வெள்ளி, 9 ஜூன், 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி இருபது - பயணத்தின் முடிவு - வீடு திரும்பல்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட ஆரண்ய நிவாஸ் - அறுசுவை இன்னிதழ் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


PATIENCE AND SILENCE ARE TWO POWERFUL ENERGIES. PATIENCE MAKES YOU MENTALLY STRONG; SILENCE MAKES YOU EMOTIONALLY STRONG.


******


பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  


பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்


பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்


பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


பகுதி ஆறு - மாலை உலா - டார்ஜிலிங் மால் ரோடு


பகுதி ஏழு - இரவு உணவும் அதிகாலை விழிப்பும்


பகுதி எட்டு - டைகர் ஹில் - சூரிய உதயம்


பகுதி ஒன்பது - காலை உணவு - சிவப்பு பாண்டா


பகுதி பத்து - Himalayan Mountaineering Institute


பகுதி பதினொன்று - தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம்


பகுதி பன்னிரண்டு - மலை இரயிலில் ஒரு பயணம்


பகுதி பதிமூன்று - LOVERS MEET VIEWPOINT


பகுதி பதினான்கு - சிக்கிம் தங்குமிடம் - Monastery உலா


பகுதி பதினைந்து - MG Marg Gangtok - மார்க்கெட் உலா


பகுதி பதினாறு - கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம்


பகுதி பதினேழு - நாதுலா பாஸ் - சீன எல்லையில்… 


பகுதி பதினெட்டு - பாபா ஹர்பஜன் சிங் கோவில்


பகுதி பத்தொன்பது - சோம்கோ லேக்

******


எங்கள் பயணத்தில் நாங்கள் பார்த்த இடங்கள் குறித்த தகவல்களை இதுகாறும் பகிர்ந்து கொண்டு வந்தேன்.  பயணத்தின் கடைசி நாள் காலை விரைவாக எழுந்திருந்து காலை உணவை முடித்துக் கொண்ட பின்னர் சிக்கிம் தலைநகர் Gகாங்டாக்-லிருந்து புறப்பட்டோம்.  நீண்டதொரு பயணம் எங்களுக்காகக் காத்திருந்தது. காலை தங்குமிடத்திலிருந்து புறப்பட்ட போதே, எங்கள் தங்குமிடத்தில் இருந்த உணவகத்தின் சிப்பந்திகள் எங்களுக்கு மதிய உணவாக பராட்டா, சப்ஜி, வாழைப்பழங்கள், தண்ணீர் குப்பிகள் என கட்டிக் கொடுத்தார்கள்.  ஆனால் நாங்கள் மதியம் விமான நிலையம் சென்று சேர்வதற்குள் வாழைப்பழம் தவிர மற்ற உணவு அனைத்தும் கெட்டுப் போயிருந்தது!  என்னதான் AC வாகனங்களில் நாங்கள் சென்றாலும் உணவு கெட்டுப் போனது என்றால் எங்கள் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை உங்கள் யோசனைக்கு விட்டு விடுகிறேன். Gகாங்டாக்-லிருந்து விமான நிலையம் இருக்கும் Bபாக்டோக்ரா சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவு என்றாலும் அங்கே சென்று சேர்வதற்கு எங்களுக்கு நான்கு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. அதிலும் சிலிகுரி பகுதியில் இருந்த வாகன நெரிசல் மிகவும் படுத்தியது. ஒரு வழியாக விமான நிலையம் சென்று சேர்ந்து ஒவ்வொருவராக சோதனைகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குள் சென்று சேர்ந்து விட்டோம்.  


உணவு கெட்டுப்போனதால் எங்கள் பயண ஏற்பாடு செய்தவரை தொடர்பு கொண்டு எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்யச் சொன்னோம்.  அவரோ, இப்போது என்னால் செய்ய முடியாது. அனைவரும் அவரவருக்குத் தேவையான உணவை விமான நிலையத்தில் வாங்கி சாப்பிடுங்கள். அதற்கான செலவு குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்.  ஒருவருக்கு 300 வரை செலவு செய்ய அவர் தயார் என்றும் சொல்லி விட்டதால் இந்தத் தகவல்களை சக பயிற்சியாளர்களுடன் பகிர்ந்து கொண்டோம்.  அனைவரும் தேவையான உணவை சாப்பிட்டார்கள்.  மிகச் சிறிய விமான நிலையம் என்பதால் பெரிதாக அங்கே வசதிகள் இல்லை. ஒரு ஊரின் பெரிய பேருந்து நிலையம் போல தான்  வசதிகள் இருப்பதாக எனக்குத் தோன்றியது.  இத்தனை சுற்றுலா பயணிகள் வரும் விமான நிலையத்தினை இன்னும் அதிக வசதிகளுடன் மேம்படுத்தலாம்.  புதிது புதிதாக விமான நிலையங்கள் துவங்கப்படுவது நல்ல விஷயம் தான் என்றாலும் இருக்கும் விமான நிலையங்களையும் மேம்படுத்துவதும், அதன் வசதிகளை உயர்த்துவதும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். விமானத்திற்குக் காத்திருக்கும் சமயத்தில் சில விஷயங்களை குறித்து சொல்லி விடுகிறேன். 


இந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த இடங்கள் மிகவும் குறைவு.  பெரும்பாலும்,  சிக்கிம் பயணம் என்று சொன்னாலே நாதுலா பாஸ் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் சிக்கிம் மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு - குறிப்பாக அங்கே இருக்கும் புத்தமத வழிபாட்டுத் தலங்கள். அது தவிர இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்கள் இந்த மாநிலத்தில் உண்டு.  இத்தொடரின் ஆரம்பத்தில் சொன்னது போல சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் நான்கே நான்கு Administrative மாவட்டங்கள் மட்டுமே - கிழக்கு சிக்கிம் (தலைநகர் Gangtok), மேற்கு சிக்கிம் (தலைநகர் Gyalshing), வடக்கு சிக்கிம் (தலைநகர் Mangan)  மற்றும் தெற்கு சிக்கிம் (தலைநகர் Namchi) என்கிற நான்கு மட்டுமே இருக்கின்றன.  இந்த நான்கு மாவட்டங்களில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன, அங்கே என்ன ஸ்பெஷல், எத்தனை நாட்கள் பயணம் மேற்கொண்டால் இன்னும் நிறைய இடங்களைப் பார்க்க முடியும் போன்ற தகவல்களை இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியான இந்தப் பகுதியில் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். 



Gurudongmar Lake


வடக்கு சிக்கிம்: Gurudongmar Lake, Yumthang Valley, Lachen, Cholamu Lake, Thangu Valley, Crow’s Lake, Chopta Valley, Mount Katao மற்றும் Chungthang. இதில் முதலாவதாக இருக்கும் Gurudongmar Lake குறித்து எனது பக்கத்தில் பயணிக்க ஆசை என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.  அதை படிக்க நினைத்தால் இந்தச் சுட்டி வழி படிக்கலாம். 



Padmasambhava statue...


தெற்கு சிக்கிம்: Sherdup Choeling Monastery, Dichen Choeling Monastery, Ngadak Monastery, Rock Garden, Padmasambhava statue, Temi Garden, Siddheshwara Dham மற்றும் Pemayangste Monastery.



Jawaharlal Nehru Botanical Garden...


கிழக்கு சிக்கிம்: Tsomgo Lake, Nathu La Pass, Hanuman Tok, Rumtek Monastery, Baba Harbhajan Singh Temple, Namgyal Institute of Tibetology, Jelep La, Tashi View Points, Enchey Monastery, Tukla Valley, Do Drul Chorten, Jawaharlal Nehru Botanical Garden, Gangtok Ropeway, Ganesh Tok, Bakthang Waterfalls, Aritar Lake, Sikkim Himalayan Zoological Park மற்றும் Zuluk,Nathang Valley.



Khecheopalri Lake...


மேற்கு சிக்கிம்: Kanchenjunga National Park, Khecheopalri Lake, Pelling, Yuksom, Goecha La, Mount Pandim, Tashiding Monastery, Geyzing, Darap Village, Rabdentse Ruins, Yangtey, Dzongri Trek, Sangachoeling Monastery, Legship, Biksthang, Uttarey, Varsey, Okhrey Village மற்றும் Rinchenpong. 


இத்தனை இடங்களா, இவற்றை எல்லாம் ஒரே பயணத்தில் பார்க்க முடியுமா என்ன, எவ்வளவு செலவாகும், எத்தனை நாட்கள் ஆகும் என்றெல்லாம் உங்கள் மனதில் நிறைய கேள்விகள் இருக்கும். பயணிக்க வேண்டும் என்ற ஆசையும், மனதும் இருந்தால் மட்டும் போதாது.  நிச்சயம் பணமும் தேவை.  பயணங்கள் என்றாலே, தங்குமிடம், போக்குவரத்து செலவு, உணவுக்கான செலவு என நிறையவே ஆகும் என்பதை மறுப்பதற்கு இல்லை.  ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு இடத்திற்கு பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து வைத்துக் கொள்வதோடு, ஒவ்வொரு மாதமும் இந்தப் பயணத்திற்காக ஒரு தொகையை சேமித்துக் கொண்டு வருவதும் நல்லது (இது எப்போதும் என் இல்லத்தரசி சொல்லும் விஷயம் - இதற்காகவே ஒரு சேமிப்பு இருந்தால் நல்லது தானே!) இப்படி பயணத்தினை முடிவு செய்து கொண்டு, பணமும் சேமித்து விட்டால், பிறகு  எப்போது பயணம் என்பதை முடிவு செய்து கொண்டு, நீங்களாகவே பயணிக்கலாம் அல்லது இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும் எண்ணற்ற பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் பயணிக்கலாம்.  நான் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் பயணம் செய்வது குறைவு.  


மொழி - குறிப்பாக ஹிந்தி மொழி தெரிந்து இருந்தால் நம்மால் பல இடங்களுக்கு, தன்னிச்சையாக பயணம் செய்ய முடியும் என்பது பல பயணங்களில் நான் உணர்ந்து கொண்ட விஷயம்.  இல்லை எனக்கு ஹிந்தி மொழி தெரியாது, நானாகவே பயணம் மேற்கொண்டால் நிறைய பிரச்சனைகள் உண்டாகலாம் என்று நீங்கள் நினைத்தால் பயண ஏற்பாட்டாளர் உதவியுடன் பயணிக்கலாம்.  இணையத்தில் நிறைய தளங்கள் உண்டு - அங்கே இருப்பவற்றில் சிறந்ததைத் தேடித் தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் சாமர்த்தியம்.  கொஞ்சம் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுத்தால் நிச்சயம் நல்ல பயண ஏற்பாட்டளாரை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். நாங்களும் சில பயணங்கள் இப்படியான பயண ஏற்பாட்டாளர் கொண்டு ஏற்பாடு செய்து சென்று வந்திருக்கிறோம் - குறிப்பாக அந்தமான் பயணம், நண்பர்களின் மேகாலயா பயணம் என்று சிலவற்றை இங்கே சொல்லலாம்.  பயண ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாகவே இருந்தன. அதனால் நன்கு விசாரித்து ஒரு பயண ஏற்பாட்டாளரைத் தேர்ந்தெடுத்து சிக்கிம் மாநிலத்திற்கு நீங்களும் சென்று வாருங்கள் - முயன்றால் முடியாது இல்லை! 


சரி மீண்டும் Bபாக்டோக்ரா விமான நிலையத்திற்கு வருவோம்.  எங்கள் விமானம் குறித்த அறிவிப்பு வர ஆரம்பித்தது.  மதிய உணவினை முடித்துக் கொண்ட பிறகு நாங்கள் எங்கள் விமானம் நோக்கி செல்ல முற்பட, நுழைவாயில் மாறிவிட்டது என்ற அறிவிப்பு வந்தது.  சிறிய விமான நிலையம் தான் என்பதால் உடனடியாக அடுத்த நுழைவாயில் நோக்கிச் சென்று அங்கிருந்து எங்கள் விமானத்திற்கு உள்ளே சென்று சேர்ந்தோம்.  பெரிதாக எந்த வித சம்பவங்களும் நடக்காமல் விமானம் சரியான நேரத்தில் தலைநகர் தில்லியில் தரையிறங்கியது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து அவரவர் இல்லம் நோக்கி தனித்தனி வாகனங்களில், மெட்ரோவில் என அவரவர் சௌகர்யத்திற்கு ஏற்ப சென்றோம்.  ஐந்து வார காலம் ஒன்றாக இருந்த சக பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி, விடைபெற்றோம்.  பயிற்சி/பயணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆனாலும், இந்தக் குழுவில் சிலர் இன்னமும் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் என்பதும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான். அனைவரும் தலைநகர் தில்லியில் இருந்தாலும் வெவ்வேறு அலுவலகங்களில் இருந்தாலும் அவ்வப்போது சந்திப்பதும், அலைபேசி வழி உரையாடுவதும் என நட்பு தொடர்கிறது. 


என்ன நண்பர்களே, இந்தப் பதிவிலும், இத்தொடரின்  பகுதிகளிலும் உங்களுடன் சிக்கிம்/டார்ஜிலிங் பயணம் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டதில் எனக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டு.  உங்களுக்கும் இந்தத் தகவல்கள் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.  ஏதேனும் ஒரு சமயத்தில் நீங்களும் இந்த இடங்களுக்குச் சென்று வர ஒரு கையேடு போல இந்தப் பதிவுகள் உதவலாம்.  முடிந்தால் இந்தத் தொடரையும் மின்புத்தகமாக விரைவில் வெளியிடுகிறேன் - ஒரே இடத்தில் எல்லா தகவல்களும் உங்களுக்கும் கிடைக்கலாம் என்பதால் இப்படி ஒரு விஷயத்தினை செய்து கொண்டிருக்கிறேன்.  மீண்டும் வேறு ஒரு பயணத் தொடர் வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

20 கருத்துகள்:

  1. உபயோகமான விவரங்கள்...  உணவுப்பொருட்கள் எப்படி அவ்வளவு விரைவாக கெட்டுப்போயின?  ஏமாற்றி விட்டார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு பொருட்கள் - அதிகாலையிலேயே தயாரித்து இருக்கலாம். என்ன காரணமாக இருந்தாலும் கெட்டுப் போனது என்பதில் வருத்தம் தான். எத்தனை உழைப்பில் உருவானது வீணாகப்போவதில் என்ன லாபம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சிறப்பான விவரங்கள்..

    பதிவு அழகு..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. சிறப்பான பயணக்கட்டுறை சார்.
    ஏர்ப்போர்ட்களும் தியேட்டர்களும் எப்படி உணவின் விலையை ஏற்றலாம் என்றே பார்க்கிறார்களே ஒளிய தரம் குறித்த கவலை இறுப்பதில்லை.
    விரைவில் நானும் ஒரு வடகிளக்கு நோக்கிய பயணத்தைத் திட்டமிடலாம் என்னும் ஆர்வம் தங்கள் கட்டுறையால் ஏற்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக்கட்டுரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். உங்களுக்கும் வடகிழக்குப் பயணம் விரைவில் அமைய வாழ்த்துகள்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. கையேடு அவசியம் பலருக்கும் பயன்படும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே வெளியிடப்படும் பயணக் கட்டுரைகள் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே தனபாலன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பயனுள்ள தகவல்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. அருமையான கட்டுரை வெங்கட் சார் ...

    இங்கெல்லாம் செல்லுவோமா என்று தெரியவில்லை ஆனாலும் வாசித்து தெரிந்து கொள்வதில் மிக மகிழ்ச்சி .. செல்லவே முடியாது என்று இல்லை நாம் ரசிக்க செய்வோம், ஆசைப்படுவோம் பிரபஞ்சம் நம்மை அழைத்து செல்லும் ...

    பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக்கட்டுரை உங்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே அனு ப்ரேம் ஜி.

      உங்களுக்கும் இங்கு செல்ல வாய்ப்பு அமைய வாழ்த்துகள்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. வெங்கட்ஜி, நீங்கள் சிக்கிமில் பயணிக்க ஆசைப்பட்ட பதிவையும் பார்த்து விட்டேன். அழகான ஊர் இல்லையா. எப்படி பதிவு விட்டுப் போச்சு என்று தேதி பார்த்தால் அந்தப் பதிவு வெளியான சமயங்களில் சில மாதங்கள் நான் வலைப்பக்கமே வரமுடியாத சூழல்.

    இப்போது நீங்கள் சொல்லியிருக்கும் இடங்களையும் குறித்துக் கொண்டுவிட்டேன்.

    ஆமாம், ஆதி சொல்வது போல் நானும் இங்கு..சொல்வதுண்டு சேர்த்து வைத்துக்கொண்டு திட்டமிட்டு சேர்த்து போய் வர வேண்டும் என்று. சுற்றுலா என்று தனியாக....அது கொஞ்சம் சமீபகாலமாக/வருடங்களாக முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. என்றாலும் அருகில் உள்ள இடங்களுக்குச் சென்று வரலாம்தான்..ஆனால் அதுவுமே முடியாமல் இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணிக்க ஆசை பதிவினையும் படித்து ரசித்தமைக்கு நன்றி கீதா ஜி. எனக்கும் நிறைய பதிவுகள் படிக்க முடியாமல் போனது. இயல்பானது தானே!

      பல இடங்களுக்குச் செல்ல ஆசை இருக்கிறது தான்! ஆனாலும் செல்ல முடிவதில்லை என்பது நிதர்சனம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. ஆமாம் ஹிந்தி தெரிந்திருந்தால் நல்லது. சமாளிக்கும் விதத்திலாவது.

    இருக்கும் விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கருத்து ஆம்...

    உணவு கெட்டுப் போனது என்றால் அது பழைய உணவு...கை போட்டுச் செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. கண்டிப்பாக அப்போது தயாரித்த உணவில்லை என்பது தெரிகிறது. கஷ்டமான நிலை உங்கள் எல்லோரது நிலையும்...அதுவும் இப்படியான இடங்களுக்குச் செல்லும் போது. மற்ற இடங்கள் என்றால் அருகில் சாப்பிட ஏதேனும் கிடைக்கும்...உணவகங்களும் கூட இருக்கும்...

    இடங்கல் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரசித்தேன். Khecheopalri Lake..., மேலே உள்ள முதல் படம் ஏரி.....சொர்கபுரியோ என்று எண்ண வைத்ததுKhecheopalri Lake... நீலம் நீலம்...சுற்றிலும் பச்சை பச்சை...என்ன அழகு. மனதை அப்படியே வசீகரிக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி தெரிந்திருப்பது மிகவும் உபயோகமானது. Khecheopalri Lake மிகவும் அழகு தான். எனக்கும் போக ஆசை இருக்கிறது - வாய்ப்பு அமைய வேண்டுமே!

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. அழகிய பயணம், அருமையான தொகுப்பு . நாம் டெல்கி போனபோது நினைச்சேன், உங்கள் இப்பக்கம் பார்த்தால் நிறைய இடங்கள் தேடிப்போகலாம் என, பின்பு புளொக் பார்க்க முடியவில்லை, அத்துடன், அங்கு போனதுமே பார்வைக்கு நிறைய இடங்கள் இருந்தமையால, அதனைப்பார்க்கவே நேரம் போய் விட்டது. இனிப்போனால் பார்க்கலாம் இங்கு தேடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் கங்கை மகள் அதிரா! இந்தப் பக்கத்தில் நிறைய பயணம் குறித்த தகவல்கள் உண்டு - உங்களுக்கும் பயன்பட்டால் மகிழ்ச்சி தான்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. சிக்கிம் மாநிலம் இனிய பயணம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....