சனி, 4 ஏப்ரல், 2020

காஃபி வித் கிட்டு – அப்பா - விளம்பரம் – கூரை- கையைப் பிடித்து – பிறந்த நாள்


காஃபி வித் கிட்டு – பகுதி 61


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

அப்பா வீட்டின் கூரை. ஏனோ யாரும் அண்ணாந்து பார்ப்பதில்லை, கூரையில்லாமல் வீடில்லை.

இந்த வாரத்தின் ரசித்த கவிதை:

பாசத் தீ
---------------------------------------
ஊருக்குச் சென்று
திரும்பும்போதெல்லாம்
சொல்லுவார் அப்பா
'உடம்பைப் பார்த்துக்கப்பா.’
என்று

எனக்கும் ஆசைதான்
சேர்ந்தாற்போல்
நான்கு நாட்கள் விடுமுறையில்
அருகிலேயே இருந்து
அப்பாவைக் கவனித்துக்கொள்ள
என்றாலும்
ஒருபோதும் முடிந்ததில்லை

ஒவ்வோர் இரவிலும்
கட்டிப்பிடித்தபடி
தூக்கத்தில்
மேலே போடும்
மகனின் கால் பிடித்து
அமுக்கிவிடுவேன் இதமாக
அப்பாவை எண்ணிக்கொண்டு!
---------------------------------------------
- ஆர்.சி.மதிராஜ்

இந்த வாரத்தின் விளம்பரம்:

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக தாய்லாந்திலிருந்து ஒரு விளம்பரம். நான் பார்த்த வரை தாய்லாந்து நாட்டின் விளம்பரங்களில் பல மனதைத் தொடும் விதமாக இருப்பவை.  இந்த விளம்பரமும் அப்படியே… பாருங்களேன்.



இந்த வாரத்தின் ரசித்த பாடல்…

உணர்ச்சி மிகுந்த ஒரு பாடல் – அப்பா கைய பிடிச்சு நடந்தா….  கிராமிய அப்பாவினைப் பற்றி ஒரு நல்ல பாடல்.  பாருங்களேன்.



இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை:



விடியற்காலை ஐந்து மணி. நந்தினியின் செல்போன் விடாமல் அடிக்க... கண்களைக் கசக்கிக்கொண்டே போனை எடுத்த நந்தினி, அண்ணாவின் பெயரைப் பார்த்ததும் பயந்து போனாள்.

”என்னடா, இந்த நேரத்துல... யா... யாருக்கு என்னாச்சு?”

”அப்பாக்கு ஹார்ட் அட்டாக்டி. சாரதா நர்ஸிங் ஹோம்ல சேர்த்திருக்கோம்.”

அவ்வளவுதான்... நந்தினிக்கு அவள் உலகமே சுற்றியது. நிதானத்துக்கு வந்து ஆகாஷிடம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குப் பயணித்த அந்த நிமிடங்கள் நரகமானவை.

எட்டு வருடங்களுக்கு முன்னால், அப்பாவின் முன் நின்றது நினைவிலாடியது.

நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம ஆகாஷை கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கற... இதுக்கு மேல உன் கூட எனக்குப் பேச இஷ்டம் இல்ல...”

சிறுகதையை முழுமையாக படிக்க இங்கே செல்லவும்!

இந்த வாரத்தின் ரசித்த கேள்வி பதில்:

கேள்வி: குழந்தைகளுடன் பேச்சு கொடுத்து பல்பு வாங்கிய அனுபவம் உண்டா?

பதில்: ரிஷிகேஷ் சிதம்பரநாதன் - கொஞ்சமா? பல முறை என் குழந்தைகளிடம் பல்பு வாங்கிய அனுபவம் உண்டு.

ஒரு முறை என் கீ செயின் தொலைந்துவிட்டது. வீடு முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. அதுவோ மிக அழகான கீ செயின்.

அப்போது என் மகளுக்கு 3 வயது. அவளிடம் எங்கே கீ செயின் என்று கேட்க, அவளோ, என்னிடம் என் கையை பிடித்து அங்கே இருக்கு என்பது போல கூட்டி சென்றாள். சரிதான், பாப்பா தான் எடுத்து எங்கேயோ போட்டு இருக்கிறார் என்று நினைத்து போனேன்.

கூட்டி கொண்டே சென்றவள், kitchen நின்று கொண்டு இதுதான் என்றாள். இங்க எங்க? என்றேன். இது தான் கீச்ச்ன் என்றாள்.

இது என்ன என்று ஒரு நிமிடம் புரியவில்லை.

அப்போது தான் புரிந்தது அவளுக்கு கீ செயின் என்பது கிட்சென் என்பதாக புரிந்திருக்கிறது. என் செல்ல குட்டி தான் எவ்வளவு விவரம்!

பல்பு வாங்கினேன்.

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2012-ஆம் வருடம்… இந்த ஏப்ரல் மாதத்தில் முதல் வாரம் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த வாரம். எவ்வளவு இனிமையான நாட்கள் வலைச்சர நாட்கள். வாரா வாரம் ஒரு ஆசிரியர் வலைப்பூக்களை அறிமுகம் செய்து மகிழ்ந்த நாட்கள். அப்படி ஆசிரியராக இருந்த சமயத்தில் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததோடு, எனது பக்கத்திலும் தினம் தினம் பதிவுகள் எழுதிய நாட்கள். அப்படி 2012-ஆம் வருடம் ஏப்ரல் 4 எழுதிய பதிவு ஒன்றை படிக்கலாமே! வலைச்சரத்திலும் அன்றைக்கு பிறந்த நாள் பதிவுகள் அறிமுகம் தான்! காரணம் என்ன என்று அங்கேயே சென்று பார்க்கலாமே!


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

  1. வாசகமும் கவிதையும் அருமை.  கவிதையில் சொல்வதுபோல நானும் செய்ததுண்டு!
    காணொளிகள், சுட்டி பின்னர்தான்.   கணினி படுத்துவதால் வேகமான ரீடிங்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் கவிதையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      காணொளிகள் முடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தாய்லாந்து விளம்பரம் அருமை.. கவிதையும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரமும் கவிதையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமேஷ்.

      நீக்கு
  3. ரோஷ்ணிக்கு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி ரிஷபன் ஜி.

      நீக்கு
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    அப்பா காணொளி மிகவும் பிடித்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      காணொளி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  5. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள். கீசெயின்.கிட்செயின்..சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
    பாசத் தீ கவிதை மனம் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  7. வலைச்சரத்தோடு பயணித்தது வசந்தகாலம் ஜி
    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி. வலைச்சரம் காலம் வசந்த காலமே...

      கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  8. அருமையான தொகுப்பு. நானும் என் மகளிடம் அடிக்கடி பல்பு வாங்கி வருகிறேன். அது ஒரு தனி அனுபவம்.

    வலைச்சரம் போல ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். அனைவரினதும் ஒத்துழைப்பை அதில் எதிர்பார்க்கிறேன்.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    அத்துடன், தங்களது இந்த பதிவும் வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் குழந்தைகளிடம் பல்பு வாங்குவதும் ஒரு வித மகிழ்ச்சி தான் சிகரம் பாரதி.

      உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள். பாராட்டுகளும்.

      நீக்கு
  9. மிக அருமையான பதிவு.
    காணொளிகள் அருமை.
    பாசம் மிகுந்த காணொளிகள், கண்கள் கசிந்தன .

    ரோஷ்ணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிகள், வாழ்க வளமுடன்.
    கதை படிக்கிறேன்.
    வலைச்சர காலங்கள் மிக அருமையான காலங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

      வலைச்சர நாட்கள் இனிமையானவை தான் மா...

      நீக்கு
  10. சிறுகதையும் அப்பாவின் பாசத்தை சொல்கிறதே!

    அருமை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவின் பாசம் சொல்லும் சிறுகதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்கள் மகள் ரோஷ்ணிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    வாசகமும் ரசித்த கவிதை மற்றும் பாடல் காணொளி என அத்தனை குறிப்புகளும் தந்தையைப் பற்றிய சிறப்பு பார்வை. அனைத்து நன்றாக இருந்தன.அப்பா சிறுகதை மிக அருமையாக இருந்தது. ரசித்தேன். இன்று அனைத்துமே அப்பாக்களை பற்றி எழுதிய தங்களுக்கும், தங்கள் அன்பு மகளுக்கும் என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. வாசகம் அருமை! அப்பா பற்றிய பதிவு என்பதால் வாசகமும்!

    கவிதையை மிகவும் ரசித்தேன் ஜி. அது போல விளம்பரம் மனதைத் தொட்டது. பாடல் அருமை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      கவிதை, விளம்பரம், பாடல் என அனைத்தும் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  13. அப்பா சிறுகதையை வாசித்தேன் ஜி ! நல்ல கதை. சில பெற்றோர் நிகழ்கால தருணங்களை ஏதோ ஒரு வீம்பால் தொலைத்துவிடுகின்றனர். தம் குழந்தைகளோடான அந்தத் தருணங்களை. அவர் இழந்ததோடு மகளையும் வேதனைப்படுத்துகிறது. அந்த அன்பை நிகழ்காலத்தில் அந்தந்த நொடிகளில் காட்டியிருந்தால் எத்தனை சந்தோஷமாக இருந்த்ருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா - பல அப்பாக்கள் அன்பை நிகழ்காலத்தில், அந்தந்த நொடிகளில் காட்டியிருந்தால் - உண்மை தான். பல அப்பாக்களுக்கு தனது அன்பை செயலில் காண்பிப்பது தெரிவதில்லை.

      கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  14. ரோஷிணிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி!

    சின்னக் குழந்தைகளின் மழலை மொழியும் அதன் அர்த்தமும் பல்பு வாங்கினாலும் மனதை மகிழ்விக்கும் பொக்கிஷங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளின் மழலை - மனதை மகிழ்விக்கும் பொக்கிஷங்கள் - உண்மை கீதாஜி.

      தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    இரசித்தவை எனத் தொகுத்தவை
    எல்லாம் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி யாழ்பாவாணன்.

      நீக்கு
  16. அன்பு வெங்கட்,
    அன்பு ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என்றும் நலம்
    பெற ஆசிகள்.
    அப்பா பற்றிய தாய்லாந்து காணொளி ம்க மிக அருமை.
    வாசகமும்
    அப்பா கையைப் பிடிச்சு பாடல் நெகிழ வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், காணொளி, பாடல் ஆகியவை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  17. அப்பா கதை சோகம்.
    எல்லாம் ஒரே அப்பா மயமாக இருக்கிறதே.
    நன்மையே.

    நீங்கள் பதிந்திருக்கும் கொன்றைமலர்
    காசிய ஃபிஸ்டூலா. நம் வீட்டில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் ஒரே அப்பா மயமாக இருக்கிறதே! - ஆமாம் முதல் இரண்டு மூன்று அப்படி வர, மற்றவையும் அப்பா பற்றியே சேர்த்து விட்டேன்!

      கொன்றை மலர் - உங்கள் வீட்டில் - மகிழ்ச்சி வல்லிம்மா...

      நீக்கு
  18. ரோஷினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
    இந்த வார கதம்பம் அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் சேர்த்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.

      தங்களது வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  19. காணொளிகள் நன்று. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகல நலமும் பெறுக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      உங்கள் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....