செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

கதம்பம் - மகளின் கைவண்ணம் - காற்றின் அலையில் என் குரல் - ரோஷ்ணி கார்னர் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட அவள் முகம் காண பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


மகளின் கைவண்ணம் - 29 ஜனவரி 2026 : 


மகள் ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்திலும் இப்படியான நேர்மறை எண்ணங்களும், உற்சாகமூட்டும் வார்த்தைகளும் கொண்ட போஸ்ட்டர்களை வரைந்து அலமாரியின் கதவுகளில் மேக்னெட் கொண்டு ஒட்டி வைப்பதை செய்து வருகிறாள்! தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்ள இது ஒரு வழி என நினைக்கிறாள்! உங்கள் பார்வைக்கு அவற்றின் நிழற்படம்….






******


காற்றின் அலையில் என் குரல் - 30 ஜனவரி 2026:



இன்றைய இணைய உலகில் எதுவும் சாத்தியமே! ஆனால் முன்பெல்லாம் அப்படி இல்லை! பத்திரிக்கைகளில், வானொலியில், தொலைக்காட்சியில் நம் பெயர் வருவது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட காலம்! இன்றைய இனிய நாளில் வானொலியில் என் பெயருடன் என் குரல் ஒலிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது!


கையில் துடைப்பத்துடன் வீட்டை பெருக்கிக் கொண்டே ஹலோ FM 106.4 ல் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்! இன்று Retro friday என்பதால் இன்னும் ஸ்பெஷல்! சிறுவயதிலிருந்தே பாடல்களை கேட்டுக் கொண்டே அல்லது முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்யத் தான் எனக்கு பிடிக்கும்..🙂 படிப்பதும் கூட அப்படித்தான்..🙂


திருச்சியில் சுற்றுலாத்தலங்கள் என்று இரண்டு மூன்று இடங்களைத் தான் சொல்லலாம்! அதனால் மக்கள் உபயோகத்திற்காக காவிரிக் கரையோரமாக இரு பூங்காக்களை அமைக்கப் போவதாக மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்க கருத்துக்களை…. இந்த நம்பர்ல கூப்பிட்டு சொல்லுங்க என்று RJ சொல்லிக் கொண்டிருந்தார்!


அதைக் கேட்டதும் சட்டென மனதில்  ஒரு எண்ணம்! துடைப்பத்தை கீழே வைத்து விட்டு அலைபேசியை எடுத்து ஆர்.ஜே சொன்ன எண்ணை டயல் செய்தேன்! இரண்டு மூன்று முறை அழைத்தும் விளம்பரங்கள், பாடல்கள் என்று வந்து கொண்டிருந்ததால் இணைப்பு கிடைக்கவில்லை! சரி! இதில் நேரம் செலவிடுவதை விட்டுவிட்டு நம்ம வேலையை பார்ப்போம்! இன்று மகளின் கல்லூரிக்கு வேறு சென்று வர வேண்டுமே!! 


சற்று நேரத்தில் என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது! எடுத்தால் வணக்கம்! இது ஹலோ fm! நான் ஆர்.ஜே ஹரி! வணக்கம் சார்! நான் ஸ்ரீரங்கத்திலிருந்து ஆதிலக்ஷ்மி பேசறேன்! உங்க first day showல இருந்து கேட்கறேன்! ‘வணக்கம் தமிழா’ங்கிற இந்த மார்னிங் ஷோ ரொம்ப நல்லா இருக்கு! அதுவும் இன்னிக்கு retro friday வேற! என்றேன்!


மேடம் நீங்க என்னவா இருக்கீங்க?? என்றார்! நான் ஒரு பிளாகர் சார்! 16 வருஷமா சோஷியல் மீடியால தமிழ்ல என் அனுபவங்களை தொடர்ந்து எழுதிட்டு வரேன்! என் கணவரும் பயணக்கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கார்! என்று என்னைப் பற்றிய சிறு அறிமுகத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டதும், மார்னிங் ஷோவில் இணைப்புக் கொடுத்தார்!


ஹலோ fm 106.4ல் இன்னிக்கு நம்ம கூட இணைப்பில் பேச வந்திருக்காங்க ஸ்ரீரங்கத்திலிருந்து இளம் எழுத்தாளர் ஆதிலக்ஷ்மி! சொல்லுங்க மேடம்! வணக்கம் சார்! திருச்சியில் பூங்காக்கள் அமைக்கப் போவதாக கேட்க சந்தோஷமா இருக்கு! நான் நார்த்ல 10 வருஷம் இருந்திருக்கேன்! அங்கெல்லாம் நிறைய பார்க் இருக்கும்! எல்லாரும் சாயங்கால நேரத்துல பார்க்கில நேரத்தை செலவிடுவாங்க! குளிர்காலத்துல வெயில் அடிக்கும் நேரத்துல பிக்னிக் மாதிரி அங்கே குழந்தைகளை விளையாட விட்டு, சாப்பிட்டு நேரத்தை இனிமையா செலவழிப்போம்! அந்த மாதிரி இங்கே இருந்தா நல்லாருக்கும்! என்றேன்!


உங்க கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப சந்தோஷம் மேடம்! என்றார் ஆர்.ஜே ஹரி! நான் அலைபேசியை கட் செய்யும் போது எனக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்த வரிகள் அடுக்களையில் ஒலித்துக் கொண்டிருந்த வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தது…:) உடனேயே என்னவருக்கும் மகளுக்கும் வாட்ஸப்பில் மெசேஜ் செய்து சொன்னேன்! ரெகார்ட் பண்ணினியா என்று என்னவர் கேட்ட போது தான் அந்த எண்ணமே வந்தது…:) அதுவரை தோன்றவே இல்லை..🙂 சரி! பரவாயில்லை! நான் பேசினேன்னு எனக்குத் தெரியுமே…:)


******


ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 31 ஜனவரி 2026:


பெங்காலி ஸ்டைலில் சிவன் பார்வதியை ஓவியமாக தீட்டியிருக்கிறாள்!



******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

3 ஃபிப்ரவரி 2026


21 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரி

    இன்றைய பதிவு அருமை. வாசகமும் சிறப்பு. ரசித்தேன். ரோஷிணியின் கைவண்ணம் நன்றாக உள்ளது. தன்னம்பிக்கை கொள்ளும் வாசகங்களுக்கு பாராட்டுக்கள்.

    வானொலியில் ஒலிதது உங்கள் குரலையும், உங்கள் கருத்தையும் அங்கு அனைவரும் கேட்டிருப்பார்கள். உங்களது ஆசையும் நிறைவேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி. தைரியமாக நீங்களும் உங்கள் அருமையான கருத்தை முன்வைத்ததற்கு பாராட்டுக்கள். உங்கள் வீட்டார்கள் சொன்னது போல ரெக்கார்ட் செய்திருந்தால், நாங்களும் இப்போது அதை கேட்டிருப்போம். மற்றுமொரு சமயத்தில் அதையும் நிறைவேற்றுங்கள். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ரோஷிணியின் பெங்காலி ஓவியம் மிக அழகாக இருக்கிறது. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போன்ற கைவண்ணம். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்தான உங்கள் மேலான கருத்துகள் என்னை மகிழ்வித்தது. ரெகார்ட் செய்யும் எண்ணமே எனக்குத் தோன்றவில்லை என்பது தான் உண்மை...:) அடுத்த முறை வாய்ப்புக் கிடைத்தால் நினைவில் வைத்து செய்ய முயற்சிக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  2. ரோஷ்ணியின் முயற்சி 'அட' போட வைக்கிறது.  பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. FM  குரல் விஷயம் FB யிலேயே படித்தேன்!  கனெக்ஷன் கிடைத்து விட்டது என்றதுமே சட்டென மொபைலில் ரெகார்ட் பட்டன் ஆன் செய்திருக்கலாமே என்று தோன்றியது.  

    என் குரல் ஒரு முறை மதுரை வானொலி நிலையத்தில் ஒலித்திருக்கிறது.  ஒலிபரப்பு பின்னொரு தேதியில்தான் என்பதால் அது ஒலிபரப்பானபோது கேசட்டில் பதிவு செய்தேன்!

    FM   மில் பேச தொடர்பு உடனே கிடைத்தது வியப்பு.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை ரெகார்ட் ஏதும் செய்ததில்லை என்பதால் நினைவில் இல்லை..:) அடுத்த முறை வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கலாம்.

      தங்களின் வானொலி அனுபவம் அருமை.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. ரோஷ்ணியின் ஓவியம் அருமை.  ராதா கிருஷ்ணனா?  ரோஷ்ணி என்ன நினைத்து வரைந்தார் என்று அறிய ஆவல்.  ஓவியம் பார்ப்பவர்களுக்கு ஒவ்வொருவிதமான கற்பனைகள் தோன்றும்.  அதிலும் நான் ப.பொ க எழுதுபவன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவள் சிவன் பார்வதி என்று தான் சொன்னாள். தங்களின் கற்பனையில் கவிதை வாசிக்க ஆவல்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  5. ரோஷ்ணியின் முயற்சி ரொம்ப சூப்பர்.

    அதில் be the energy you want to attract - உளவியலில் முக்கியமாகச் சொல்லப்படுவது, நம் உள்மனது எண்ணங்களே நம் செயலிலும் உடலிலும் வாழ்க்கையிலும் பிரதிபலுக்கும் .

    நான் முன்பு டயரியில் எழுதி வைத்து அவ்வப்போது பார்த்ததுண்டு பள்ளி, கல்லூரிக்காலங்களில் அதன் பின்னும்.

    மகனும் டயரியில் எழுதிப்பான், சிலது பேப்பரில் எழுதி ஷெல்ஃபின் கதவில் ஒட்டி வைத்துக் கொள்வது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் இதுபோல் எழுதி வைத்துக் கொள்வீர்களா! அருமை!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. ரோஷ்ணி வரைந்திருக்கும் ஓவியம் வித்தியாசமாக...நவீன ஓவிய வடிவமைப்பில் தெய்வ உருவம் என்றால் சிவன் பார்வதி?! நெற்றியில் இருக்கும் திலகம் வைத்து என் அனுமானம்.

    இல்லைனா, பண்டைய ஆண் பெண்... வாய் வரைந்திருக்கவில்லை ஆணிற்கும் மூக்கும் இல்லை.. நிறைய விஷயங்களைச்சொல்கிறது ஓவியம்! காதலில் வாய் கட்டுண்டு மூச்சு கூட விடாத மோன நிலை!!!! இல்லை வேறு வகையில் கதைக்குக் கூடத் தோன்றுகிறது. நிறைய எழுதலாம். அழகா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அனுமானத்தில் கதைகளை எதிர்பார்க்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. எஃப் எம் மில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம் ஆதி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. வாசகம் அருமை. நிதானம் என்றும் நல்லது.

    //தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்ள இது ஒரு வழி என நினைக்கிறாள்! //

    தினம் படிக்கும் போது தன்னபிக்கை வரும் தான். ரோஷ்ணியின் எழுத்தும் ஓவியமும் நன்றாக இருக்கிறது.
    எழுத்துக்கும், ஓவியத்திற்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. //ஹலோ fm 106.4ல் இன்னிக்கு நம்ம கூட இணைப்பில் பேச வந்திருக்காங்க ஸ்ரீரங்கத்திலிருந்து இளம் எழுத்தாளர் ஆதிலக்ஷ்மி!//

    அருமையான வரவேற்பு உங்கள் பேச்சும் அருமை. வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
    பதிவு செய்து இருந்தால் எல்லோரும் மகிழ்ந்து இருப்போம்.
    தீடிர் என்று பேசும் போது பதிவு செய்து இருக்க முடியாதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. ரெகார்ட் செய்யணும் என்ற எண்ணமே வரவில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. விஜயலஷ்மி சென்னை4 பிப்ரவரி, 2026 அன்று 6:27 PM

    இன்றைய பதிவு அருமை ஹலோ fm ல் உங்களுக்கு நல்ல வரவேற்பு என் இப்படி எழுதி பிரிண்ட் எடுத்து ஒட்டி வைப்பால் ரோஷிணியின் படம் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி விஜயலக்ஷ்மி ஜி.

      நீக்கு
  11. அருமை புவனா. குழந்தை உங்கள் இருவரின் குணங்களையும், திறமையையும் கொண்டுள்ளாள். மென்மேலும் நன்கு வளர வாழ்த்துகள்.

    Fm மூலம் உண்டு குர ல், காற்றோடு காற்றாய், என்பதும் நல்லதொரு அனுபவம். மொழி படத்தில் வரும் "காற்றின் மொழி" பாடல் நினைவுக்கு வருகிறது.

    உன் கை வண்ணம் எழுத்தில் காண்பது போல், குரல் வண்ணமும் பரவ வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....