்ல தைரியசாலி.

    பொதுவாகவே மலையேற்றம் ரிஸ்க்கானதுதான் என்றாலும், பனிப் பாறைகளை தைரியமாக ஏறிக்கடந்து தங்கள் சாதனைகளை சிறப்பாக செய்த தங்கள் நண்பர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கும் ரொம்ப நன்றி. இனி வரும் பதிவுகளையும் தொடர்கிறேன்.

    நேற்று தங்கள் பதிவுக்கான என் கருத்துரை வரவில்லை என நீங்கள் எ. பியில் சொல்லியிருப்பதை படித்து தெரிந்து கொண்டேன். உடன் வந்து விளக்கமளித்ததற்கு நன்றி. இனிமேலாவது எவ்வித தடைகளின்றி அனைவரது பின்னூட்டங்கள், அனைவரின் தளங்களுக்கும் சென்று சேர பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையுச்சி மனிதர்கள் - தைரியம் தான். நண்பர்கள் அந்தக் காட்சி சிறப்பாக இருக்கவே படம் எடுத்திருக்கிறார்கள். பனிப்பாறைகள் கடப்பது மிகவும் கடினமான விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை பதிவும் அருமை. படங்கள் அனைத்தும் இயற்கை அழகுடன் நன்றாக இருக்கின்றன. பல கிளைகளுடன் ஓடி வந்து ஆக்ரோஷமாக பாயும் தண்ணீர் படம் அழகாக இருப்பதோடு பயத்தையும் உண்டாக்குகிறது. அதன் உச்சியில் அமர்ந்து கொண்டு அதை ரசிப்பவர் நல்ல தைரியசாலி.

    பொதுவாக மலையேற்றமே கடினமானதென்றாலும் பனிப்பாறைகள் உள்ள இடத்தில் ஜாக்கிரதையாக மேலே ஏறி தங்கள் சாதனைகளை நிறைவேற்றிய தங்கள் நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி. இனி வரும் பதிவுகளை தொடரும் ஆவலாக உள்ளேன்.

    நேற்று தங்கள் பதிவுக்கான என் கருத்துரை வரவில்லை என நீங்கள் எ. பி யில் வந்து விளக்கம் சொன்னமைக்கு மிக்க நன்றி. இப்போதுதான் படித்தேன். இப்போதும் தங்களின் இந்தப்பதிவுக்கும் அளித்த முதல் கருத்து எங்கோ போய் விட்டது. மீண்டும் விடாமல் அடித்த கருத்தை நினைவூட்டி கருத்தளிக்கிறேன்.:) இனியாவது அனைவரின் பின்னூட்டங்களும், அனைவரின் பதிவுகளுக்கும் எந்தவித தடையின்றி வந்து சேர வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.... இங்கும் இரண்டு கருத்துரைகளும் தொடர்ச்சியாக....

      நீக்கு
    2. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
    3. ஆமாம் இரண்டு முறை வந்திருக்கிறது. வந்தால் சரி தான்.

      நீக்கு
  7. வாசகம் நன்று.

    இப்படியான பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாகத் திரும்பி வந்து இனி மலையேற்றம் மேற்கொள்ளவிருக்கும் ஆர்வலர்களுக்கு அங்கிருக்கும் சூழல் பற்றிய தகவல்களும் தந்திருக்கிறார்கள். பாராட்டுகள் வாழ்த்துகள்!

    படங்களே சொல்கின்றன கடினமான பயணம் கரடுமுரடான பாதை என்றும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      பயணத்தில் ஆர்வம் இருந்தால் இந்த பயணங்கள் சாத்தியம். இல்லை என்றால் சாத்தியமல்ல!

      நீக்கு
  8. படங்கள் செம thrilling! அதுவும் குறுகிய இடைவெளியில் ரூபின் நதி பாய்வது! அது வழிகாட்டியோ? நுனியில் அமர்ந்திருப்பவர்? அவருக்குத்தான் அப்ப்குதி முழுவதும் அத்துப்படியாச்சே.

    அந்தப் பாறை மலை முகடு அன்றும் வேறொரு படம் பகிர்ந்திருந்தீர்கள் இல்லையா? அழகான படம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. நுனியில் அமர்ந்திருப்பது வழிகாட்டி தான் கீதாஜி. பாறை மலை முகடு - வேறு சில படங்களும் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. மிகவும் ஆபத்தான பயணம். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபத்தான பயணம் என்றாலும் அழகான பயணம்! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  10. மலர்கள் படம் செம. ஓ மழை வேறு..பயணம் கஷ்டமாக இருந்திருக்கும். அட! வழிகாட்டி இளைஞர் பனிப்பாறையில் பாதுகாப்பான வழி அமைத்துக் கொடுத்து அழைத்துச் சென்றது நல்ல விஷயம் நமக்குத் தகவலும் கூட. இந்த வழி கண்டிப்பாக வழிகாட்டி இல்லாமல் செல்வது பாதுகாப்பானது அல்ல என்றும் தெரிகிறது. நண்பருக்கு நல்ல அனுபவங்கள் ஜி.

    சென்ற ரூபின் பாஸ் பதிவில் என் கருத்திற்கு உங்கள் பதிலும் பார்த்தேன் ஜி. அவர்களின் சமீபத்துப் பயணத்தில் உங்களால் பங்கு கொள்ள முடியவில்லை என்று. ம்ம் இப்படித்தான் நமக்குப் பல சமயங்களில் ஆகிவிடுகிறது. ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தீங்க. அவர்களின் அழைப்பு பற்றி.

    எல்லாப்படங்களுமே அழகு. அருவி!! ஆஹா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான மலர்கள் தான். பார்க்க ஆனந்தம் தான். வழிகாட்டி இல்லாமல் பயணிப்பது சரியல்ல.

      பயணிக்க ஆர்வம் என்றாலும், சில சமயங்களில் நினைத்தபடி பயணிக்க முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. பயணம் மிகவும் கடினமாக இருந்து இருக்கிறது.
    வழிகாட்டி இல்லாமல் தெரியாத இடத்தில் பயணம் செய்வது மிகவும் கஷ்டம். முன்பே பயணம் செய்தவர்களுடன் பயணம் செய்யலாம்.படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிகாட்டியுடன் பயணிப்பதே நல்லது. பதிவு குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. மிகவும் ஆபத்தான பனிப்பாறைபயணம் படிக்கும்போது பயமாக இருந்தது. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான ஆபத்து! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....