வியாழன், 21 ஜூலை, 2016

மூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 27



இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 26 பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....




நாகாலாந்து மாநிலத்தின் Dதிமாபூர் நகரிலிருந்து Intercity Express மூலம் அசாம் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான Gகௌஹாத்தி நகருக்கு நாங்க வந்து சேரும்போது அதிகாலை 05.00 மணி. 15 நிமிடம் மட்டுமே தாமதமாக கொண்டு சேர்த்த ரயில் ஓட்டுனரை மனதளவில் பாராட்டி விட்டு ரயில் நிலையத்தினை விட்டு வெளியே வந்தோம். Gகௌஹாத்தி நகருக்கு வரும் திட்டம் இருந்தபோதே ரயில் நிலையத்திலிருந்து அருகே தங்குமிடம் என்ன இருக்கிறது என்பதை இணையத்தின் மூலம் பார்த்து வைத்திருந்தோம். 

அந்த நாள் Gகௌஹாத்தியில் வெகு குறைந்த நேரமே இருப்பது தான் எங்களுடைய திட்டம் என்பதால், அனைவரும் குளித்து, காலைக் கடன்கள் முடித்து புறப்பட ஒரு அறை மட்டுமே எடுத்தால் போதுமானது என்ற முடிவில் இருந்தோம்.  Gகௌஹாத்தி நகரின் ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் பல்டன் பசார் பகுதியில் ஹோட்டல் மயூர் எனும் தங்குமிடம் சற்றே பெரியது என்றும் எப்படியும் அங்கே தங்க இடம் கிடைக்கும் என்பதையும் விசாரித்து வைத்திருந்தார் நண்பர்.  ரயில் நிலையத்திலிருந்து வெகு அருகே இருக்கிறது என்பதும் கூடுதல் வசதியாக எங்களுக்குத் தோன்றியது.

நாங்கள் ஐந்து பேரும் ரயில் நிலையத்திலிருந்து உடைமைகளோடு வெளியே வந்தோம்.  பல்டன் பசார் பகுதியில் இருக்கும் ஹோட்டல் மயூர் எப்படிச் செல்ல வேண்டும் என்று சிலரிடம் கேட்க, அருகில் தான் இருக்கிறது என்பதைச் சொன்னார்கள். ரயில் நிலையத்தின் வாசலில் நிறைய ரிக்‌ஷாக்கள் இருக்கின்றன. பெரும்பாலான ரிக்‌ஷா வாலாக்கள் பீஹார் மாநிலத்தவர்கள் அல்லது பங்க்ளாதேஷ் வாசிகள் – அவர்களில் ஒருவர் 20 ரூபாய் கொடுத்தால் ஹோட்டல் வாசலில் விட்டு விடுகிறேன் எனச் சொல்ல, இரண்டு ரிக்‌ஷாக்களைப் பேசிக்கொண்டு ஐந்து பேரும் உடைமைகளோடு அமர்ந்தோம்.

ரயில் நிலையத்திலிருந்து நேர் சாலையில் சென்று, ஒரு Right, சற்றே பயணித்து மீண்டும் ஒரு Right எடுத்து நேரே வந்தால் பல்டன் பசார், ஹோட்டல் மயூர் வந்து சேர்ந்தோம்.  இரண்டு ரிக்‌ஷா வாலாக்களுக்கும் 20-20 ரூபாய் கொடுத்து அவர்களை அனுப்பிய பிறகு எதிரே பார்த்தால் ரயில் நிலையத்தின் மற்றுமொரு வாயில் தெரிந்தது! ரயில் நிலையத்திலிருந்து நடந்திருந்தால் மூன்று நிமிடங்களில் வந்திருக்கலாம்! காலையிலேயே இரு ரிக்‌ஷா வாலாக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என எங்களுக்கு விதித்திருந்தது போலும்! சரி பிழைத்துப் போகட்டும் என நினைப்பதைத் தவிர வேறு வழி!

ஹோட்டல் மயூர் வாயிலை அடைந்தபோது அங்கே காவலாளி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. பெரிய கும்பலே நின்று கொண்டிருக்கிறது.  ஏனென்று கேட்க, காலை ஆறு மணிக்குத் தான் கேட் திறப்போம் என்று ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் காவலாளி! மணிக்கதவே தாள் திறவாய் ஹோட்டல் மணிக்கதவே தாள் திறவாய் என்று பாட வேண்டியிருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  சில நிமிடங்களில் ஆறு மணிக்கு முன்னதாகவே வாயிலைத் திறந்து காத்திருந்தவர்களை உள்ளே விட்டார் காவலாளி.

ஹோட்டல் மயூரின் உள்ளே Reception நன்றாகவே அமைத்திருந்தார்கள். சிப்பந்திகளும் தயார் நிலையில் இருந்தார்கள்.  அனைவரும் Lobby-ல் இருக்கும் இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்ள நானும் நண்பரும் மட்டும் Reception-ல் பேசி ஒரு அறை மட்டும் எங்களுக்குத் தேவை, அதுவும் மதியம் வரை மட்டுமே தேவை என்பதைச் சொல்லி ஒரு அறைக்கு பதிவு செய்தோம்.  கணினியின் கேமரா மூலம் எங்களிருவரையும் படம் எடுத்துக் கொண்டு, அடையாள அட்டைகளின் பிரதிகளையும் எடுத்துக் கொண்டு ஒரு நாள் வாடகையும் வாங்கிக் கொண்ட பிறகு தான் எங்களுக்கு அறையை ஒதுக்கித் தந்தார்கள்.

மிகப் பெரிய ஹோட்டல் தான் அது. கிட்டத்தட்ட 165 தங்குமறைகள் அங்கே இருக்கின்றன. தரை தளத்தில் ஒரு உணவகமும் இருக்கிறது.  நகரைச் சுற்றிப் பார்க்க வாடகை வண்டிகளும் அவர்களே ஏற்பாடு செய்து தருகிறார்கள். பல்வேறு கட்டணங்களில் தங்குமறைகள் இங்கே கிடைக்கின்றன.  Mayur Group of Hotels நடத்தும் இந்த தங்குமிடங்கள் Gகௌஹாத்தி தவிர, புது தில்லியிலும், கொல்கத்தாவிலும் இருக்கின்றன. தங்குமிடம் பற்றிய மேலதிகத் தகவல்கள் தேவையானவர்கள் அவர்களது இணையதளம் பார்க்கலாம். 

Gகௌஹாத்தி நகரில் பார்க்க வேண்டிய இடங்களில் முதலிடம் காமாக்யா கோவிலுக்குத் தான்.  பிரம்மபுத்திரா நதியும் உண்டு! பிரம்மபுத்திரா நதியில் Cruise பயணங்களும் மிகவும் பிரபலமானவை.  வசிஷ்ட மகரிஷி கோவில், உமாநந்தா கோவில், மிருகக்காட்சி சாலை என பல இடங்கள் Gகௌஹாத்தி நகரில் உண்டு என்றாலும் நாங்கள் என்ன இடங்களுக்குச் சென்றோம், அங்கே பார்த்த காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

12 கருத்துகள்:

  1. கௌஹாத்தியை காண காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  2. ரிக்‌ஷாக்காரர்கள்!!!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அடுத்து சென்ற இடம் அறிய தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. ரிக்ஸாவாலாக்கள் அங்கேயும் அப்படித்தானா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  5. உங்க ஸ்பெஷல் டச் படங்கள்.. மிஸ்ஸிங்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் மிஸ்ஸிங்....

      ஆமாம். அடுத்த பதிவில் சேர்த்து விடலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  6. நம்ம சென்னை ரிக்‌ஷாக்காரங்க பிச்சை வாங்கணும் போல! ஜிஎச்சுக்குப் போக சென்ட்ரலில் இருந்து சுத்திட்டுப் போய்க் கொண்டு விடுவாங்கனு சொல்வாங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அசாம் மாநிலத்தில் பலர் இப்படி இருக்கிறார்கள். எதிலும் கமிஷன் எதிர்பார்க்கிறார்கள்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....