ஞாயிறு, 26 ஜூன், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி நாற்பத்தி ஒன்று – காத்திருந்து காத்திருந்து...!!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


முயற்சிகளை தொடங்கும்போதே பயத்தை கொன்று விடுங்கள்; இல்லையெனில் பயம் நம் முயற்சிகளை கொன்றுவிடும்.


******

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 


பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 


பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!


பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!


பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!


பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!


பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 


பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!


பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!


பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 


பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!


பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 


பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 


பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!


பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 


பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!


பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 


பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!


பகுதி நாற்பது இங்கே!


யாரிவள்! பகுதி நாற்பத்தி ஒன்று - காத்திருந்து காத்திருந்து...!!




சுட்டிப்பெண்ணின் பள்ளிநாட்களில் தான் அவள் கடைக்குட்டி மாமா குடும்பத்துடன் பணிநிமித்தமாக சென்னையிலிருந்து மாற்றலாகி கோவைக்கு வந்தார். அம்மாவின் உடன்பிறந்தோர் இருவர் உள்ளூரிலேயே இருந்ததால் அவர்கள் அவ்வப்போது வருகை தருவதும், இவளும் விடுமுறை நாட்களில் அங்கு செல்வதுமாக இருந்தது. 


அம்மா தன் அண்ணனுக்காகவும், தம்பிக்காகவும் என வடாம் வத்தல், ஊறுகாய், பட்சணங்கள் என எது செய்தாலும் அதை பங்கீடு செய்து  எடுத்துச் செல்வார். மாமா புதிதாக வந்த ஏரியாவுக்குச் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் தான் பேருந்து கிடைக்கும். அங்கு செல்ல நேர்ந்த போதெல்லாம் நீண்ட நேரக் காத்திருப்பில் குறிப்பிட்ட பேருந்துக்கு நின்று கொண்டு சென்ற அனுபவங்கள்  அலாதியானது. 


ஓட்டமும் நடையுமாக பேருந்தைப் பிடிக்கச் சென்று, அம்மா அங்கே நிற்பவர்களிடம் பேருந்து சென்று விட்டதா!! என விசாரித்துக் கொண்டு நிற்க, இவள் அங்கு நின்று கொண்டிருக்கும் நேரத்தில் தம்பியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, அவன் எதிர்வாதம் செய்ய, அம்மாவுக்கு கோபம் வந்து 'வீட்டுக்கே போயிடலாம் வாங்கோ! அங்க போய் ரெண்டு பேரும் அடிச்சுக்கலாம்!' இங்க வேண்டாம்!  எனச் சொல்ல இருவரும் அமைதி காப்பார்கள்..🙂 


பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் கண் கொத்தி பாம்பாக பேருந்து வரும் தடத்தினையே எல்லோரும் எதிர்நோக்கிக் கொண்டிருப்பார்கள். நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பின் ஏற்படும் சலிப்பின் போது காட்சி தரும் அந்தக் குறிப்பிட்ட பேருந்தால் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் அனைவரின் முகத்திலும் சந்தோஷச் சாரலை தெளித்து விடும். மக்கள்  பரபரப்புடன் அதில் முண்டியடித்துக் கொண்டு ஏற அந்த பயணம் துவங்கும்.


மாமா வசித்த அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும்  தனித்தனி வீடுகளாக ஒன்றுக்கொன்று இடித்துக் கொள்ளாமல் நல்ல இட வசதியுடன் இருந்தது. அரசுக் குடியிருப்பில் நெருக்கியடித்துக் கொண்டு இருந்த இவளுக்கு அமைதியாக விஸ்தாரமாக இருந்த அந்தப் பகுதி மிகவும் கவர்ந்தது. அந்த வீட்டில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது! சிமெண்ட் தரை, மொசைக் தரை எனப் பார்த்தவளுக்கு வழுக்கும் டைல்ஸ் தரை ஆச்சரியப்படுத்தியது!


மாமா வீட்டின் பின்னே அகத்தி மரங்கள் நிறைய இருந்தது. தோய்க்கும் கல்லும் தண்ணீர் தொட்டியும் இருக்கும். மாமா அக்ரியில் இருந்து விதைகள் வாங்கி வர எல்லோருமாக சேர்ந்து முன்னே செடிகள் நிறைய வைப்போம். மாமாவின் மகன் இவளை விட எட்டு வயது சிறியவன். அவனுடன் தம்பியும் இவளும் விளையாட்டு, மாமியிடம் அரட்டை எனப் பொழுதுகள் இனிமையாகச் செல்லும்.


இவளுக்கு எப்போதுமே மாமியிடம் பேச ஓராயிரம் விஷயங்கள் வரிசையாக சங்கிலி போல் கோர்த்துக் கொண்டு நிற்கும். வயது வித்தியாசம் சற்றே இருந்தாலும் தோழிகள் போல தான் இருவரும் பேசிக் கொள்வார்கள். மாமி தக்காளி தோசை, பாசிப்பருப்பு தோசை என்று செய்து தந்து தன் புது முயற்சிகளால் அன்பை பரிமாறுவார். 


அரைக்கரண்டி மாவில் பேப்பர் போன்ற தோசை வார்க்க  மாமாவிடம் கற்றுக் கொண்டாள். குழம்பு, ரசம் செய்முறைகளும் மாமாவிடம் தான் தெரிந்து கொண்டாள். பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களையும் மாமாவிடமும் மாமியிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வாள். 


உறவுகள் ஒன்று கூடி பூஜைகள், பண்டிகைகள் என சிறப்பிப்பதும், சங்கடமான நேரங்களில் உடனிருப்பதும் என நாட்கள் இனிமையாகச் சென்றது.


இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்!


*****


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

7 கருத்துகள்:

  1. நினைவலைகள் ரசிக்க வைத்தது தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. உறவுகள் என்றும் வாழ்க.. பஸ்சுக்காக காத்திருத்தலும் காத்திருக்கும்போது சண்டையும், சண்டை பார்த்து அம்மா கோபமும்... ரசனை!

    பதிலளிநீக்கு
  3. உறவுகளும் விடுமுறையும் அந்தக் காலம் இனிமை இக்காலம் குழந்தைகளுக்கு டியூசன் வந்து கெடுத்து விட்டதே. அனுபவிக்க முடியாத குழந்தைகள் :(

    பதிலளிநீக்கு
  4. ஆதி! குடும்ப உறவுகள் இப்படி இருந்தால் அதுதான் மிகப் பெரிய சக்தியைத் தரும். ஒருவருக்கொருவர் உதவியாக அன்பாக இருப்பது என்பது நல்ல விஷயம்.

    ஆமாம் அக்காலக் கட்டத்தில் பேருந்திற்குக் காத்திருந்து கூட்டத்தில் முண்டியடித்து ஏறி வேர்க்க விறுவிறுக்க பள்ளி கல்லூரி சென்ற நினைவு வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவுகள் ஒன்று கூடி பூஜைகள், பண்டிகைகள் என சிறப்பிப்பதும், சங்கடமான நேரங்களில் உடனிருப்பதும் என நாட்கள் இனிமையாகச் சென்றது.//

      உறவுகள் பற்றி அருமையாக சொன்னீர்கள்.
      இளமைகாலத்தில் பேருந்திற்கு காத்து இருப்பதும் வந்தவுடன் ஏறி அமர ஜன்னல் ஓர சீட் கிடைத்தால் கிடைக்கும் பெருமிதம் எல்லாம் நினைவுகளில்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அந்த சிறு வயது நாட்களின் நினைவுகளை அற்புதமாக பகிர்ந்துள்ளீர்கள். அம்மாவுடன் எங்காவது வெளியூர்களுக்கு செல்லும் போது பஸ் நிறுத்தத்தில் அவர்களின் அவஸ்தைகளை புரிந்தும், புரியாமலும் நாம் சின்ன வயதில் கூட இருக்கும் நம் வயதை உடைய உறவுகளுடன் சளசளவென பேசுவதும், அதற்காக அவரவர் அம்மாவிடம் சலிப்பான கோபங்களை சம்பாதித்து கொள்வதுமான நிகழ்வுகள் என் மனதிலும் வலம் வந்தன. பதிவை நன்றாக சொல்லி வருகிறீர்கள். தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....