ஞாயிறு, 21 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி பத்து - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்பது படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மகிழ்ச்சி வேண்டுமானால் பணம் சார்ந்ததாக இருக்கலாம்; ஆனால் நிம்மதி என்றும் மனம் சார்ந்தது. 


******



தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி இரண்டு  


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி மூன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி நான்கு 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஐந்து


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஆறு


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஏழு


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி எட்டு 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்பது


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


சென்னைக்கு வரவேற்ற மழை:




சென்னை வந்து சேர்ந்ததும் மழை எங்களை வரவேற்றது. சென்னையில் இரண்டு நாள் பொழுது மழையை ரசித்ததும் உறவுகளோடு மனம் விட்டு பேசி நேரத்தை கடத்தியதும் தான். லோக்கல் ட்ரெயினில் பயணிக்கும் போது துவங்கிய மழை சாரலாகத் தொடர்ந்து செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றதும் தான் சற்று ஓய்ந்தது! அப்போது குளிர்ந்து போனது போல் இருந்தாலும் புழுக்கத்தை அதிகப்படுத்தி விட்டது..🙂


நிறைகளை மட்டுமே உயர்த்திப் பேசி கொண்டாடும் இடமென்றால் பெண்ணுக்கு பிறந்த இடம் தான் இல்லையா! அப்படித்தான் அவளும் நேற்று முழுவதும் உறவுகளால் கொண்டாடப்பட்டாள்..🙂 மனதுக்கு நிறைவாகவும், வயிற்றுக்கு நிறைவாகவும் அமைந்த தருணங்கள்!


அவளின் தனித்தன்மைகளை பற்றி அவளுக்கே அப்போது தான் தெரிந்தது என்று சொல்லலாம்..🙂 அம்மா, அப்பாவை பற்றிய கதைகளும், புரிதல்களும்  எங்கும் வியாபித்திருந்தது! 


பதின்ம வயது பெண்ணின் அம்மாவாக மகளின் எதிர்காலத்தை குறித்த எண்ணங்களுக்கும் நேற்று ஒரு தெளிவு கிடைத்தது! போகும் பாதையை நோக்கிய செயல்பாடுகளும் புரிந்தது! 


இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு பை பை சொல்லி கிளம்பியாகணும்! அடுத்த நாள் முதல் கூட்டில் செய்ய வேண்டிய கடமைகளும், வேலைகளும் அணிவகுத்து நிற்கத் துவங்கி விடும்!



******


சென்னை நாட்கள்…




இரண்டு நாட்களாக சென்னையில் உறவுகளின் உபசரிப்பில் மகிழ்ந்திருந்தோம்! 


எனக்கு punishment குடுக்க வேண்டுமென்று யாரேனும் நினைத்தால் அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்..🙂


நல்லா ரெஸ்ட் எடு! ஒரு வேலையும் செய்யக்கூடாது! என்று அவர்கள் என்னிடம் சொன்னால் போதும்...🙂 


என்றேனும் ஒரு வேளை அந்த ரெஸ்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும்! அதையே நாள் முழுதும் எனக்கு தருவதென்றால் வேண்டவே வேண்டாம்..🙂 கைகள் பரபரக்கின்றது..🙂 சுறுசுறுப்பை இழந்து தவித்தேன்..🙂


நேற்றைய பொழுதில் மாமா வீட்டில் என் கைப்பக்குவத்தில் செய்து தந்த வேர்க்கடலை பக்கோடாவும், இரவு உணவாக அவல் பிடி கொழக்கட்டையும் மனதுக்கு நிறைவாக இருந்தது! எல்லோரும் அதை மனதார பாராட்டியதுடன், என் அம்மாவை நினைவூட்டியதாக சொல்லவும் மிகவும் மகிழ்வாக இருந்தது! 


இதை விட வேறு என்ன வேண்டும்!! 


******


பல்லவன் இரயிலில்…




பூஜைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது…


Spotify துணையுடன் காதில் இனிமையான பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க…


சமோசா, வட, சூடா போளி...வியாபாரம் ஒருபுறம்!


நேரத்தை கடத்த பூத்தொடுத்துக் கொண்டிருக்கும் பெண்மணி ஒருபுறம்!


கும்பலாய் ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும் இளைஞர் பட்டாளம் ஒருபுறம்!


அண்ணாமலையே போற்றி! ஈசனே போற்றி! பிட்டுக்கு மண் சுமந்தவனே போற்றி! 


சத்தமாக ஈசனின் அடி பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கும் நபர் ஒருபுறம்!

கதிரவனும் சற்று ஓய்வெடுக்கப் போகட்டுமா என்று சென்று விட, இளங்காற்று முகத்தை ஸ்பரிசிக்க ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் நான்...🙂


பல்லவன் ரயில் பயணத்தில் இப்படியான அனுபவங்களுடன் எங்கள் தலைநகர் தில்லி பயணத்தினை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்.  எங்களது இந்த தலைநகர் பயணத்தில் இந்தப் பதிவுகள் வழி இணைந்து இருந்த அனைவருக்கும் நன்றி.  இந்தப் பயணம் குறித்த பதிவுகள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  தொடர்ந்து வேறு பதிவுகள் வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…



******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


12 கருத்துகள்:

  1. இதுல சொல்லி இருக்கீங்களே...   அப்போ பெஞ்ச மழைத்தாங்க சென்னைல...   வறுத்தெடுத்துகிட்டு இருக்கு..    நல்லா பொன்முருகலா இருக்கோம் இப்போ!

    பிறந்த வீட்டுக் கொண்டாட்டங்கள் நிகழ்வுகள் அருமை, நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பியும் சொன்னான் சார் அங்கேயும் வெயில் வாட்டி எடுப்பதாக. நல்ல மழை பெய்து பூமியை குளிர்விக்கட்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. //நேற்றைய பொழுதில் மாமா வீட்டில் என் கைப்பக்குவத்தில் செய்து தந்த வேர்க்கடலை பக்கோடாவும், இரவு உணவாக அவல் பிடி கொழக்கட்டையும் மனதுக்கு நிறைவாக இருந்தது! எல்லோரும் அதை மனதார பாராட்டியதுடன், என் அம்மாவை நினைவூட்டியதாக சொல்லவும் மிகவும் மகிழ்வாக இருந்தது! //

    உற்வோடு மகிழ்தல் . அதில் அன்பும், பாசமும், நேசமும் நிறைந்து இருக்கும் தருணங்கள் அருமை.

    ரோஷ்ணி கல்லூரி வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அம்மா.

      தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  4. பெயரில்லா21 மே, 2023 அன்று PM 12:20

    பிறந்த வீட்டு உறவினரோடு அன்பான தருணங்கள். உங்கள் கைவண்ணம் எல்லோருக்கும் பிடித்து பாராட்டு பெற்றது. மனதில் இவை எல்லாம் எப்போது அசைப்போட்டு மகிழ நம்மை உற்சாகப் படுத்திக் கொள்ள உதவும்.

    இனி மகளின் எதிர்காலத்துக்கான முயற்சிகள்.....வாழ்த்துகள் ஆதி! அவள் விரும்பியதும் நடக்கும். நல்லதே நடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசைபோட்டு மகிழும் தருணங்கள் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மழை பெய்வதை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் . வீட்டில் என்றால் வேலைகள் வந்து அதை குறுக்கிடும். பயணத்தில் எந்த தொநந்தரவும் இல்லாமல் ரசிக்கலாம்.

    பிறந்த வீட்டு பாராட்டுக்கள் என்றுமே மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள உதவும்.

    மகளின் பள்ளி விடுமுறை இப்படி தலைநகர் சென்று ரசித்து வந்ததற்கு வாழ்த்துகள்.இனி கல்லூரிக்கு செல்லும் தங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் வரும் மழையை நிச்சயம் ரசிக்கலாம்.

      தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  6. ரோஷ்ணி கல்லூரி வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் மேடம்.
    நம் உடல் வேலை செய்வதற்காகவே படைக்கப்பட்டது.
    அதனால்தான், "Ideal mind is devils workshop" எனவும் சொல்வதுண்டு.
    சுவையான பயணக் கட்டுறைக்கு மிக்க நன்றிகள் மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளுக்கான வாழ்த்துகளுக்கும் பதிவு குறித்த தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அரவிந்த் சகோ.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....