அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சமயபுரத்திற்கு ஒரு நடைப்பயணம்…. - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
திருவரங்கத்து கோபுரங்கள் - 25-03-2026:
திருவரங்கம் அரங்கனின் ஆலயத்தினைச் சுற்றி மொத்தம் எத்தனை கோபுரங்கள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தக் கோபுரங்கள் அனைத்தையும் ஒரு சேரப் பார்க்க முடியுமா? என்றால் முடியும் என்பது பதிலாக இருக்கும்! ஆலயத்தின் உள்ளே ஒரு வசதி இருக்கிறது. பத்து ரூபாய் (இப்போதும் அவ்வளவு தானா இல்லை விலை அதிகரித்து விட்டார்களா?) கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டு சில படிகள் மேலே ஏறிச் சென்றால் மொட்டை மாடி மாதிரி இடத்தில் நின்று கொண்டு ஆலயத்தினைச் சுற்றி இருக்கும் எல்லா கோபுரங்களையும் பார்க்க முடியும். ஆலயத்திற்கு வரும் பெரும்பாலான பக்தர்களுக்கு இந்த வசதி குறித்து தெரிவதில்லை. கண்ணைக் கட்டி விட்டது போல நேரே மூலவரையும் தாயாரையும் சேவித்து விட்டு வெளியே வந்து விடுவார்கள். இது வரை இந்த கோபுரங்கள் தரிசனம் பார்த்ததில்லை என்றால், அடுத்த திருவரங்கப் பயணத்தில் சென்று தரிசித்து வாருங்களேன்! சரி எதற்காக இந்த கோபுரங்கள் குறித்த தகவல் - சொல்கிறேன்.
எங்களுடைய நடையில் வார நாட்களில் உத்திர வீதியிலும், விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதியில் சித்திரை வீதிகளிலும் நடை என்பதே பொதுவாக இருக்கிறது! இல்லை எனில் மேலூர் கிராமம் நோக்கிய நடையாக இருக்கும். அப்படி நடக்கும் போது நான்கு பக்கங்களிலும் இருக்கும் கோபுரங்கள் தனித்தனியே பார்ப்பது வழக்கம். வடக்கு வாசலில் இருக்கும் இரண்டு கோபுரங்கள் (மேல் பகுதி மட்டும்) ஒரு மூலையிலிருந்து திரும்பும்போது கண்களுக்குத் தெரியும். அந்த இரண்டு கோபுரங்கள் பிறகு அந்த சாலையிலிருந்து பார்க்கும்போது தெரியாது. நேரடியாக நின்று இருபுறமும் திரும்பிப் பார்க்க முடியும் என்றாலும், சாலையின் ஒரு மூலையில் ஒரே சமயத்தில் இரண்டு கோபுரங்களையும் பார்க்க முடியும் என்பதால் அதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் அந்த மூலையிலிருந்து ஒரு நிழற்படமும் எடுத்தேன்! அது இந்தப் பதிவில்!
ஒவ்வொரு ஊரிலும் சில சிறப்புகள், பார்ப்பதற்குரிய சில இடங்கள் இருக்கும். பெரும்பாலும் அவை தெரிந்து கொள்ளும் ஆர்வம் பலரிடம் இல்லை. இதே திருவரங்கம் ஆலயத்தில் நின்று நிதானித்து பார்க்க வேண்டிய இடங்கள், சிற்பங்கள், தகவல்கள் தான் எத்தனை உண்டு. இந்தச் சிந்தனைகள் எப்போதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இன்றைய நடையிலும் இது குறித்து பேசியபடியே நடந்து கொண்டிருந்தோம். காலை நேரங்களில் இப்படி நடப்பது மனதுக்கு புத்துணர்வினைத் தருவதோடு, எந்தவித விசாரங்களும் இன்றி விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள உதவி செய்கிறது. சில விஷயங்களை பேசுவதே அரிது என்றாகிப் போய்விட்டது - வீட்டு வேலைகள், பரபரவென்று ஓடிக் கொண்டிருக்கும் நாட்களில் விஸ்ராந்தியாக பேசுவதற்கான நேரம் குறைந்து கொண்டே இருக்க, இது போன்ற நடைப்பயணங்களில் பேசுவதற்கான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.
கோபுரங்களை தரிசித்த படியே இன்றைய நடை நல்ல விதமாக முடிந்தது! மேலும் தொடர்ந்து நடக்க வேண்டும்! காலை நேரங்களை இன்னும் அழகாக்கும் இந்த நடை நிச்சயம் நமக்குத் தேவை!
*******
சுத்தம் - 24-03-2026:
எங்கள் வீட்டின் அருகிலேயே ஒரு சிறு மளிகைக் கடை இருக்கிறது. வாசலிலேயே ஒரு தேநீர் கடையும் உண்டு. கணவன் - மனைவி இருவருமாக சேர்ந்து கடையை நிர்வகிக்கிறார்கள். பொதுவாக இந்தக் கடையில் நாங்கள் எதுவும் வாங்குவதில்லை - எப்போதாவது ப்ரெட் வாங்குவதைத் தவிர! பக்கத்தில் நிறைய Construction வேலைகள் நடப்பதால், வட இந்தியத் தொழிலாளிகள் இந்தக் கடையில் வந்து தேநீர் அருந்துவதும், தேவையான சில பொருட்களை வாங்குவதும் உண்டு. கடைக் காரர் கொஞ்சம் வழிசல் பேர்வழி என்பதாலேயே அங்கே செல்வதற்கு பிடிக்காது! காலை நேரத்தில் ஐந்து மணிக்கே எழுந்திருந்து பூஜை எல்லாம் செய்து கடையைத் திறந்து வைத்திருப்பார். ஆனால் இன்றைய காலை அவர் செய்த ஒரு வேலையைப் பார்க்க நேர்ந்தது - நல்ல வேளை இங்கே நாம் தேநீர் அருந்துவது இல்லை என்று தோன்ற வைத்தது அந்தக் காட்சி!
தேநீர் தயாரிப்பதற்குத் தேவையான பாக்கெட் பாலை பாத்திரத்தில் ஊற்றுவதற்கு, அந்தப் பால் பாக்கெட்டை தன் பல்லால் கடித்து இழுத்து, பிரித்து பாத்திரத்தில் விடுகின்ற காட்சியைப் பார்க்க நேர்ந்தது! “அடேய்…. ஏண்டா இப்படி இருக்க! ஒரு கத்திரிக்கோல் கூடவா இல்லை உன் கடையில!” என்று யோசிக்க வைத்தது! என்னதான் கடையில் அந்த நேரத்தில் அவரைத் தவிர யாரும் இல்லை என்றாலும், பல பேர் அங்கே டீ வாங்கிக் குடிப்பார்களே என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி பல்லால் கடித்து இழுக்கிறாரே என்று தோன்றியது. உண்மையாகவே பல கடைகளில் இப்படியான அசுத்த வேலைகள் நடக்கத்தான் செய்கிறது. கலப்படங்கள் இல்லாத கடைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த பயத்திலேயே பொதுவாக வெளியே செல்லும்போது எதையும் சாப்பிடத் தயக்கம் தான் வருகிறது.
*******
சயனம் - 26-03-2026:
அரங்கன் அனந்தசயன கோலத்தில் இருப்பதைப் பார்க்க முடிவதில்லை. உள்ளே அத்தனை கும்பல்! ஆனால் அரங்கன் ஆலயத்தின் ஐந்தாம் பிராஹாராத்தில் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் உலா வரும்போது பார்க்கும் காட்சி ஒன்று - சாலையோரத்தில் கட்டாந்தரையில் போர்வை மூடி சயனத்திலிருக்கும் ஒரு வீடற்றவர். ஒவ்வொரு நாளும் அவரைக் கடக்கும்போதும், அவர் யார்? எங்கிருந்து வந்திருப்பார்? பகலில் பார்த்ததில்லையே, எங்கே செல்வார்? அவர் கதை என்ன என்ற சிந்தனைகள் மனதில் ஓடும். அலுவலகம் செல்லும் வழியில் இருக்கும் காவிரிப் பாலம் பகுதியிலும் இப்படி நிறைய மனிதர்கள் படுத்திருப்பார்கள். அவர்களுக்கு ஏன் இந்த நிலை? என்னதான் அவர்களுக்கு பிரச்சனை என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருப்பேன். எத்தனை எத்தனை காட்சிகள் இப்படி! “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் திருக்குறள் ஏனோ நினைவுக்கு வந்தது…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
31 மார்ச் 2026








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....