புதன், 22 ஜூன், 2016

பதிவர் லாஜியுடன் ஒரு சந்திப்பு



''கரம் படுத்திய பாடுஆறு வயதாகியும் கூட என் வாய்க்கும் ''கரத்திற்கும் ஏனோ ஒத்தே வரவில்லை. எத்தனை முயன்றாலும் ''கரத்தை ''கரமாக உச்சரிப்பதே என் வழக்கமாக இருந்து வந்தது. யாராவது உன் பெயர் என்ன என்று கேட்டால் பளிச்சென்று 'லாஜி' என்றுதான் கூலுவேன் (ஐயோ! பழைய நினைப்புல தப்பா டைப்பிட்டேன். சாரி!) கூறுவேன். தினமும் என் அக்கா இதற்காக என்னோடு போலாடாத.. சீ சீ போராடாத நாளே இல்லை எனலாம்.

 லாஜிக்கு போட்ட லைட்டு:  

 பள்ளியில் சேரும் போது எனக்கு ஒரு சிலேட்டும் பலப்பமும்  வாங்கி தந்து அனுப்பினர். அப்பொழுதெல்லாம் சிலேட், பலப்பம்தான். முதல் மூன்று மாதங்களுக்கு சும்மா பள்ளியில் ''  ''  '' '' எழுதுவதோடு  சரி. மற்ற படி வாயால் ஒப்பித்தலும் பதில்  கூறுதலும்தான். மூன்று மாதங்களுக்கு பிறகு சிலேட்டில் எழுதக் கூடிய சின்ன சின்ன வீட்டுப் பாடங்கள் தருவார்கள். சிலேட்டில் எழுதிய வீட்டுப் பாடத்தை அழியாமல் ஸ்கூலுக்கு எடுத்து  சென்று காமிக்கும் டெக்னிக் இருக்கிறதே.. அப்பப்பா...அப்படி எழுதியதை அழியாமல் கொண்டு சென்று அதில் வாத்தியாரிடம் 'டிக்' வாங்கும்போது ஏதோ இமாலய சாதனை செய்தது போல ஒரு பீற்றல் இருக்கும். 

அழியாமல் கொண்டு சென்றவர்கள், அழிந்து போய் எடுத்து வருபவர்களின் பொறாமைக்கு ஆளாவோம்.

 அப்படி வாத்தியாரிடம் 'டிக்' வாங்கிய பெருமையை வீட்டில் வந்து சொல்லும் போது நான் சொல்வதைக்  கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். ஏனென்றால் நான் சொல்லும் லட்சணம் அப்படி. "எங்க வாத்தியால் எனக்கு லைட் போட்டாலே" (எங்க வாத்தியார் எனக்கு ரைட் போட்டாரே)

 அப்பொழுது எங்கள் வீட்டில் அப்பாவின் பணி நிமித்தமாக ஒரு வாட்ச்மேன் ஒருவர் உண்டு. அவர் பெயர் வைத்தி. அவர் நான்  பள்ளியில் இருந்து வந்ததுமே என்னைப் பார்த்து கேட்பார். "என்ன லாஜிம்மா இன்னிக்கு உங்க வாத்தியால் உனக்கு லைட்டு போட்டாலா? (உங்க வாத்தியார் உனக்கு ரைட் போட்டாரா") என்ன லைட்டு? ட்யூப் லைட்டா பெட்ரமாக்ஸ் லைட்டா?" என்பார்.

 இப்பொழுது மேலே எழுதி இருக்கும் லாஜிக்கு போட்ட லைட்டு என்ற தலைப்பின் அர்த்தம் உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


மேலே கொடுத்திருப்பது வலைப்பதிவர் திருமதி ராஜி வெங்கட் அவர்களின் கற்றலும் கேட்டலும்” வலைப்பூவில் இருந்து.....  சிறப்பான கதைகள், கவிதைகள் என வலைப்பூவில் எழுதி வந்த வலைப்பதிவர் ராஜி தற்போது ஃபேஸ்புக்கிலேயே மூழ்கிவிட்டார்..... அவரது வலைப்பூவில் கடைசி பதிவு – தொப்பை! ஃபிப்ரவரி 7, 2015 அன்று வெளியிட்டது.

சில நாட்கள் முன்னர் அவர்கள் குடும்பத்துடன் வட இந்தியாவிற்கு சுற்றுலா வருவது சம்பந்தமாக அலைபேசி மூலம் பேசியபோது தில்லியில் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தார். இன்று காலை அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி.... “தில்லி வந்து சேர்ந்து விட்டோம். தில்லியில் தென்னிந்திய காலை உணவு எங்கே கிடைக்கும்? என்ற கேள்வியுடன். மாலையிலேயே தில்லியிலிருந்து புறப்பட வேண்டும் என்று முன்னரே சொல்லி இருந்ததால் மாலைக்குள் சந்திக்கலாம் என சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது.

அவர்கள் தங்கிய இடத்திற்கு அருகே என்றால் தில்லி ஜன்பத் சாலையில் இருக்கும் ஹோட்டல் சரவணபவன் தான் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதைச் சொல்லி அங்கேயே நானும் சென்று சந்திக்க முடிவு செய்தேன். பொதுவாகவே தில்லி சரவண பவனில் எப்போதுமே கூட்டம் – ஓசியில் சாப்பாடு/சாம்பார் கொடுப்பது போல தில்லிக்காரர்கள் இங்கே அதிகம் வருவார்கள். நாங்கள் காலை ஒன்பது மணிக்கு அங்கே இருந்தாலும் வாசலிலேயே சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

இடியாப்பம், இட்லி, வடை, தோசை, பொங்கல், என அனைவரும் அவரவர்களுக்குத் தேவையானவற்றைச் சொல்லி சாப்பிட்டு காபியுடன் சாப்பாட்டுக் கடையை முடித்தோம்! பொதுவாகவே காத்திருப்பு நேரம் இங்கே அதிகம்! அந்த காத்திருக்கும் நேரத்தில் நிறைய கதைகள் பேசினோம். ஹிமாச்சலப் பிரதேசம் சென்று வந்த அனுபவங்கள், சொந்த விஷயங்கள், பதிவுகள், பதிவுலகம் என பலவும் பேசினோம்.  இனிமையானதோர் சந்திப்பு – ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் போனதே தெரியவில்லை.  அங்கிருந்து அவர்களுடன் புறப்பட்டு ராஷ்டிரபதி பவன் முன் அவர்களுக்கு டாட்டா காண்பித்து தில்லி நகர் வலம் வருவதற்கு அவர்களை அனுப்பி வைத்தேன் – மீண்டும் பதிவுலகத்திற்கு வாருங்கள் என்ற அழைப்போடு.....

இனிதான சந்திப்பாக அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.  அவர்களுக்கும் மகிழ்ச்சி..... சந்திப்பு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு!

தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்......  ஃபேஸ்புக்கில் என்னதான் Like உடனேயே கிடைத்தாலும் Blog போல வருமா?  சீக்கிரம் Blog பக்கம் வாங்க லாஜி!.... கூடவே Blog ஐ விட்டு விலகி இருக்கும் அனன்யா, ஆர்.வீ.எஸ், ரிஷபன் ஜி போன்றவர்களையும் கூட்டிட்டு வாங்க!

மீண்டும் சந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

24 கருத்துகள்:

  1. அதானே... லாஜியின் எழுத்துக்கள் எத்தனை சுவாரஸ்யமானவை. வரணும்.. பழைய பன்னீர்செல்வியா வரணும்.. ஹா..ஹா.. ஹா... இனிமையான சந்திப்பை நீர் பகிர்ந்த விதம் மேலும் இனிமை த(லைநகரத்) த(ளபதி).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பன்னீர்செல்வியா..... ஹாஹா....

      நீங்களும் ப்ளாக் பக்கம் வாங்க கணேஷ்..... வாரத்துல ஒரு பதிவாது எழுதுங்க.... நீங்க பிசின்னு தெரியும். இருந்தாலும் வாரத்துக்கு ஒரு பதிவு உங்களால முடியும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

      நீக்கு
  2. ஹா.... ஹா... ஹா... நானும் உங்களையும், கணேஷையும் வழிமொழிகிறேன்


    லாஜி கடைசியாக வெளியிட்ட பதிவு தொப்பை அல்ல!





    பிரமி!


    எங்கள் ப்ளாக்கில்.... ஹி..... ஹி.... ஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி பதிவு .... :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. நல்லதொரு சந்திப்பு ... மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

      நீக்கு
  4. சந்திப்புகள் என்றுமே இனிமையானவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. தொப்பையைப் படித்தேன். சூப்பர். லாஜியை மீண்டும் பதிவுலகிற்கு இழுத்து லாவோஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  6. சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர்! விரைவில் வலைப்பூ பக்கம் திரும்பட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  7. பதிவுகளில் இப்போது எழுதாவிட்டாலும் எழுதியபோது பல இனிய நட்புகளை சம்பாத்தித்து அவர்களுடன் தொடர்பில் இருக்கும் ராஜிக்கு வாழ்த்துக்கள் இந்த ல ர சமாச்சாரம் பல குழந்தைகளுக்கும் இருக்கிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  8. அருமையான பதிவர் ராஜி . மீண்டும் எழுத வநதால் நன்றி உங்களுக்கு.

    இனிமையான சந்திப்பை விவரித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  9. #ஃபேஸ்புக்கில் என்னதான் Like உடனேயே கிடைத்தாலும் Blog போல வருமா?#
    ராஜிக்கலா ..தப்பு ,தப்பு ....லாஜிக்கலா தின்க் பண்ணி இருக்கீங்க ,அழைப்புக்கு அவர்கள் செவி சாய்ப்பார்களா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  10. இப்போதுதான் எங்கள் ப்ளாகில் ராஜி/ரேவதி வெங்கட் அவர்களின் கதையைப் படித்து கமென்ட் போட்டு வந்தால் உங்கள் பதிவும் அவர்களைப் பற்றியதைக் காண நேர்கின்றது. புதிய அறிமுகம். நீங்கள் எல்லோரும் மிக மிக சீனியர்கள் என்று தெரிகின்றது. இனிமையான சந்திப்புதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான பதிவர். முகப்புத்தகத்தில் மூழ்கி விட்டார். விரைவில் எழுதுவார் என நம்புவோம்.

      மிக மிக சீனியர் - :)))) இல்லை. பத்து வருடங்களுக்கு மேலாக எழுதுபவர்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  11. ஹிஹிஹி, லாஜினு யாரோ புதிய பதிவர்னு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  12. வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்த பதிவர்களில் பலர் இப்போது முக நூலுக்கு மாறிவிட்டார்கள். திருமதி ராஜி வெங்கட் போன்றவர்கள் வந்து அந்த இடங்களை நிரப்ப வேண்டும். தங்களின் அழைப்பை ஏற்று திரும்பவும் அவர் வருவார் எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரும்பவும் வந்து விட்டார்.... கீழுள்ள பதிவு அவருடைய புதிய பதிவு....

      http://suharaji.blogspot.in/2016/06/blog-post.html

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....