செவ்வாய், 13 ஜூன், 2023

கதம்பம் - கேழ்வரகு புட்டு - கூடலழகி பாகம் 1


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட திருவண்ணாமலை பயணம் - பகுதி ஒன்று பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


கேழ்வரகு புட்டு - 11 ஜூன் 2023:




சமையல் பதிவெல்லாம் போட்டு ரொம்ப நாளாச்சு..🙂 வித்தியாசமா எதுவுமே செய்து பார்ப்பதில்லை!


இன்றைய ஸ்பெஷலாக கேழ்வரகு புட்டு காய்கறி ஸ்டூவுடன்! வாங்க சாப்பிடலாம்!


******


கூடலழகி பாகம் 1 - 12 ஜூன் 2023:




சோழ அரசர்களின் வாழ்வைப் பற்றிய பெரும் சரித்திரத்தில் ஒரு பாகமாக கூடலழகியைச் சொல்லலாம்! குறிப்பாக இன்றளவும் மக்களால் பெரிதும் பேசப்படும் சோழ இளவரசன் ஆதித்ய கரிகாலனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி இங்கு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது! 29 பிராயங்களே வாழ்ந்த ஆதித்ய கரிகாலனின் வாழ்வில் நிகழ்ந்த திடுக்கிடும் சம்பவங்களைப் பற்றிய வரலாறு தான் கூடலழகி!


கூடலழகி என்பது யார்? அவளுக்கும் ஆதித்ய கரிகாலனுக்கும் உள்ள பந்தம் என்ன? ஆதித்ய கரிகாலன் திருக்கோவலூர் வேந்தனான பாட்டனார் மலையமானிடம் வளர்ந்தது எதனால்? கெடிலத்தை கடந்தால் ஆபத்து! என்று சொன்னதன் பின்னணி என்ன? ஒரு பெண்ணின் சாபத்தால் சோழ இளவரசர்களின் ஆட்சியை பிடிக்கும் போராட்டம் தொடர்கின்றன! அவள் யார்? பெண்ணாசையும், பொன்னாசையும் செய்யும் விளைவுகள் என்ன?

 

இப்படியான பல முடிச்சுகளுக்கு விடை தருகிறார் கூடலழகியில்! ஆசிரியர் திரு காலச்சக்கரம் நரசிம்மா சார் எழுதியுள்ள இந்த நூலில் ஆச்சரியமூட்டும் விதமாக பல பொக்கிஷமான தகவல்களும், திடுக்கிடும் வரலாறும், பக்கத்திற்கு பக்கம் பலப்பல செய்திகள் என சுவாரஸ்யத்தை தருவதாய் உள்ளன! பாராட்டுகள் சார்!


552 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் தரமான வழவழப்பான காகிதங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது! நூலில் ஆங்காங்கே இடம்பெறும் கனவு ஓவியர் 'தெய்வா' அவர்களின் வண்ண ஓவியங்கள் கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டும் விதமாய் இருப்பதால் வாசிக்கும் போது மேலும் சிறப்பை கூட்டுகின்றன!


திருக்கோவலூரில் தான் அப்பாவின் பள்ளிப்பருவம் இருந்ததாய் சொல்லியிருக்கிறார்! இந்த நூலை வாசித்த போது அங்கு வீற்றிருக்கும் த்ரிவிக்ரம அவதாரமாக உலகையே அளந்த பெருமாளை அப்பாவுடன் சென்று தரிசித்த நினைவுகள் வந்து சென்றது! அப்பா இப்போது இருந்திருந்தால் உங்க ஊருப்பா! என்று வாசிக்க சொல்லியிருப்பேன்!


பள்ளிநாட்களில் மேலோட்டமாக பயின்ற நம் வரலாறை விரிவாக தெரிந்து கொள்ள முடிவதில் மகிழ்ச்சி! பெரும் வரலாற்றின் பின்னணியை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை நினைத்து பெருமை கொண்டேன்! ஆம்! பாண்டிய நாட்டில் பிறந்த நான் சேர நாட்டில் வளர்ந்து தற்சமயம் சோழ நாட்டில் வசித்து வருகிறேனே! 


வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் இந்த நூலை வாசியுங்களேன்.


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


10 கருத்துகள்:

  1. புட்டு பக்கம் செல்வதில்லை!!

    கூடலழகி படிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.  நட்பு வட்டாரத்தில் அருகில் யார்  வாங்கி இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. அருசி புட்டு சாப்பிட்டிருக்கிறேன் மேடம்.
    எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
    கேள்வரகு புட்டு இனிதான் முயர்ச்சிக்கனும்.
    கூடலழகி நூலரிமுகம் அருமை.
    விரைவில் கிண்டிலில் வாங்கி வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....