புதன், 24 மே, 2023

22ஆம் ஆண்டில் அடியெடுத்து….! - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WHEN YOU STOP EXPECTING PEOPLE TO BE PERFECT, YOU CAN LIKE THEM FOR WHO THEY ARE - DONALD MILLER. 


******



திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்! அப்படி இறைவனால் முடிவு செய்யப்பட்ட இருவர் இணைந்து இல்லற வாழ்க்கையையும் துவக்குகிறார்கள்! விருந்து என்றால் அதில் அறுசுவையும் கொண்ட உணவை தான் நாம் ரசித்து உண்கிறோம்! அதுபோலவே இல்லறம் என்றால் எல்லாமும் தான் இருக்கும் என்பது இங்கு  புரிந்து கொள்ளப்பட வேண்டிய பாடம்!


இனிப்பை மட்டுமே சுவைத்தால் ஒரு கட்டத்தில் அது நமக்கு திகட்டிப் போய்விடும் அல்லவா! அது போலவே உப்பு, உரைப்பும் கூட! காதலால் கசிந்துருகி வாழ்வதைப் போலவே ஆங்காங்கே ஊடலும் கலந்தால் தான் இல்லறத்தில் சுவை கூடும் என்பதும் இறைவனின் சித்தம்! இரு வேறு மனநிலையில் உள்ளோரை இணைத்து வைக்கும் பந்தம் தானே திருமணம்!


அதில் அன்பு, பாசம், அரவணைப்பு, புரிதல், பகிர்ந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் என்று இல்லறத்தில் இருக்க வேண்டிய எல்லா குணங்களையும் ஏற்ற இறக்கங்களுடன் கலந்து இல்லறம் என்னும் வாழ்க்கைப் படகை செலுத்தினால் அந்தப் பயணத்தில் தடைகள் ஏதுமின்றி இனிமை காணலாம் என்பது உறுதி!


திருமண பந்தம் என்னும் வாழ்க்கைப் படகில் கணவனும் மனைவியும் மட்டுமல்ல! அவர்களின்  இருதரப்பு உறவுகளும் தான் உடன் வருவார்கள்! அவர்களுக்கு இதில் மாறுபட்ட புரிதல்களும், கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம்! எல்லாவற்றையும் கடந்து சவால்கள் நிறைந்த இந்தப் பயணத்தை தொடர்ந்து கொண்டு செல்வதே நமக்கான இலக்கு!!

             

சமீபத்தில் அன்புத்தோழி ஒருவர் என்னிடம் கேட்டார்! "கல்யாணத்துக்கு அப்புறம் எவ்வளவு பவுன் வாங்கிண்ட புவனா? கல்யாண நாளுக்கு, பிறந்தநாளுக்கெல்லாம் வெங்கட் அண்ணா வாங்கிக் குடுப்பாரா??"


அதைக் கேட்ட போது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது எனக்கு! இதுவரை என் சிந்தனையில் தோன்றாத எண்ணம்..:) 


இத்தனை வருடங்களில் எத்தனையோ சந்தர்ப்பங்களை கடந்து வந்திருக்கிறோம்! நான் அப்படிப்பட்ட நிலையை எல்லாம் கடந்து விட்டேன் என்பதில் உண்மையில் அன்று மகிழ்வு கொண்டேன்! என் எண்ணங்கள் வேறுபட்டதாகத் தான் உள்ளது! வசதிகளும், வாழ்க்கை முறையும் மாறினாலும் நான் என் இயல்பு நிலையிலிருந்து மாறவில்லை! 


எங்களுக்கான கடமைகளை நிறைவேற்றிய பின் ஒருவருக்கொருவர் ஆதரவாக அனுபவக் கதைகளை பேசிக் கொண்டு கரம் கோர்த்து பயணிக்கும் நாட்களை எதிர்நோக்கியே எங்கள் நாட்கள் கடந்து செல்கின்றன! இல்லற வாழ்வில் இதை விட வேறு என்ன வேண்டும்!!


இந்த இனிய நாளில் அன்பு நெஞ்சங்களின் வாழ்த்துகளாலும், ஆசிகளாலும் அன்பு என்னும் பூக்கள் மாரியாய் பொழிந்து எங்களை குளிர்வித்தால் மிகவும் மகிழ்வோம்! 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

10 கருத்துகள்:

  1. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.  எல்லா வளமும் பெற்று நலமாக வாழ பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை.. உங்களிருவருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள். ஆம்.. .உண்மை. வாழ்வில் எதையும் எதிர்பார்க்காமல் அன்பின் துணை கொண்டு இல்லறத்தோடு இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. இன்று போலவே நீங்கள் என்றும் சிறப்பாக வாழ இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  3. வாழ்த்துகள் இருவருக்கும். நகை, பரிசு போன்றவை பாயசத்தில் இருக்கும் முந்திரிப்பருப்பு போன்றது. அது இல்லாமலும் பாயசம் ருசிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாயசத்தில் இருக்கும் முந்திரிப்பருப்பு - நல்ல உதாரணம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.  மேடம்.
    திருமண வாழ்வின் தார்ப்பரியம் குறித்து தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  5. இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
    பல்லாண்டு மன மகிழ்ச்சியோடு வாழ ஆசிகள்.

    //எங்களுக்கான கடமைகளை நிறைவேற்றிய பின் ஒருவருக்கொருவர் ஆதரவாக அனுபவக் கதைகளை பேசிக் கொண்டு கரம் கோர்த்து பயணிக்கும் நாட்களை எதிர்நோக்கியே எங்கள் நாட்கள் கடந்து செல்கின்றன! இல்லற வாழ்வில் இதை விட வேறு என்ன வேண்டும்!!//

    இது போதுமே! வேறு என்ன வேண்டும்?

    அருமை. உங்கள் கரங்களோடு பிஞ்சு கைகளை இணைத்து கொண்டு தளிர் ஒன்று நடந்து வருவதை மனகண்ணால் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....