வெள்ளி, 7 மே, 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி நான்கு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THE KITE GIVES US A WONDERFUL MESSAGE, FLY HIGH BUT STAY CONNECTED TO THE GROUND TO OUR ROOTS OR ELSE WE ARE LOST. 


******




நண்பரின் மேகாலயா பயணம் தொடர்பான கட்டுரையின் முதல் மூன்று பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்.  நினைவு இல்லாதவர்கள் இந்தப் பக்கத்தில் முதல் பகுதியையும், இந்தப் பக்கத்தில் இரண்டாம் பகுதியையும் இந்தப் பக்கத்தில், மூன்றாம் பகுதியையும் படித்து முடித்த பின்னர் இந்த நான்காம் பகுதியைத்  தொடரலாம். இனி பயணத் தொடர் நண்பர் சுப்பு எனும் சுப்ரமணியன் அவர்களின் வார்த்தைகளில்! - வெங்கட் நாகராஜ் 


******





குகையிலிருந்து சில காட்சிகள்...

சென்ற பகுதிகளில் பார்த்த சில இடங்கள் குறித்து நினைவில் இருக்கலாம்.  NOHKALIKAI அருவி பார்த்த பிறகு, நாங்கள் சென்ற அடுத்த இடம் MAWSMAI குகை கூட்டம். உள்ளே செல்லச் செல்ல நீண்டுகொண்டே போனது. உள்ளே நுழைந்து, தவழ்ந்து, பிறண்டு, உருண்டு சென்றோம். ஒரு மிக மனநிறைவான தோற்றம். மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே குகையை நன்றாக ரசிக்கலாம். நாங்களும் ரசித்தோம். ஒரு சில படங்களும் க்ளிக்கினோம். துவக்கத்தில் சொன்னவாறு தில்லியில் செய்து எடுத்துச் சென்ற உணவினை வெளியே வாகன நிறுத்தத்தில் வாகனத்தில் அமர்ந்தபடி உண்டோம்.  காகம் இல்லை. அதற்கு பதிலாக பங்கு கேட்க பைரவர் வந்தார். அவருக்கு பகிர்ந்தளித்து உண்டோம். மகள் அவருடன் புகைப்படம் எடுத்தார்.



சிரபுஞ்சி குறித்த தகவல் பலகை ஒன்று...


தங்குமிடத்தின் முகவரி...

அதை அடுத்து அன்றைய கடைசி ஏழு சகோதரிகள் அருவி (SEVEN SISTER FALLS) சென்றோம். ஆனால் அருவி இருக்கும் சுவடு கூட தெரியவில்லை. மேகக்கூட்டங்கள் போர்வை போர்த்தி விட்டன. எனவே சற்றே ஏமாற்றத்துடன் சிரபுஞ்சியில் தங்குமிடமான LAIAIKER INN வந்து சேர்ந்தோம். எளிமையான ஆனால் நேர்த்தியான அறை. ரம்மியமான சூழலில் இருந்தது அந்தத் தங்குமிடம். உடமைகளை அறையில் வைத்துவிட்டு சற்று இளைப்பாறிய பின்னர், தேநீர் குடித்து மூவரும் நீண்ட நடை பயணம் செய்தோம். என்ன ஒரு அமைதியான இடம் - அங்கேயே தங்கி விடலாம் என அனைவரையும் எண்ண வைக்கும் அட்டகாசமான இடம். மீண்டு வந்து இரவு உணவுக்குப் பின் மீண்டும் காற்றோட்டமாக நடைபயணம். படுத்து உறங்கிய சற்று நேரத்தில் சிரபுஞ்சியின் தனித்துவமான, வருண பகவானின் வற்றாத ஆர்ப்பரிப்பு, மழையாய் பொழிந்து தள்ளியது. ஆனந்தமாய் உறங்கினோம். 



வாகன நிறுத்தம் ஒன்றின் அருகே...

எங்கள் பயணத்தின் அடுத்த நாள் 12 ஏப்ரல் 2021 - இந்த நாள் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியான நாள். ஏனெனில் முதன்முறையாக நாள் முழுதும் என் மகளுடன் இருந்தேன். என்னடா பீடிகை போடுகிறானே என எண்ண வேண்டாம். அன்று என் மகளின் பிறந்தநாள். கடுமையான அலுவல் சுமையால் காலை வாழ்த்துக்கள் கூறி சென்றுவிடுவேன். இரவு வீடு திரும்பும் முன் பல வருடங்கள் மகள் உறங்கி விடுவது உண்டு. இரவு 9 மணிக்கு மேல்தான் அலுவலகத்தில் இருந்து புறப்படுவது வழக்கம். அதை மேகாலயா முறியடித்தது. சிரபுஞ்சியிலிருந்து காலை 9 மணிக்கு சிற்றுண்டிக்கு பின் (உண்மையிலேயே சிற்றுண்டி தான்! ஆளுக்கு நாலு வில்லைகள் ரொட்டித் துண்டுகளுடன் தேநீர்!) சிரபுஞ்சியில் இருந்து MAWLYNNONG 75 KM,  MAWLYNNONG TO DAWKI 30 KM. 



ரம்மியமான காட்சி - சாலையில் குண்டுகுழி!

இதுதான் அன்றைய பிரதான பயணத்திட்டம். விடுதியில் இருந்து புறப்பட்டோம். அட்டகாசமான ஒரு சாலை பயணம்! மலைகளின் நடுவே கரும் பட்டையாய் சாலை. சுற்றுப்புறம் முழுக்க மேகமூட்டம்!  நிறுத்த விளக்குகள் (PARKING LIGHTS) மற்றும் முகப்பு விளக்குகள் (HEADLIGHTS) ஒளிர விட்டபடியே தான் செல்ல முடியும். அப்படி ஒரு மனதிற்கு இனிய பயணம். மலைப்பாதை ஆதலாலும் மிதமான இதமான வெப்பநிலை காரணமாகவும் குளிரூட்டி (AIR CONDITIONER) இயக்கப்படவில்லை. எனவே கதவுகளின் இடை கண்ணாடி தடுப்புகள் இறக்கிவிடப்பட்ட குளிரான சுத்தமான காற்றை அனுபவித்தபடியே அட்டகாசமான ஒரு பயணம். ஆனால் விரைவிலேயே வேறொரு அனுபவம் எங்களுக்காகக் காத்திருப்பதை அறியாமல் நாங்கள் சென்றோம். 



சாலைப் பயணத்தில் - பிரம்மாண்ட மரங்கள்...

சற்று நேர ரம்யமான பயணத்தின் பின் ஒரு திறந்தவெளி தாண்டிச் செல்ல, நெடுக சரக்கு வாகனங்கள் கல்லுடைக்கும் ராட்சத இயந்திரங்கள். அருகே கம்பீரமாய் இருந்த ஒரு மலைப்பகுதி மாமிசக் கடைகளில் (மேகாலயாவில் பற்றி கேட்கவே தேவையில்லை)  உரித்து தொங்க விடப்பட்ட விலங்கினங்களை போலவே, அறுபட்டு, குன்றளவு சிறிய மலையாக உருமாறி இருந்தது.  பாறைகள் முழுக்க முழுக்க சூறையாடப்பட்டு, ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்களில் பங்களாதேஷ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்த வண்ணம் உள்ளார்கள். அரசுக்கு கோடிக்கணக்கில் அதுவும் அந்நிய செலாவணியில் வருமானம் வரலாம் ஆனால் அரசே முன்னின்று இயற்கை வளங்களை எப்படி அழிப்பது சற்றும் ஒவ்வாத விஷயம். ஆனால் இந்த தேசத்தின் பாமர மக்களால் வருந்த மட்டுமே முடியும். எந்த பூனைக்கு யார் மணி கட்டுவது? 



சாலைப்பயணத்தில் - மற்றொரு காட்சி...


சற்றே கனத்த மனத்துடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குறு(கிய) மலைகளை கடந்து ஓரிடத்தில் நிறுத்தினார். அது ஒரு அழகான கிராமம்.  நாலு ஐந்து கடைகள் வாகன நிறுத்தத்தில் இருந்தன. மனோஜ் ஒரு பாதையைக் காட்டி இது வழி செல்லுங்கள் என்றார். நாங்களும் என்ன ஏது என்று பு(தெ)ரியாமல் லகான் கட்டிய குதிரைகளைப் போல் சென்றோம். சற்று தூரம் கான்கிரீட் நடை பாதையில் சென்றோம். அங்கே என்ன பார்த்தோம், அந்த அனுபவம் என்ன, எப்படி இருந்தது என்பதையெல்லாம், அடுத்த பகுதியில் சொல்லட்டா?  தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.


மேலும் பயணம் தொடரும்…


ஆர். சுப்ரமணியன் 


******


நண்பர்களே, தில்லி நண்பரின் மேகாலயா பயணத் தொடரின் நான்காம் பகுதி உங்களுக்கும் பிடித்திருக்கலாம்!  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர் தொடர்ந்து எழுதுவது உங்கள் ஆதரவில் தான் இருக்கிறது! மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்.

20 கருத்துகள்:

  1. படங்கள் பிரமாதம்.  பயணத்தொடர் பயந்த தொடராகி இருக்கிறது!  சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பயந்த தொடர் - :) மாற்றி விட்டேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குகைப்படங்கள் அற்புதம் ஜி.

    சென்ற இடத்தில் மகளின் பிறந்தநாள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நாங்கள் போனபோது சேர்ரபுஞ்சி மாவ்சின்ராம் இரு இடங்களும் மழை இல்லை nov17. இந்தியாவின் அதி சுத்தமான கிராமம், orange route restaurant, zip cross இவற்றுடன் ஒரு நல்ல மியூசியம் காண இன்னொரு முறை போகலாம். உங்கள் படங்கள் மிக நன்றாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பயணத்தினை இந்தக் கட்டுரை நினைவு கொள்ள வைத்ததில் மகிழ்ச்சி கேஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அரசுக்கு கோடிக்கணக்கில் அதுவும் அந்நிய செலாவணியில் வருமானம் வரலாம் ஆனால் அரசே முன்னின்று இயற்கை வளங்களை எப்படி அழிப்பது சற்றும் ஒவ்வாத விஷயம். ஆனால் இந்த தேசத்தின் பாமர மக்களால் வருந்த மட்டுமே முடியும். எந்த பூனைக்கு யார் மணி கட்டுவது? //

    டிட்டோ...நாம் என்ன செய்ய முடியும்?

    கண்ணாடியை இறக்கி விட்டதில் இதுதான் அந்த அனுபவமா?!

    கடைசில இப்படி ஒரு சஸ்பென்ஸ்!!! குறுகுறுன்னு இருக்கு...
    படங்கள் எல்லாம் அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னிய செலாவணி - அரசு செய்யும் பல வேலைகள் இப்படித்தான் இருக்கிறது - எந்த மாநில அரசாக இருந்தாலும்!

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. அன்று சொல்லவிட்டது அந்தக் குகை பார்த்ததும் போரா கேவ்ஸ் அரக்குவேலி நினைவுக்கு வந்தது. இந்தக் குகைகளும் என்ன அழகு!!!

      கீதா

      நீக்கு
    3. அரக்கு வேலி குகைகளை விட இந்தக் குகைகள் சிறியவை கீதா ஜி. ஆனாலும் நினைவில் வரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. படங்களும், வர்ணனையும் மிக அருமை. மீண்டும் மேகாலயா சென்று வந்த அனுபவம் ஏற்பட்டது. ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பயணம் உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. படங்களும் பயண விவரங்களும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. படங்கள் அழகு. இரவுதானே மழை பெய்தது. பகலில் பெய்திருந்தால் பயணம் சங்கடமாக இருந்திருக்கும்.

    மலையை அறுத்து அடுத்த நாட்டுக்கு ஏற்றுமதியா? கண்ணைவிற்றுச் சித்திரம் வாங்குகிறார்கள் போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணை விற்றுச் சித்திரம் - அதே தான் நெல்லைத் தமிழன்.

      பயணத்தின் போது மழை - கடினம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பயணக்கட்டுரை நன்றாகச் செல்கிறது. படிக்கவே சுவாரஸ்யமாக உள்ளது. இயற்கை வனப்பு மிகுந்த படங்கள் அழகாக உள்ளன. அந்த குகைப் படங்களும், சூரியன் உதிக்கும்/அஸ்தமிக்கும் படமும் நன்றாக உள்ளன. இயற்கையை பற்றி விவரித்து கூறியது அங்கே நேரில் சென்று பார்த்த உணர்வை தருகிறது.

    மகளுடன் பிறந்த நாளை அன்று முழுவதும் அவருடன் ஆனந்தமாக கழித்ததற்கு வாழ்த்துகள்.உண்மை... இந்த மாதிரி மகிழ்வான சமயங்கள் வாய்ப்பது சிரமந்தான்..

    மலைகளை வெட்டி அப்புறப்படுத்துவது வேதனைக்குரிய விஷயம். இயற்கை இப்படி காசாக்கப்படுவது கொடுமைதான்.. அடுத்து கண்ட காட்சிகளை காண நாங்களும் ஆவலாக இருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பயணக்கட்டுரையும், படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. படங்களும் பயண விவரங்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....