அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வருடத்தின் சதுரகிரி பயணம் குறித்த அனுபவங்களை இரண்டு பகுதிகளாக இது வரை வெளியிட்டு இருக்கிறேன் - அதற்கான சுட்டி கீழே…
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி ஒன்று
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி இரண்டு
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி மூன்று
தொடரின் அடுத்த பகுதியும், நண்பர் பத்மநாபன் அவர்களின் வார்த்தைகளில் - ஓவர் டு பத்மநாபன் - வெங்கட் நாகராஜ்.
*******
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பத்மநாபன்:
தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. கொஞ்ச தூரத்தில கோரக்கர் குகை வந்தது. கோரக்கர் சித்தர் தவம் செஞ்ச புனிதமான இடமாம். கொஞ்சம் கீழ இறங்கி கொஞ்சம் ஜிம்னாஸ்டிக் எல்லாம் பண்ணி அந்த குகைக்கு கிட்டப் போனா ஒரு நாலஞ்சு பேரு வரிசைகட்டி நின்னாங்க. ஏன்னா, ஒவ்வொரு ஆளாத்தான் குகைக்குள்ள போக முடியும். நிறைய பெண்களும் ஜிம்னாஸ்டிக் பண்ணி குகைக்கு வந்திருந்தாங்க. குகைக்குள்ள ஒரு சிறிய அழகான சிவலிங்கம். உள்ளே ஒரு பைரவரும் ஆனந்த தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார்.
அந்த குகைக்கு கீழே ஒரு அழகான நீரோடை. அருமையா தண்ணி ஓடிக்கிட்டு இருக்கு. புனிதமான நீரோடை. வாய் வச்சு குடிச்சா புனிதம் கெட்டுடும்னு ஒரு குரங்கார் மனிதனைப் போல கையால் எடுத்து எடுத்து தண்ணி குடிச்சுகிட்டு இருந்தாரு. அந்த நீரோடையை ஒட்டி ஒரு சரிவான உயரமான பாறை. பாக்கவே ஆனந்த பரவசமா இருந்தது. இந்த ஆனந்த அனுபவத்துல அதிகமா மூழ்கினவர் வெங்கட்தான். ஆமா, திடீர்னு பாத்தா அந்த சரிவான பெரிய பாறை மேலயிருந்து ஓம்! ஓம்! னு ஆனந்த பரவச சத்தம். எல்லோரும் அந்தத் திசையையே பார்க்க அங்கே நம் வெங்கட் பத்மாசனத்தில அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார். அடுத்த சித்தர் தோன்றி விட்டார்னுதான் நினச்சேன். ஒரு சின்ன பயம் வந்துட்டு. மலையேறுன சாமி ஆனந்த பரவசத்தில மலையிறங்க மாட்டேன்னு சொல்லிட்டா. ஆனா கொஞ்ச நேரத்துல கீழ இறங்கி வந்துட்டாரு. கோரக்கர் சித்தர் அவர் காதுல அந்த இடத்துக்கு ஒரு கோரக்கர் போதும், வெங்கட்கர் ஸ்ரீரங்கத்துக்கு வேணும்னு சொல்லியிருப்பார்போல. ஏற்கனவே அங்க ஒரு அப்ரெண்டிஸ் சாமியார் காவி உடுத்து தலைமுடி வளர்த்து வித விதமாக போட்டோக்கு போஸ் கொடுத்துக்கிட்டு இருந்தாரு.
அப்படியே கொஞ்சம் மேல இரட்டை லிங்கத்தையும் தரிசிச்சுகிட்டு மேல போனா ஒரு சின்ன சுனை. சுனையிலேயிருந்து கொஞ்சமா தண்ணி வெளியேறிக்கிட்டுத்தான் இருந்து. ஆனா, சுனைத்தண்ணிக்கு மேல மர இலையெல்லாம் விழுந்து கலங்கலா இருந்தது. அந்த சுனைக்கு பேரு நாவல் ஊற்று. ஒரு பெரிய நாவல் மரத்து வேர்களோட அடியிலிருந்துதான் அந்த ஊத்துதண்ணி வருது. அந்த தண்ணி சக்கரை வியாதிக்கு நல்லதாமே. ஆனா தண்ணி கலங்கலா இருந்ததால எல்லோரும் அத குடிக்க யோசிச்சிக்கிட்டு இருந்தா. கொஞ்சம் தெளிவாயிருந்த இடத்திலிருந்து நாங்க கொஞ்சம் தண்ணியை எடுத்து சாத்திரத்துக்கு, எந்த சாத்திரம்னு கேக்கப்படாது, வாயிலயும் தலையிலயும் தெளிச்சுக்கிட்டோம். எங்களப் பாத்து இன்னும் கொஞ்சம் பேரும் தெளிச்சுகிட்டாங்க.
அப்படியே சிவ சிவான்னு மேல ஏறிக்கிட்டே இருந்தோம். வெறும் கால்ல நடந்ததால உள்ளங்காலெல்லாம் சுருக் சுருக்னு அக்குப்பஞ்சர் நடந்துக்கிட்டு இருக்கு. அப்பம் பாத்து பச்சரிசிப்பாறைன்னு ஒரு இடம் வருது. ஆஹா! பொடி பொடியா பச்சரிசி மாதிரி பாறைக்கல்லு கிடக்குமாமே. சரியாப்போச்சுன்னு நினைச்சுகிட்டே அந்த இடத்தையும் கடந்துட்டோம். அப்படியே வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, கருப்பசாமி கோயில் எல்லாரையும் கும்பிட்டு மேல சுந்தரமகாலிங்கம் கோயிலை கண்டு கொண்டோம். ஒரு பக்கம் கோயிலை கண்ட சந்தோஷம், இன்னொரு பக்கம் வெற்றிகரமா மலையேறிட்ட சந்தோஷம்.
அப்படியே மேல ஏறி சுந்தர மகாலிங்கம் சன்னதிக்கு போனோம். சாதாரண தினமாதலால் அதிக கூட்டமில்லை. எந்த தடையோ தடங்கலோ இல்லாமல் சுந்தரன் சாய்ந்து நின்று திவ்ய தரிசனம் தந்தார். மனசு நிறைய ஈசனடி போற்றி! எந்தையடி போற்றி! நேசனடி போற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலனடி போற்றி! மாயப் பிறப்பறுக்கும் மன்னனை போற்றி! என்று அந்த சுந்தரனை வாயாரப் பாடி, மனதால் சிந்தித்து “வான்முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க, மன்னன் கோன் முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான் மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” என்று அந்த சுந்தர மகாலிங்கத்தை இறைஞ்சி மனம் நெகிழ தரிசித்து அடுத்த சன்னதியில் இருந்த ஆனந்தவல்லி அம்மனையும் வணங்கி மனம் நிறைந்து வெளியே வந்தோம்.
அப்போது மணி பதினொன்னு பதினொன்னரைக்கு மேல ஆச்சுன்னு நினைக்கேன். மனசு நிறஞ்சு போச்சு. ஆனா வயறு பரிதாபமா ‘இது தகுமோ, இது முறையோ, தருமந்தானோ’ ன்னு முறையிடுது. அதுக்கேத்த மாதிரி கஞ்சிமடம்னு பலகையை வேற கண்ணு பாத்து வயறுக்கு மெசேஜ் அனுப்பிட்டுது. ஆனா என்ன செய்ய, அந்த கஞ்சி மடம் பூட்டு போடப்பட்டு எங்களை வஞ்சித்து வஞ்சி மடமா மாறியிருந்தது. அந்த மடம் சிறப்பு நாட்களுக்கு மட்டும்தான் போல. ஆனா மகாலிங்கம் எங்களை கை விடல்ல. கொஞ்ச தூரத்திலேயே சந்தன மகாலிங்கம் சன்னதிக்கு போற வழியிலேயே மக்கள் தட்டும் கையுமா சாப்பிட்டுக் கிட்டு இருந்தாங்க. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமேன்னு வயறு வெட்கமில்லாம கூத்தாடுது. சரி, சரி கண்ட்ரோல் யுவர்செல்ஃப்ன்னு கட்டுப்படுத்தி தட்டும் கையுமா அன்னமிடும் அன்னையர் முன் நின்றோம். பார்த்தவிழி பார்த்திருக்க வெண்மையான சாதம் சுடச் சுட தட்டிலே வந்து விழ, கூடவே சாம்பார் கம்பெனி கொடுக்க, பீட்ரூட் பொரியல் நானும் உடன் வருவேன் என்று அடம் பிடிக்க தட்டு நிறைந்தது. கொஞ்சம் தள்ளி ஒரு படிக்கட்டுல உட்கார்ந்து சாப்பிடுவோம்னு போய் உட்கார்ந்தோம். ஆனா கூடவே பின்னால ஒரு ஆளு இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். திரும்பி பார்த்தா ஒரு குரங்கார் ஒரே தட்டுல ரெண்டு பேரும் சாப்பிடுவமான்னு சிரிக்கிறாரு. ஆனா அந்த அளவு நம்ம மனசு விசாலமாகல்லியே. அதனால அவருக்கிட்ட இருந்து கொஞ்சம் நகர்ந்து தள்ளிப் போய் சாப்பிட்டோம். அந்த நேரத்து பசிக்கு தேவாமிர்தமா இருந்தது.
தொடர்ந்து அடுத்த பகுதியில சொல்றேனே….
நட்புடன்
பத்மநாபன்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
12 மார்ச் 2026

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
ரசனையான அனுபவங்கள். சுவாரஸ்யமான எழுத்து நடை. குரங்கார் தண்ணீர் குடிக்கும் இந்த வீடீயோவை நான் பேஸ்புக்கிலோ, இன்ஸடாவிலோவும் பார்த்த நினைவு! அங்கு பகிர்ந்திருந்தீர்களா?!!
பதிலளிநீக்கு