வெள்ளி, 2 ஜூன், 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி பதினேழு - நாதுலா பாஸ் - சீன எல்லையில்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THERE ARE NO BORDERS IN NATURE; BUT THERE ARE BORDERS IN OUR MINDS.


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


பகுதி பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்


பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


பகுதி பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா


பகுதி பதினைந்து - MG Marg Gangtok - மார்க்கெட் உலா


பகுதி பதினாறு - கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம்


******


சென்ற பகுதியில் நாதுலா பாஸ் வரும் வழியில் கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம் பார்த்ததையும், வரும் வழியில் ஒரு இடத்தில் தேநீரும் சிற்றுண்டியும் உண்டது குறித்து எழுதி இருந்தேன்.  தொடர்ந்து பயணித்து நாங்கள், நம் தாய்த் திருநாட்டின் சீன எல்லைப்  பகுதியில் அமைந்து இருக்கும் நாதுலா பாஸ் என்ற இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். நாதுலா பாஸ் செல்லத் தேவையான முன்னேற்பாடுகள் குறித்து சென்ற பகுதியில் எழுதி இருந்தது நினைவிருக்கலாம். இந்தப் பகுதிகள் வருடத்தின் பல மாதங்கள் பனியால் சூழப்பட்டு இருக்கும் இடம். நாங்கள் சென்றது நவம்பர் மாதம் - பனிப்பொழிவு ஆரம்பித்து இருக்கும், நிறைய குளிர் இருக்கும் என்றெல்லாம் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்.  தகுந்த உடை இல்லாவிட்டால் மிகவும் கடினமாக இருக்கும் என்றெல்லாம் பலவாறு பயமுறுத்தி, இந்தப்பயணத்தினை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்தது குறித்து இத்தொடரின் ஆரம்பத்தில் எழுதி இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். வழியில் சில இடங்களில் பனிப்பொழிவு இருந்ததற்கான அடையாளங்கள் தெரிய, “நாங்க தான் முன்னாடியே சொன்னோமே! நீங்க தான் கேட்கல, ரொம்பவே குளிர் இருக்கப்போகுது!” என்றெல்லாம் சிலர் புலம்ப ஆரம்பித்து இருந்தார்கள்.  ஆனால் எனக்கு மனதில் அப்படி எல்லாம் இருக்காது, நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தான் இருக்கிறோம், அதனால் குளிர் தாங்கக்கூடிய அளவில் தான் இருக்கும் என்று தோன்றியது. நான் சொன்னது சரியாகவும் இருந்தது என்பதை அங்கே சென்ற பிறகு உணர்ந்து கொள்ளவும் முடிந்தது. 









நண்பர்கள் குழு பயப்பட்ட அளவிற்கு அங்கே குளிர் இல்லை - பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு தான் குளிர் இருந்தது.  முதல் நாள் மாலையில் கொஞ்சம் பனிப்பொழிவு இருந்திருந்தாலும், நாங்கள் சென்ற அன்று சூரியனின் கிரணங்கள் காலையிலேயே தனது வேலையைத் துவக்கி இருந்ததால் பனி உருக ஆரம்பித்து இருந்தது.  ஆங்காங்கே முந்தைய தினத்தின் பனிப்பொழிவினை எங்களால் காண முடிந்தது என்றாலும் குளிர் இல்லாதது எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியைத் தந்தது - குறிப்பாக எனக்கு.  பொதுவாக இது போன்ற மலைப்பகுதிகளில் - குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் மலைப்பிரதேசங்களுக்கு வரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  பனியையும் அழகிய சூழலையும் பார்த்து அதிக அளவு மகிழ்ச்சியுடன் குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களைச் செய்தால் அது ஆபத்தில் முடியக் கூடும். அங்கே இருக்கும் சூழலுக்கு உங்கள் உடலை தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம். உயரம் அதிகமாக அதிகமாக பிராண வாயு நமக்கு கிடைப்பது குறைந்து விடும் என்பதால் மூச்சு விடுவதில் சிலருக்கு சிரமங்கள் ஏற்படலாம் என்பதால் சற்றே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  எங்கள் குழுவினரும் இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டே அங்கே நடந்து கொண்டார்கள். கவனம் கொள்ளாத சுற்றுலா பயணிகள் சிலருக்கு மூச்சு பிரச்சனைகள் உண்டானதை பார்க்கவும் முடிந்தது. 


என்ன இருக்கிறது இந்த நாதுலா பாஸ் எனும் சீன எல்லையில்? எதற்காக இங்கே சென்று நாம் பார்க்க வேண்டும்? என்று உங்களில் சிலர் எண்ணக்கூடும்.  இந்திய - சீன எல்லையில் சில கட்டிடங்கள், அங்கே இருக்கும் இராணுவ வீரர்கள் என, இப்படியாக இருப்பதைப் பார்க்க இவ்வளவு தூரம் பயணம் செய்து, கஷ்டப்பட்டுப் போக வேண்டுமா என்று உங்களில் சிலருக்குத் தோன்றலாம்.  அப்படித் தோன்றுவது சரியல்ல! நம் தேசத்தினைப் பாதுகாக்க நமது சகோதரர்களான இராணுவ வீரர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள், அவர்கள் இருக்கும் கடுமையான சூழல் என்ன என்பதையெல்லாம் ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டும்.  குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு, அது சரியில்லை, இது சரியில்லை, நானாக இருந்தால் இப்படிச் செய்திருப்பேன் என்று சொல்லும் பலர் நம் நாட்டில் உண்டு - காரணம் பேச்சு சுதந்திரம்! அந்த சுதந்திரத்தினைப் பெறுவதற்கு பலர் பட்ட கஷ்டங்கள் நமக்குத் தெரிவதில்லை.  பலர் பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தினைத் தக்க வைத்துக் கொள்ள இது போன்ற எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கும் நமது இராணுவ வீரர்களின் தொண்டு அளவிடமுடியாதது என்பதை இங்கே ஒரு முறை சென்று பார்த்தால் கொஞ்சமேனும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 


இந்திய எல்லையில் நிறைய வீரர்கள், கட்டிடங்கள் என பார்க்க முடிந்தாலும், சீன எல்லையில் இருக்கும் ஒரே ஒரு கட்டிடத்தினையும் (Watch Tower) அதில் இருக்கும் ஒரு சீன வீரரையும் மட்டுமே பார்க்க முடியும் அளவிற்கு அவர்கள் கட்டுமானம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதியும் இயற்கையாகவே அப்படி அமைந்திருக்கிறது.  அங்கே இருக்கும் சீன வீரர் தொடர்ந்து அவர் கையில் இருக்கும் கேமரா மூலம் காணொளி எடுத்தபடியே கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்.  நம் பக்கத்திலிருந்தும் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  நமது எல்லையில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிவதில்லை. கடல் மட்டத்திலிருந்து 14140 அடி உயர்த்தில் இருக்கும் இந்த நாதுலா பாஸ் பார்க்க பல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.  அவர்கள் அனைவரும் இந்த இடத்தினை ஒரு சுற்றுலா தலமாக மட்டுமே பார்க்கக் கூடாது என்பதை அங்கே சென்றசமயம் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.  எத்தனை கடினமான சூழலில் நம் இராணுவ வீரர்கள் பணிபுரிகிறார்கள் என்பதையும் அங்கே பார்த்தபோது நிச்சயம் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.  


அப்படி இல்லாமலும் சிலர் இருக்கிறார்கள் - அங்கே வந்ததே நிழற்படங்கள் எடுக்க மட்டுமே என்பது போல சிலர் நடந்து கொண்டார்கள்.  ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் நிழற்படங்கள், காணொளி போன்றவை எடுப்பது தடை செய்யப்பட்டு இருக்கிறது.  தொடர்ந்து இராணுவ வீரர்கள் சுற்றுலாப்பயணிகளை நினைவூட்டியபடியே இருந்தாலும், “நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்பது?” என்று படம் எடுக்க முயல, இராணுவ வீரர்கள் தங்களின் அதிருப்தியை உடனடியாக வெளிப்படுத்தியதோடு, கண்டிப்பான குரலில் பேசுகிறார்கள்.  உடனடியாக அலைபேசியையும், கேமராவையும் எடுத்துக் கொள்வோம் என்று சொன்ன பிறகே அப்படியான சுற்றுலா பயணிகள் அடங்குகிறார்கள்.  ஒரு இடத்தில் இப்படியான செயல்கள் செய்யக்கூடாது என்று சொல்லும்போது அதைச் செய்யக் கூடாது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.  படங்கள் எடுப்பதோடு நின்றுவிடாமல், அவற்றை இணைய வெளியில் வெளியிடும்போது எதிரி நாட்டவர்கள் அதை துர்பிரயோகம் செய்யக் கூடும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். 


எங்கள் குழுவினரும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் படங்கள் எடுத்துக் கொண்டோம். ஒவ்வொரு இடமாக பார்த்து அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் அங்கே இராணுவத்தினரால் நடத்தப்படும் ஒரு சிறு கடையில் தேநீர் போன்றவற்றை அருந்துவதோடு, அங்கே கிடைக்கும் ஒரு சான்றிதழும் நாம் வாங்கிக் கொள்ளலாம்.  என்ன சான்றிதழ்  அது? நீங்கள் இந்திய-சீன எல்லையான நாதுலா பாஸ் வந்து சென்றதற்கான அடையாளமாக தரப்படும் சான்றிதழ்.  ஐம்பது ரூபாய் கட்டணம் கொடுத்தால் உங்கள் பெயர் எழுதி அங்கே இருக்கும் இராணுவ அதிகாரி கையொப்பமிட்டு சான்றிதழ் தருவார்.  இது பெரும்பாலான எல்லைகளில் இருக்கும் ஒரு வசதி.  நான் இங்கேயும், இதற்கு முன்னர் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சீன எல்லையான Bபும்லா பாஸ் சென்றபோதும் இப்படியான சான்றிதழை வாங்கிக் கொண்டேன்.  நான் சென்ற எல்லை பகுதிகளில் இந்த இரண்டுமே மிகவும் பிடித்தவை.  திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலா பகுதியில் இருக்கும் Bபங்களாதேஷ் எல்லைக்கும் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் வாகா எல்லைக்கும் சென்றிருந்தாலும், சீன எல்லைப்பகுதி தான் அதிகம் என்னை கவர்ந்தது. 


கொஞ்சம் கொஞ்சமாக குளிர் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த எல்லைப்பகுதியிலிருந்து புறப்படத் தோன்றவே ஒவ்வொருவராக எங்கள் வாகனங்கள் நிறுத்தி இருந்த இடத்திற்கு நடக்க ஆரம்பித்தோம். இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும்.  எல்லைப்பகுதியில் வருகின்ற சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கான கழிவறை வசதிகள் இங்கே இல்லை.  மிகவும் குறைவாகவே இருக்கிறது என்பதால் கழிவறை பகுதியில் பெரிய வரிசை! இந்த எல்லைப்பகுதியில் கழிவறை செல்வதற்காகவே காத்திருந்தது வித்தியாசமான ஒரு அனுபவமாக அமைந்தது! அதிலும் அந்த குளிரில் காத்திருப்பது மிகவும் கடினமாக இருந்தது! பலரும் இது குறித்து அங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்திற்கே நாம் இப்படி கஷ்டப்படுகிறோமே, இந்த எல்லைப்பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்கள் பலப்பல விதங்களில், இயற்கை, செயற்கை என அனைத்து விதங்களிலும் கஷ்டப்படுகிறார்கள் அல்லவா, அவர்களுக்கு முன்னர் இந்தக் கஷ்டம் எம்மாத்திரம் என்றும் தோன்றியது.  அந்த சிந்தனையை அங்கே நின்றுகொண்டிருந்த சமயம் ஒரு சிலர் உரக்கவே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  


நாதுலா பாஸ் எல்லைப்பகுதியிலிருந்து புறப்பட்ட நாங்கள் சென்றது எங்கே, அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.  அதுவரை தொடர்ந்து பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

20 கருத்துகள்:

  1. ஆஹா.. நாதுலா பாஸ் சென்றுவந்துவிட்டீர்களா? அரிய வாய்ப்பு. நானும் சென்றமுறை தவறியதை, அடுத்தமுறை பத்ரிநாத் அருகில் உள்ள மனா கிராமத்துக்குச் சென்றுவர நினைத்திருக்கிறேன், அடுத்த வருடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாதுலா பாஸ், பும்லா பாஸ் (வழியில் சேலா பாஸ் மற்றும் நூரா பாஸ்) என நான்கு ஐந்து எல்லைகளுக்கு சென்று வந்து விட்டேன். மானா செல்ல எண்ணம் உண்டு.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. நாதுலா பாஸ் அனுபவங்களையும் உங்கள் எண்ணங்களையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.  அங்கு இருக்கும் வரை கொஞ்சம் நினைவிருக்கும் ராணுவ வீரர்கள் கஷ்டம் அங்கிருந்து வந்ததும் மறந்து விடுவோம்.  அவர்களுக்கு கஷ்டம் நிரந்தரம்.  ஜெய் ஹிந்த்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஶ்ரீராம். இராணுவ வீரர்கள் கஷ்டம் நிரந்தமானது தான். அவர்கள் வேதனைகளும்....

      தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. இராணுவ வீரர்கள் பற்றிய தங்களது கருத்து அப்படியே என்னுடன் இணைந்து வருகிறது ஜி

    அவர்களது தியாகத்தை உணராதவன் நாட்டின் குடிமகனாக இருக்க தகுதி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. பனியையும் அழகிய சூழலையும் பார்த்து அதிக அளவு மகிழ்ச்சியுடன் குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களைச் செய்தால் அது ஆபத்தில் முடியக் கூடும். அங்கே இருக்கும் சூழலுக்கு உங்கள் உடலை தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம். உயரம் அதிகமாக அதிகமாக பிராண வாயு நமக்கு கிடைப்பது குறைந்து விடும் என்பதால் மூச்சு விடுவதில் சிலருக்கு சிரமங்கள் ஏற்படலாம் என்பதால் சற்றே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். //

    ஆமாம் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நாதுலா பாஸ் பார்க்கும் ஆர்வம் உண்டு. நிறைய இடங்கள் நானும் மகனும் மனதில் வைத்திருக்கிறோம். வாய்ப்புதான் கிடைப்பதில்லை. வெவ்வேறு இடங்களில் இருக்கிறோம்...நிறைய நாட்கள் அவனுக்கு விடுமுறை கிடைத்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று பேசிக் கொண்டோம்.

    படங்கள் எடுப்பதோடு நின்றுவிடாமல், அவற்றை இணைய வெளியில் வெளியிடும்போது எதிரி நாட்டவர்கள் அதை துர்பிரயோகம் செய்யக் கூடும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். //

    மிக அவசியமான ஒன்று. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி. தங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகள்.

      நீக்கு
  6. நெகிழ்ச்சியான பதிவு.
    ரானுவ வீரர்கள் மீதான மதிப்பைப் பரைசாற்றும் வகையில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  7. இராணுவ வீரர்கள் என்றும் போற்றத்தக்கவர்கள்

    பதிலளிநீக்கு
  8. நம் ராணுவ வீரர்கள் பற்றி சொல்லியிருக்கும் அனைத்தும் டிட்டோ செய்கிறேன் ஜி.

    நம்ம மக்களுக்கு எங்கு போனாலும் அங்கிருக்கும் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு படங்கள் எடுப்பது அதை வெளியிடுவதை என்னவோ பெருமையாக நினைக்கிறாங்க....ரொம்ப மோசம். இவங்களை எல்லாம் அங்க கொண்டு நிறுத்தி வைக்கணும்...

    வாகாவில் அந்தப் பக்கம் பாகிஸ்தான் பகுதி தெரியும் இல்லையா..

    ஒரு எல்லைப் பகுதி நீங்க படம் போட்டிருந்தீங்க சீனாதான்...வலது புறம் கீழே அவங்க ஊர் பக்கம்தான்..கொஞ்ச தூரத்தில்..சாலை இருக்கும் படம் நினைவில் வந்தது.

    நிஜமாகவே நம் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் ராயல் சல்யூட்!

    கீதா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பும்லா பாஸ் குறித்து எழுதியது உங்கள் நினைவில் இருக்கலாம் கீதா ஜி.

      தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  9. படங்கள் எல்லாம் செம. சிலிர்த்தது ஜி. நம் எல்லை...அந்தப் பக்கம் சீனா. சாலையில் எல்லை இருக்கும் ஆனால் மலைப்பகுதிகளில் இருக்காதோ?

    இமயமலை வறண்டு....நம் வீரர்களுக்கு அங்கு சாப்பாடு...சுற்றிலும் வறண்ட மலைகள், (ஆனால் நமக்கு அழகாக இருக்கிறதுதான்)..எல்லையில்....முதல் பாதிப்பு அங்குதான்....எவ்வளவு விழிப்போடு இருக்க வேண்டும்....எல்லாம் நினைக்கும் போது...நாமெல்லாம் எவ்வளவு நல்ல நிலையில் இருக்கிறோம் இல்லையா...சிலிர்க்கிறது. இப்பகுதிக்குப் போகும் ஆர்வம் ரொம்பவே எழுகிறது.

    இங்கு வாகாவில் நடப்பது போல் சம்பிரதாயங்கள் எதுவும் கிடையாது போல

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி. வாகா எல்லை போல இங்கே கிடையாது கீதா ஜி.

      நீக்கு
  10. நாதுலா பாஸ் ...என்ன ஒரு அழகிய இடம் தங்களின் வழி நாங்களும் கண்டு ரசித்தோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....