நேற்று
அலுவலகத்தில் இருக்கும்போது அலைபேசியில் ஒரு அழைப்பு. இரண்டு முறை மணி அடித்து
எடுப்பதற்குள் நின்று விட்டது! யாருப்பா அது மிஸ்ட் கால் கொடுப்பது? என்று
யோசித்துக் கொண்டே திரையைப் பார்த்தால், தெரியாத எண். பொதுவாகவே தெரியாத எண்
என்றால் முதல் முறையே எடுத்துப் பேசுவதில்லை.
தேவையில்லாத பல அழைப்புகள் வருகிறதே என்பதால். சரி தேவையெனில் மீண்டும் அழைப்பார்கள் என
வேலையில் மூழ்கினேன். இரண்டு நிமிடங்களுக்குள் மீண்டும் ஒரு மிஸ்ட் கால்! அதே
எண்ணிலிருந்து!
சரி
என்ன தான் அவருக்கு பிரச்சனையோ, கேட்டுவிடுவோமே என அந்த எண்ணுக்கு நானே
அழைத்தேன். ”என்னப்பா, யாரு நீ, பேசணும்னா, பேச
வேண்டியது தானே? எதுக்கு மிஸ்ட் கால்?” என்றுதான் ஆரம்பித்தேன்!
மறுமுனையில் வந்த பதில் – ”நீங்க தானே முதல்ல
மிஸ்டு கால் கொடுத்தீங்க! அதனால தான் நானே கூப்பிட்டேன்!”
அட என்னப்பா இது, “இன்னிக்குக் காலையிலிருந்தே நான்
யாரையும் அலைபேசி மூலம் அழைக்கவில்லையே?” என்று சொல்லி விட்டு, இது என்ன குழப்பம்? என யோசித்தேன். சரி, பேசுவது தான் பேசுகிறோம், அவர் யாரென்பதைத் தெரிந்து
கொள்வோமே என்று பேச்சைத் தொடர்ந்தேன்.
“சரி, நீங்க யாரு? எங்கேயிருந்து பேசறீங்க?” என்று கேட்க, அவர் சொன்ன பதில் – “Shahid Bhagad Singh Seva Dal” அலுவலகத்திலிருந்து பேசுகிறேன் எனச் சொல்லி,
உங்கள் மிஸ்ட் கால் பார்த்து தான் “உங்களுக்கு ஏதோ வண்டி வேண்டும் போல இருக்கிறது.
அவசரமாக இருக்கும் என்று தான் நான் உங்களை அழைத்தேன்” என்று மீண்டும் சொன்னார்.
இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது. ”Shahid Bhagad Singh Seva Dal” என்பது
Shunty என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் சர்தார்ஜி ஒருவர்
நடத்தும் சேவை மையம். பல சேவைகளைச் செய்து
வந்த இவர், கடந்த தில்லி தேர்தலில் BJP சார்பாக போட்டியிட்டவர்.
நிறைய பொதுச் சேவைகள் செய்து வந்த இவர் நிச்சயம் ஜெயித்து விடுவார் என பலரும்
நினைத்திருக்க, பாவம் தில்லியில் அடித்த ஆம் ஆத்மி அலையுடன் போட்டி போட முடியாது
இவர் மூழ்கிவிட்டார்!
திரும்பவும் நேற்று நடந்த விஷயத்திற்கு வருவோம்! ”உங்க கால் பார்த்துட்டு நான் கூப்பிட்டேன், ”மயானத்துக்குப் போகணுமா? இல்லை ஆஸ்பத்திரிக்கா” என்று மீண்டும் கேட்டார்.
என்ன
நடந்திருக்கும் என யோசித்தபோது விஷயம் புரிந்தது. கடந்த வாரத்தில் நண்பரின் அப்பா
தனது 85-ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார். ”மீசை மாமா” என்று நாங்கள் கூப்பிடுவோம்! சின்னதாய் ஹிட்லர் மீசை வைத்திருப்பார். பொதுவாகவே இப்படிப்பட்ட நேரங்களில் நான்கு
பேராக தூக்கிக் கொண்டு மயானத்திற்கு போவது தான் வழக்கம். ஆனால் அன்றோ நல்ல மழை.
அதனால் ”Shahid Bhagad Singh Seva Dal” சவ ஊர்தி சேவையை பயன்படுத்தினோம். என்னுடைய அலைபேசியிலிருந்து
அழைத்தபோது அந்த ஓட்டுனர் எடுக்கவில்லை. வேறு ஒரு ஓட்டுனருக்கு அழைக்க, அவர்
வண்டியை கொண்டுவந்தார். கிட்டத்தட்ட 10
நாட்கள் கழித்து தான் நான் அழைத்த முதலாமவர் தனது அலைபேசியில் இருந்த மிஸ்ட் கால்
பார்த்திருப்பார் போலும்!
ரொம்பவும் சுறுசுறுப்பாக என்னை அழைத்து “வண்டி
வேண்டுமா? மயானத்துக்கு போகணுமா, இல்லை ஆஸ்பத்திரிக்கா?” என்று
கேட்டிருக்கிறார்! நானும் பதிலுக்கு.....
“முதல் இடத்துக்குப் போக இன்னும் அழைப்பு வரலை! மருத்துவமனைக்குப்
போகற அளவுக்கு உடம்புக்கு ஒண்ணும் கேடு இல்லை!” என்று சொன்னேன்!
என்
பதில் கேட்டு சிரித்தபடியே அவர் இணைப்பைத் துண்டிக்க, நானும் சிரித்தபடியே
அலைபேசியை மேஜையில் வைத்தேன்.






