புதன், 4 மார்ச், 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - சதுரகிரி பயணம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மாசி மாத திருப்பள்ளி ஓடம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



கோரக்கர் குகையில்....

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி….  எந்த ஒரு செயலும் செய்வதற்கு நாம் எத்தனை முயற்சித்தாலும், அவன் அருளின்றி அந்த செயலைச் செய்ய முடியாது.  இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழகப் பயணத்தில் சட்டென்று முடிவெடுத்து சதுரகிரி மலைப்பயணம் மேற்கொண்டேன்.  மீண்டும் அங்கே சென்று வர வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது என்றாலும் செல்ல முடியவில்லை.  சென்ற ஃபிப்ரவரி மாதம் உத்தராகண்ட் மலைப்பகுதியில் மலையேற்றம் செய்து வந்த பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை என்பதும், கடைசி மலையேற்றத்திற்குப் பிறகு ஒரு வருடம் கடந்து விட்டது என்பதும் மனதிற்குள் அவ்வப்போது வந்து போகும் எண்ணமாக இருந்தது.  சரி சட்டென்று முடிவெடுத்து எங்கேயேனும் சென்று வரலாம் என யோசித்தபோது மனதில் தோன்றிய எண்ணம் - அவன் தோன்ற வைத்த எண்ணம் - சதுரகிரி சென்று வரலாம் என்பது.  உடனடியாக திட்டம் தயாரானது. 



சங்கிலி பாறை....


இது எப்படி இருக்கு?

ஃபிப்ரவரி மாதக் கடைசி - வெள்ளி அன்று இரவு புறப்பட்டு, சனிக்கிழமை மலையேற்றம் முடிந்து, பிரதோஷ நாளில் சந்தன மஹாலிங்கம், சுந்தர மஹாலிங்கம் தரிசனம் பெற்று - முடிந்தால் இரவு தங்கிவிட்டு, ஞாயிறு காலை மலையிலிருந்து இறங்கலாம் எனத் திட்டமிட்டேன்.  இரவு தங்குவதில் தடை வந்தால், அன்றே மலையிலிருந்து இறங்கி வீடு திரும்பிவிடலாம் என முடிவு செய்தேன்.  சென்ற முறை இரண்டு பேர் உடன் சென்றேன் என்றால், இந்த முறையும் என்னுடன் இரண்டு பேர் வருவதற்குத் தயாரானார்கள்.  எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு இளைஞர் மற்றும் வேறொரு நண்பர் - அந்த நண்பர் உங்களுக்கும் தெரிந்தவர் தான் - வேறு யாருமல்ல - பத்மநாபன் அண்ணாச்சி தான்.  சென்ற முறை சதுரகிரி சென்று வந்த பிறகு, “அடுத்த முறை போனா, நானும் வரேன்” என்று சொல்லி இருந்தார். அவரையும் அழைத்து, பேசி முடிவெடுத்தோம்.  அவர் வீட்டிலிருந்து மதுரை வரை அவர் வர, நாங்கள் திருச்சியிலிருந்து மதுரை சென்று பிறகு மூவரும் சதுரகிரி நோக்கிய பயணம் மேற்கொள்வதே திட்டம்.  



சில இடங்களில் இப்படியான பாதை என்றால்...


பல இடங்களில் இப்படி.... 


எச்சரிக்கை... வழுக்குப் பாறை...

வெள்ளி அன்று அலுவலகத்தில் பணி ஓய்வு நிகழ்வு வேறு இருந்தது. அது முடிவதற்கே ஏழு மணி ஆகிவிட்டது.  அதன் பிறகு வீடு திரும்பி தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு இரவு பதினோரு மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டோம்.  பயணம் எப்படி இருந்தது, தரிசனம் எப்படி, அனுபவங்கள் என்ன என்பதையெல்லாம் எழுத பத்மநாபன் அண்ணாச்சியிடமும் கேட்டிருக்கிறேன்.  அவர் எழுதுவார் என்று நம்புவோமாக….  நள்ளிரவு பன்னிரெண்டு மணி அளவில் திருச்சியின் புதிய பேருந்து முனையம் அமைந்திருக்கும் பஞ்சப்பூரிலிருந்து மதுரை செல்ல 1 TO 1 பேருந்துகள் நிறையவே இருக்கின்றன.  அவற்றில் ஒன்றில் அமர்ந்து மதுரை நோக்கிய பயணத்தினை இறையருளால் தொடங்கிவிட்டோம். நானும் மதியழகன் எனும் அலுவலக இளைஞரும் திருச்சியிலிருந்து புறப்பட, பத்மநாபன் அண்ணாச்சி, சுசீந்தரத்திலிருந்து புறப்பட்டு விட்டார். நாங்கள் மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தினை இரவு இரண்டு மணிக்கு அடைந்து காத்திருந்தோம். 



வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, வெறுங்காலுடன் மலைப்பாதையில்....

பத்மநாபன் அண்ணாச்சியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது இன்னும் அரை மணி நேரம் ஆகலாம் என்றார்.  அவர் வரும் வரை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தோம்.  அந்த இரவு வேளையிலும் மதுரையின் மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.  எங்கே பார்த்தாலும் மல்லிகைப் பூ வியாபாரம். கூடவே விதம் விதமான கடைகளில் ஜிகிர்தண்டா.  எல்லோருமே ஒரிஜினல், பாரம்பரிய ஜிகிர்தண்டா என்ற பதாகை வைத்திருக்கிறார்கள் - யார் ஒரிஜினல் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.  பரபரவென இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு சில பூ வியாபாரிகள் அவர்கள் கடைகளுக்கு முன்னரே பூ களவு போகும் என்ற பயமின்றி தூங்கிக் கொண்டிருக்க, சிலர் அந்த நேரத்திலும் வாழ்வினை ரசித்து, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  கண் தெரியாத ஒரு இளைஞர் அனைவரிடமும் “பத்து ரூபாய் கொடு” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.  கொடுக்கும் நோட்டினை தடவித் தடவிப் பார்த்தபிறகு வேறொருவரிடம் “இது எத்தனை ரூபாய்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.  



தியானத்திற்கு தியானம்... ஓய்வுக்கு ஓய்வு!

சாதாரணமாகவே தள்ளாடும் தமிழகம் - இரவு நேரத்தில் சொல்ல வேண்டுமா?  ஒரு நபர் தனியாக அமர்ந்து சம்பந்தமில்லாமல் பேசியதோடு - பார்க்கும் நபரிடமெல்லாம் - கண்டக்டர் கிட்ட கேளு என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அவரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை - அவரை யார் கடந்தாலும் கண்டக்டர் கிட்ட கேளு என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதன் பிறகு கைகளையும் தலையையும் ஆட்டி ஆட்டி எதையோ ஒரு விஷயத்தினை பேசிக்கொண்டிருந்தார்.   சரக்கு எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது என்பதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.  தினம் தினம் இப்படிக் குடிப்பதற்கு காசு நிறையவே தேவை - காசு விரயமாவதோடு, குடிப்பவர்களின் உடல் நலனும் கெடுகிறது என்ற எண்ணம் இன்னும் அதிக வேதனையைத் தந்தது.  அந்த மனிதரின் குடும்பத்தினர் எவ்வளவு தொல்லைகளைச் சந்திப்பார்கள் என்ற எண்ணமும் மனதில் வந்து போனது.  அரசாங்கமே சரக்கு விற்பனைக்கு முக்கியத்துவம் தரும்போது என்ன செய்ய முடியும்….  



சுமையில்லாமல் நடப்பதே சிரமம் எனும்போது...
தலைச்சுமையுடன் நடக்கும் உள்ளூர்காரர்கள்...

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மதுரை பேருந்து நிலையத்தில் காத்திருந்த பிறகு, அண்ணாச்சி வந்து சேர்ந்தார். வந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி - “என்ன அண்ணே எத்தனை நாய் வாங்கினீங்க?” என்பது தான் - ஏனெனில் அவரிடம் நான் சொன்னது, “இறங்கினதும் கடைசில ராஜபாளையம் போற பஸ் கிட்ட வந்துடுங்க” என்று சொல்லி இருந்தேன்! ஆரம்பமே அதிரடியாகத் தான் இருந்தது!  அவர் வந்ததும், ராஜபாளையத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டோம்.  அந்த இரவு நேரத்திலும் கூட மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்ல ஐந்து/பத்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருக்கிறது - பேருந்து வசதி விஷயத்தில் தமிழகம் Far far better - வடக்கில் இருக்கும் பேருந்து வசதிகளை ஒப்பீடு செய்தால்!  வடக்கிலும் இத்தனை வருடங்கள் இருந்ததால் இதனைச் சொல்கிறேன் - நம்மவர்கள் குறை சொன்னாலும் பேருந்து வசதிகள் நிறையவே தான் இருக்கிறது. பிறகு என்ன நடந்தது?  வரிசையாகச் சொல்கிறேன் - சில பதிவுகள் வெளிவரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன்…


முன்னோட்டமாக சில படங்களும் காணொளிகளும் இந்தப் பதிவினில் இணைத்திருக்கிறேன்.  தொடர்ந்து பயணிப்போம் நண்பர்களே!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

4 மார்ச் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....